நீதி – உண்மை, வாய்மை
உபநீதி – உள்ளார்ந்த சக்தியை உணர்தல் / பாராட்டுதல்
ஜென்னி என்ற ஒரு ஐந்து வயதுச் சிறுமி, பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தாள். ஒரு நாள், அவள் தன் தாயாருடன் ஏதோ கடைக்குச் சென்ற போது, ஒரு பிளாஸ்டிக் முத்து மாலையைப் பார்த்தாள். அதன் விலை ரூபாய் 250ஆக இருந்தது.
அச்சிறுமிக்கு அந்த மாலையை வாங்க வேண்டும் என மிகவும் ஆசையாக இருந்தது. ஆனால், அவளின் தாயார், முத்து மாலையின் விலை சற்று அதிகமாக இருந்ததால், அந்த மாலையை வாங்கித் தரவேண்டுமென்றால், வீட்டில் தான் சொல்லும் சில காரியங்களை பதிலுக்கு சிறுமி செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும், சிறுமியின் பிறந்த நாளும் கூடிய சீக்கிரத்தில் வருவதால், சிறுமியின் பாட்டி ஏதேனும் பணம் பரிசளிப்பார் என்றும் கூறினார்.
ஜென்னி தாயாரின் ஆணைக்குக் கீழ் படிந்து, வீட்டு வேலைகளை ஒழுங்காகச் செய்து, பாட்டி கொடுத்த பணத்தையும் வைத்துக் கொண்டாள். முத்து மாலைக்குச் செலவழித்த பணத்தை, வேலை செய்து திருப்பிக் கொடுத்து விட்டாள். தினமும் மாலையை அணிந்துக் கொண்டு பேரின்பம் பெற்றாள். குளியல் நேரம் மட்டும் மாலையைக் கழற்றி வைத்து விட்டாள்; ஏனென்றால், சிறுமியின் கழுத்து அதனால் பச்சையாக மாறி விடும் எனத் தாயார் கூறியிருந்தார்.
ஜென்னியின் தந்தையும் மிகவும் பாசம் உள்ளவர். ஒரு நாள், அவர் ஜென்னியை அழைத்து, அவள் தன்னை விரும்புகிறாளா எனக் கேட்டார். தினமும், உறங்கும் முன், அவளுக்கு ஒரு கதை சொல்வார். மகள் ஆம் என்று ஒப்புக் கொண்டதும் முத்துமாலையைத் தனக்குத் தருமாறு கேட்டார். மகள் மறுத்து விட்டாள். அதற்கு பதிலாக, தன் பிறந்த நாள் பரிசுப் பொம்மையையோ, குதிரை பொம்மையையோ அல்லது ரிப்பன்களையோ தருவதாகச் சொன்னாள். அவற்றை வைத்துக் கொண்டு தந்தையை விளையாடச் சொன்னாள். இது போல, 2 அல்லது 3 முறை நடந்தது.
ஒரு நாள், உறங்கச் செல்லும் முன், தந்தை வழக்கம் போல அவளுக்குக் கதை சொன்னார். கதை கேட்டபின், அவள் முத்து மாலையைத் தந்தைக்கு கொடுத்து விட்டாள். உடனே தந்தை ஒரு கையால் முத்து மாலையை வாங்கிக் கொண்டு, மறு கையால் தன் பையில் வைத்திருந்த ஒரு வெல்வெட் பெட்டியை அவளிடம் கொடுத்தார். பெட்டியின் உள்ளே ஒரு அழகான முத்துமாலை இருந்தது. தந்தையிடம் வெகு நாட்களாகவே அந்த மாலை இருந்தது; ஆனால் ஜென்னி விலை மலிவான மாலையை விட்டுக் கொடுப்பதற்காக காத்திருந்தார்.
நீதி
நம் வாழ்வில் பல சமயம் உண்மையைப் புரிந்து கொள்ளாமல், நாம் உபயோகமற்ற பொருட்களில் கவனம் செலுத்துகிறோம். நாம் வசதிகளோடு வாழ வேண்டும் என்ற எண்ணங்களில் மூழ்கி, குறுகிய மனப்பான்மையுடன் இருக்கிறோம்.
பல நல்ல வாய்ப்புகளை இழந்து விடுகிறோம். எவ்வளவு சுயநலமாக ஒருவர் இருக்க முடியும்! சிலவற்றை விட்டுக் கொடுத்தால் தான் பலவற்றை பெற முடியும். பலம், ஆதரவு, மகிழ்ச்சி என்று பல விஷயங்களை வெளியிலே தேடுகிறோம். அவை நம்முள்ளே இருக்கின்றன என்று அறிந்து கொள்ள தவறி விடுகிறோம். ஆதலால், இனிமேல் உள்மனதை நோக்குவோமாக!
மொழி பெயர்ப்பு:
சரஸ்வதி, ரஞ்சனி