நீதி: அன்பு, நன் நடத்தை
உபநீதி: அக்கறை மற்றும் பகிர்வு, இரக்கம்
ரூத் தனது அஞ்சல் பெட்டியில் ஒரு கடிதத்தைப் பார்த்தாள். அதை திறப்பதற்கு முன்பு, மற்றொரு முறை அக்கடிதத்தைக் கூர்ந்து கவனித்தாள். அதில் அஞ்சல் முத்திரை இல்லை; பெயரும், விலாசமும் மட்டுமே இருந்தன.
அவள் அக்கடிதத்தைப் படித்தாள்: “அன்புக்குரிய ரூத், வரும் சனிக்கிழமை மதியம், நான் உன் வட்டாரத்தில் இருப்பேன். உன்னை சந்திக்க ஆசைப்படுகிறேன். அன்புடன், கடவுள்” என்று எழுதியிருந்தது.
கடிதத்தை மேஜையில் வைத்த போது அவள் கைகள் நடுங்கின.
“கடவுள் எதற்கு என்னைப் பார்க்க ஆசைப்படுகிறார்? நான் ஒரு சாதாரண பெண் தானே. அவருக்கு சிறப்பாக ஏதாவது கொடுப்பதற்குக் கூட என்னிடம் ஒன்றுமே இல்லையே” என்று நினைத்தாள்.
இந்த எண்ணத்துடன் அவளுக்கு தன்னுடைய சமையலறையில் இருந்த காலி அலமாரி ஞாபகத்திற்கு வந்தது. “அடக் கடவுளே! அவருக்குக் கொடுப்பதற்கு உண்மையாகவே என்னிடம் ஒன்றும் இல்லையே. நான் கடையிலிருந்து சமையல் செய்ய எதையாவது வாங்கி வர வேண்டும்” என்று ரூத் நினைத்தாள்.
அவள் தன் பணப்பையைத் திறந்து பார்த்த பொழுது, ஐந்து டாலர்களும் நாற்பது சென்டுகளும் இருந்தன. “நல்லவேளை! எனக்குக் கொஞ்சம் ரொட்டியும் குளிர்ந்த இரைச்சியுமாவது கிடைக்கும்” என்று நினைத்தாள்.
ரூத் தன் மேற்சட்டையை அணிந்துக் கொண்டு, விரைவாக வெளியில் சென்றாள். ரொட்டித் துண்டு, சில பழங்கள் மற்றும் பாலை வாங்கியபின் அவளிடம் 12 சென்டுகள் மட்டும் இருந்தன; திங்கட் கிழமை வரை சமாளித்து விடலாம் என்று எண்ணி, மன திருப்தியோடு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாள்.
ஆழ்ந்த யோசனையில் இருந்த ரூத், குறுக்கு சந்தில் இருந்த இரண்டு நபர்களை முதலில் கவனிக்கவில்லை; கிழிந்த ஆடைகள் அணிந்த ஒரு ஆணும், பெண்ணும் இருந்தனர். அவர்கள் அவளைப் பார்த்து, “எங்களுக்கு உதவ முடியுமா?” என்று கேட்டனர்.
அம்மனிதர் ரூத்திடம் “இங்கே சற்று பார்! எனக்கு வேலை இல்லை; என் மனைவியும் நானும் தெருவில் தான் வசிக்கிறோம். குளிரும், பசியும் எங்களை தாக்குகின்றன. எங்களுக்கு நீ உதவி செய்தால் நாங்கள் நன்றி உணர்வோடு இருப்போம்” என்றார்.
ரூத் அவர்கள் இருவரையும் பார்த்தாள். அவர்கள் அழுக்காகவும், துர்நாற்றத்துடனும் இருந்தனர். அவர்கள் உண்மையாக முயற்சி செய்தால், ஏதாவது ஒரு வேலை அவர்களுக்குக் கிடைக்கும் என்று அவளுக்கு உறுதியாகத் தெரிந்தது.
அவர்களுக்கு உடனடியாக உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை அவளுக்கு இருந்தாலும், அவளிடம் இருக்கும் பொருட்களைக் கொடுத்து விட்டால், கடவுளுக்கு உணவளிக்க வேறொன்றுமே இல்லையே என்று நினைத்தாள்.
அவள் “ஐயா! நான் உங்களுக்கு உதவ விரும்புகிறேன்; ஆனால் நானே ஒரு ஏழைப் பெண்மணி. என்னிடம் இருப்பதெல்லாம் சில இரைச்சித் துண்டுகளும் சிறிதளவு ரொட்டியும் தான்; மேலும் ஒரு முக்கியமான விருந்தாளி இன்று இரவு உணவுக்கு வர இருப்பதால் அவருக்கு இதைக் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்” என்று பதிலளித்தாள்.
அவர் “பரவாயில்லை, எனக்கு புரிகிறது. மனமார்ந்த நன்றி” என்று கூறிவிட்டு, இருவரும் அங்கிருத்து புறப்பட்டனர்.
அவர்கள் திரும்பிப் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த அவளுக்கு, மனதில் ஏதோ ஒரு வலி தோன்றியது.
ரூத் “ஐயா! நில்லுங்கள்” என்றாள்.
இருவரும் அவளை திரும்பிப் பார்த்தனர். ரூத் அவர்களை நோக்கி ஓடினாள்.
பிறகு அவள் “நீங்கள் இந்த உணவை எடுத்துக் கொள்ளவும்; என் விருந்தாளிக்குக் கொடுப்பதற்கு நான் வேறு ஏதாவது ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறி தன் கையில் இருந்த பையை அவர்களிடம் கொடுத்தாள்.
அப்பெண் நடுங்கிக் கொண்டே “மிகவும் நன்றி!” என்று கூறினார்.
ரூத் “சற்று இருங்கள், என்னிடம் வீட்டில் இன்னொரு மேற்சட்டை இருக்கிறது என்று கூறி, அதைக் கழற்றி அந்தப் பெண்ணின் தோள்களில் போட்டாள்.” தனது விருந்தாளிக்கு கொடுக்க உணவும் இல்லை; குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மேற்சட்டையும் இல்லை. ஆனாலும், ரூத் மன நிறைவுடன் புன்சிரிப்போடு வீட்டை நோக்கிச் சென்றாள்.
அப்பெண் “மிகவும் நன்றி!” என்று பதிலளித்தார்.
வீட்டிற்கு அருகில் வந்தவுடன் ரூத் பதற்றம் அடைந்தாள். கடவுள் அவளைப் பார்க்க வரும் போது, கொடுக்க ஒன்றுமே இல்லையே என வருத்தப் பட்டாள். வீட்டுச் சாவியை தேடிக் கொண்டிருந்த சமயம், அஞ்சல் பெட்டியில் மற்றொரு கடிதத்தை கவனித்தாள். “தபால்காரன் ஒரே நாளில் இரண்டு முறை வர மாட்டானே” என்று நினைத்துக் கொண்டே கடிதத்தை படிக்க ஆரம்பித்தாள்.
“அன்புள்ள ரூத்! உன்னை மறுபடியும் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அருமையான உணவிற்கு மிக்க நன்றி; அழகான மேற்சட்டைக்கும் மிக்க நன்றி.
என்றும் அன்புடன், கடவுள்.”
தற்சமயம் மேற்சட்டையும் இல்லை, இன்னும் குளிராக தான் இருந்தது; ஆனால் ரூத் அதை கவனிக்கவில்லை.
மனித குலத்திற்கு செய்யும் சேவையே இறைவனுக்கு செய்யும் சேவையாகும். நாம் செய்யும் ஒவ்வொரு சேவையும் கடவுளின் பாதங்களில் சமர்ப்பிக்கப்படும் ஒரு பூவாகும்.
நீதி:
பெற்றுக் கொள்பவர்களை விட கொடுப்பவர்களே இன்னும் பாக்கியம் செய்தவர்கள். பிறருக்கு உதவுவதும், நம்மிடம் உள்ளதைப் பிறருக்குப் பகிர்ந்தளிப்பதும் தான் உண்மையான மகிழ்ச்சிக்கான ரகசியம். எப்பொழுதெல்லாம் நாம் உதவி தேவைப்படுபவர்களுக்கு சேவை செய்கிறோமோ, அப்பொழுதெல்லாம் நாம் உண்மையாகவே கடவுளுக்கு சேவை செய்கிறோம். ஆகவே நாம் நம்மிடம் உள்ளவற்றை பிறருக்குப் பகிர்ந்தளிப்பதை வழக்கமாக்கிக் கொள்வோம். இது படிப்படியாக நம்முள் நல்லொழுக்கத்தை வளர்த்து, உதவி பெறுபவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
மொழி பெயர்ப்பு:
அன்னப்பூரணி, சரஸ்வதி, ரஞ்சனி
SOURCE: SSSIE