நீதி: உண்மை
உப நீதி : ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை / நம்பிக்கை
ஒரு தாயின் வயிற்றில் இரண்டு சிசுக்கள் இருந்தன.
ஒன்று மற்றொன்றிடம், “பிரசவத்திற்குப் பிறகு கூட ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா? என்று கேட்டது.
அதற்கு இரண்டாவது சிசு, “ஏன் அப்படி கேட்கிறாய்? கண்டிப்பாக இருக்கிறது. பிரசவத்திற்குப் பிறகு ஏதாவது இருக்க வேண்டும். ஒருவேளை நாம் பிற்காலத்தில் என்னவாக இருப்போம் என்பதற்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ள, இங்கே தற்காலிகமாக இருக்கக் கூடும்” என்று கூறியது.
முதல் சிசு அவநம்பிக்கையுடன் ,”முட்டாள்தனம் – பிரசவத்திற்குப் பிறகு வாழ்க்கை நிச்சயம் இல்லை. அப்படி இருந்தால் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும்?” என்று கேட்டது.
அதற்கு இரண்டாவது சிசு “தெரியாது, ஆனால் இங்கு இருப்பதை விட வெளிச்சமாக இருக்கும். மேலும் கால்களின் உதவியால் நம்மால் நடக்க இயலும், வாயினால் உண்ண இயலும் என தோன்றுகிறது” என்றது.
“இது முட்டாள்தனமானது! நடப்பது சாத்தியமற்றது. வாயால் சாப்பிடுவதா? அபத்தமான எண்ணம். தொப்புள் கொடி ஊட்டச்சத்தை அளிக்கிறது. தொப்புள் கொடி மிகவும் சிறியது அதனால் வாழ்க்கை என்பது பிரசவத்திற்குப் பிறகு விலக்கப்படும்.” என்று முதல் சிசு ஆணித்தரமாக கூறியது.
அதற்கு மற்றொன்று, “ஏதோ ஒன்று இருக்கிறது என்று நான் நினைக்கிறேன், இங்கே இருப்பதை விட அங்கு வித்தியாசமாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது” என்று பதில் அளித்தது.
“வெளியே சென்றவர் எவரும் அங்கிருந்து திரும்பி வந்ததில்லை. பிரசவம் என்பது வாழ்க்கையின் முடிவு, பிரசவத்திற்குப் பிறகு இருளும் பதற்றமும் தவிர வேறு எதுவும் இருக்கப்போவதில்லை. அது நம்மை எங்கும் அழைத்துச் செல்ல போவதில்லை.” என்று முதல் சிசு மீண்டும் கூறியது.
“எனக்கு சரியாகத் தெரியாது எனினும் நிச்சயமாக நாம் நம் தாயாரை பார்ப்போம், அவர் நம்மை நன்கு கவனித்து கொள்வார்” என்று இரண்டாவது சிசு கூறிற்று.
“தாயாரா??” அம்மா இருக்கிறார் என்று நீ நம்புகிறாயா? அவள் இப்போது எங்கே இருக்கிறாள்?” என்று முதல் சிசு கேட்டது.
“அவள் நம்மைச் சுற்றி இருக்கிறாள். அவளில் தான் நாம் வாழ்கிறோம். அவள் இல்லாமல் இந்த உலகமே இல்லை.” என்றது இரண்டாவது சிசு.
“நான் அவளைப் பார்த்ததில்லை. அதனால் தர்க்கரீதியாக பார்த்தால் தாய் என்றவள் இல்லை என்பதே உண்மை.” என்று முதல் சிசு விவாதித்தது .
அதற்கு இரண்டாவது சிசு, “சில நேரங்களில் நீ அமைதியாக இருக்கும்போது அவளின் குரலை கேட்கலாம், அவளை உணரலாம். பிரசவத்திற்குப் பிறகு ஒரு உண்மை இருக்கிறது என்று நான் நம்புகிறேன், அந்த யதார்த்தத்திற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ளவே நாம் இங்கே இருக்கிறோம்.” என்று கூறியது.
நீதி:
வாழ்க்கை என்பது இயற்கையான மற்றும் தன்னிச்சையான தொடர் மாற்றங்களின் தொகுப்பாகும். அந்த மாற்றங்களை எதிர்க்காதீர்கள், அது துக்கத்தையே உருவாக்கும். யதார்த்தம் எதுவோ அதை அவ்வாறே ஏற்றுக் கொள்ள வேண்டும். தற்போதைய சூழ்நிலைகளால் நமது புலனுணர்வு திறனில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, மெய்ப்பொருளை முழுமையாக உணர முடியாமல் போகலாம். அதனால் மெய்ப்பொருள் கற்பனையானது என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. பக்தி /விசுவாசம் என்பது நம்பிக்கையில் அடங்கியுள்ளது; நம்பிக்கையே ஒருவரை பலப்படுத்துகிறது.
மொழி பெயர்ப்பு:
வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி
SOURCE: SSSIE