Archive | July 2014

கடவுள் இருக்கிறார் – தேநீர் கடை

god does exist the soldiers

நீதி – உண்மை/வாய்மை

உபநீதி – நம்பிக்கை

பதினைந்து படைவீரர்களைக் கொண்ட ஒரு குழு, தன் மேஜருடைய தலைமையில் ஒரு முறை இமயமலைக்குச் சென்று கொண்டிருந்தது. அங்கு அவர்களுக்கு மூன்று மாதம்  வேலை இருந்தது. மற்றொரு குழு இவர்கள் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தது. இவர்கள் வந்தவுடன் அந்தக் குழுவில் உள்ள அனைவரும் தன் தலைமை அலுவலகத்துக்குச் செல்லத் தயாராக இருந்தார்கள். சிலர் விடுமுறை எடுத்துக் கொண்டு தங்கள் குடும்பங்களைக் காணச் சென்றனர். கடமையைக் கண்ணியமாகச் செய்த குழுவிற்கு விடுதலை அளிப்பதில் புதுக் குழுவினர் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.

பயணம் மிகவும் கடுமையாக இருந்தது. மறுநாள் மாலை வரை நீடிக்கக் கூடிய ஒரு நம்ப முடியாத பாதையாக அமைந்தது. பனிக்காலமாக இருந்ததால் அவ்வப்பொழுது பனிப்பொழிவும் நிகழ்ந்தது. இது பயணத்தை மேலும் கடினமாக்கியது.

யாரேனும் சூடாக ஒரு கோப்பைத் தேநீர் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என படைத்தலைவர் எண்ணினார். இந்த ஆசை நிறைவேறாது என நன்றாகத் தெரிந்தது. ஒரு மணி நேரம் நடந்த பிறகு அவர்கள் கடை போல் தோற்றமளித்த ஒரு பாழடைந்த கட்டிடத்தை கண்டனர். அக்கடை பூட்டப்பட்டிருந்தது.

இரவு மணி இரண்டாகி இருந்தது. கடை முதலாளி யார் என விசாரிக்க பக்கத்தில் வீடு எதுவும் தென்படவில்லை. பாதுகாப்புக் காரணமாக யார் வீட்டுக் கதவையும் தட்டுவது நியாயமாகப் படவில்லை. இக்கட்டான நிலையில் இருந்ததால் தலைவர், “தேநீர் இல்லை, நம் துரதிர்ஷ்டம்” என்றார். மூன்று மணி நேரம் நடந்ததால் எல்லோரையும் சற்று ஓய்வு  எடுக்கச் சொன்னார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு ஒரு படைவீரர், “ஐயா, இது தேநீர் கடை தான். கதவை உடைக்க அனுமதி அளித்தால் நாங்களே தேநீர் தயார் செய்வோம்” எனக் கூறினார். சற்று யோசனை செய்தப் பின் கடையின் பூட்டை உடைக்கத் தலைவர் அனுமதி அளித்தார். பூட்டு உடைக்கப்பட்டது. அவர்களின் அதிர்ஷ்டம், தேநீர் தயாரிப்பதற்கு அவசியமான எல்லா பொருட்களும் அக்கடையில் இருந்தன. தேநீர் தயாரித்து எல்லோரும் அருந்தினர். குளிருக்குச் சற்று ஆறுதலாக இருந்தது. நீண்ட தூரம் பயணம் செய்ய இப்போது அவர்கள் தயாரானார்கள்.

தலைவர் சற்று யோசித்தார். கடைக்காரன் அனுமதியில்லாமல் பூட்டை உடைத்து, தேநீர் தயாரித்து, பிஸ்கட் பொட்டலங்களையும் அவர்கள் சாப்பிட்டிருந்தனர். அதற்கு ஏதாவது ஒரு தொகை கொடுப்பது அவசியம். ஆனால், கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் தென்படவில்லை. அவர்கள் திருடர்கள் அல்ல, நாட்டை காக்க வேண்டிய படைவீரர்கள்.

செய்ய வேண்டியதைச் செய்யாமல் அங்கிருந்து செல்ல படைத் தலைவருக்கு மனமில்லை. ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து அங்கு மேஜை மேல் இருக்கும் சர்க்கரை பாட்டிலுக்குக் கீழே வைத்தார். கடை முதலாளி காலையில் வந்து பார்த்தால் முதலில் தென்படும் என்ற எண்ணத்துடன் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட்டு, படைத்தலைவர் வீரர்களை முன்னே செல்லும்படி ஆணையிட்டார்.

சில நாட்கள், வாரங்கள், மாதங்கள் சென்றன. இக்குழு வேலை முடித்து ஒய்வு எடுக்க வேண்டிய சமயம் வந்தது. திரும்பிச் செல்லும் போது, இந்தக் கடைக்கு வந்தனர். முதலாளி வயதானவராகவும், குறைந்த வளமுள்ள மனிதனாகவும் திகழ்ந்தார். பதினைந்து வீரர்கள் கொண்ட குழுவைக் கண்டதும் அவர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். குறைந்தது பதினைந்து கோப்பை தேநீர் விற்பனை ஆகும் என்று எண்ணினார்.

எல்லோரும் தேநீர் அருந்திய பின் பொதுவாகக் கடைக்காரனுடைய வாழ்க்கை முறை, அனுபவங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர். நெடும் தொலைவில் ஒரு தேநீர்க் கடையை வைத்து நடத்தியதைப் பற்றி பெருமையாகப் பேசினர். அவரைப் புகழ்ந்தனர். அந்த எளிய கடைக்காரன் கடவுள் மேல் இருக்கும் நம்பிக்கையை பலப்படுத்திப் பல கதைகள் கூறினார்.

ஒரு வீரர், “கடவுள் உண்மையாகவே இருந்தால், உங்களைப் போன்ற கடவுள் பக்தி உள்ள மனிதர்கள் ஏன் ஒரு கஷ்டப்படுகிறார்கள்?” என இரக்கப்பட்டுக் கேட்டான். அதற்கு அந்த வயதான கடைக்காரர், “கடவுள் நிச்சியமாக இருக்கிறார். அதற்கான சான்று எனக்கு சில மாதங்கள் முன் கிடைத்தது”  எனக் கூறினார்.

மேலும் அவன் அனுபவத்தை இவ்வாறு கூறினான். “என்னுடைய ஒரே மகன் தீவிரவாதிகளால் துன்புறுத்தப்பட்டதால் நான் மிக மோசமான நிலையில் இருந்தேன். அவர்கள் கேட்ட விவரம் எதுவும் என் மகன் அறியவில்லை. அன்றைய தினம் நான் கடையை சீக்கிரமாகவே அடைத்துவிட்டு என் மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். மருந்துகள் வாங்க என்னிடம் பணம் இருக்கவில்லை. தீவிரவாதிகளுக்கு பயந்து எனக்கு யாருமே கடனாக பணம் அளிக்கத் தயங்கினார்கள். அன்றைய தினம் நான் கடவுளிடம் உதவும்படி பிரார்த்தனை செய்தேன். எனக்கு உதவ அவர் கடைக்கு வந்திருந்தார். எப்படியென்றால் நான் கடையை அடைந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இருந்த பொருட்களையும் யாரோ எடுத்துச் சென்று விட்டார்கள். பிறகு பார்த்த போது, கடவுள் ஆயிரம் ரூபாய் சர்க்கரைப் பாட்டிலின் கீழே வைத்திருந்தார். அந்த பணத்திற்கு இருந்த மதிப்பைக் கூற வார்த்தையில்லை. கடவுள் நிச்சியமாக இருக்கிறார்.”

பல மனிதர்கள் தினமும் இங்கு இறக்கின்றனர். ஆனால் நீங்கள்  யாவரும் கூடிய சீக்கிரம் உங்கள் உற்றோரையும், பெற்ற குழந்தைகளையும் காணச் செல்வீர்கள். கடவுளுக்கு நன்றி கூறுவீர்கள். ஏனென்றால், அவர் நம் எல்லோரையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். அவர் நிச்சயமாக இருக்கிறார். அன்றைய தினம் என் கடைக்கு வந்து, பூட்டை உடைத்து, எனக்கு வேண்டிய பணத்தை கொடுத்துச் சென்றார். அவர் தான் அந்தக் காரியத்தை செய்தார் என்று எனக்குத் தெரிந்து.

அவர் கண்களில் நம்பிக்கையின் ஒளி வீசியது. பதினைந்து ஜோடி கண்கள் தங்கள் தலைவரின் முகத்தைக் கண்டு, ஆணைக்கு அடிபணிந்தனர். அவர்கள் “பேசாமல் இரு” என்ற ஜாடையைப் புரிந்து கொண்டனர். படைத்தலைவர் தேநீர் அருந்திய பணத்தைக் கொடுத்து விட்டு அந்த வயதான கடைக்காரரை அணைத்துக் கொண்டார். பிறகு அவர், “ஆம், கடவுள் கட்டாயமாக இருக்கிறார். தேநீர் சுவையாக இருந்தது” எனக் கூறி விடை பெற்றார்.

உண்மை யாதெனில் நம்மில் யார் வேண்டுமானாலும் மற்றவர்களுக்குக் கடவுளாகத் தென்படலாம்.

நீதி:

வாழ்க்கையில் எப்போதும், சமாதானத்தையும் சகிப்புத்தன்மையையும் நமது லட்சியமாக கொள்ள வேண்டும். -பாரதியார்

நம்பிக்கை மிகவும் அவசியமானது. அப்படிப்பட்ட நம்பிக்கை இருந்தால், மலைகள் கூட நகரும். கடவுள்  மேல் நம்பிக்கை செலுத்தினால், அவர் கண்டிப்பாக  பல வகைகளில் நமக்கு உதவுவார். நம்பிக்கை, மன உறுதி, தெளிவான மனப்பான்மை மற்றும் கடுமையான உழைப்பு இருந்தால், எல்லாச் செயல்களிலும் கடவுளைக் காணலாம்.

வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவனுக்குத் தன்னம்பிக்கை வேண்டும்; வாழ்க்கை முழுமை பெறக் கடவுள் நம்பிக்கை வேண்டும் – கீட்ஸ்

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com

கடைக்காரனும் சிறுவனும்

Shopkeeper and Boy

நீதி – அன்பு

உபநீதி – நம்பிக்கை

ஒரு வேளை சாப்பாட்டிற்குக் கூட வழியில்லாமல் இருந்த ஏழைச் சிறுவன் ஒருவன், பக்கத்தில் இருந்த பழக் கடையிலிருந்து ஒரு வாழைப் பழத்தைத் திருடினான். கடவுள் பக்தி உள்ளவனாக இருந்ததனால் ஒரு பாதியை உண்டியலில் போட்டு விட்டு மற்றொரு பாதியை சாப்பிட்டான்.

கடையிலிருந்த பழக்காரன் சிறுவனின் மேல் குற்றம் சாற்றினான். சிறுவனும் குற்றத்தை ஏற்றுக் கொண்டான்.  அவன் தண்டனை எதுவும் பெரிதாகக் கொடுப்பதற்கு மனம் வரவில்லை. ஆனால் சிறுவனுக்கு ஒரு பாடம் கற்பிப்பதற்காக, கோயிலை சுற்றி பல முறை வர கட்டளையிட்டான்.

சிறுவனும் செய்த குற்றத்திற்கு கோயிலைச் சுற்றத் துவங்கினான். கடவுளும் அந்தச் சிறுவன் பின்னால் சென்றதைக் கவனித்து பழக்காரன் வியப்புற்றான்.

அன்று இரவு, கடவுள் பழக்காரனின் கனவில், “திருடிய வாழைப்பழத்தில் எனக்கும் பங்கு இருப்பதால், நான் அவ்வாறு செய்தேன். கோயிலை நானும் சுற்றினேன்” என்று சொன்னார்.

நீதி:

களங்கமில்லாத மனிதர்களின் அன்பும், எளிமையும் தான் கடவுள் பார்க்கிறார். மனதளவில் உண்மையாக இருந்து, கடுமையாக உழைத்து, வாழ்க்கையில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் பரந்த மனப்பான்மையுடன் ஏற்றுக் கொண்டு, கடவுளை நம்பி செயற்பட்டால், அவர் எச்சமயமும் நம்முடன் இருப்பார்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com

நம்பிக்கையால் நடக்கும் அற்புதங்கள்

miracles of faith.jpg

நீதி – உண்மை

உபநீதி – நம்பிக்கை

ஒரு பெண் தன் தோழியின் வீட்டிற்குச் சென்று, மாலை நேரம் திரும்பி வந்து கொண்டிருக்கும் பொழுது, சற்று நேரமாகி விட்டது. அவள் தனியாக நடந்து வர வேண்டிய நிர்ப்பந்தம். சில வீடுகள் தள்ளி தான் அவள் தோழி வசித்து வந்ததால் அவளுக்கு பயமாக இருக்கவில்லை.

வண்டி போகும் பாதையிலே செல்வி நடந்து  சென்றாள். அபாயம் ஒன்றுமில்லாமல் பத்திரமாக வீட்டிற்கு சென்று விட வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள்.

அவள் ஒரு குறுக்குச் சந்தில் சென்று கொண்டிருக்கும் போது, பாதை முடிகின்ற இடத்தில் ஒருவன் நின்றுக் கொண்டிருந்தான். அவளுக்காக அவன் காத்துக் கொண்டிருந்தான் போல் தெரிந்தது. மன சஞ்சலத்துடன், கடவுள் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் தீவிரமாக பிரார்த்தனை செய்தாள். பாதை முடிவிற்குச் சென்றவுடன், நின்று கொண்டிருந்த மனிதனைத் தாண்டி நடந்தாள். வீட்டிற்கு பத்திரமாகப் போய்ச் சேர்ந்தாள்.

அடுத்த நாள், செய்தித்தாளில் ஒரு பயங்கரமான செய்தியைப் படித்தாள். அவள் நடந்து வந்த அதே குறுக்குச் சந்தில், முன் தினம் மாலை ஒரு சிறிய பெண் பலாத்காரம் செய்யப் பட்டாள் என்பது தான் செய்தி. துக்கத்தில் மூழ்கியிருந்த இந்தச் சிறுமி பயந்து போய் அழ ஆரம்பித்தாள். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அவள் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் காவல் நிலையத்திற்குச் சென்றாள்.

அந்த மனிதனை அடையாளம் காண்பிக்க முடியும் என்ற தைரியத்துடன் அங்கு சென்று தன் கதையைச் சொன்னாள். காவல் நிலையத்தில் வரிசையாக நிறைய மனிதர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அதிலிருந்து முன் நாள் மாலை அவள் பார்த்த மனிதனை அடையாளம் காட்ட முடியுமா என்று காவலர் கேட்டார்.

அவள் அதற்கு ஒத்துக் கொண்டு அவனை அடையாளம் காட்டினாள். அந்த மனிதன் உடனடியாகத் தன் தப்பை ஒத்துக் கொண்டு அழ ஆரம்பித்தான்.

காவல்துறை அதிகாரி அவளுடைய வீரமான செயலுக்கு நன்றி கூறி, ஏதாவது  உதவி வேண்டுமா என்று கேட்டார். அதற்கு செல்வி, “அவன் ஏன் என்னை ஒன்றும் செய்யவில்லை” என்று வியப்புடன் கேட்டாள். அந்த மனிதனைக் கேட்ட போது அவன் சொன்ன பதில் “அவள் தனியாக இல்லை, இரண்டு உயரமான மனிதர்கள் அவளின் இரு பக்கமும் இருந்தார்கள்.”

இது தான் பிரார்த்தனைக்கு இருக்கும் சக்தி

நீதி:

நம்பிக்கை இருந்தால் மலைகள் கூட நகரும். கடவுள் எப்பொழுதும் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் இருந்தால், எந்த சமயமும் அவர் காப்பாற்றுவார். அவர் நம் ஹ்ருதயத்தில் எப்பொழுதும் இருக்கின்றார். அவர் அதிகமான அன்பை எல்லா  சமயத்திலும் பொழிவார். துன்பங்கள் வரும் போது, மனதளவில் உண்மையாக வேண்டிக் கொண்டால், அவர் நம் உதவிக்கு கட்டாயமாக வருவார்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com

குரு பூர்ணிமா

guru purnima brahma vishnu and shiva

ஆஷாட மாதத்தில் (ஜுலை-ஆகஸ்ட்) வரும் பௌர்ணமி “குரு பூர்ணிமா” அல்லது “வியாச பூர்ணிமா” என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் சன்னியாச தர்மத்தில் இருக்கும் சன்னியாசிகள் வியாச பூஜை செய்து வேத வியாசரை ஆராதிப்பார்கள். இந்த பூமியில் அவதரித்து, உள்நிலை மாற்றத்திற்கான அறிவை வழங்கிய ஞானமடைந்த குருமார்களைக் கொண்டாடும் விதமாக இந்த நாள் அமைந்திருக்கிறது. “குரு” என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்கு “இருளை விலக்குபவர்” என்று பொருள். குரு பூர்ணிமா அன்று ஆன்மீக சாதகர்கள் குருமார்களுக்கு நன்றி செலுத்தி அவர்கள் அருளைப் பெறுகிறார்கள். குரு பூர்ணிமா அன்று, யோக சாதனை அல்லது தியானத்தில் ஈடுபடுபவர்கள் மிகவும் பயன் பெறுகின்றனர்.

சன்னியாச தரமத்தில் ஒவ்வொரு சன்னியாசியும் ஒவ்வொரு விதமான முறையில் துறவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

குடிசைகளில் தங்கி இருந்து சந்நியாச ஆசிரமத்தைக் கடைப்பிடிப்பவர்களைக் “குடீசர்கள்” என அழைப்பார்கள்.

நீர் அதிகம் உள்ள நதிக்கரைகளில் வாழும் துறவிகளை “பஹூதகர்கள்” என அழைப்பார்கள். இவர்கள் பிக்ஷை எடுத்தே உண்ணுவார்கள். அடிப்படையில் சந்நியாச ஆசிரமத்தின் கட்டுப்பாடுகள் ஒன்றே என்றாலும் நுணுக்கமான வேறுபாடுகளும் உண்டு.

அடுத்துப் பரிவ்ராஜகர்கள்! இவர்கள் ஓரிடத்தில் தங்க மாட்டார்கள். பயணம் செய்து கொண்டே இருப்பார்கள். ஏனெனில் இவர்கள் பரிபூரணப் பக்குவ ஞானம் அடைந்தவர்களாக இருப்பார்கள். ஒரே ஊரில் தங்குவதும் அங்குள்ள மக்களுக்குப் போதிப்பதும் இவர்கள் வரை சரியானது அல்ல.  ஒரே இடத்தில் தங்கினால் அந்த மக்களிடம் பற்றோ, பாசமோ ஏற்பட்டு விடும் என்பதால் இடம் மாறிக் கொண்டே இருப்பார்கள். இவர்களும் குரு, சிஷ்ய பரம்பரையில் தான் வந்திருப்பார்கள்.

பொதுவாக சந்நியாசிகள் மூன்று நாட்களுக்கு மேல் ஓர் இடத்தில் தங்கக் கூடாது என்பார்கள். என்றாலும் இந்தச் சாதுர்மாஸ்யம் ஆரம்பித்தால் மட்டும் ஒரே இடத்தில் தங்குவார்கள். ஏனெனில் இவர்கள் மழைக் காலங்களில் ஊர் ஊராகப் பயணம் செய்ய முடியாது. மழைக் காலத்தில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால் புதிய செடிகள், துளிர்கள் முளைத்து வரும். புழுக்கள், பூச்சிகள் நிறையக் காணப்படும். இவற்றை மிதிக்காமல் நடக்க வேண்டி இருக்கும். சாலைகளின் பள்ளங்களில் நீர் தேங்கி இருக்கும் இடங்களில் கூடப் புழுக்கள், பூச்சிகள், பாம்புகள் போன்றவை மறைந்திருக்கலாம்.

எவ்வுயிர்க்கும் இல்லல் விளைவிக்காவண்ணம் அஹிம்சை என்பதைப் பரிபூரணமாகக் கடைப்பிடிப்பதே சந்நியாச யோகத்தில் முக்கியமானது. ஆகவே சந்நியாசிகளும், துறவிகளும், பரிவ்ராஜகர்களும் இந்த நான்கு மாதங்களில் ஒரே இடத்தில் தங்கி, தங்கள் விரதத்தை அனுஷ்டிப்பார்கள்.

குறிப்பாக இயற்கை சீர் கெடாமல் இருந்த பண்டைக் காலத்தில், ஆனி மாத பவுர்ணமி அன்று தான் மழைக்காலமும் தொடங்கும்.

அவர்கள் எந்த ஊரில் மழைக்காலம் தொடங்கும் பொழுது இருக்கிறார்களோ, அதே ஊரிலேயே நான்கு மாதங்களும் தங்கிவிடுவார்கள். அவ்வூரில் வாழும் மக்கள் சன்னியாசிகளிடம் நான்கு மாதங்களில் வேதாந்த உபதேசம் செய்யுமாறு வேண்டிக் கொள்வார்கள். அந்தந்த ஊர் மக்களே அவருக்குத் தேவையான குடிசையை அமைத்து கொடுத்து பிச்சைக்கும் ஏற்பாடு செய்வார்கள்.

வாழ்க்கை முழுவதும் ஒவ்வொருவரும் வேதாந்தத்தில் ஈடுபட்டு, குரு மற்றும் ஈஸ்வரனை வழிபட வேண்டும். சன்னியாசி தான் ஞானத்தை பெற்றதற்கு நன்றியை வெளிப்படுத்தும் வகையிலும், தான் துவங்கவிருக்கும் வேதாந்த உபதேசம் தடையில்லாமல் முடிவடையவும், வியாச பகவானை ஆராதித்துப் பூஜை செய்யும் இந்நாள், குரு பவுர்ணமி என்றும் வியாச பவுர்ணமி என்றும் அழைக்கப்படுகிறது.

இந்நாளில் துறவிகள் மட்டுமில்லாமல், ஞான மற்றும் மோட்ச சாஸ்திரத்தை அறிய முற்படும் அனைவரும் தங்களது குருவையும், வியாச பகவானையும் ஆராதிக்க வேண்டும். வியாச பகவானை நிமித்தமாக வைத்து, ஆதிகுருவில் (சிவபெருமான் அல்லது ஸ்ரீமன் நாராயணன்) தொடங்கி, தங்களுடைய இப்பொழுதைய குரு வரை குரு பரம்பரையில் உள்ள அனைவரையும் இந்நாளில் வழிபட வேண்டும்.

வேதத்தை நான்காக வகுத்தவர் வியாசர். பகவான் கிருஷ்ணன் அருளிய கீதையைத் தொகுத்தவர் அவர்தான். பிரம்ம சூத்திரத்தை (வேதங்களின் சாரம்) எழுதியவர் வியாசர். இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ப்ரஸ்தான த்ரயம் எனப்படும் மூன்று நூல்களிலுமே, வியாச முனிவரின் பங்குள்ளது.

எனவே வியாச பகவானை முன் வைத்து, ஆனி மாதப் பவுர்ணமியன்று குரு பூர்ணிமா அனுசரிக்கப்படுகிறது.

ஆன்மீகத்தில் ஒரு பழமொழி உள்ளது. இறைவனால் கொடுக்கப் பட்ட சாபத்தை ஒரு குருவினால் மாற்ற முடியும், ஆனால் ஒரு குருவினால் கொடுக்கப்பட்ட சாபத்தை இறைவனாலும் மாற்ற முடியாது என்பதாகும். இதனை கூர்ந்து நோக்கினால் குருவின் வலிமை தெரியும்..

“த்யான மூலம் குரோர் மூர்த்தி
பூஜாமூலம் குரோர் பதம்
மந்த்ரமூலம் குரோர் வாக்யம்
மோக்ஷமூலம் குரோக்ருபா!’

“தியானத்திற்கு உகந்தது குருவின் திருவுருவம்; 

பூஜிக்கத் தகுந்தது குருவின் திருப்பாதங்கள்; 

மந்திரத்திற்கு உகந்தது குருவின் வாக்கியங்கள்; 

குருவின் அருள், மோட்சம் நல்குகிறது…’ 

இந்த நன்னாளில் நாம் நம் குருமார்களுக்கு நம் மரியாதையை செலுத்தி குருவின் திருப்பாதங்களை இறுக பற்றுவோம். இந்த குரு சிஷ்ய பரம்பரை இன்னும் தொடர்த்து வர நம் குழந்தைகளும் தத்தமது குருமார்களை அடையாளம் காட்டுவோம்

 குருர்  ப்ரம்மா குருர் விஷ்ணு

குரு தேவோ மஹேஸ்வரஹ

குரு சாட்சாத் பரப்ரம்மா

தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ.

பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரர் இவர்கள் குரு தேவர்கள். குருவின் அன்றாட நடவடிக்கைகள், எண்ணங்கள், சொற்கள் ஆகியவைகள் உண்மையைப் பிரதிபலிக்கும். அதாவது இம்மூன்று குணங்களையும் கடந்தவர் என்று பொருள். ஒழுக்கத்தை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதால் அவர் பிரம்மாவாக கருதப்படுகிறார். நல்ல பழக்கங்களைப் பாதுகாப்பதால் அவர் விஷ்ணுவாக கருதப்படுகிறார். தீய குணங்களை அழிப்பதால் அவர் மகேஸ்வரராக கருதப்படுகிறார். இந்த மூன்று பணிகளையும் செய்வதால் அவர் மூம் மூர்த்திகளுக்குச் சமமாக போற்றப்படுகிறார்.

மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள், இதில் மாதா என்றால் இடகலை என்னும் இடது சுவாசம், பிதா என்பது பிங்கலை என்னும் வலது சுவாசம். குரு என்பது சுழுமுனை சுவாசம். இந்த சுழுமுனை சுவாசத்தின் மூலமாகவே மனமற்ற தெய்வநிலையை உணர முடியும் என்பதே சித்தர்கள் கண்ட சிவராஜ யோகத்தத்துவம். சுழுமுனை என்னும் சூட்சும சுவாசம் அதிகமாக நடைபெறும் ஒரு அற்புத நாளே குருபூர்ணிமா. இந்தச் சூழ்நிலையை சாதகமாக்கி கொண்டு குருவின் துணையோடு யோக சாதனையைத் தொடங்கும் அற்புத நாளே குரு பூர்ணிமா.

குரு எப்படிப்பட்டவர் என்பது முக்கியம் இல்லை, எத்தகைய வழியை நமக்கு காட்டுகிறார் என்பதே முக்கியம்.

ஒரு ஊரில் திருடன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவ்வூரில் அவனைப் பற்றி தெரிந்ததால், அவனால் திருட்டு தொழிலை செய்ய முடியவில்லை. வேறு ஊருக்கு சென்று திருட்டு தொழிலை செய்ய முடிவு செய்து பயணமானான். வெகுதூரம் பயணப்பட்டு ஓர் ஊரை அடைந்தான். திருடனுக்கோ அகோர பசி. உணவுக்கு எங்கு செல்வது எனப் பார்க்கும் பொழுது பூசணிக்காய் தோட்டம் ஒன்று இருப்பதை கண்டு வேலியை தாண்டி குதித்து, பூசணி பழத்தைத் திருடி உண்ண எண்ணினான்.

வெள்ளை பூசணி பழத்தை திருடும் சமயம் தோட்ட காவல்காரன், யாரோ ஒருவன் தோட்டத்தில் இருப்பதை பார்த்து கூச்சலிட்டான். சப்தம் கேட்டு மக்கள் கூட்டமும், தோட்ட காவல்காரனும் வருவதை கண்ட திருடன் மறைந்து கொள்ள இடம் தேடினான். பூசணி தோட்டத்தில் மறைந்து கொள்ள இடமா இருக்கும்? உடனே சமயோஜிதமாக தனது ஆடைகளைக் கழற்றி விட்டு, பூசணிக்காய் மேல் படந்திருக்கும் சாம்பலை எடுத்து உடல் முழுவதும் பூசிக் கொண்டான். திருடனை நெருங்கிய மக்கள், நீண்ட நாட்கள் பசியில் மெலிந்த உடல், சாம்பல் பூச்சு என அங்கு ஒரு சிவ தொண்டு புரியும் ஆன்மீக குரு இருப்பதாக நினைத்துக் கொண்டனர்.

திருடனின் சாம்பல் பூச்சு அவனை ஒரு முனிவனாக காட்டியது. தாங்கள் முனிவரை தவறாக எண்ணியதாக்க கூறி மன்னிப்பு கேட்டனர். ஊருக்கு வந்த புதிய முனிவரை காண பலரும் வரத் துவங்கினார்கள். ஞானத்தேடல் கொண்ட ஒருவன் இந்த முனிவரை சந்தித்தான். “ரிஷி புருஷரே என்னை சிஷ்யனாக ஏற்று உங்களைப் போல ஞானம் அடைய வழி சொல்லுங்கள்” எனக் கேட்டான். பூசணி முனிவருக்கு ஞானம் என்றால் என்ன என்றே தெரியாது. வாய் திறந்து பேசினால் தனது சுயரூபம் தெரிந்துவிடும் என்பதால் சைகையில் பேச ஆரம்பித்தார்.

பூசணி முனிவர் ஆசீர்வதிப்பதை போல கைகளை உயர்த்தி, பூசணிக்காய் போல கைகளை காட்டி தனது உடல் முழுவதையும் காட்டிவிட்டு கண்களை மூடினார். “பூசணி திருட வந்த நான் இவ்வாறு ஆகிவிட்டேன்” என்பதையே சைகையில் முனிவர் கூறினார். வாலிபனோ தன்னை ஆசீர்வதித்து சிஷ்யனாக ஏற்றுக் கொண்டார் என்று நினைத்தான். மேலும் “உலகில் எதுவும் இல்லை, அனைத்தும் உன் உள்ளே இருக்கிறது” என குரு உணர சொல்வதாக எண்ணிக் கொண்டான்.

சிஷ்யனோ ஆனந்தமாக அவரை மூன்று முறை வலம் வந்து வணங்கி விடை பெற்றான். வருடங்கள் ஓடின. தீவிர தேடலில் சிஷ்யன் ஞானம் அடைந்தார். இந்தக் கதையின் மூலம் – குருவின் தன்மை முக்கியமில்லை. குரு உங்களில் என்ன ஏற்படுத்துகிறார் என்பதே முக்கியம் என உணருங்கள்.

முழுமை நிலையில் இருக்கும் குரு தன்மையை உணர ஒவ்வோரு உயிருக்கும் பாக்கியமாக அமைந்த நாள் தான் “குரு பூர்ணிமா”. முழுமையை உணர்த்தும் பௌர்ணமி அன்று இருக்கும் உயிர் கூட இறைநிலையை நோக்கி உயர்த்தக் கூடியது இந்த திருநாள். குருவின் ஆற்றல் எல்லா நாளும் இருந்தாலும், குரு பூர்ணிமா, தனி மனிதன் குருவின் வழிகாட்டுதலை துவங்கும் நாளாக கொண்டாடப்படுகிறது. அன்று குரு தீட்சை பெறும் உயிர்கள் ஆன்மாவில் ஏற்றம் பெற்று விடுதலை அடைகிறார்கள்.

SOURCE:

http://www.ishafoundation.org/ta/Isha-Celebrations/guru-poornima.isa

http://yogashiva.blogspot.sg/2011/07/blog-post_13.html

http://vediceye.blogspot.sg/2009/06/blog-post_19.html

http://aanmikam.blogspot.sg/2013/05/blog-post_4514.html

ராம நாம ஜபம்

Rama nama chanting

நீதி ­ உண்மை

உபநீதி – அறிவு

ஒரு குரு, விஷ்ணு சஹஸ்ரநாமம் ஸ்லோகத்தை சில சிறுவர்களுக்குக்  கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் ஸ்லோகத்தை சொல்ல ஆரம்பித்தார்.

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!

சஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே!!

பிறகு சிறுவர்களிடம், “ராம நாமத்தை மூன்று முறை ஆழ்ந்த பக்தியுடன் ஜபித்தால், விஷ்ணு சஹஸ்ர நாமத்தை அல்லது கடவுளின் சஹஸ்ர நாமாவளியை படித்த பலன் கிடைக்கும்” என்று கூறினார்.

ஒரு சிஷ்யன் குரு சொன்னதை ஒத்துக் கொள்ளவில்லை. “மூன்று முறை சொன்னால் எப்படி ஆயிரத்திற்குச் சமமாகும்” என்று குருவிடம் கேட்டான்.

அறிவும், திறமையும், ராம பக்தியும் நிறைந்த குரு உடனடியாக பதிலளித்தார். “சிவபெருமான் என்ன சொல்கிறார் தெரியுமா? எல்லா வார்த்தைகளையும் விட ராம நாம ஜபம் தான் மிகவும் இனிமையானது. அவர் பெயரைச் சொல்வது விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களைச் சொல்வதற்குச் சமம்.” என்று கூறினார்.

குரு கணித்தல் மூலம் “மூன்று முறை ராம நாம ஜபம் செய்வது ஆயிரத்திற்குச் சமம்” என்பதை விளக்கினார். ராமா என்ற பெயரை எடுத்துக் கொண்டால் அதில் இரண்டு சமஸ்கிருத வார்த்தைகள் இருக்கின்றன. ரா வும் மா வும்.

‘ரா’{சமஸ்கிருதத்தில் இரண்டாவது இடையின எழுத்து}

‘மா’{ஐந்தாவது மெல்லின எழுத்து}:

‘ரா’ வுக்கு இரண்டு மதிப்பும், மா வுக்கு ஐந்து மதிப்பும் கொடுத்தால், ராமா என்ற வார்த்தைக்கு இரண்டு × ஐந்து = பத்தாகிவிடும். ராமா என்ற வார்த்தையை மூன்று முறை சொன்னால் ஆயிரத்திற்குச் சமமாகும். இரண்டு ×  ஐந்து ×  இரண்டு  ×  ஐந்து ×  இரண்டு ×  ஐந்து = பத்து ×  பத்து × பத்து = ஆயிரம்.

இந்த விளக்கம் கேட்டவுடன் சிறுவன் சமாதானமாகவும், சந்தோஷமாகவும் இருந்தான். விஷ்ணு சஹஸ்ர நாமத்தைப் பக்தியுடனும், கவனத்துடனும் கற்றுக் கொண்டான்.

ஆவலாகக் கேள்வி கேட்ட சிறுவனுக்கு நன்றி கூறி, எல்லோரிடமும் இந்த விளக்கத்தை சொன்னால், தினமும் மூன்று தடவை ராம  நாமத்தை ஜபிப்பது சுலபமாகி விடும்.

நீதி:

சடங்கு முறைகளின் அர்த்தத்தை மற்றவர்களுக்குச் சொன்னால், குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு, அதைப் பாராட்டிக் கட்டாயமாகப் பின்பற்றுவார்கள். கட்டாயப்படுத்துவதை விட அர்த்தத்தைப் புரிந்து செய்வது சிறப்பாகும். அனுபவங்களையும், அறிவு சார்ந்த விஷயங்களையும் தெரிந்து கொள்வதின் மூலம் தான் ஒரு மனிதனுக்கு ஞானம் வளரும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com