Tag Archive | Moral value stories in Tamil

நூதனம் திறவுகோல் ஆகும்

நீதி: நன்னடத்தை

உபநீதி: விடா முயற்சி, நன்னம்பிக்கை, புதுமை

எனக்கு 20 வயதாகி, பட்டப் படிப்பை அப்போது தான் முடித்திருந்தேன்.  என் தந்தையிடம் சென்று வேலை வாய்ப்புகளை எவ்வாறு அணுக வேண்டும் என்று ஆலோசனை கேட்டேன். அவருக்கு இந்திய இராணுவத்தில் நீண்ட மற்றும் தனித்துவமான தொழில் பதிவேடு இருந்ததால், ஆயிரக்கணக்கான மக்கள் தொகைக்கு மத்தியில் அவர் முதற்பெரும் படைத் தலைவராக திகழ்ந்தார்.  படைவீரருக்கு படைவீரராக இருந்து, அவரை நேசிக்கும் வகையில் அவர் வாழ்ந்தார். அவருக்கு கண்டிப்பான மற்றும் உறுதியான மனப்பான்மை இருந்தாலும், அவர் எல்லோருடனும் அன்பாகப் பழகினார். மனிதர்களை பாராட்டி, நம்பி அவர்களுக்கு சுதந்திரமும் கொடுத்தார்.

என்னிடம், “வேலையைப் பற்றி பேச வேண்டுமென்றால் என்னை அலுவலகத்தில் வந்து பார்” என்று கூறினார். அதனால் நான் இராணுவ அதிகாரியிடம் முன்பதிவு செய்து, அவரை பார்க்க சென்றேன். அவர் அலுவலகம் பிரம்மாண்டமாக இருந்ததை பார்த்து நான் தலைகுனிந்து நின்றேன்.

அவர் என்னிடம், “நீ நிறைவேற்ற வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கின்றன” என்று கூறினார். மேலும் அவர், “முதலாவதாக நீ என்ன செய்கிறாயோ, அதை உன்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக செய்ய வேண்டும். அதே வேலையை இரண்டாவது முறை செய்யும் போது, இன்னும் சற்று முயற்சியை அதில் செலுத்த வேண்டும்.” அவர் கூறியது என்னவென்றால், “முன்முயற்சி எடுத்து புதுமையாக ஆக்கப்பூர்வமாக இருங்கள். எல்லா சமயங்களிலும் கூடுதல் முயற்சி செலுத்துங்கள்”.

ஆதாரம்: கரண் பிலிமோரியா , கோப்ரா பீரின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகி. “பிசினஸ் லை ஃ ப்” என்ற பத்திரிகைக்கு செரிடன் விண்ணுடன் பேசியது.

நீதி:

எந்த ஒரு முயற்சியில் ஈடுபட்டாலும், அதை சிறப்பாக செயலாற்ற நாம் பாடுபட வேண்டும். அதற்குப் பிறகு, அடுத்தடுத்த வாய்ப்பில், நாம் முன் செய்ததை விட இன்னும் சிறப்பாக முயற்சிக்க வேண்டும். வெற்றிக்கு அதுவே அறிகுறி ஏனெனில் நாம் ஒவ்வொரு முறையும் நம் முயற்சிகளை மேம்படுத்திக் கொள்ளும் போது, நாம் சிறப்பாக மாறி, கண்டிப்பாக வெற்றியை அடைவோம்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

நல்ல வாய்ப்புகளை இழக்காதே

நீதி: உண்மை

உப நீதி: தன்னம்பிக்கை, நன்னம்பிக்கை

இளைஞர்  எஃப். டபிள்யூ. வுல்வொர்த் தனது முதலாளியின் பேச்சைக் கேட்டு, அந்த வாய்ப்பை நழுவ விட்டிருந்தால், புகழ்பெற்ற வுல்வொர்த் அங்காடிச் சங்கிலி எங்கே இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

படியுங்கள்….

இளைஞர்  எஃப். டபிள்யூ. வுல்வொர்த் ஒரு கடையில் எழுத்தராக இருந்த போது, தன் முதலாளியிடம், சரக்குகளைக் குறைப்பதற்காக, “தள்ளுபடி விற்பனை”யை அறிமுகப் படுத்த முயன்றார். முதலாளி ஒப்புக் கொண்டார். யோசனை மகத்தான வெற்றியை பெற்றது.

இந்த வெற்றி, குறைந்த விலையில் பொருட்களை விற்கும் ஒரு கடையை சொந்தமாகத் திறக்க, வுல்வொர்த்தைத் தூண்டியது. அத்தகைய முயற்சிக்கு அவருக்கு மூலதனம் தேவைப்பட்டது, எனவே அவர் முதலாளியிடம் உதவி கேட்டார். அவரது முதலாளி அவரை நிராகரித்தார்.

முதலாளி “இந்த யோசனை மிகவும் ஆபத்தானது,” என்று வுல்வொர்த்திடம் கூறினார். மேலும், “குறைந்த விலையில் விற்க, போதுமான பொருட்கள் இல்லை” என்றும் கூறினார்.

வுல்வொர்த், தனது முதலாளியின் ஆதரவின்றி வியாபாரத்தை தொடங்கினார். மேலும், அவர் தனது முதல் கடையில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், நாடு முழுவதும் எஃப். டபிள்யூ. வுல்வொர்த் கடைகளின் சங்கிலிக்கே சொந்தக்காரர் ஆனார்.

பின்னர், அவரது முன்னாள் முதலாளி, “எனக்குத் தெரிந்தவரை, வுல்வொர்த்தின் மதிப்பை குறைக்க நான் பயன்படுத்திய ஒவ்வொரு வார்த்தைக்கும் எனக்கு ஒரு மில்லியன் டாலர்கள் செலவு ஆகிவிட்டது” என்று கூறினார்.

நீதி:

மன உறுதி மிகவும் முக்கியமானது, ஏனெனில், அது நம்மைக் கஷ்ட காலங்களில் நிலைத்திருக்க உதவுகிறது. நமது இலக்கை அடையும் வரை அச்சமின்றி நம்பிக்கையுடன் முன்னேற இது நம்மைத் தூண்டுகிறது. வாழ்க்கை எப்போதும் சீராக இருக்காது என்பதால், நம்மில் பலர் தடைகளை சந்திக்கும் போது பின்வாங்குகிறோம். ஆனால் உறுதியுடன் இருந்தால், எந்த வகையான தடைகளையும் நம்மால் சமாளிக்க முடியும்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி வெங்கட் சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

முயற்சியை விட்டு விடாதீர்கள்

நீதி: சரியான அணுகுமுறை

உபநீதி: நன்னம்பிக்கை, வித்தியாசமான அணுகுமுறை

அடுத்த முறை நீங்கள் பெரிய சாதனைகளை செயலாற்றும் போது, கவனமாகக் கேளுங்கள். உங்கள் குருவின் மெல்லிய குரல் உங்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஒலிக்கும். அவை என்னவென்றால் “விட்டு விடாதே, முயற்சியை தொடர்ந்து செய்” என்பது தான்.

ஒரு தாய், தனது மகன் பியானோ வாசிப்பதை ஊக்குவிப்பதற்காக அவனை படேரெவ்ஸ்கி(Paderewski) என்ற இத்தாலி நாட்டை சேர்ந்த இசைக் கலைஞரின் கச்சேரிக்கு அழைத்து சென்றாள். இருவரும் அவர்களுடைய இருக்கையில் அமர்ந்தனர். அப்பொழுது தாய் தன் தோழி ஒருவரை அங்கு பார்த்தாள். உடனே ஆவலுடன் அவளிடம் பேசுவதற்காக அங்கு சென்றாள்.

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அந்த சிறுவன், இருப்பிடத்திலிருந்து எழுந்து கச்சேரி மண்டபத்தை சுற்றி ஆராயத் தொடங்கினான். “அனுமதி இல்லை” என்று தடை செய்ய பட்டுள்ள பகுதியை சென்றடைந்தான். கச்சேரி அறையின் விளக்குகள் மங்கி, கலை நிகழ்ச்சி ஆரம்பமாகியது. அப்பொழுது அந்த தாய் தன்னுடைய இருக்கைக்கு  வந்து, தன் மகன் அங்கு இல்லாததை கவனித்தாள்.

திடீரென மேடையின் திரைச்சீலைகள் திறக்கப்பட்டன. மின் விளக்குகள், ஈர்க்கக்கூடிய ஸ்டீன்வே பியானோ  மீது செலுத்தப்பட்டது. பதட்டத்துடன், தாய் தனது மகனை மேடையில் கீபோர்டில், “ட்வின்கில், ட்வின்கில் லிட்டில் ஸ்டார்” பாடல் வாசிப்பதை பார்த்தாள்.

அந்த சமயத்தில் பெரிய பியானோ கலைஞரான படேரெவ்ஸ்கி அங்கு வந்து அந்த சிறுவன் காதுகளில், “நிறுத்திவிட வேண்டாம், தொடர்ந்து வாசித்து கொண்டிரு” என்றார்.

பின்னர் சாய்ந்து, படேரெவ்ஸ்கி தனது இடது கையால் ஒரு பாஸ் (BASS) பகுதியை வாசிக்கத் தொடங்கினார். விரைவில் அவரது வலது கை குழந்தையின் மறுபக்கத்தை அடைந்தது, மேலும் அவர் வாசித்தார். பழைய மாஸ்டர் மற்றும் அந்த சிறுவன் இருவரும் சேர்ந்து ஒரு பயமுறுத்தும் சூழ்நிலையை அற்புதமான படைப்பு அனுபவமாக மாற்றினர். பார்வையாளர்கள் மெய்மறந்தனர்.

நீதி:

குழப்பமான மற்றும் சங்கடமான சூழ்நிலையை, நேர்மறையான மற்றும் மகிழ்ச்சியான சந்தர்ப்பமாக மாற்ற முடியும். எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகளுக்கு, ஒரு பயனுள்ள தீர்வுக்கு கொண்டு வர முயற்சிப்பதில் நமது ஆற்றலைச் செலவிட வேண்டும். இதுபோன்ற சமயங்களில், கடவுளின் மேன்மையான சக்தியின் கைகளில் நம்மை ஒப்படைப்பது அற்புதமான பலனைத் தரும்.

மொழி பெயர்ப்பு:

லக்ஷ்மி கோபாலன், சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

அசாதாரணமான ஆசிரியை

நீதி : அன்பு

உப நீதி: தொடர்பு

பிட்ஸ் & பீசஸ் – ஜூன் 1995, எகனாமிக்ஸ் பிரஸ்

பல ஆண்டுகளுக்கு முன்பு, ஜான் ஹாப்கின் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர், பட்டதாரி மாணவ குழுவிற்கு கீழ்வரும் பணியை ஒப்படைத்தார்: சேரிகளை நோக்கி சென்று, 12 முதல் 16 வயதுக்குட்பட்ட 200 சிறுவர் / சிறுமியர்களை அழைத்து, அவர்களின் பின்னணி மற்றும் சூழல் பற்றி விசாரித்து, விவரங்களை சேகரித்து ஆய்வு செய்ய வேண்டும் . பின்னர் எதிர்காலத்தில் அவர்களது வாய்ப்புகளை கணிக்க வேண்டும்.

மாணவர்களும் சிறுவர் / சிறுமியர்களுடன் பேசி பல புள்ளி விவரங்களையம் சேகரித்து, தொகுத்து கலந்தாலோசித்தனர். பிறகு அவர்களுள் 90 சதவீத சிறுவர்கள் கண்டிப்பாக சிறையில் சில காலம் கழிப்பார்கள் என்ற முடிவிற்கு வந்தனர்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு வேறொரு பட்டதாரி மாணவ குழுவிற்கு மேற்கண்ட ஆய்வின் கணிப்பையும், தற்போது வாலிப பருவத்தில் உள்ள அதே குழந்தைகளின் நிலையையும் ஒப்பீடு செய்யும் பணி வழங்கப்பட்டது.

மீண்டும் அதே பகுதிக்கு சென்றனர். அங்கே இன்னும் சில சிறுவர் / சிறுமியர்கள் வாலிப பருவத்தில்  இருந்தனர். ஒரு சிலர் இறந்து விட்டிருந்தனர், மேலும் சிலர் அங்கிருந்து சென்றிருந்தனர். ஆனால் அங்கு முதலில் தொடர்பு கொள்ளப்பட்ட 200 நபர்களுள் 180 பேருடன் மறுபடி தொடர்பு கொள்ள இயன்றது. அவர்களுள் நான்கு பேர் மட்டுமே சிறைக்கு சென்றதாக குழுவினர் கண்டறிந்தனர்.

குற்றச் செயல்கள் பெருகி இருந்த கடினமான சூழ்நிலையில் வாழ்ந்த அந்த சிறுவர் / சிறுமியர்களால் எவ்வாறு இத்தகைய வியக்கத்தக்க ஒழுக்கமான நடத்தையை பின்பற்ற முடிந்தது? இந்தக் கேள்வி எழுந்தபோதெல்லாம் ஆராய்ச்சியாளர்களுக்கு தொடர்ந்து கூறப்பட்டது ஒரே விதமான பதில் தான்: “உண்மை தான். அதற்கு காரணம் ஒரு ஆசிரியை / ஆசிரியர்.”

அவர்கள் மேலும் அழுத்தம் கொடுத்து விசாரிக்க, அவற்றுள் 75 சதவீத வழக்குகளில், அது ஒரே ஆசிரியையாக இருப்பதை கண்டறிந்தனர். ஆராய்ச்சி குழு குறிப்பிட்ட அந்த ஆசிரியையிடம் சென்றனர். தற்போது அவர் ஆசிரியர்களுக்கான ஓய்வு இல்லத்தில் வசித்து வந்து கொண்டிருந்தார். அந்தப் பிள்ளைகள் மீது அவரால் எப்படி இத்தகைய குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்த முடிந்தது? மேலும் அச்சிறுவர்கள் அவரை எந்த காரணத்திற்காக நினைவு கூர்ந்திருக்கக் கூடும் என்பதற்கான பதிலை அவர் அறிந்திருந்தாரா?

இந்தக் கேள்விகளை அவரிடம் கேட்ட போது – “இல்லை. எனக்கு உண்மையில் இதற்கான பதில் தெரியாது.” என்று அவர் பதிலளித்தார். பின்னர் சிறிது யோசனையோடு, “பல வருடங்கள் பின்னோக்கி நினைத்துப் பார்க்கிறேன் – நான் அந்த சிறுவர்களை மிக நேசித்தேன்…. அவர்களுக்கு கற்பிக்கும்போதும் அல்லது உரையாடும்போதும் சரி, மூளையைவிட இதயத்திலிருந்து எனது எண்ணங்களை பரிமாறினேன்” என்று அவர் கேள்வி எழுப்பியவர்களை விட தனக்கு தானே உரக்க சொல்லிக் கொண்டார்.

நீதி:

குழந்தைகளை உருவாக்குவதில் கருத்து தொடர்பு மிக முக்கிய பங்கு வகுக்கிறது. இது அவர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மிகவும் அமைதியான ஆனால் பயனுள்ள வழியில், அது அவர்களின் இதயத்தைத் தொட்டு, நீடித்த பதிவுகளை விட்டுச் செல்கிறது. தரமான கருத்துக்களை நேர்மறையான முறையில் போதித்தால், குழந்தைகள் சிறப்பாக வடிவமைக்கபட்டு, பிறருக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள்.

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

அன்பான மனப்பான்மையுடன் வாழுங்கள்

நீதி: அன்பு, பாசம்

உபநீதி: அக்கறை காண்பித்தல், பகிர்ந்து கொள்ளுதல்

ஒரு மாணவன் ஆசிரியரிடம், “சிலர், மிகுந்த கடுமையான பிரச்சனைகளுக்கு சுலபமாக தீர்வு காண்கின்றனர்; இன்னும் பலர் சிறிய பிரச்சனைகளைக் கூட எதிர்கொள்ள முடியாமல், வேதனையுடன் ஏன் அந்த பிரச்சனைகளுக்குள்ளேயே மூழ்கி விடுகின்றனர்?” எனக் கேட்டான்.

ஆசிரியர் கீழ் வரும் கதையை அவனிடம் சொன்னார்.

ஒரு முறை, ஒரு மனிதன் அன்பின் உருவமாக திகழ்ந்தான். அவன் இறந்த பிறகு, அவன் நல்லவனாக இருந்ததால், எல்லோருமே அவன் சொர்க்கத்திற்கு தான் செல்வான் என்று தீவிரமாக நம்பினர். அந்த மனிதனுக்கு எந்தவிதமான எண்ணங்களும் இல்லை; ஆனால் அவன் அங்கு தான் சென்றான்.

அங்கு இருந்த தேவதை, இந்த மனிதனை மேலோட்டமான பார்வையுடன் பார்த்து, அவன் பெயர் அங்கு குறிப்பிடாததால், அவனை நரகத்திற்கு அனுப்பி விட்டார்.

நரக வாசலில் அவனை எவரும் கவனிக்கவில்லை. அதனால் அவன் உள்ளே நுழைந்து அங்கு தங்கினான்.

சில நாட்களுக்குப் பிறகு, லுசிஃபர் சொர்க்க வாசலில் நின்று கொண்டு,  செயின்ட் பீட்டரிடமிருந்து விளக்கம்  வேண்டும் எனக் கேட்டார். மேலும் “நீங்கள் செய்வது அராஜகம்” என்று கூறினார்.

செயின்ட் பீட்டர், லுசிஃபர் ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார் என்று கேட்ட போது, அவர் “நீங்கள் ஏன் அந்த மனிதனை  நரகத்திற்கு அனுப்பினீர்கள் . அவன் என்னை மனச் சோர்வு அடையச் செய்கிறான். ஆரம்பித்திருந்தே அவன் மனிதர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு, அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தான். இப்போது எல்லோரும் அவர்களின் உணர்ச்சிகளை எடுத்துக் கூறி, அன்பாக பழகுகின்றனர். நரகத்தில் எனக்கு அது தேவையில்லை. அவனை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லவும்” என்றார்.

ஆசிரியர் கதையை முடித்த பிறகு, மாணவனை அன்புடன் பார்த்து ஆசையாக, “மிகுந்த அன்புடன் வாழ்க்கையை வாழ்ந்தால், தவறுதலாக நரகத்திற்கு உன்னை அனுப்பி விட்டால், அந்த சாத்தானே உன்னை சொர்க்கத்த்ற்கு அனுப்பி விடுவான்” என்றார்.

நீதி:

நிபந்தனையற்ற அன்பு சுயநலம் இல்லாதது. மதிப்பீடு செய்யாமல் ஒருவரை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். கலப்படமற்ற இரக்கம் என்பது சுய மையத்தால் சிதைக்கப்படுவதில்லை. மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால் மட்டுமே, மன திருப்தி வரும். இரக்கம் என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால், கொடுப்பவருக்கும் சந்தோஷம்; ஏற்றுக் கொள்பவருக்கும் சந்தோஷம். சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் சரி, ஒரு நபரை அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அதற்காக நேசியுங்கள்; நமக்கு என்ன செய்கின்றனர் என்பதை பொருத்து அல்ல.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

சுய சீர்திருத்தம்

நீதி: அன்பு, பொறுமை

உப நீதி: நன்றியுணர்வு, சுய பரிசோதனை

“உலகைக் குணப்படுத்து. உனக்கும் எனக்கும் ஏற்ற ஓர் நல்ல இடமாக அதை மாற்று” என்று மைக்கேல் ஜாக்சன் பாடினார். மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த ஓர் உலகத்தில் வாழ வேண்டும் என்பதே நம் அனைவரின் கனவாக இருக்கும். நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை மாற்ற வேண்டும் என்று நாமும் மிக வீரமாக அடி எடுத்து வைப்போம்.  ஒரே எண்ணத்தில் நம்மை நிறுத்திக் கொண்டு, உண்மையை உணர மறுப்போம். நாம் உலகை மாற்றி ஒரு சாதனை செய்யப் போகிறோம் என்று நினைப்போம். ஆனால், இவ்வுலகம் மாற வேண்டும் என்று நினைப்பதை விட நம்முடைய எண்ணங்கள் மற்றும் நம் கண்ணோட்டத்தை மாற்றுவதே எளிது என்பதை விரைவில் புரிந்து கொள்வோம். ”உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக இருங்கள்” என்பது மகாத்மா  காந்தியின் பிரபலமான பொன்மொழி.

லியோ டால்ஸ்டாய் ,“எல்லோரும் உலகை மாற்ற நினைக்கிறார்கள், ஆனால் எவரும்  தன்னை மாற்றிக் கொள்ள நினைப்பதில்ல.”  என்று கூறுகிறார்.

முன்னொரு காலத்தில், வளமான நாட்டை ஆண்ட ஒரு அரசன் இருந்தான். ஒரு நாள், அவர் தனது நாட்டின் சில தொலைதூர பகுதிகளுக்கு சுற்றுலா சென்றான். அவன் தனது அரண்மனைக்குத் திரும்பியபோது, தனது கால்கள் மிகவும் வலிப்பதாகக் கூறினான், ஏனெனில் அரசன் இவ்வளவு நீண்ட பயணத்திற்குச் செல்வது இதுவே முதல் முறை. மேலும் அவன் சென்ற பாதை, மிகவும் கரடுமுரடானதாக இருந்தது. பின்னர் அவன், நாட்டின் அனைத்து சாலைகளையும் தோலால் மூடும்படி கட்டளையிட்டான்.

நிச்சயமாக, இதற்கு ஆயிரக்கணக்கான மாடுகளின் தோல் தேவைப்படும், மேலும் பெரும் தொகையும் செலவாகும்.

அப்போது அவனுடைய புத்திசாலித்தனமான வேலைக்காரன் ஒருவன் அரசனிடம், “அந்தத் தேவையில்லாத பணத்தை ஏன் செலவழிக்க வேண்டும்? உங்கள் கால்களை மறைக்க ஒரு சிறிய தோலை மட்டும் ஏன் வெட்டக் கூடாது?” என்று தைரியமாகச் சொன்னான்.

ராஜா ஆச்சரியமடைந்தார். பிறகு அவர் தனக்கென ஒரு “காலணி” செய்யும் ஆலோசனையை ஒப்புக் கொண்டார்.

இந்தக் கதையில்,  உண்மையில் வாழ்க்கையின் மதிப்புமிக்க பாடம் உள்ளது: இந்த உலகத்தை, மகிழ்ச்சியாக வாழும் இடமாக மாற்ற, நீங்கள் உங்களை மாற்றிக் கொள்வது நல்லது – அதாவது உங்கள் இதயத்தை; இந்த உலகை அல்ல.

நாம் சந்திக்கும் பிரச்சனைகள் வெளியிலிருந்து தோன்றுபவை அல்ல; மாறாக நமக்குள்ளேயேதான் இருக்கின்றன. வெளிப்புற யதார்த்தத்தை மாற்ற, நாம் சில உள் மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டும்.

“மனிதர்களாகிய நமது மகத்துவம், உலகத்தை சீர்திருத்துவதில் இல்லை – அது அணு யுகத்தின் கட்டுக்கதை – நம்மை நாமே சீர்திருத்திக் கொள்வதில்தான் உள்ளது” என்கிறார் மகாத்மா காந்தி.

நம்மையே மாற்றிக் கொள்வதா? பழைய படங்கள் மற்றும் பழைய பாடல்களை  மாற்றி அமைப்பதை   கேள்விப்பட்டிருக்கிறோம். காந்தி பேசும் மாற்றம் என்ன? மாற்றத்தை நோக்கிய நமது பாதையில் உள்ள முக்கியத் தடைகள், கவலை, கோபம், நன்றியின்மை, இரக்கமின்மை, நேர்மையின்மை போன்றவை. அவற்றைக் கடக்க முடிந்தால், நம்மை நாமே மாற்றிக் கொள்ளலாம்.

நீங்கள் ரெய்கியை கற்கச் சென்றால், முதலில் அவர்கள் பின்வரும் 5 கொள்கைகளைப் பின்பற்றச் சொல்கிறார்கள்:

இன்றைக்கு மட்டும், எனக்கு கிடைத்திருக்கிற பல நன்மைகளுக்கு நன்றி கூறுகிறேன்.

இன்றைக்கு மட்டும், நான் கவலைப்பட மாட்டேன்.

இன்றைக்கு மட்டும் நான் கோபப்பட மாட்டேன்.

இன்றைக்கு மட்டும், நான் என் வேலையை நேர்மையாக செய்வேன்.

இன்றைக்கு மட்டும், நான் எல்லா உயிர்களிடத்திலும் கருணை காட்டுவேன்.

வெளிப்படையாக, இவற்றைப் பின்பற்ற நீங்கள் ரெய்கி மாணவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. இவை அனைவருக்கும் பொருந்தும். இந்த எளிய உறுதிமொழிகளை நாம் ஒவ்வொரு நாளும் உண்மையாகப் பயிற்சி செய்தால், நாம் நம்முள் கடலளவு மாற்றத்தைக் காணலாம்.

வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (1100 A.D) ஆங்கிலிகன் பிஷப்பின் கல்லறையில் பின்வருமாறு பொறிக்கப்பட்டுள்ளது.

“நான் இளமையாகவும் சுதந்திரமாகவும் இருந்த போது, எனது கற்பனைக்கு எல்லையே இல்லை, நான் உலகத்தை மாற்ற வேண்டும் என்று கனவு கண்டேன்.  நான் புத்திசாலியாக  வளர்ந்த பின், உலகம் மாறாது என்பதைக் கண்டுபிடித்தேன், அதனால் என் பார்வையை ஓரளவு சுருக்கி, என் நாட்டை மட்டும் மாற்ற முடிவு செய்தேன்.

ஆனால் அதுவும் இயலாததாகத் தோன்றியது.

நான் வயோதிக காலத்தில், இறுதி முயற்சியாக, என் குடும்பத்தை, எனக்கு மிக நெருக்கமானவர்களை மட்டும் மாற்ற எண்ணினேன., ஆனால் அதுவும் இயலாமல் போனது.

இப்போது, நான் என் மரணப் படுக்கையில் படுத்திருக்கையில், நான் திடீரென்று உணர்கிறேன்: நான் முதலில் என்னை மாற்றியிருந்தால், ஒரு முன்னுதாரணமாக இருந்து, என் குடும்பத்தை மாற்றியிருப்பேன்.

அவர்களின் உத்வேகம் மற்றும் ஊக்கத்திலிருந்து, நான் என் நாட்டை மேம்படுத்த முடிந்திருக்கும், யாருக்குத் தெரியும், நான் உலகையே மாற்றியிருக்கலாம்.”

நீதி:

 நிலையான மாற்றம் உள்ளிருந்து வர வேண்டும். நாம் மாறும்போது, சுற்றுச்சூழலை முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்துடன் பார்க்கிறோம். நாம் ஒவ்வொருவரும் மாற்றத்தின் உதாரணமாகத் திகழ முடியும். மேலும், நாம் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒருவருக்காவது, ‘மாற்றம் உள்ளிருந்து தான் வரவேண்டும்என்ற எண்ணத்தை விதைப்போம். அதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வோம் என்று உறுதி பூணுவோம்.

“உலகைக் குணப்படுத்து. உனக்கும் எனக்கும் ஏற்ற ஓர் நல்ல இடமாக அதை மாற்று” – மைகேல் ஜாக்சன்

மொழி பெயர்ப்பு:

காயத்ரி வெங்கட்சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

பிறருக்காகப் பிரார்த்தனை

நீதி: அன்பு / உண்மை

உபநீதி: அக்கறை / இரக்கம்

மிச்சிகனில் (MICHIGAN) உள்ள தனது வீட்டு தேவாலயத்திற்குச் சென்ற போது, சமயப்பரப்பாளர்  ஒருவர் பிரசங்கத்தில் சொன்ன உண்மைக் கதை இது.

ஒரு சமயப்பரப்பாளர் , ஆப்பிரிக்காவை சென்றடைந்த போது, இரண்டு ஆண்கள் சண்டையிடுவதைக் கவனித்தார். அவர்களில் ஒருவர் பலத்த காயமடைந்தார். அவர் காயங்களுக்கு சிகிச்சை அளித்தார்; அதே நேரத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி அவரிடம் பேசினார். பின்னர் அவர் இரண்டு நாட்கள் பயணம் செய்தார். ஒரு இரவு காட்டுக்குள் தங்கி, அசம்பாவிதம் இல்லாமல் வீட்டிற்கு வந்தார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர் தனது பயணத்தை மீண்டும் தொடங்கினார். ஊருக்கு வந்ததும், அவர் சிகிச்சை அளித்த இளைஞன் அவரை அணுகினார்.

அந்த இளைஞன் அவரிடம், “நீங்கள் பணம் மற்றும் மருந்துகளை எடுத்துச் சென்றது தெரிந்து, நானும் சில நண்பர்களும் உங்களைப் பின்தொடர்ந்து காட்டுக்குள் வந்தோம். நீங்கள் ஒரு இரவு இங்கு தங்குவீர்கள் என்று தெரிந்து கொண்டோம். நாங்கள் உங்களைக் கொன்று உங்கள் பணத்தையும் மருந்துப் பொருட்களையும் கொண்டு செல்ல திட்டமிட்டோம். ஆனால், நாங்கள் உங்கள் முகாமுக்குள் நுழைய முயன்ற போது, 26 ஆயுதமேந்திய காவலர்களால் உங்கள் முகாம் சூழப்பட்டிருந்தது.

இதைக் கேட்ட சமயப்பரப்பாளர் சிரித்துவிட்டு, அந்த காட்டு முகாமில் தான் மட்டும் தனியாக இருந்ததாகக் கூறினார். ஆனால் அந்த இளைஞன், “இல்லை ஐயா, நான் மட்டும் காவலாளிகளைப் பார்க்கவில்லை, என் ஐந்து நண்பர்களும் அவர்களைப் பார்த்தார்கள்.  அந்த காவலர்களைப் பார்த்து பயந்து உங்களை விட்டு நாங்கள் வெளியேறினோம்” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினான்.

பிரசங்கத்தின் இந்த கட்டத்தில், சபையில் இருந்தவர்களில் ஒருவன்  சமயப்பரப்பாளரை குறுக்கிட்டு, இது நடந்த சரியான நாளை சொல்ல முடியுமா என்று கேட்டான். சமயப்பரப்பாளர் சபைக்குத் தேதியைக் கூறினார். குறுக்கிட்டவன் அவரிடம் இந்தக் கதையைச் சொன்னான்:

அவன், “ஆப்பிரிக்காவில் சம்பவம் நடந்த அன்றிரவு, இங்கே காலை நேரம். நான் கோல்ஃப் விளையாடத் தயாராகிக் கொண்டிருந்தேன். உங்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்ற ஆவலை உணர்ந்தபோது நான் விளையாட  இருந்தேன். உண்மையில், கர்த்தருடைய வற்புறுத்தல் மிகவும் வலுவாக இருந்தது. நான் உங்களுக்காக ஜெபிக்க இந்த தேவாலயத்தில் உள்ள மனிதர்களை இங்கே சரணாலயத்தில் என்னுடன் சந்திக்க அழைத்தேன். அன்று என்னைச் சந்தித்த ஆண்கள் அனைவரும் எழுந்து நிற்க வேண்டுகிறேன்” என்றான்.

அன்று ஜெபிக்க ஒன்றாகக் கூடியிருந்த மனிதர்கள் எழுந்து நின்றனர். சமயப்பரப்பாளர்  அவர்கள் யார் என்பதைப் பற்றி கவலைப்படவில்லை – அவர் எத்தனை மனிதர்களைப் பார்த்தார் என்று எண்ணுவதில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார். 26 மனிதர்கள் இருந்தனர்.

நீங்கள் எப்போதாவது ஒருவருக்காக ஜெபிக்க வேண்டும் என்ற ஆசையை உணர்ந்திருக்கிறீர்களா? நான் அவர்களுக்காக பின்னர் பிரார்த்தனை செய்கிறேன்? என்று சொல்லி ஒரு பட்டியலில் வைத்துள்ளீர்களா?

பிரார்த்தனை செய்ய தூண்டுதல் ஏற்பட்டால் உடனே செய்யுங்கள்.

நீதி:

மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்வது என்பது நாம் அவர்களுக்காக அக்கறை காட்டுவதாகும். நாம் மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் போது, அவர்களின் சுமைகளில் பங்கு கொள்கிறோம். “பிரார்த்தனை என்பது விஷயங்களை வெளிப்புறமாக மாற்றுவது அல்ல, ஆனால் ஒரு நபரின் உள் இயல்பில் மாற்றம் செய்யும் அற்புத நிகழ்வாகும்.” மற்றவர்களுக்காக நாம் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் போது, அவர்களை குணப்படுத்தவோ அல்லது கடினமான நேரங்களில் வலிமையை கொடுக்கவோ கடவுளிடம் மன்றாடுகிறோம். நாமும் மாற்றத்திற்காக நம் இதயங்களைத் திறக்கிறோம். மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் போது, அவர்களின் இதயங்களை மாற்றுவதற்கும், அவர்களின் சூழ்நிலைகளில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும், வல்லவராகிய இறைவனுடன் இணைகிறோம். அதே நேரத்தில், அது நம் மனதையும் திருத்துகிறது.

பிரார்த்தனையின் சக்தியை விளக்க முடியாது; அதை அனுபவிக்க மட்டுமே முடியும்.

மொழி பெயர்ப்பு:

சங்கீதா ராஜேஷ், சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

பிரார்த்தனையின் மகிமை

நீதி: அன்பு, உண்மை

உப நீதி: திட நம்பிக்கை

சத்ய சாயி பாபாவின் தெய்வீக சொற்பொழிவுகள் – மே 16, 1964.

ஒரு மனிதனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். அவர் வேலை விஷயமாக மும்பை போக வேண்டியிருந்தது. அங்கிருந்து, நான்கு மனைவிகளுக்கும் என்ன  வேண்டுமோ கொண்டு வருவதாக கடிதம் எழுதியிருந்தார்.

முதல் மனைவி, உடல் ஆரோக்கியத்திற்காக மருந்துகளும், உடல் நலம் சரியில்லாத போது பயன்படுத்துவதற்காக விரிப்புகள் மற்றும் கம்பளி ஆடைகள் கேட்டிருந்தாள்.

இரண்டாவது மனைவி, சமீபத்தில் வெளிவந்த அழகான புடவைகள், நகைகள் மற்றும் பற்பல அலங்கார பொருட்கள் கேட்டிருந்தாள்.

மூன்றாவது மனைவி,  ஞானேஸ்வரி போன்ற தெய்வீக புத்தகங்கள், கவிதைகள் வடிவத்தில் அபங் பாடல்கள்  மற்றும் பண்டரிநாத், பவானி மற்றும் சாயி பாபா இவர்களின் படங்களைக் கேட்டிருந்தாள்.

நான்காவது மனைவி, “நீங்கள் ஜாக்கிரதையாக திரும்பி வந்தால், அதுவே எனக்கு போதுமானது” என்றாள்.

மற்றவர்கள் எல்லோருக்கும் பெரிய பெட்டிகள் நிறைய சாமான்கள் கிடைத்தன; ஆனால் நான்காவது மனைவிக்கு அன்பு கிடைத்தது.

கடவுள்,  நீங்கள் எதற்காக பிரார்த்தனை செய்கிறீர்களோ அதை அளிப்பார்; அதனால், எதைக் கேட்க வேண்டும் என்று நன்றாக யோசித்த பிறகு, கேளுங்கள்.

நீதி:

நம்மைச் சுற்றி பல அன்பானவர்கள் சூழ்ந்திருக்கும் போது, நமக்கு ஆறுதலாக இருக்கும். அன்பு இருந்தால், எதை செய்ய வேண்டுமானாலும் நன்றாக செய்யலாம். எந்த பிரச்சனை வந்தாலும் அதை எதிர்கொள்ளலாம். நிபந்தனையற்ற அன்பை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. அன்பு, வாழ்க்கையில் முன்னேற நம்பிக்கை தருகிறது.

ஆழ்ந்த அன்பை பெறும் போது, சக்தி கிடைக்கிறது; ஆழ்ந்த அன்பை அளிக்கும் போது, தைரியம் கிடைக்கிறது – லாவோ சு

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதிரஞ்சனி

SOURCE: SSSIE

குறைவான சுமையே அதிகமான ஆறுதல்

நீதி : உண்மை

உப நீதி: பற்றின்மை

யானைகள் தங்கள் கட்டுகளை உடைத்து விடுபட முடியாது என்ற நினைப்பில், தான் இருந்த இடத்திலேயே சிக்கிக் கொண்டதைப் பற்றிய கதையை நாம் படித்திருக்கிறோம்.

யானைகளைப் போலவே நம்மில் பெரும்பாலோர் நம் வாழ்க்கையில் முன்னோக்கி செல்ல முடியாமல் பின்னிய வலையிலேயே சிக்கிக் கொள்கிறோம். வெறுப்பு, கோபம், வலி, துன்பம், ஆசைகள் போன்ற உணர்ச்சிகள் நம் உடல் மற்றும் மனதை பலவீனபடுத்தும். இந்த சுமை மூட்டைகளை நாம் விடுவிக்காவிட்டால், அவை நம்மை மனரீதியாக தளர்வடையச் செய்யும். ஆன் லேண்டர்ஸ் “ஒருவர் மீது மனக்கசப்பை  வளர்த்துக் கொண்டால், நாம் வெறுக்கும் ஒருவரை நம் தலையில் வாடகையின்றி வாழ அனுமதிப்பதற்கு ஒப்பாகும்” என்கிறார். மன்னிப்பதும் விட்டுவிடுவதும் மனவலிமை கொண்டவர்களால் கடைப்பிடிக்கப்படும் ஒரு கலையாகும். காந்திஜியின் கூற்றுப்படி, “பலவீனமானவர்களால் பிறரை மன்னிக்க முடியாது. மன்னிப்பது வலிமையானவர்களின் பண்பாகும்.”

வாழ்க்கையில் மிக சிறந்த சந்தோஷத்தையும், உயர்ந்த ஆற்றலையும் நாம் அனுபவிக்க வேண்டும் என்றால், நாம் நமது உணர்ச்சி என்ற சுமையை விட்டுவிட வேண்டும். ஒரு பறவை வானத்தில் உயர பறக்க வேண்டும் என்றால், முதலில் தான் பாதுகாப்பாக இருக்கும் மரக்கிளையில் இருந்து, அது வெளிவர கற்றுக் கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையில் பறக்க வேண்டிய செயலுக்கு அச்சிறு பறவைக்கு எவ்வளவு தைரியம் தேவை என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

தற்போது, நம்மால் இந்த உணர்ச்சி சுமைகளை எவ்வாறு விட முடியும் என்ற கேள்வி வருகிறது. “http://zenhabits.net/zen-attachment/” என்ற இணையதளத்தில் கண்ட “விட்டுவிடுதல் – அ முதல் ஃ வரை” என்ற பகுதியை பகிர எண்ணுகிறேன். பற்றுதல்களை விட்டுவிடுதல் என்பதை பற்றி இந்த தளம் விவரிக்கிறது என்றாலும், உணர்ச்சிகள் என்பதும் ஒருவித “பற்று” என்பதால் நாம் கையிலெடுக்கும் அனைத்து சுமைகளுக்கும் இவை பொருந்தும். இடப்பற்றாக்குறை காரணமாக ஒரு சுருக்கமான பட்டியல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. இவை சுய விளக்கமுடையதாக இருப்பினும், மேலும் விரிவான புரிதலுக்கு அந்த இணையதளத்தை பார்க்கவும்.

· இந்த தருணத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

· இப்போது எது உள்ளதோ அது போதும் என்ற எண்ணம் வேண்டும்.

· நமது தவறுகளை நாமே சுட்டிகாட்டி கொள்ள வேண்டும்.

· நிரந்தர தன்மை இல்லாத குணநலன்கள் உடையவர்கள் நாம், என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

· இந்த நொடியை முழுமையாக மகிழ்ந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

· நமக்கு நாமே உற்ற நண்பன் என்று நம்மை நேசிக்க பழக வேண்டும்

· சில நேரங்களில் தனியாக போராட வேண்டியிருக்கும் என்பதை உணர வேண்டும்.

· குறைந்த பற்றுதல்களை கொள்ள வேண்டும்.

· பல விதமான மக்களுடன் பழக வேண்டும்.

· நம் செயல்களையோ அல்லது நமக்கு பிடித்தவர்களின் செயல்களையோ அடிக்கடி நியாயப்படுத்தக் கூடாது.

· கடந்த காலத்தை நம்மால் மாற்ற முடியாது என்பதை அறிந்து கொண்டு அதை அப்படியே ஏற்று கொள்ள வேண்டும்.

· பயத்திற்கு பதிலாக அன்பை பிறருக்கு அளிக்க வேண்டு

· எதிர்காலத்தை அல்லது கடந்த காலத்தை பற்றிய சிந்தனை இல்லாமல் நிகழ் காலத்தில் – இந்த நொடியில் வாழ எண்ண வேண்டும்.

· நிதானமாக எடுத்துரைக்க வேண்டும்.

· மனதை விசாலமாக்கிக் கொள்ளவும்.

· கசப்பான எண்ணங்கள் மனதில் நிலைக்காமல் இருக்க, வேறு ஆக்கபூர்வமான எண்ணங்களில் திசைமாற்ற பயிற்சி செய்ய வேண்டும்.

· உங்கள் “பற்றை” உணர்ந்து கேள்வி கேட்க வேண்டும்.

· தெரிந்து கொள்ள வேண்டிய தேவையை வெளியிட வேண்டும்.

· வாழ்க்கையின் குறிக்கோளை ஒவ்வொறு நொடியும் நிறைவேற்ற வேண்டும்.

· மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

· வருத்தங்களும் வலிகளும் அனைவரது வாழ்விலும் உண்டு என்பதும் அதை தவிர்க்க முடியாத ஒன்று என்பதையம் புரிந்து கொள்ள வேண்டும்.

· உணர்வுகளுக்கு குரல் கொடுக்க வேண்டும், குறைத்தபட்சம் எழுதி வைக்க வேண்டும்.

· வாழ்க்கையில் அனைத்து தருணங்களையும் ஒரு படிப்பினையாக, முழுமையான நன்றியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். பற்று இல்லாத அன்பான உணர்ச்சி – இந்த நிலை உன்னதமானது.

· அமைதியான நிலையில் இருப்பதற்கு ஈடுபாடு காட்ட வேண்டும்.

· இந்த நொடியில் நாம் தன்னிலையை உணர்ந்தால், வாழ்வில் மேலும் மற்றொரு அனுபவத்தை வரவேற்கவும், பாராட்டவும், மகிழவும், முன்னோக்கி செல்லவும் இயலும்.

வாழ்க்கையின் இன்பங்களை அனுபவிப்பதற்கான வழிமுறை இவை. அறியப்படாத மூலத்திலிருந்து அழகான மேற்கோள்களாக – அனைத்தையும் சுருக்கமாகக் பட்டியலிடுகிறது. நடந்து முடிந்த சம்பவங்களை விட்டுவிடாமல் பிடித்துக் கொண்டிருப்பது, நாம் பிரயாணிக்கும் வாகனத்தை பழுதடைந்த சக்கரத்துடன் ஓட்டுவதற்குச் சமமாகும். பழுதை சரி பார்க்க நிற்காமல், அது தன்னை தானே சரி செய்து கொள்ளும் என்ற நினைப்பில், உண்மை நிலை எதுவென தெரிந்தும், சவாரி சீராக செல்வது போல பாசாங்கு செய்து கொண்டு, ஒரு நாள் வண்டியை செலுத்த முடியாமல் மிகவும் மோசமான நிலை வரும் வரை, நாம் நிறுத்தி பார்க்க வேண்டிய கட்டாயம் வரும் வரை, உண்மையில் உதவி பெறாமல் நகர முடியாது என்ற நிலை ஏற்படும் வரை விட்டுவைத்தால் நமக்கு என்ன ஆபத்துகள் நேருமோ, அதே போன்று தான் வாழ்க்கையில் உள்ள பழுதுகளை உடனுக்கு உடன் சரி செய்யாமல் அப்படியே பிடித்து கொண்டிருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

வாழ்க்கை மிகவும் கருணை மற்றும் தயை நிறைந்தது. எனவே நாம் ஒரு குண்டும் குழியும் நிறைந்த பாதையில் சவாரி செய்வதை நிச்சயமாக விரும்பாது. உணர்ச்சிகள் என்ற சுமைகளை கட்டவிழ்த்து விடும் போது , “குறைவான சுமையே அதிக வசதி” என்பதை நாமும் உணர்வோம்.

நீதி:

கடந்தகால கசப்பான நினைவுகளை விட்டுவிடக் கற்றுக் கொள்வதும், நிகழ்காலத்தில் வாழ்வதும் வாழ்க்கையை எளிதாக்குகிற வழியாகும். அதிக விழிப்புணர்வுடன் இருக்க நம்மை பழக்கிக் கொள்வது பல வழிகளில் நமக்கு பயனளிக்கும். வாழ்க்கை என்பது ஒரு பயணம், நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் – தேவையற்ற விஷயங்களை ஏற்றுக் கொண்டால் பாரமாகும், பயணம் சுமையாகிவிடும். நாம் செய்த நல்ல காரியங்களின் தடயத்தை நம் வாழ்க்கைப் பயணத்தின் இறுதியில் நிலைநாட்டி விட்டுச் செல்வதே புத்திசாலித்தனம். எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நம் கடமையை செய்தால், எதிர்தரப்பினர் தகுந்த கைம்மாறு செய்யவில்லை என்றாலும் நாம் சோர்வடைய மாட்டோம். பற்றுதல் துன்பத்திற்கும், பற்றின்மை சுதந்திரத்திற்கும் வழி வகுக்கிறது.

ஒரு சூழ்நிலையில் இருக்க வேண்டிய நேரம் என்பதையும், அதிலிருந்து நகர்ந்து செல்ல வேண்டிய நேரம் எப்போது என்பதை அங்கீகரிப்பதும், பற்றின்மையின் ஒரு பெரிய பகுதியாகும். – டேரன் எல் ஜான்சன்

மொழி பெயர்ப்பு:

வள்ளிசரஸ்வதிரஞ்சனி

SOURCE: SSSIE

உயர்ந்து செல்

நீதி: உண்மை

உப நீதி: ஏற்றுக் கொள்ளும் மனநிலை / மனநிறைவு

ஒரு நாள் என் நண்பருடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது “வாழ்க்கை ஒரு போராட்டம் இல்லையா?” என்று கேட்டார். அது எனக்கு ஒரு புதிய தகவலாக இருந்தது. அனைவருக்கும் வாழ்க்கை கடினமாக அல்லாமல் இனிதாகவே அமையும் என்று நான் எப்போதும் நினைத்தேன். ஆனால் நான் நினைத்ததில் தவறு இருப்பது போல் தெரிகிறதே? உண்மையில், வாழ்க்கை என்பது சிக்கல்களால் ஏற்படும் கவலைகலாகும்; ஆனால் போராட்டங்கள் இருக்குமா? ஒருவேளை இந்த “போராட்டங்களின்” மூலம் வாழ்க்கை நமக்கு எதாவது முக்கிய செய்தியை தெரிவிக்க முயற்சிக்கிறதோ?

இந்த கேள்வி என் சிந்தனையை தூண்டியது. வாழ்க்கையில் சிலர் ஏன் தொடர்ந்து போராட்டங்களை சந்திக்கின்றனர்? வாழ்நாள் முழுவதும் போராடியவர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு வாழ்க்கையில் துயரங்கள் முடிவடைவதே இல்லை. சிலருக்கு ஏன் வாழ்க்கை மிகவும் எளிதாக இருக்கிறது? எதை நினைக்கிறார்களோ அதை ஒரு சிட்டிகையில் பெற்று விடுகிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கை மிக சுலபம். அவர்களுக்கு வாழ்க்கை என்பதே தங்க தட்டில் வைத்து தரப்படுகிறது. இக்கேள்விக்கான பதிலை சமீபத்தில் என் மின்னஞ்சலில் வந்த ஒரு கதையின் மூலம் கிடைக்கப் பெற்றேன். கதையை மேற்கோள் காட்ட:

“ஒரு மனிதன் பட்டாம்பூச்சியின் குக்கூன் ஓடு ஒன்றை கண்டான். ஒரு நாள் அதில் ஒரு சிறிய துவாரம் தோன்றியது; அந்தச் சிறிய துவாரத்தின் வழியாக, தன் உடலை வலுக்கட்டாயமாக வெளியேற்ற, பல மணி நேரம் போராடிக் கொண்டிருந்த ஒரு வண்ணத்துப்பூச்சியை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். பின்னர் சில நிமிடம் அது எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல் இருந்தது. முடிந்த அளவு பிரயத்தனம் செய்து, பின்னர் தன் முயற்சியை கைவிட்டது போல் அந்த மனிதனுக்கு தோன்றியது. அவன் அந்த பட்டாம்பூச்சிக்கு உதவ முடிவெடுத்தான். ஒரு கத்தரிக்கோலை எடுத்து வந்து, மீதமுள்ள குக்கூனை துண்டித்தான். சிறிது நேரத்தில் வண்ணத்துப்பூச்சி அந்த ஓடிலிருந்து எளிதாக வெளிப்பட்டது. ஆனால் அது வீங்கிய உடலுடனும், சிறிய, சுருங்கிய இறக்கைகளுடனும் இருந்தது.

எந்த நேரத்திலும், இறக்கைகள் பெரிதாக விரிவடைந்து உடலைத் தாங்கும் மற்றும் வீங்கி இருந்த உடலும் காலப்போக்கில் சுருங்கிவிடும் என்று எதிர்பார்த்து அந்த மனிதன் காத்திருந்தான்.

இரண்டுமே நடக்கவில்லை! உண்மையில், அந்த பட்டாம்பூச்சி தனது வாழ்நாள் முழுவதும் வீங்கிய உடலுடனும், சுருங்கிய இறக்கைகளுடனும் ஊர்ந்து சென்றது. அதனால் ஒருபோதும் பறக்க இயலவில்லை.

தன் அவசர புத்தியாலும் காருண்யத்தினாலும் பட்டாம்பூச்சிக்கு உதவிய அந்த மனிதனுக்கு, ஒன்று புரிபட வில்லை. பட்டாம்பூச்சியின் சிறிய வரையறுக்கப்பட்ட குக்கூன் ஓடும், அதில் ஏற்பட்ட துவாரத்தினூடாக அந்த வண்ணத்துப்பூச்சி வருவதற்குத் தேவையான போராட்டமும், அதன் உடலிலிருந்து ஒருவித திரவத்தை அதன் இறக்கைகளுக்குள் புகுத்தும். இதுவே கூட்டில் இருந்து சுதந்திரம் அடைந்தவுடன் அந்த வண்ணத்துப்பூச்சி பறப்பதற்கு தயார் நிலைக்கு கொண்டுவர இயற்கையின் வழியாகும்.

சில சமயங்களில் போராட்டங்களே நம் வாழ்க்கைக்கு தேவையான ஒன்றாக இருக்கும். எந்த தடையும் இல்லாமல் நம் வாழ்க்கையை கடந்து செல்ல இயற்கை அனுமதித்தால், அது நம்மை முடமாக்கிவிடும். நாமமும் முழு வலிமையுடன் / உறுதியுடன் முயற்சிக்க மாட்டோம். மேலும் நம்மால் நம் “சிறகை விரித்து பறக்க” முடியாமலே போகக் கூடும்.

நாம் உயரமாக பறக்க விரும்பினால், நமது இலக்குகள் உயர்ந்ததாக இருந்தால், நாம் கண்டிப்பாக போராட வேண்டும். மேலும் உயர்ந்த இலட்சியங்கள் இல்லாத வாழ்க்கை, வாழத் தகுதியற்றது. வெள்ளித் தட்டுடன் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை ஒரு மகிழ்ச்சியான சவாரியாக இருக்கலாம். ஆனால் ஒரு ரோலர் கோஸ்டர் சவாரிக்குப் பிறகு வெற்றியை சுவைத்தவர்களுக்கு, அதன் இனிப்பு கூடுதலாக தோன்றும். இதை அனுபவித்தவர்கள் அதனை உறுதி செய்வார்கள்.

பட்டாம்பூச்சியின் உடலில் இருக்கும் திரவம் அதனை கூட்டை விட்டு வெளியே வருவதற்கு உதவுவது போல, போராட்டங்களிலிருந்து வெளியே வருவதற்கு நமக்கும் இயற்கை ஒரு பொறிமுறையை வழங்கியுள்ளது. அதை எப்படி, எங்கு தேடுவது என்ற சந்தேகமா? மன்னிக்கவும், “பிழையறிதலும் தீர்வுகளும்” என்ற தலைப்புடன் வாழ்க்கைக்கான வழிமுறை கையேடு எதுவும் இவ்வுலகில் இல்லை. இது இயற்கை நமக்கு இயல்பாக உள்ளமைத்த பொறிமுறையாகும். இந்த பொறிமுறையானது போராடுவதற்கான வழிமுறையாகும். நம் ஒவ்வொருவரிடமும் இந்த மனவலிமை பல்வேறு சதவிகிதங்களில் உள்ளது. சிலர் இடைவிடாமல் போராட்டங்களை எதிர்கொண்டு முயற்சிப்பதற்கும், சிலர் பாதி வழியில் கைவிடுவதற்கும் இதுவே காரணம். பல தற்கொலைகள், மனவலிமை இல்லாததால் நடக்கின்றன.

ஆம், இப்போது நான் தெளிவடைந்து விட்டேன். நான் தவறாக எண்ணியிருக்கவில்லை. வாழ்க்கை எவருக்கும் இன்னல்களை அளிப்பது இல்லை. நம் நலனை, நாம் மேலும் உயர்ந்து பறக்க வேண்டும் என்றே இயற்கை விரும்புகிறது. இதுவும் ஒரு கருணை தான்.

நீதி:

மகத்தான மனிதர்களின் வாழ்க்கை புத்தகத்தை திருப்பி பார்த்தோமானால், ஏதோ ஒரு கட்டத்தில் – அவர்கள் உச்சத்தை எட்டுவதற்கு சில போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்ததை நாம் அறிந்து கொள்ளலாம். வாழ்க்கையில் அசாதாரணமான ஒன்றைப் பெறுவது எளிதல்ல. நம் முன் பளபளவென ஜொலிக்கும் ஆபரணம், அவ்வித பிரகாசத்தை இறுதியாக பெறவதற்குமுன், தீயினாலும் சுத்தியலினாலும் நிறைய பதப்பட வேண்டியிருக்கும். நம்மை வசீகரிக்கின்ற வைரம் அந்த மினுமினுப்பை பெற, பல கூரிய வெட்டுகளை சந்தித்து, பட்டைத் தீட்டப்பட்ட வேண்டியிருக்கும்.

போராட்டம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி; அதில் நாம் வெற்றி பெற்றால் – சிறப்பு; இல்லையேல் குறைந்தபட்சம் நம்மால் இயன்ற அளவு முயற்சித்தோம் என்ற மனநிறைவு கொள்ளலாமே.

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE