நீதி – சரியான செயல் / நன் நடத்தை
உபநீதி – தைரியம், துணிச்சல்
ஒரு முறை, கப்பல் ஒன்றில் ஒரு ஆமை வாழ்ந்து வந்தது. ஒரு நாள், அந்த கப்பல் மூழ்கி விட்டது. பல மணி நேரம் நீந்திய ஆமை, ஒருவருமே வசிக்காத, மூன்று பக்கங்களிலும் தண்ணீரால் சூழ்ந்த நிலப் பகுதி ஒன்றை வந்தடைந்தது. அந்த நிலப்பகுதியின் பக்கத்தில், செங்குத்தான கரடுமுரடான மலை ஒன்றிருந்தது.
நீண்ட நேரம் நீந்தி வந்த ஆமை சோர்வடைந்து, உணவு ஏதாவது கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தது; ஆனால், அந்த நிலப் பகுதியில் ஒன்றுமே கிடைக்கவில்லை. பசியால் மாண்டு போகாமல் இருக்க, ஆமை மலையின் உச்சியில் ஏறி, மற்றொரு பக்கத்தில் ஏதாவது கிடைக்குமா என்று பார்த்தது.
மலையின் உச்சி முழுவதும் பனி இருந்ததால், மிகவும் குளிராக இருந்தது. திடீரென, பனி மழை பொழிய ஆரம்பித்தது; ஆமை மிகுந்த பிரச்சனைகளுக்குப் பிறகு, மலையின் மற்றொரு பக்கத்திற்குச் செல்ல ஒரு சிறிய பாதையை அமைத்தது.
அந்த பாதையை ஒரு பெரிய அரக்கன் பாதுகாத்து வந்ததால், பல பயங்கரமான சத்தங்கள் கேட்டன. ஆமை மிகவும் பயந்தது. தன் தலையை ஓட்டுக்குள் மறைத்துக் கொள்ளலாமா என்ற எண்ணம் அதற்கு தோன்றியது; ஆனால் பயத்தை கட்டுப்படுத்திக் கொண்டு தன்னைச் சுற்றிப் பார்த்தது. பல மிருகங்கள் கீழே மாண்டு கிடந்தன. தாங்க முடியாத குளிரினால், அவை மாண்டன என்பதை ஆமை புரிந்து கொண்டது. அதனால், ஆமை ஓட்டுக்குள் செல்லாமல், அந்த இடத்திலிருந்து தப்பிக்கவில்லை என்றால், தனக்கும் அதே கதி என்று பயந்தது.
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, மற்றொரு பக்கத்தை கடந்து செல்ல, ஆமை தன் நீண்ட பயணத்தை தொடங்கியது; அங்கிருந்த அரக்கர்களையையும் சமாளிக்க வேண்டும் என்று அது புரிந்து கொண்டது.
ஆமை மெதுவாக அந்த அரக்கர்களுக்கு அருகே சென்ற போது, அவர்கள் தங்களின் உருவங்களை மாற்றிக் கொண்டனர். திடீரென, அவை பெரிய பாறைகள் என்று புரிய வந்தது. அங்கிருந்த பாறைகள் அரக்கர்கள் போல தெரிந்தன. அங்கிருந்த ஒரு சிறிய குகை வழியாக பலத்த காற்று வீசிக் கொண்டிருந்தது.
ஆமை தன்னம்பிக்கையுடன் பயணத்தை தொடர்ந்து, சிறிது நேரத்தில் ஒரு அழகான பள்ளத்தாக்கை வந்தடைந்தது. அங்கு பல மரங்களும், அளவில்லா உணவும் இருந்தன. அந்த பள்ளத்தாக்கில் ஆமை சந்தோஷமாக வாழ்ந்தது; அங்கு எல்லோராலும் “தைரியமுள்ள சிறிய ஆமை” என்று அறிமுகம் ஆனது.
நீதி:
ஒரு சூழ்நிலையை தவிர்ப்பதனால், வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள முடியாது. ஏதாவது ஒரு சவால் வந்து கொண்டே இருக்கும். எந்த ஒரு சூழ்நிலையையும், தைரியமாக, நம்பிக்கையுடன் எதிர்கொள்வது தான், பயத்தை போக்குவதற்கான ஒரே வழி. பெரும்பாலான பயங்கள் கற்பனையே. ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு இருக்கிறது. நம் மனதில் பயம் சூழ்ந்திருக்கும் போது, பகுத்தறிவுள்ள தீர்மானத்தை நாம் எடுக்க முடியாது.
மொழி பெயர்ப்பு:
சரஸ்வதி, ரஞ்சனி
Source: http://saibalsanskaar.wordpress.com