நீதி: நன் நடத்தை
உபநீதி: உண்மை / பகுத்தறிவு / பேராசை
ஒரு நாள், ராஜா சாந்தனு யமுனை ஆற்றின் கரையில் உலாவிக் கொண்டிருக்கும் போது, தென்றலில் தெய்வீக நறுமணம் சூழ்ந்திருந்ததை உணர்ந்து, அதற்குக் காரணம் என்னவென்று யோசித்தார்; சற்று நேரத்தில், தேவதைப் போல ஒரு கன்னிப் பெண்ணைப் பார்த்தார். இந்தப் பெண்ணிடமிருந்து வனம் முழுவதும் நறுமணம் பரவ வேண்டும் என்று ரிஷி ஒருவர் அவளுக்கு வரம் அளித்திருந்தார். ராஜாவின் துணைவி கங்கை அவரை விட்டுச் சென்ற பின், அவர் தன் புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்; ஆனால் இந்த தேவதையைப் பார்த்தவுடன், தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல், அவளிடம் சென்று தன் மனைவியாக இருக்குமாறு அவளை வேண்டினார்.
அந்தப் பெண், “நான் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவள்; தலைவராகத் திகழும் என் தந்தையிடம் பேசி, அவரிடமிருந்து சம்மதம் கேட்டுக் கொள்ளவும்” என்றாள். அவள் தோற்றத்தைப் போலவே அவளின் குரலும் மென்மையாக இருந்தது.
அவள் தந்தை கூர்மதியுடையவராகத் திகழ்ந்தார். ராஜாவிடம் அவர், “எல்லோரையும் போல என் பெண்ணும் ஒரு நாள் திருமணம் செய்து கொள்ள வேண்டும்; நீங்கள் அவளுக்கு ஏற்றவர் தான். ஆனால், அவளை உங்கள் மனைவியாக ஏற்றுக் கொள்வதற்கு முன்பு, நீங்கள் எனக்கு ஒரு வாக்களிக்க வேண்டும்” என்றார்.
அதற்கு சாந்தனு, “ஒரு வாக்கு மட்டும் கொடுக்க வேண்டுமென்றால் நான் ஒத்துக் கொள்கிறேன்” என்றார்.
உடனே, மீனவர் சமுதாயத்திற்கே தலைவராகத் திகழ்ந்த அவளின் தந்தை, “இவளுக்கு பிறக்கும் குழந்தை உங்களுக்குப் பிறகு ராஜாவாக ஆட்சி புரிய வேண்டும்” என்றார்.
மீனவரின் பெண்ணின் மேல் மிகுந்த அன்பு இருந்த போதிலும், இந்த வாக்கை ராஜாவால் கொடுக்க முடியவில்லை; ஏனெனில், கங்காவிற்குப் பிறந்த அவர் மகன் தேவவ்ரதனிற்குத் தான் ராஜாவாக ஆட்சிப் புரிய தகுதியுண்டு எனக் கருதினார். அதனால், ராஜா வேறு விதமாக யோசனை கூடச் செய்ய முடியாமல் ஹஸ்தினாபுரத்திற்குத் திரும்பி சென்றார். இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லவில்லை; ஆனால், மிகுந்த வருத்ததுடன் மெளனமாக இருந்தார்.
ஒரு நாள் தேவவ்ரதன் தந்தையிடம், “உங்கள் மனதிற்கு விருப்பப்பட்ட எல்லாமே இருக்கும் போது ஏன் சோகமாக இருக்கிறீர்கள்? நீங்கள் அனுபவிக்கும் ஏதோ ஒரு மன வேதனையை இரகசியமாக வைத்திருக்கும் காரணம் என்ன?” எனக் கேட்டான்.
அதற்கு ராஜா, “ஆம், நீ சொல்வது உண்மை; மன சஞ்சலம் மற்றும் வேதனையால் தவிக்கிறேன். நீ என்னுடைய ஒரே மகன்; உன் எண்ணங்கள் எச்சமயமும் ராணுவ லட்சியங்களில் இருக்கின்றன. வாழ்க்கையும் உறுதியல்ல, போர்களும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். உனக்கு ஏதாவது நடக்கக் கூடாதது நடந்து விட்டால், நம் குடும்பமே காணாமல் போகி விடும். நீ நூறு மகன்களுக்கு சமம் என்று நான் அறிவேன். ஆனால் நன்றாக வேதம் படித்தவர்களைக் கேட்டால், ஒரு மகன் இருப்பதற்கும், ஒன்றுமே இல்லாததற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை எனச் சொல்வார்கள். நம் குடும்பம் நீண்ட காலம் தொடர்ந்து வாழ்வதற்கு ஒரு மகன் மேல் மட்டும் சார்ந்திருக்கக் கூடாது என்பது என் அபிப்பிராயம். இது தான் என் கவலைக்கு காரணம்” என்றார். மகனிடம் நடந்ததைச் சொல்ல அவமானமாக இருந்ததால், இப்படி பட்டும் படாத வகையில் பேசினார்.
தந்தையின் மன சஞ்சலத்திற்கு ஏதோ ஒரு ரகசியக் காரணம் இருக்க வேண்டும் என்று விவேகமுடைய மகன் புரிந்து கொண்டான். தந்தையின் தேர்ப்பாகனிடம் விசாரித்த போது, யமுனை ஆற்றுக் கரையில் அவர் அந்த மீனவப் பெண்ணுடன் பேசியது தெரிய வந்தது. உடனே மகன், மீனவ சமுதாயத்தின் தலைவரிடம் சென்று, அவர் மகளைத் தன் தந்தைக்கு திருமணம் செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொண்டான். பெண்ணின் தந்தை மரியாதையுடன் ஆனால் உறுதியாக, “என் பெண்ணுக்கு உன் தந்தையைத் திருமணம் செய்து கொள்ள எல்லாத் தகுதிகளும் உள்ளன; அக்காரணத்தால் அவள் மகன் உன் தந்தைக்குப் பின் வாரிசாக இருக்க வேண்டும் அல்லவா? ஆனால், உன் தந்தைக்குப் பின் நீ என்றிருக்கும் போது, இது கல்யாணத்திற்குத் தடையாக இருக்கிறது!” என்றார்.
அதற்கு தேவவ்ரதன், “உங்கள் பெண்ணிற்குப் பிறக்கும் மகன் நிச்சயமாக ராஜாவாக இருப்பான் என்ற உறுதிமொழியை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் அந்த தகுதியை இழக்கத் தயாராக இருக்கிறேன் என்பதையும் உங்களிடம் சொல்ல ஆசைப் படுகிறேன்” என்றான்.
அதற்கு மீனவத் தலைவர், “பாரதத்தின் தலை சிறந்த மகனே! ராஜ குடும்பத்தில் பிறந்தவர் எவருமே இதைப் போல ஒரு சிறப்பான விஷயத்தைச் செய்ததில்லை. நீ உண்மையாகவே வீரன். உன் தந்தையின் திருமணத்தை நீயே நடத்தி வைக்கலாம். ஆனால் பெண்ணின் தந்தை என்ற முறையில், நான் சொல்வதைப் பொறுமையாகக் கேள். நீ கொடுத்த உறுதிமொழியை மீறி நடந்து கொள்ள மாட்டாய் என நம்புகிறேன். ஆனால் உனக்குப் பிறக்கும் குழந்தைகளும் அப்படி இருப்பார்கள் என்று என்ன நிச்சயம்? உன்னைப் போலவே உன் குழந்தைகளும் வீரர்களாக இருப்பார்கள். ராஜ்ஜியத்தை வலுக் கட்டாயமாகக் கேட்டால் என்ன செய்ய முடியும்? இந்தச் சந்தேகம் தான் என் மன சஞ்சலத்திற்குக் காரணம்” என்றார்.
இந்தக் குழப்பமான கேள்விக்குப் பிறகு, தந்தையின் ஆசைகளை எப்படியாவது பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைத்த தேவவ்ரதன் இன்னும் ஒரு உறுதியான வாக்கு கொடுத்தான். நிமிர்ந்த சிரத்துடன் அவன், “நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன். என் வாழ்க்கையை இவ்வகையான பண்புகளோடு தூய்மையாக வாழ்வேன்” என்றான். இதை உச்சரிக்கும் போது, தேவ லோகத்திலிருந்து தேவர்கள் அனைவரும் அவர் மீது மலர்களைத் தூவி, “பீஷ்மர்” “பீஷ்மர்” என வாழ்த்தினர்.
ஒரு தீவிரமான உறுதிமொழியை மேற்கொண்டு, அதை வெற்றிகரமாக நிறைவேற்றுபவருக்குத் தான் பீஷ்மர் என்ற பெயர் கொடுக்கப்படுகிறது. அந்த நிமிடத்திலிருந்து தேவவ்ரதனிற்கு பட்டப் பெயராக பீஷ்மர் என்ற பெயர் சூட்டப்பட்டது.
இவ்வாறு பீஷ்மர் (கங்கையின் புத்திரன்) சத்யவதியைத் தன் தந்தையிடம் கொண்டு சேர்த்தார். சில காலங்களில், சத்யவதி மற்றும் சாந்தனுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர்; சித்ராங்கதனும், விசித்ரவீர்யனும் தந்தைக்குப் பிறகு நாட்டை ஆண்டனர். விசித்ரவீர்யனுக்கு இரண்டு மனைவிகள் – அம்பிகா மற்றும் அம்பாலிகா – அவர்களுக்கு பிறந்த மகன்கள் தான் திருதராஷ்டிரனும், பாண்டுவும். திருதராஷ்டிரனின் மகன்கள் தான் கௌரவர்கள். பாண்டுவின் ஐந்து மகன்கள் பாண்டவர்கள் என பிரசித்தி பெற்றனர்.
பீஷ்மர் பல வருடங்கள் குடும்பத்தினரால் மரியாதையுடன் கவனிக்கப்பட்டு, குருக்ஷேத்திர போர் முடியும் வரை வாழ்ந்தார்.
நீதி:
செல்வமும், ஆசையும் தான் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு மூல காரணமாக இருக்கின்றது. மகாபாரதத்தின் துவக்கத்தில், சாந்தனுவிற்குப் பிறகு, அரியாசனத்திற்கு தகுதி பெற்று, உரிமையுள்ள வாரிசாக அவரின் மூத்த மகன் தேவவ்ரதன் இருந்தான். ஆனால், அவர் திகிலுண்டாக்குகிற வகையில் ஒரு சபதத்தை மேற்கொண்டு, திருமணம் செய்து கொள்ளாமல், அரியாசனத்தையும் விட்டுக் கொடுத்து “பீஷ்மராக” மாறினார். (திகிலுண்டாக்குகிற வகையில் ஒரு சபதத்தை மேற்கொண்டு, அதை நிறைவேற்றுவது தான் பீஷ்மர் என்ற சொல்லிற்கு அர்த்தம்) இப்படிச் செய்து, சத்யவதியுடன் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட தன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றினார். மேலும், சத்யவதியை திருமணம் செய்து கொண்டால், அரியணை அவர்களுக்கு பிறக்கும் மகனுக்கும், பேரக் குழந்தைகளுக்கும் தான் சென்றடைய வேண்டும் என்ற கட்டாயமும் இருந்தது. இந்த நேர்மையற்ற கோரிக்கைக்கு ஆசையும், செல்வமும் தான் காரணமாக அமைந்தது.
சதை மற்றும் எலும்புகளால் ஆன உடலின் மேல் இருக்கும் ஈர்ப்பு தற்காலிகமானது என்று ஆதி சங்கரர் நமக்கு ஞாபகப் படுத்துகிறார். நிலையற்ற பொருட்களின் மீது ஆசை வைத்து ஏன் ஏமாற்றம் அடைகிறோம் என்ற கேள்வியை எழுப்புகிறார்.
மொழி பெயர்ப்பு:
சரஸ்வதி, ரஞ்சனி
Source: http://saibalsanskaar.wordpress.com