நீதி: உண்மை
உப நீதி: உண்முக நோக்குதல்
ஒரு நாள், செல்வந்தன் ஒருவன், ஹாசன் என்பவனை தண்டிக்க விரும்பினான். அவன் அக்பரிடம், தன் வீட்டிலிருந்த ஒரு அட்டிகையை ஹாசன் திருடிவிட்டதாகப் புகார் கூறினான்.
அக்பர், “ஹாசன் திருடினான் என்று நீ ஏன் நினைக்கிறாய்?” என்று வினவினார்.
அதற்கு செல்வந்தன், “அவன் திருடியதை நான் பார்த்தேன்” என்று பதிலளித்தான்.
உடனே ஹாசன், “இல்லை அரசே! நான் ஒரு அப்பாவி. அந்த அட்டிகையைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது” என்றான். செல்வந்தன், “அரசே! அவன் நிரபராதி என்றால் அவன் அதை நிரூபிக்க வேண்டும்.
நான் ஒரு சூடான இரும்புக் கம்பியைக் கொண்டு வருகிறேன். அதை அவன் கையில் பிடித்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால், அவன் நிரபராதி என்றும் அவன் உண்மை பேசுகிறான் என்றும் நான் நம்புவேன்” என்றான்.
ஹாசன், “உண்மையைப் பேசினால் அந்தச் சூடான இரும்பு என் கையைச் சுடாதா?” என்று வினவினான்.
அதற்கு செல்வந்தன் “ஆமாம். கடவுள் உன்னைக் காப்பாற்றுவார்” என்றான். இப்பொழுது ஹாசனுக்குத் தான் ஒரு நிரபராதி என்பதை நிரூபிக்க என்ன செய்வது என்று தெரியவில்லை. ஹாசன் அக்பரிடம், “நான் பேசுவது உண்மை என்பதை நிரூபிக்க எனக்கு ஒரு நாள் அவகாசம் வேண்டும்” என்று கேட்டுக் கொண்டு வீடு சென்றான்.
பின்னர், பீர்பலைச் சந்தித்து அவரிடம் அறிவுரை பெற்றான்.
அடுத்த நாள் அரசவையில், ஹாசன், “ சரி. நான் தயாராக இருக்கிறேன். ஆனால் அந்த விஷயம் அவனுக்கும் பொருந்துமல்லவா? அவன் உண்மை பேசினால், அந்தச் சூடான இரும்புக்கம்பி அவன் கையையும் சுடாதல்லவா? அதனால், அவன் அதைக் கையில் பிடித்துக் கொண்டு வரட்டும். பின்னர் நானும் என் கையில் பிடித்துக் கொள்கிறேன்” என்று கூறினான். செல்வந்தன் வாயடைத்துப் போனான். அவன் அக்பரிடம், “நான் வீட்டிலேயே எங்கேயாவது தவறுதலாக இடம் மாற்றி வைத்திருப்பேன் என்று நினைக்கிறேன். உடனே வீடு சென்றுத் திரும்பத் தேடி பார்க்கிறேன்” என்று கூறினான். அக்பர், இதற்குத் தண்டனையாக, செல்வந்தன் அந்த அட்டிகையை ஹாசனுக்குக் கொடுக்க வேண்டும் என்று ஆணையிட்டார்.
நீதி:
உண்முக நோக்குதல் என்ற நற்பண்பை நாம் வளர்த்துக் கொண்டால், நாம் அவசரப் பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க மாட்டோம்; தேவையில்லாமல் மற்றவர்களின் மேல் பழியையும் சுமத்த மாட்டோம். நாம் உண்மையாக இருந்து, வார்த்தைகளை பேசுவதற்கு முன்பும், செயல்களை செய்வதற்கு முன்பும் பல முறை யோசித்து செயல்பட வேண்டும்.
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்
முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.
மொழி பெயர்ப்பு:
காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி