நீதி – பக்தி
உபநீதி – நாமஸ்மரணம்
அரசர் யுதிஷ்டிரரின் ஆட்சியின் போது, நாட்டு மக்களின் பிரச்சனைகளை பீமன் தீர்த்து வைத்தார். அதனால், எவருக்கேனும் கேள்விகளோ, பிரச்சனைகளோ இருந்தால், அவரிடம் மட்டுமே உதவி நாடி வந்தனர். ஒரு நாள், விசித்திரமான சம்பவம் ஒன்றை கவனித்ததாக ஒரு மனிதன் கூறினான். அவன் வீட்டு வேலி மற்றொருவனின் பகுதியில் நகர்ந்திருப்பதாகவும், அதற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும் கூறினான். சாதாரணமாக, அரக்கர்களின் தொல்லைகளால் அவதிப்பட்ட மக்களை காப்பாற்றுவது பீமனுக்கு சகஜமாக இருந்தது; ஆனால், இதைப் போன்ற விஷயங்களைக் கண்டு பீமனுக்கு வியப்பாக இருந்ததால், அவனை யுதிஷ்டிரரிடம் செல்லும் படியாக அவர் கூறினார்.
அதே தினத்தில், இன்னொரு விசித்திரமான சம்பவமும் நடந்தது. வேறொருவன் தன் கதையை இவ்வாறு கூறினான் – அவனிடம் ஒரு பானை நிறைய தண்ணீர் இருந்தது. அதை முதலில் சிறிய பானைகளில் நிரப்பிய பிறகு, மறுபடியும் அச்சிறிய பானைகளிலிருந்து பெரிய பானைக்குள் நிரப்பிய போது, பாதி அளவு தண்ணீர் மட்டுமே இருந்தது. இதற்கும் பதில் ஒன்றுமே தெரியாமல் தவித்த பீமன், அம்மனிதனையும் யுதிஷ்டிரரிடம் சென்று கேட்குமாறு அனுப்பினார். கூடிய விரைவில், மூன்றாவதாக ஒரு மனிதன் மற்றொரு விசித்திரமான சம்பவத்துடன் பீமனிடம் வந்தான். ஒரு யானையின் பெரிய உடம்பு, ஊசியின் சிறிய துளை வழியாக செல்கிறது; ஆனால், ஆச்சரியப்படும் வகையில் யானையின் வால் அந்த ஊசியின் துளையில் சிக்கிக் கொண்டு விடுகிறது, என்று அந்த மனிதன் புகார் கூறினான். பீமன் மறுபடியும் அம்மனிதனை யுதிஷ்டிரரிடம் அனுப்பி வைத்தார். தற்சமயம், நான்காவதாக ஒரு மனிதன் அங்கு வந்து, தெருவில் ஒரு பெரிய பாறையைப் பார்த்ததாகக் கூறினான். அப்பாறையை வலிமையுள்ள சில மனிதர்களால் நகர்த்த முடியவில்லை; ஆனால், ஒரு சாது கோல் ஒன்றை அசைத்து, அப்பாறையை நகர்த்தியதாகக் கூறினான். இந்த விசித்திரமான சம்பவங்களைப் பார்த்த பீமனின் ஆர்வம் தூண்டி விடப் பட்டது. அவரும் இம்மனிதர்களுடன் யுதிஷ்டிரரிடம் சென்று, இந்த விசித்திரமான சம்பவங்களுக்கு காரணத்தை தெரிந்து கொள்ள விரும்பினார்.
எல்லோரும் சேர்ந்து யுதிஷ்டிரரிடம் சென்று, இந்த சந்தேகங்களைப் பற்றி விசாரித்தனர். அதற்கு அவர், இந்த சம்பவங்கள் அனைவற்றும் வரப் போகின்ற கலியுகத்தை குறிப்பிடுகின்றன என்று கூறி, கீழ்கண்டவாறு விளக்கினார்.
ஒருவனின் வேலி மற்றொருவனின் பகுதியில் நகர்ந்த முதலாவது சம்பவத்தில், மற்றவர்களின் உடைமைகளின் மீது ஆசைப்படுவதை குறிக்கின்றது. மன வேதனைகள் மற்றும் கோபம் போன்ற உணர்வுகளுக்கு வழி வகுத்து, மற்றவர்களைப் போல நம்மிடம் இல்லையே என்ற எண்ணங்கள் இருப்பதனால், அதை அடைவதற்கு தகாத வழிகளை தேர்ந்தெடுத்தனர்.
பெரிய பானையிலிருந்து சிறிய பானைகளுக்கு தண்ணீரை ஊற்றி, பிறகு சிறிய பானைகளிலிருந்து பெரிய பானைக்கு ஊற்றும் போது பாதி அளவு தண்ணீர் மட்டுமே இருக்கும் இரண்டாவது சம்பவத்தில், நாம் செலுத்தும் அன்பு / கருணை / உதவியை ஒப்பிடும் போது, நமக்கு மற்றவர்களிடமிருந்து கிடைக்கும் அன்பு 50% மட்டுமே இருக்கிறது.
ஒரு யானையின் பெரிய உடம்பு ஊசியின் சிறிய துளை வழியாக செல்கிறது; ஆனால், ஆச்சரியப்படும் வகையில் யானையின் வால் அந்த ஊசியின் துளையில் சிக்கிக் கொண்டு விடுகிறது என்ற மூன்றாவது சம்பவத்தில், மனிதர்கள் தங்களின் வருமானம் / வலிமை / வளம் போன்றவற்றை குடும்பம், நண்பர்கள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்களுக்காக செலவழிக்க தயாராக இருக்கின்றனர்; ஆனால், கடவுளுக்கோ, கடவுளின் சேவைகளுக்கோ, சிறிதளவு கூட செலவழிக்க மனம் வருவதில்லை.
ஒரு பெரிய பாறையை வலிமை மிகுந்த மனிதர்களால் நகர்த்த முடியாத நிலைமையில், ஒரு சாது தன் கோலால் சுலபமாக நகர்த்தி விட்டார். இந்த சம்பவம், நாம சங்கீர்த்தனத்தின் மகிமையால், பாவங்களை நிவர்த்தி செய்ய முடியும் என்பதைக் குறிக்கின்றது.
மேலும் யுதிஷ்டிரர், கலியுகத்தில் அளவு கடந்த குறைபாடுகள் இருக்கின்றன, ஆனாலும் நாமஸ்மரணம் செய்வதனால் ஒருவனுக்கு மோக்ஷம் கிடைக்கும் என்பது ஒரு நல்ல விஷயம்.
காலேர் தோஷ-நிதே ராஜன்
அஸ்தி ஹி ஏகோ மஹான் குண:
கீர்த்தனாத் ஏவ க்ருஷ்ணஸ்ய
முக்த-ஸங்க: பரம் வ்ரஜேத்.
அன்புள்ள அரசரே, கலியுகத்தில் பாவங்கள் ஒரு விசாலமான சாகரமாக வெளிப்படுகின்றன. ஆனாலும், பகவான் கிருஷ்ணரின் நாமத்தை உச்சரிப்பதால், ஒருவன் நிலையற்ற வாழ்க்கையைக் கடந்து, வைகுண்டம் என்ற சாஸ்வதமான நிலையை சுலபமாக அடைகிறான்.
நீதி:
கலியுகத்தில், பகவானின் நாமத்தை தொடர்ந்து ஜபித்தால், அவரின் ஆசீர்வாதத்தை சுலபமாக பெறலாம். பழைய யுகங்களில் இருந்ததைப் போல், கடுமையான தவங்கள் ஒன்றுமே அவசியமில்லை.
மொழி பெயர்ப்பு:
சரஸ்வதி, ரஞ்சனி
Source: http://saibalsanskaar.wordpress.com