நீதி – உண்மை/வாய்மை
உபநீதி – நம்பிக்கை
பதினைந்து படைவீரர்களைக் கொண்ட ஒரு குழு, தன் மேஜருடைய தலைமையில் ஒரு முறை இமயமலைக்குச் சென்று கொண்டிருந்தது. அங்கு அவர்களுக்கு மூன்று மாதம் வேலை இருந்தது. மற்றொரு குழு இவர்கள் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தது. இவர்கள் வந்தவுடன் அந்தக் குழுவில் உள்ள அனைவரும் தன் தலைமை அலுவலகத்துக்குச் செல்லத் தயாராக இருந்தார்கள். சிலர் விடுமுறை எடுத்துக் கொண்டு தங்கள் குடும்பங்களைக் காணச் சென்றனர். கடமையைக் கண்ணியமாகச் செய்த குழுவிற்கு விடுதலை அளிப்பதில் புதுக் குழுவினர் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.
பயணம் மிகவும் கடுமையாக இருந்தது. மறுநாள் மாலை வரை நீடிக்கக் கூடிய ஒரு நம்ப முடியாத பாதையாக அமைந்தது. பனிக்காலமாக இருந்ததால் அவ்வப்பொழுது பனிப்பொழிவும் நிகழ்ந்தது. இது பயணத்தை மேலும் கடினமாக்கியது.
யாரேனும் சூடாக ஒரு கோப்பைத் தேநீர் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என படைத்தலைவர் எண்ணினார். இந்த ஆசை நிறைவேறாது என நன்றாகத் தெரிந்தது. ஒரு மணி நேரம் நடந்த பிறகு அவர்கள் கடை போல் தோற்றமளித்த ஒரு பாழடைந்த கட்டிடத்தை கண்டனர். அக்கடை பூட்டப்பட்டிருந்தது.
இரவு மணி இரண்டாகி இருந்தது. கடை முதலாளி யார் என விசாரிக்க பக்கத்தில் வீடு எதுவும் தென்படவில்லை. பாதுகாப்புக் காரணமாக யார் வீட்டுக் கதவையும் தட்டுவது நியாயமாகப் படவில்லை. இக்கட்டான நிலையில் இருந்ததால் தலைவர், “தேநீர் இல்லை, நம் துரதிர்ஷ்டம்” என்றார். மூன்று மணி நேரம் நடந்ததால் எல்லோரையும் சற்று ஓய்வு எடுக்கச் சொன்னார்.
சில நிமிடங்களுக்குப் பிறகு ஒரு படைவீரர், “ஐயா, இது தேநீர் கடை தான். கதவை உடைக்க அனுமதி அளித்தால் நாங்களே தேநீர் தயார் செய்வோம்” எனக் கூறினார். சற்று யோசனை செய்தப் பின் கடையின் பூட்டை உடைக்கத் தலைவர் அனுமதி அளித்தார். பூட்டு உடைக்கப்பட்டது. அவர்களின் அதிர்ஷ்டம், தேநீர் தயாரிப்பதற்கு அவசியமான எல்லா பொருட்களும் அக்கடையில் இருந்தன. தேநீர் தயாரித்து எல்லோரும் அருந்தினர். குளிருக்குச் சற்று ஆறுதலாக இருந்தது. நீண்ட தூரம் பயணம் செய்ய இப்போது அவர்கள் தயாரானார்கள்.
தலைவர் சற்று யோசித்தார். கடைக்காரன் அனுமதியில்லாமல் பூட்டை உடைத்து, தேநீர் தயாரித்து, பிஸ்கட் பொட்டலங்களையும் அவர்கள் சாப்பிட்டிருந்தனர். அதற்கு ஏதாவது ஒரு தொகை கொடுப்பது அவசியம். ஆனால், கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் தென்படவில்லை. அவர்கள் திருடர்கள் அல்ல, நாட்டை காக்க வேண்டிய படைவீரர்கள்.
செய்ய வேண்டியதைச் செய்யாமல் அங்கிருந்து செல்ல படைத் தலைவருக்கு மனமில்லை. ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து அங்கு மேஜை மேல் இருக்கும் சர்க்கரை பாட்டிலுக்குக் கீழே வைத்தார். கடை முதலாளி காலையில் வந்து பார்த்தால் முதலில் தென்படும் என்ற எண்ணத்துடன் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட்டு, படைத்தலைவர் வீரர்களை முன்னே செல்லும்படி ஆணையிட்டார்.
சில நாட்கள், வாரங்கள், மாதங்கள் சென்றன. இக்குழு வேலை முடித்து ஒய்வு எடுக்க வேண்டிய சமயம் வந்தது. திரும்பிச் செல்லும் போது, இந்தக் கடைக்கு வந்தனர். முதலாளி வயதானவராகவும், குறைந்த வளமுள்ள மனிதனாகவும் திகழ்ந்தார். பதினைந்து வீரர்கள் கொண்ட குழுவைக் கண்டதும் அவர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். குறைந்தது பதினைந்து கோப்பை தேநீர் விற்பனை ஆகும் என்று எண்ணினார்.
எல்லோரும் தேநீர் அருந்திய பின் பொதுவாகக் கடைக்காரனுடைய வாழ்க்கை முறை, அனுபவங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர். நெடும் தொலைவில் ஒரு தேநீர்க் கடையை வைத்து நடத்தியதைப் பற்றி பெருமையாகப் பேசினர். அவரைப் புகழ்ந்தனர். அந்த எளிய கடைக்காரன் கடவுள் மேல் இருக்கும் நம்பிக்கையை பலப்படுத்திப் பல கதைகள் கூறினார்.
ஒரு வீரர், “கடவுள் உண்மையாகவே இருந்தால், உங்களைப் போன்ற கடவுள் பக்தி உள்ள மனிதர்கள் ஏன் ஒரு கஷ்டப்படுகிறார்கள்?” என இரக்கப்பட்டுக் கேட்டான். அதற்கு அந்த வயதான கடைக்காரர், “கடவுள் நிச்சியமாக இருக்கிறார். அதற்கான சான்று எனக்கு சில மாதங்கள் முன் கிடைத்தது” எனக் கூறினார்.
மேலும் அவன் அனுபவத்தை இவ்வாறு கூறினான். “என்னுடைய ஒரே மகன் தீவிரவாதிகளால் துன்புறுத்தப்பட்டதால் நான் மிக மோசமான நிலையில் இருந்தேன். அவர்கள் கேட்ட விவரம் எதுவும் என் மகன் அறியவில்லை. அன்றைய தினம் நான் கடையை சீக்கிரமாகவே அடைத்துவிட்டு என் மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். மருந்துகள் வாங்க என்னிடம் பணம் இருக்கவில்லை. தீவிரவாதிகளுக்கு பயந்து எனக்கு யாருமே கடனாக பணம் அளிக்கத் தயங்கினார்கள். அன்றைய தினம் நான் கடவுளிடம் உதவும்படி பிரார்த்தனை செய்தேன். எனக்கு உதவ அவர் கடைக்கு வந்திருந்தார். எப்படியென்றால் நான் கடையை அடைந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இருந்த பொருட்களையும் யாரோ எடுத்துச் சென்று விட்டார்கள். பிறகு பார்த்த போது, கடவுள் ஆயிரம் ரூபாய் சர்க்கரைப் பாட்டிலின் கீழே வைத்திருந்தார். அந்த பணத்திற்கு இருந்த மதிப்பைக் கூற வார்த்தையில்லை. கடவுள் நிச்சியமாக இருக்கிறார்.”
பல மனிதர்கள் தினமும் இங்கு இறக்கின்றனர். ஆனால் நீங்கள் யாவரும் கூடிய சீக்கிரம் உங்கள் உற்றோரையும், பெற்ற குழந்தைகளையும் காணச் செல்வீர்கள். கடவுளுக்கு நன்றி கூறுவீர்கள். ஏனென்றால், அவர் நம் எல்லோரையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். அவர் நிச்சயமாக இருக்கிறார். அன்றைய தினம் என் கடைக்கு வந்து, பூட்டை உடைத்து, எனக்கு வேண்டிய பணத்தை கொடுத்துச் சென்றார். அவர் தான் அந்தக் காரியத்தை செய்தார் என்று எனக்குத் தெரிந்து.
அவர் கண்களில் நம்பிக்கையின் ஒளி வீசியது. பதினைந்து ஜோடி கண்கள் தங்கள் தலைவரின் முகத்தைக் கண்டு, ஆணைக்கு அடிபணிந்தனர். அவர்கள் “பேசாமல் இரு” என்ற ஜாடையைப் புரிந்து கொண்டனர். படைத்தலைவர் தேநீர் அருந்திய பணத்தைக் கொடுத்து விட்டு அந்த வயதான கடைக்காரரை அணைத்துக் கொண்டார். பிறகு அவர், “ஆம், கடவுள் கட்டாயமாக இருக்கிறார். தேநீர் சுவையாக இருந்தது” எனக் கூறி விடை பெற்றார்.
உண்மை யாதெனில் நம்மில் யார் வேண்டுமானாலும் மற்றவர்களுக்குக் கடவுளாகத் தென்படலாம்.
நீதி:
வாழ்க்கையில் எப்போதும், சமாதானத்தையும் சகிப்புத்தன்மையையும் நமது லட்சியமாக கொள்ள வேண்டும். -பாரதியார்
நம்பிக்கை மிகவும் அவசியமானது. அப்படிப்பட்ட நம்பிக்கை இருந்தால், மலைகள் கூட நகரும். கடவுள் மேல் நம்பிக்கை செலுத்தினால், அவர் கண்டிப்பாக பல வகைகளில் நமக்கு உதவுவார். நம்பிக்கை, மன உறுதி, தெளிவான மனப்பான்மை மற்றும் கடுமையான உழைப்பு இருந்தால், எல்லாச் செயல்களிலும் கடவுளைக் காணலாம்.
வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவனுக்குத் தன்னம்பிக்கை வேண்டும்; வாழ்க்கை முழுமை பெறக் கடவுள் நம்பிக்கை வேண்டும் – கீட்ஸ்
மொழி பெயர்ப்பு:
சரஸ்வதி, ரஞ்சனி