நீதி: பக்தி
உபநீதி: நம்பிக்கை
புதிதாகத் திருமணம் செய்து கொண்ட தம்பதியர், தங்கள் இல்லத்திற்குத் திரும்பி செல்லும் வழியில், படகில் ஒரு ஏரியைக் கடந்து கொண்டிருந்தனர்; திடீரென ஒரு கடும் சூறாவளி ஏற்பட்டு, அதில் அவர்களின் படகு சிக்கிக் கொண்டது. மாவீரனான அந்த ஆண்மகன் பதட்டப் படாமல் தைரியமாக இருந்தான், ஆனால் அவனுடைய மனைவி பதட்டத்துடன் காணப் பட்டாள். அவர்களின் சிறிய படகானது, புயலின் சீற்றத்தினாலும், முரட்டு அலைகளாலும் சுற்றி வளைக்கப்பட்டுத் தத்தளித்து கொண்டிருந்தது. அது அவளை பெரிதும் அச்சுறுத்தியது. எச்ச்சமயத்திலும் படகு கவிழ்ந்து அதனுடன் அவர்களும் மூழ்கக் கூடும் என்பதை அவள் உணர்ந்தாள். எனினும் அவளுடைய கணவன் அமைதியாக உட்கார்ந்திருப்பதைக் கவனித்தாள். சிறிதும் சலனமின்றி எதுவுமே நடக்காதது போல அவன் அமர்ந்திருந்தான்.
கவலையுற்ற குரலில், “உங்களுக்குப் பயமாக இல்லையா? இதுவே நம் வாழ்க்கையின் கடைசித் தருணமாக இருக்கலாம்! நாம் பாதுகாப்பாகக் கரையை அடைவோமா என்பதற்கு உத்திரவாதமில்லை. ஏதேனும் அற்புதம் நிகழ்ந்தால் மட்டுமே நாம் உயிர் தப்ப முடியும்; இல்லையெனில் மரணம் நிச்சயம். உங்களுக்கு அச்சமாக இல்லையா? உங்களுக்குப் புத்தி பேதலித்து விட்டதா? உங்கள் மனம் தான் கல்லா?” என்று மனைவி தன் சாந்தமான கணவனைப் பார்த்துக் கேட்டாள்.
அவன் சிரித்துக் கொண்டே தன் வாளை அதன் உறையிலிருந்து உருவினான். மனைவி மேலும் குழப்பமடைந்தாள்; கணவன் என்ன செய்யப் போகிறான் என்று வியப்புடன் பார்த்து கொண்டிருந்தாள். கணவன் அவள் கழுத்தின் அருகில் வாளை வைத்தான். மிகச் சிறிய இடைவெளி மட்டுமே இருந்தது; கிட்டத்தட்ட அவளது கழுத்தை தொட்டுவிடும் அளவிற்கு, வாள் நெருக்கமாக இருந்தது.
அவன் தனது மனைவியிடம், “உனக்குப் பயமாக இருக்கிறதா?” என்று கேட்டான்.
மனைவி புன்முறுவலுடன், “நான் ஏன் பயப்பட வேண்டும்? கழுத்து முனையில் வாள் இருந்தாலும் அதைப் பிடித்திருக்கும் கைகள் உங்களுடையது. அப்படி இருக்கும் பொழுது, நான் ஏன் பயப்பட வேண்டும்? நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்” என்று கூறினாள்.
அவன் வாளை உறையில் திருப்பி செலுத்தியபடி, “என் பதிலும் இதேதான். கடவுள் என்னை நேசிக்கிறார் என்று எனக்கு தெரியும். புயல் அவரது கைகளில் உள்ளது. எது நடந்தாலும் நன்மைக்காகவே என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. எல்லாமே கடவுளின் கைகளில் இருப்பதால், அவர் எல்லோரின் நன்மைக்காக மட்டுமே செயற்படுவார் என்று எனக்கு தெரியும். அவர் தவறு செய்ய மாட்டார்” என்று உறுதியுடன் கூறினான்.
கற்பித்தல்:
நாம் கடவுள் மேல் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதுவே நம் வாழ்வில் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய மாற்றம் ஆகும். இது நம் வாழ்க்கை முழுவதையும் மாற்றிவிடும். ஒரு போதும், அதில் சந்தேகம் இருக்கக் கூடாது.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
தனக்கு ஒப்பில்லாத கடவுளின் திருவடிகளைத் தவறாது நினைப்பவர்க்கல்லாமல், மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.
மொழி பெயர்ப்பு:
வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி
Source: http://saibalsanskaar.wordpress.com