நீதி – நன்னடத்தை
உபநீதி – சரியான மனப்பான்மை
ஒரு செல்வந்தர், விவேகமுள்ள மனிதர் ஒருவரிடம் சென்று, தன் மகனை கெட்ட பழக்கங்களிலிருந்து விடுவிக்குமாறு கெஞ்சினார். அம்மனிதர் இளைஞனை பூந்தோட்டத்திற்கு கூட்டிச் சென்றார். திடீரென, அங்கு வளரும் ஒரு சிறு செடியை வேரோடு பிடுங்கச் சொன்னார்.
அவன் சுலபமாக அந்த வேலையை செய்து விட்டான். பிறகு, பெரிய செடி ஒன்றை அவ்வாறே செய்ய மறுபடியும் அம்மனிதர் உத்தரவிட்டார். சற்று கடினமாக இருந்தாலும், அச்செடியையும் இளைஞன் பிடுங்கி விட்டான். பிறகு, ஒரு புதரை பார்த்து அம்மனிதர், “தற்போது இதை பிடுங்கவும்” என்றார். இளைஞன் தன் பலத்தை பயன்படுத்தி, கடினமாக முயற்சித்து அவ்வேலையை செய்து முடித்தான்.
பிறகு ஒரு பெரிய மரத்தை காண்பித்து, “இதை வேரோடு பிடுங்கு பார்க்கலாம்” என அவனிடம் கூறினார். தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து விட்டு, “இந்த மரத்தின் வேர்கள் அடிதளத்தில் ஆழமாக சென்று மிகவும் வலிமையாக இருக்கின்றன. என்னால் இவைகளை அசைக்கவே முடியாது” என்று இளைஞன் கூறினான்.
அதற்கு அம்மனிதர், “கெட்ட பழக்கங்களும் அப்படி தான். துவக்க காலத்தில் அதை ஒழிக்க சுலபமாக இருக்கும். ஆனால், தொடர்ந்து பழக்கப் படுத்திக் கொண்டால், அதை ஒழிக்கவே முடியாது” என்றார்.
நடைமுறையில் நடந்த உதாரணத்தைப் பார்த்து, இளைஞன் கெட்ட பழக்கங்களை விட்டு விட்டு நல்லவனாக திருந்தினான்.
நீதி
ஒரு இளம் செடியை நம் விருப்பத்திற்கு ஏற்ப உருவாக்கலாம் ஆனால் ஒரு மரத்தை அப்படி செய்ய முடியாது. நற்பண்புகளை சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு புரியும்படி கற்பிக்க வேண்டும்; கெட்ட பழக்கங்களை உடனடியாக ஒழிக்க வேண்டும். குழந்தைகளுக்கு சிறு வயதில் கற்றுக் கொடுக்கின்ற பண்புகள், சரியான மனப்பான்மையையும், நல்ல விளைவுகளையும் ஏற்படுத்தும். அதே போல, கெட்ட பழக்கங்களை சரியான நேரத்தில் கட்டுப்படுத்த முயற்சி எடுக்காவிட்டால், அதை ஒழிக்கவே முடியாது.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது
மொழி பெயர்ப்பு:
சரஸ்வதி, ரஞ்சனி
Source: http://saibalsanskaar.wordpress.com