Tag Archive | Human value stories in Tamil

நல்ல வாய்ப்புகளை இழக்காதே

நீதி: உண்மை

உப நீதி: தன்னம்பிக்கை, நன்னம்பிக்கை

இளைஞர்  எஃப். டபிள்யூ. வுல்வொர்த் தனது முதலாளியின் பேச்சைக் கேட்டு, அந்த வாய்ப்பை நழுவ விட்டிருந்தால், புகழ்பெற்ற வுல்வொர்த் அங்காடிச் சங்கிலி எங்கே இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

படியுங்கள்….

இளைஞர்  எஃப். டபிள்யூ. வுல்வொர்த் ஒரு கடையில் எழுத்தராக இருந்த போது, தன் முதலாளியிடம், சரக்குகளைக் குறைப்பதற்காக, “தள்ளுபடி விற்பனை”யை அறிமுகப் படுத்த முயன்றார். முதலாளி ஒப்புக் கொண்டார். யோசனை மகத்தான வெற்றியை பெற்றது.

இந்த வெற்றி, குறைந்த விலையில் பொருட்களை விற்கும் ஒரு கடையை சொந்தமாகத் திறக்க, வுல்வொர்த்தைத் தூண்டியது. அத்தகைய முயற்சிக்கு அவருக்கு மூலதனம் தேவைப்பட்டது, எனவே அவர் முதலாளியிடம் உதவி கேட்டார். அவரது முதலாளி அவரை நிராகரித்தார்.

முதலாளி “இந்த யோசனை மிகவும் ஆபத்தானது,” என்று வுல்வொர்த்திடம் கூறினார். மேலும், “குறைந்த விலையில் விற்க, போதுமான பொருட்கள் இல்லை” என்றும் கூறினார்.

வுல்வொர்த், தனது முதலாளியின் ஆதரவின்றி வியாபாரத்தை தொடங்கினார். மேலும், அவர் தனது முதல் கடையில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், நாடு முழுவதும் எஃப். டபிள்யூ. வுல்வொர்த் கடைகளின் சங்கிலிக்கே சொந்தக்காரர் ஆனார்.

பின்னர், அவரது முன்னாள் முதலாளி, “எனக்குத் தெரிந்தவரை, வுல்வொர்த்தின் மதிப்பை குறைக்க நான் பயன்படுத்திய ஒவ்வொரு வார்த்தைக்கும் எனக்கு ஒரு மில்லியன் டாலர்கள் செலவு ஆகிவிட்டது” என்று கூறினார்.

நீதி:

மன உறுதி மிகவும் முக்கியமானது, ஏனெனில், அது நம்மைக் கஷ்ட காலங்களில் நிலைத்திருக்க உதவுகிறது. நமது இலக்கை அடையும் வரை அச்சமின்றி நம்பிக்கையுடன் முன்னேற இது நம்மைத் தூண்டுகிறது. வாழ்க்கை எப்போதும் சீராக இருக்காது என்பதால், நம்மில் பலர் தடைகளை சந்திக்கும் போது பின்வாங்குகிறோம். ஆனால் உறுதியுடன் இருந்தால், எந்த வகையான தடைகளையும் நம்மால் சமாளிக்க முடியும்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி வெங்கட் சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

அன்பான மனப்பான்மையுடன் வாழுங்கள்

நீதி: அன்பு, பாசம்

உபநீதி: அக்கறை காண்பித்தல், பகிர்ந்து கொள்ளுதல்

ஒரு மாணவன் ஆசிரியரிடம், “சிலர், மிகுந்த கடுமையான பிரச்சனைகளுக்கு சுலபமாக தீர்வு காண்கின்றனர்; இன்னும் பலர் சிறிய பிரச்சனைகளைக் கூட எதிர்கொள்ள முடியாமல், வேதனையுடன் ஏன் அந்த பிரச்சனைகளுக்குள்ளேயே மூழ்கி விடுகின்றனர்?” எனக் கேட்டான்.

ஆசிரியர் கீழ் வரும் கதையை அவனிடம் சொன்னார்.

ஒரு முறை, ஒரு மனிதன் அன்பின் உருவமாக திகழ்ந்தான். அவன் இறந்த பிறகு, அவன் நல்லவனாக இருந்ததால், எல்லோருமே அவன் சொர்க்கத்திற்கு தான் செல்வான் என்று தீவிரமாக நம்பினர். அந்த மனிதனுக்கு எந்தவிதமான எண்ணங்களும் இல்லை; ஆனால் அவன் அங்கு தான் சென்றான்.

அங்கு இருந்த தேவதை, இந்த மனிதனை மேலோட்டமான பார்வையுடன் பார்த்து, அவன் பெயர் அங்கு குறிப்பிடாததால், அவனை நரகத்திற்கு அனுப்பி விட்டார்.

நரக வாசலில் அவனை எவரும் கவனிக்கவில்லை. அதனால் அவன் உள்ளே நுழைந்து அங்கு தங்கினான்.

சில நாட்களுக்குப் பிறகு, லுசிஃபர் சொர்க்க வாசலில் நின்று கொண்டு,  செயின்ட் பீட்டரிடமிருந்து விளக்கம்  வேண்டும் எனக் கேட்டார். மேலும் “நீங்கள் செய்வது அராஜகம்” என்று கூறினார்.

செயின்ட் பீட்டர், லுசிஃபர் ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார் என்று கேட்ட போது, அவர் “நீங்கள் ஏன் அந்த மனிதனை  நரகத்திற்கு அனுப்பினீர்கள் . அவன் என்னை மனச் சோர்வு அடையச் செய்கிறான். ஆரம்பித்திருந்தே அவன் மனிதர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு, அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தான். இப்போது எல்லோரும் அவர்களின் உணர்ச்சிகளை எடுத்துக் கூறி, அன்பாக பழகுகின்றனர். நரகத்தில் எனக்கு அது தேவையில்லை. அவனை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லவும்” என்றார்.

ஆசிரியர் கதையை முடித்த பிறகு, மாணவனை அன்புடன் பார்த்து ஆசையாக, “மிகுந்த அன்புடன் வாழ்க்கையை வாழ்ந்தால், தவறுதலாக நரகத்திற்கு உன்னை அனுப்பி விட்டால், அந்த சாத்தானே உன்னை சொர்க்கத்த்ற்கு அனுப்பி விடுவான்” என்றார்.

நீதி:

நிபந்தனையற்ற அன்பு சுயநலம் இல்லாதது. மதிப்பீடு செய்யாமல் ஒருவரை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். கலப்படமற்ற இரக்கம் என்பது சுய மையத்தால் சிதைக்கப்படுவதில்லை. மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால் மட்டுமே, மன திருப்தி வரும். இரக்கம் என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால், கொடுப்பவருக்கும் சந்தோஷம்; ஏற்றுக் கொள்பவருக்கும் சந்தோஷம். சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் சரி, ஒரு நபரை அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அதற்காக நேசியுங்கள்; நமக்கு என்ன செய்கின்றனர் என்பதை பொருத்து அல்ல.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

மனிதர்களை விட நாய்களின் வாழ்நாள் குறைவு

நீதி: அன்பு, உண்மை

உபநீதி: பச்சாதாபம், இரக்கம்

நான் விலங்குகளுக்கு மருத்துவராக இருப்பதால், ஓநாய்களை  வேட்டையாடும் ஐரிஷ் நாட்டை சேர்ந்த ஒரு வகையான நாயை பரிசோதிக்க என்னை அழைத்தனர். நாயின் மேல் இருக்கும் பாசத்தினால், குடும்பத்தில் இருந்த அனைவரும் ஒரு அதிசயம் நடக்கும் என்று நம்பினர்.

நாயை பரிசோதித்த பிறகு, அது அதிக நாட்கள் உயிர் வாழாது என்று எனக்கு தெரிந்து விட்டது. குணப்படுத்த முடியாத துன்பம் நிறைந்த நோயிலிருந்து, செயற்கை முறையில் இறப்பை  வருவிக்கும் முறையை (euthanasia) பயன்படுத்தலாம் என்று குடும்பத்தினரிடம் கூறினேன்.

ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது, அவர்களின் ஆறு வயது குழந்தை இந்த சடங்குகளை செய்தால் நன்றாக இருக்கும் என்று பெற்றோர்களுக்கு தோன்றியது. அவனுக்கு ஒரு அனுபவமாகவும் இருக்கும் என்று அவர்கள் நினைத்தனர்.

அடுத்த நாள், குடும்பத்தினர் அனைவரும் நாயை சுற்றி இருந்த போது மனது வேதனையாக இருந்தது. ஆனால் சிறுவன், மன அமைதியுடன் இறுதியாக நாயை தடவிக் கொடுத்தான். அவனுக்கு என்ன நடக்கிறது என்று புரிந்தததா என்றும் தெரியவில்லை. சில நிமிடங்களில் நாய் நிம்மதியாக இறந்து விட்டது.

சிறுவன், மனக்குழப்பம் எதுவுமின்றி அந்த நாயின் இறப்பை ஏற்றுக் கொண்டான். மனிதர்களை விலங்குகளுடன் ஒப்பீடு செய்து பார்க்கும் போது, ஏன் விலங்குகள் விரைவாக இறந்து விடுகின்றன என்று நினைத்துக் கொண்டிருந்தோம். அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த சிறுவன், “எனக்குத் தெரியும்” என்றான்.

ஆச்சரியத்துடன், நாங்கள் எல்லோரும் அவனைப் பார்த்த போது, அவன் சொன்ன பதில் மனதுக்கு ஆறுதல் தந்தது.

அவன், “மனிதர்கள் , வாழ்க்கையை நன்றாக வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைப்பதோடு எல்லோரையும் அன்புடன் நடத்துவதற்கும், நல்லவர்களாக இருப்பதற்கும் பிறவி எடுக்கின்றனர். ஆனால்  நாய்களுக்கு ஆரம்பத்திலேயே அன்பாக இருக்க தெரியும். அதனால் அவை நீண்ட நாட்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை” என்றான். எவ்வளவு நியாயமான வார்த்தைகள் அல்லவா?

நீதி:

விலங்குகளிடமிருந்து நாம் பல விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். நன்றி உணர்வு மற்றும் அன்பான மனப்பான்மை மிகவும் முக்கியம். அழகான கூற்று ஒன்று இருக்கிறது.”நாய்களுக்கு பல நண்பர்கள் இருக்கும் காரணம் என்னவென்றால், மனிதர்களை போல தகாத வார்த்தைகளை பேசுவதற்கு பதிலாக, அவை எவரை பார்த்தாலும் வாலை மட்டுமே ஆட்டுகிறது”.  நம் புலன்களை சரியாக பயன்படுத்த வேண்டும். சரியாகப் பயன்படுத்தும் முறை கடவுளிடமிருந்து மட்டுமே வரும். உடலில் புலன்கள் உள்ளன; ஆனால் உண்மையான சொந்தக்காரர் கடவுள் தான். நாம் அந்த உணர்வுடன் கடவுளிடம் சென்றால்,  அதை சரியாக பயன்படுத்தும் முறையை அவர் நமக்கு கூறுவார்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

சுய சீர்திருத்தம்

நீதி: அன்பு, பொறுமை

உப நீதி: நன்றியுணர்வு, சுய பரிசோதனை

“உலகைக் குணப்படுத்து. உனக்கும் எனக்கும் ஏற்ற ஓர் நல்ல இடமாக அதை மாற்று” என்று மைக்கேல் ஜாக்சன் பாடினார். மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த ஓர் உலகத்தில் வாழ வேண்டும் என்பதே நம் அனைவரின் கனவாக இருக்கும். நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை மாற்ற வேண்டும் என்று நாமும் மிக வீரமாக அடி எடுத்து வைப்போம்.  ஒரே எண்ணத்தில் நம்மை நிறுத்திக் கொண்டு, உண்மையை உணர மறுப்போம். நாம் உலகை மாற்றி ஒரு சாதனை செய்யப் போகிறோம் என்று நினைப்போம். ஆனால், இவ்வுலகம் மாற வேண்டும் என்று நினைப்பதை விட நம்முடைய எண்ணங்கள் மற்றும் நம் கண்ணோட்டத்தை மாற்றுவதே எளிது என்பதை விரைவில் புரிந்து கொள்வோம். ”உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக இருங்கள்” என்பது மகாத்மா  காந்தியின் பிரபலமான பொன்மொழி.

லியோ டால்ஸ்டாய் ,“எல்லோரும் உலகை மாற்ற நினைக்கிறார்கள், ஆனால் எவரும்  தன்னை மாற்றிக் கொள்ள நினைப்பதில்ல.”  என்று கூறுகிறார்.

முன்னொரு காலத்தில், வளமான நாட்டை ஆண்ட ஒரு அரசன் இருந்தான். ஒரு நாள், அவர் தனது நாட்டின் சில தொலைதூர பகுதிகளுக்கு சுற்றுலா சென்றான். அவன் தனது அரண்மனைக்குத் திரும்பியபோது, தனது கால்கள் மிகவும் வலிப்பதாகக் கூறினான், ஏனெனில் அரசன் இவ்வளவு நீண்ட பயணத்திற்குச் செல்வது இதுவே முதல் முறை. மேலும் அவன் சென்ற பாதை, மிகவும் கரடுமுரடானதாக இருந்தது. பின்னர் அவன், நாட்டின் அனைத்து சாலைகளையும் தோலால் மூடும்படி கட்டளையிட்டான்.

நிச்சயமாக, இதற்கு ஆயிரக்கணக்கான மாடுகளின் தோல் தேவைப்படும், மேலும் பெரும் தொகையும் செலவாகும்.

அப்போது அவனுடைய புத்திசாலித்தனமான வேலைக்காரன் ஒருவன் அரசனிடம், “அந்தத் தேவையில்லாத பணத்தை ஏன் செலவழிக்க வேண்டும்? உங்கள் கால்களை மறைக்க ஒரு சிறிய தோலை மட்டும் ஏன் வெட்டக் கூடாது?” என்று தைரியமாகச் சொன்னான்.

ராஜா ஆச்சரியமடைந்தார். பிறகு அவர் தனக்கென ஒரு “காலணி” செய்யும் ஆலோசனையை ஒப்புக் கொண்டார்.

இந்தக் கதையில்,  உண்மையில் வாழ்க்கையின் மதிப்புமிக்க பாடம் உள்ளது: இந்த உலகத்தை, மகிழ்ச்சியாக வாழும் இடமாக மாற்ற, நீங்கள் உங்களை மாற்றிக் கொள்வது நல்லது – அதாவது உங்கள் இதயத்தை; இந்த உலகை அல்ல.

நாம் சந்திக்கும் பிரச்சனைகள் வெளியிலிருந்து தோன்றுபவை அல்ல; மாறாக நமக்குள்ளேயேதான் இருக்கின்றன. வெளிப்புற யதார்த்தத்தை மாற்ற, நாம் சில உள் மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டும்.

“மனிதர்களாகிய நமது மகத்துவம், உலகத்தை சீர்திருத்துவதில் இல்லை – அது அணு யுகத்தின் கட்டுக்கதை – நம்மை நாமே சீர்திருத்திக் கொள்வதில்தான் உள்ளது” என்கிறார் மகாத்மா காந்தி.

நம்மையே மாற்றிக் கொள்வதா? பழைய படங்கள் மற்றும் பழைய பாடல்களை  மாற்றி அமைப்பதை   கேள்விப்பட்டிருக்கிறோம். காந்தி பேசும் மாற்றம் என்ன? மாற்றத்தை நோக்கிய நமது பாதையில் உள்ள முக்கியத் தடைகள், கவலை, கோபம், நன்றியின்மை, இரக்கமின்மை, நேர்மையின்மை போன்றவை. அவற்றைக் கடக்க முடிந்தால், நம்மை நாமே மாற்றிக் கொள்ளலாம்.

நீங்கள் ரெய்கியை கற்கச் சென்றால், முதலில் அவர்கள் பின்வரும் 5 கொள்கைகளைப் பின்பற்றச் சொல்கிறார்கள்:

இன்றைக்கு மட்டும், எனக்கு கிடைத்திருக்கிற பல நன்மைகளுக்கு நன்றி கூறுகிறேன்.

இன்றைக்கு மட்டும், நான் கவலைப்பட மாட்டேன்.

இன்றைக்கு மட்டும் நான் கோபப்பட மாட்டேன்.

இன்றைக்கு மட்டும், நான் என் வேலையை நேர்மையாக செய்வேன்.

இன்றைக்கு மட்டும், நான் எல்லா உயிர்களிடத்திலும் கருணை காட்டுவேன்.

வெளிப்படையாக, இவற்றைப் பின்பற்ற நீங்கள் ரெய்கி மாணவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. இவை அனைவருக்கும் பொருந்தும். இந்த எளிய உறுதிமொழிகளை நாம் ஒவ்வொரு நாளும் உண்மையாகப் பயிற்சி செய்தால், நாம் நம்முள் கடலளவு மாற்றத்தைக் காணலாம்.

வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (1100 A.D) ஆங்கிலிகன் பிஷப்பின் கல்லறையில் பின்வருமாறு பொறிக்கப்பட்டுள்ளது.

“நான் இளமையாகவும் சுதந்திரமாகவும் இருந்த போது, எனது கற்பனைக்கு எல்லையே இல்லை, நான் உலகத்தை மாற்ற வேண்டும் என்று கனவு கண்டேன்.  நான் புத்திசாலியாக  வளர்ந்த பின், உலகம் மாறாது என்பதைக் கண்டுபிடித்தேன், அதனால் என் பார்வையை ஓரளவு சுருக்கி, என் நாட்டை மட்டும் மாற்ற முடிவு செய்தேன்.

ஆனால் அதுவும் இயலாததாகத் தோன்றியது.

நான் வயோதிக காலத்தில், இறுதி முயற்சியாக, என் குடும்பத்தை, எனக்கு மிக நெருக்கமானவர்களை மட்டும் மாற்ற எண்ணினேன., ஆனால் அதுவும் இயலாமல் போனது.

இப்போது, நான் என் மரணப் படுக்கையில் படுத்திருக்கையில், நான் திடீரென்று உணர்கிறேன்: நான் முதலில் என்னை மாற்றியிருந்தால், ஒரு முன்னுதாரணமாக இருந்து, என் குடும்பத்தை மாற்றியிருப்பேன்.

அவர்களின் உத்வேகம் மற்றும் ஊக்கத்திலிருந்து, நான் என் நாட்டை மேம்படுத்த முடிந்திருக்கும், யாருக்குத் தெரியும், நான் உலகையே மாற்றியிருக்கலாம்.”

நீதி:

 நிலையான மாற்றம் உள்ளிருந்து வர வேண்டும். நாம் மாறும்போது, சுற்றுச்சூழலை முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்துடன் பார்க்கிறோம். நாம் ஒவ்வொருவரும் மாற்றத்தின் உதாரணமாகத் திகழ முடியும். மேலும், நாம் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒருவருக்காவது, ‘மாற்றம் உள்ளிருந்து தான் வரவேண்டும்என்ற எண்ணத்தை விதைப்போம். அதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வோம் என்று உறுதி பூணுவோம்.

“உலகைக் குணப்படுத்து. உனக்கும் எனக்கும் ஏற்ற ஓர் நல்ல இடமாக அதை மாற்று” – மைகேல் ஜாக்சன்

மொழி பெயர்ப்பு:

காயத்ரி வெங்கட்சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

பிரார்த்தனையின் மகிமை

நீதி: அன்பு, உண்மை

உப நீதி: திட நம்பிக்கை

சத்ய சாயி பாபாவின் தெய்வீக சொற்பொழிவுகள் – மே 16, 1964.

ஒரு மனிதனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். அவர் வேலை விஷயமாக மும்பை போக வேண்டியிருந்தது. அங்கிருந்து, நான்கு மனைவிகளுக்கும் என்ன  வேண்டுமோ கொண்டு வருவதாக கடிதம் எழுதியிருந்தார்.

முதல் மனைவி, உடல் ஆரோக்கியத்திற்காக மருந்துகளும், உடல் நலம் சரியில்லாத போது பயன்படுத்துவதற்காக விரிப்புகள் மற்றும் கம்பளி ஆடைகள் கேட்டிருந்தாள்.

இரண்டாவது மனைவி, சமீபத்தில் வெளிவந்த அழகான புடவைகள், நகைகள் மற்றும் பற்பல அலங்கார பொருட்கள் கேட்டிருந்தாள்.

மூன்றாவது மனைவி,  ஞானேஸ்வரி போன்ற தெய்வீக புத்தகங்கள், கவிதைகள் வடிவத்தில் அபங் பாடல்கள்  மற்றும் பண்டரிநாத், பவானி மற்றும் சாயி பாபா இவர்களின் படங்களைக் கேட்டிருந்தாள்.

நான்காவது மனைவி, “நீங்கள் ஜாக்கிரதையாக திரும்பி வந்தால், அதுவே எனக்கு போதுமானது” என்றாள்.

மற்றவர்கள் எல்லோருக்கும் பெரிய பெட்டிகள் நிறைய சாமான்கள் கிடைத்தன; ஆனால் நான்காவது மனைவிக்கு அன்பு கிடைத்தது.

கடவுள்,  நீங்கள் எதற்காக பிரார்த்தனை செய்கிறீர்களோ அதை அளிப்பார்; அதனால், எதைக் கேட்க வேண்டும் என்று நன்றாக யோசித்த பிறகு, கேளுங்கள்.

நீதி:

நம்மைச் சுற்றி பல அன்பானவர்கள் சூழ்ந்திருக்கும் போது, நமக்கு ஆறுதலாக இருக்கும். அன்பு இருந்தால், எதை செய்ய வேண்டுமானாலும் நன்றாக செய்யலாம். எந்த பிரச்சனை வந்தாலும் அதை எதிர்கொள்ளலாம். நிபந்தனையற்ற அன்பை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. அன்பு, வாழ்க்கையில் முன்னேற நம்பிக்கை தருகிறது.

ஆழ்ந்த அன்பை பெறும் போது, சக்தி கிடைக்கிறது; ஆழ்ந்த அன்பை அளிக்கும் போது, தைரியம் கிடைக்கிறது – லாவோ சு

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதிரஞ்சனி

SOURCE: SSSIE

கடவுளின் சக்தி வாய்ந்த கரங்களில் வாழ்க்கை ஒரு சிறிய மெழுகுவர்த்தி போன்றது

நீதி – உண்மை

உபநீதி – விசுவாசம் / நம்பிக்கை

ஒரு மனிதன், ஒரு சிறிய மெழுகுவர்த்தியுடன் கலங்கரை விளக்கத்தின் படிகளில் ஏறிக் கொண்டிருந்தான்.

மேலே சென்று கொண்டிருக்கும் போது, மெழுகுவர்த்தி அம்மனிதனிடம்,“நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம்?” என்று கேட்டது.

அதற்கு அம்மனிதன், “பெருங்கடலில் பயணித்து கொண்டிருக்கும் கப்பல்களுக்கு, சைகை காண்பிப்பதற்கு கலங்கரை விளக்கத்தின் படிகளில் மேலே சென்று கொண்டிருக்கிறோம்” என்று கூறினான்.

அதற்கு மெழுகுவர்த்தி, “என்ன கூறுகிறீர்கள்? இந்த சிறிய வெளிச்சம் எப்படி இவ்வளவு பெரிய கப்பல்களுக்கு சைகை கொடுக்க முடியும்?” என்று மெல்லிய குரலில் கேட்டது.

அதற்கு மனிதன், “சிறியதாக வெளிச்சம் இருந்தால், பரவாயில்லை. இது நீ செய்யும் வேலை. நீ செய்ய வேண்டியது என்னவென்றால் அந்த விளக்கு அணையாமல் இருக்கும்படி பார்த்துக் கொள். மற்றவைகளை என்னிடம் விட்டு விடு” என்றான்.

சற்று நேரத்திற்கு பின், கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கு கொக்கி போன்ற கருவிக்கு முன் ஒரு பெரிய விளக்கு இருந்தது. அம்மனிதன் இந்த மெழுகுவர்த்தியுடன் அவ்விளக்கை ஏற்றினான். உடனடியாக, அந்த இடம் மிகவும் பிரகாசமாக இருந்தது. பெருங்கடலில் இருக்கும் கப்பல்களுக்கு இந்த விளக்கு ஒளி கொடுத்தது.  

நீதி:

நமக்கு பல வரம்புகள் இருப்பதனால், அர்த்தமுள்ள பல விஷயங்களை நம்மால் செய்ய முடிவதில்லை. நாம் ஞாபக வைத்துக் கொள்ள வேண்டிய ஒரே விஷயம் – கடவுளின் சக்தி வாய்ந்த கரங்களில், நம் வாழ்க்கை, ஒரு சிறிய மெழுகுவர்த்தி போன்றது.

நாம் கடவுளின் மேல் நம்பிக்கை செலுத்தினால், நமக்கு இருக்கும் வரம்புகளுக்கு அப்பாற்பட்ட வகையில், நம் வாழ்க்கையை அழகாக கொண்டு செல்வதோடு, நம் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு வரமாக இருக்கும் வகையில் அவர் மாற்றுவார்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதிரஞ்சனி

SOURCE: SSSIE

குறைவான சுமையே அதிகமான ஆறுதல்

நீதி : உண்மை

உப நீதி: பற்றின்மை

யானைகள் தங்கள் கட்டுகளை உடைத்து விடுபட முடியாது என்ற நினைப்பில், தான் இருந்த இடத்திலேயே சிக்கிக் கொண்டதைப் பற்றிய கதையை நாம் படித்திருக்கிறோம்.

யானைகளைப் போலவே நம்மில் பெரும்பாலோர் நம் வாழ்க்கையில் முன்னோக்கி செல்ல முடியாமல் பின்னிய வலையிலேயே சிக்கிக் கொள்கிறோம். வெறுப்பு, கோபம், வலி, துன்பம், ஆசைகள் போன்ற உணர்ச்சிகள் நம் உடல் மற்றும் மனதை பலவீனபடுத்தும். இந்த சுமை மூட்டைகளை நாம் விடுவிக்காவிட்டால், அவை நம்மை மனரீதியாக தளர்வடையச் செய்யும். ஆன் லேண்டர்ஸ் “ஒருவர் மீது மனக்கசப்பை  வளர்த்துக் கொண்டால், நாம் வெறுக்கும் ஒருவரை நம் தலையில் வாடகையின்றி வாழ அனுமதிப்பதற்கு ஒப்பாகும்” என்கிறார். மன்னிப்பதும் விட்டுவிடுவதும் மனவலிமை கொண்டவர்களால் கடைப்பிடிக்கப்படும் ஒரு கலையாகும். காந்திஜியின் கூற்றுப்படி, “பலவீனமானவர்களால் பிறரை மன்னிக்க முடியாது. மன்னிப்பது வலிமையானவர்களின் பண்பாகும்.”

வாழ்க்கையில் மிக சிறந்த சந்தோஷத்தையும், உயர்ந்த ஆற்றலையும் நாம் அனுபவிக்க வேண்டும் என்றால், நாம் நமது உணர்ச்சி என்ற சுமையை விட்டுவிட வேண்டும். ஒரு பறவை வானத்தில் உயர பறக்க வேண்டும் என்றால், முதலில் தான் பாதுகாப்பாக இருக்கும் மரக்கிளையில் இருந்து, அது வெளிவர கற்றுக் கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையில் பறக்க வேண்டிய செயலுக்கு அச்சிறு பறவைக்கு எவ்வளவு தைரியம் தேவை என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

தற்போது, நம்மால் இந்த உணர்ச்சி சுமைகளை எவ்வாறு விட முடியும் என்ற கேள்வி வருகிறது. “http://zenhabits.net/zen-attachment/” என்ற இணையதளத்தில் கண்ட “விட்டுவிடுதல் – அ முதல் ஃ வரை” என்ற பகுதியை பகிர எண்ணுகிறேன். பற்றுதல்களை விட்டுவிடுதல் என்பதை பற்றி இந்த தளம் விவரிக்கிறது என்றாலும், உணர்ச்சிகள் என்பதும் ஒருவித “பற்று” என்பதால் நாம் கையிலெடுக்கும் அனைத்து சுமைகளுக்கும் இவை பொருந்தும். இடப்பற்றாக்குறை காரணமாக ஒரு சுருக்கமான பட்டியல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. இவை சுய விளக்கமுடையதாக இருப்பினும், மேலும் விரிவான புரிதலுக்கு அந்த இணையதளத்தை பார்க்கவும்.

· இந்த தருணத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

· இப்போது எது உள்ளதோ அது போதும் என்ற எண்ணம் வேண்டும்.

· நமது தவறுகளை நாமே சுட்டிகாட்டி கொள்ள வேண்டும்.

· நிரந்தர தன்மை இல்லாத குணநலன்கள் உடையவர்கள் நாம், என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

· இந்த நொடியை முழுமையாக மகிழ்ந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

· நமக்கு நாமே உற்ற நண்பன் என்று நம்மை நேசிக்க பழக வேண்டும்

· சில நேரங்களில் தனியாக போராட வேண்டியிருக்கும் என்பதை உணர வேண்டும்.

· குறைந்த பற்றுதல்களை கொள்ள வேண்டும்.

· பல விதமான மக்களுடன் பழக வேண்டும்.

· நம் செயல்களையோ அல்லது நமக்கு பிடித்தவர்களின் செயல்களையோ அடிக்கடி நியாயப்படுத்தக் கூடாது.

· கடந்த காலத்தை நம்மால் மாற்ற முடியாது என்பதை அறிந்து கொண்டு அதை அப்படியே ஏற்று கொள்ள வேண்டும்.

· பயத்திற்கு பதிலாக அன்பை பிறருக்கு அளிக்க வேண்டு

· எதிர்காலத்தை அல்லது கடந்த காலத்தை பற்றிய சிந்தனை இல்லாமல் நிகழ் காலத்தில் – இந்த நொடியில் வாழ எண்ண வேண்டும்.

· நிதானமாக எடுத்துரைக்க வேண்டும்.

· மனதை விசாலமாக்கிக் கொள்ளவும்.

· கசப்பான எண்ணங்கள் மனதில் நிலைக்காமல் இருக்க, வேறு ஆக்கபூர்வமான எண்ணங்களில் திசைமாற்ற பயிற்சி செய்ய வேண்டும்.

· உங்கள் “பற்றை” உணர்ந்து கேள்வி கேட்க வேண்டும்.

· தெரிந்து கொள்ள வேண்டிய தேவையை வெளியிட வேண்டும்.

· வாழ்க்கையின் குறிக்கோளை ஒவ்வொறு நொடியும் நிறைவேற்ற வேண்டும்.

· மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

· வருத்தங்களும் வலிகளும் அனைவரது வாழ்விலும் உண்டு என்பதும் அதை தவிர்க்க முடியாத ஒன்று என்பதையம் புரிந்து கொள்ள வேண்டும்.

· உணர்வுகளுக்கு குரல் கொடுக்க வேண்டும், குறைத்தபட்சம் எழுதி வைக்க வேண்டும்.

· வாழ்க்கையில் அனைத்து தருணங்களையும் ஒரு படிப்பினையாக, முழுமையான நன்றியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். பற்று இல்லாத அன்பான உணர்ச்சி – இந்த நிலை உன்னதமானது.

· அமைதியான நிலையில் இருப்பதற்கு ஈடுபாடு காட்ட வேண்டும்.

· இந்த நொடியில் நாம் தன்னிலையை உணர்ந்தால், வாழ்வில் மேலும் மற்றொரு அனுபவத்தை வரவேற்கவும், பாராட்டவும், மகிழவும், முன்னோக்கி செல்லவும் இயலும்.

வாழ்க்கையின் இன்பங்களை அனுபவிப்பதற்கான வழிமுறை இவை. அறியப்படாத மூலத்திலிருந்து அழகான மேற்கோள்களாக – அனைத்தையும் சுருக்கமாகக் பட்டியலிடுகிறது. நடந்து முடிந்த சம்பவங்களை விட்டுவிடாமல் பிடித்துக் கொண்டிருப்பது, நாம் பிரயாணிக்கும் வாகனத்தை பழுதடைந்த சக்கரத்துடன் ஓட்டுவதற்குச் சமமாகும். பழுதை சரி பார்க்க நிற்காமல், அது தன்னை தானே சரி செய்து கொள்ளும் என்ற நினைப்பில், உண்மை நிலை எதுவென தெரிந்தும், சவாரி சீராக செல்வது போல பாசாங்கு செய்து கொண்டு, ஒரு நாள் வண்டியை செலுத்த முடியாமல் மிகவும் மோசமான நிலை வரும் வரை, நாம் நிறுத்தி பார்க்க வேண்டிய கட்டாயம் வரும் வரை, உண்மையில் உதவி பெறாமல் நகர முடியாது என்ற நிலை ஏற்படும் வரை விட்டுவைத்தால் நமக்கு என்ன ஆபத்துகள் நேருமோ, அதே போன்று தான் வாழ்க்கையில் உள்ள பழுதுகளை உடனுக்கு உடன் சரி செய்யாமல் அப்படியே பிடித்து கொண்டிருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

வாழ்க்கை மிகவும் கருணை மற்றும் தயை நிறைந்தது. எனவே நாம் ஒரு குண்டும் குழியும் நிறைந்த பாதையில் சவாரி செய்வதை நிச்சயமாக விரும்பாது. உணர்ச்சிகள் என்ற சுமைகளை கட்டவிழ்த்து விடும் போது , “குறைவான சுமையே அதிக வசதி” என்பதை நாமும் உணர்வோம்.

நீதி:

கடந்தகால கசப்பான நினைவுகளை விட்டுவிடக் கற்றுக் கொள்வதும், நிகழ்காலத்தில் வாழ்வதும் வாழ்க்கையை எளிதாக்குகிற வழியாகும். அதிக விழிப்புணர்வுடன் இருக்க நம்மை பழக்கிக் கொள்வது பல வழிகளில் நமக்கு பயனளிக்கும். வாழ்க்கை என்பது ஒரு பயணம், நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் – தேவையற்ற விஷயங்களை ஏற்றுக் கொண்டால் பாரமாகும், பயணம் சுமையாகிவிடும். நாம் செய்த நல்ல காரியங்களின் தடயத்தை நம் வாழ்க்கைப் பயணத்தின் இறுதியில் நிலைநாட்டி விட்டுச் செல்வதே புத்திசாலித்தனம். எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நம் கடமையை செய்தால், எதிர்தரப்பினர் தகுந்த கைம்மாறு செய்யவில்லை என்றாலும் நாம் சோர்வடைய மாட்டோம். பற்றுதல் துன்பத்திற்கும், பற்றின்மை சுதந்திரத்திற்கும் வழி வகுக்கிறது.

ஒரு சூழ்நிலையில் இருக்க வேண்டிய நேரம் என்பதையும், அதிலிருந்து நகர்ந்து செல்ல வேண்டிய நேரம் எப்போது என்பதை அங்கீகரிப்பதும், பற்றின்மையின் ஒரு பெரிய பகுதியாகும். – டேரன் எல் ஜான்சன்

மொழி பெயர்ப்பு:

வள்ளிசரஸ்வதிரஞ்சனி

SOURCE: SSSIE

பிரச்சனைகளை சமநிலை மனப்பான்மையுடன் அணுகுதல்

நீதி : உண்மை / நம்பிக்கை

உப நீதி: பொறுமை / ஞானம்

பல ஆண்டுகளுக்கு முன்பு, சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்று நேரலையாக பல ஆயிரக்கணக்கான நேயர்கள் பார்வைக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. மேலும் அந்நிகழ்வில் வங்காளப் புலிகள் நிறைந்த கூண்டு ஒன்றில், ரிங் மாஸ்டர் அவற்றை அடக்கும் ஒரு காட்சியும் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக இருந்தது.

பயிற்சியாளர் கூண்டுக்குள் நுழைந்ததும் தன் பின்னாலிருந்த கதவைப் பூட்டினான். ஸ்பாட்லைட், கூண்டை ஒளிரச் செய்தது. ஒளிபடக்கருவிகள் கூண்டின் அருகில் சென்றபோது, பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். பயிற்சியாளர் அந்த கொடிய காட்டு பூனைகளை தன் கட்டளைக்கு இணங்க இயக்கினான்; ஆனால் திடீரென்று எதிர்பாராத ஒன்று நடந்தது – சர்க்கஸ் கூடாரத்தில் மின்சாரம் தடைபெற்று விளக்குகள் அணைந்தன!

இருபது அல்லது முப்பது நீண்ட வினாடிகளுக்கு, பயிற்சியாளர் புலிகளுடன் அடைத்து வைக்கப்பட்டிருந்தான். அவை தன்னை முழுமையாகப் பார்க்க முடியும் ஆனால் அவனால் அவற்றை பார்க்க இயலாது என்பதையும் அறிந்திருந்தான். அந்த திடுக்கிட வைக்கும் தருணங்களில், அவனுடைய சாட்டையும் ஒரு சிறிய முக்காலியும் மட்டுமே அவனுக்கும் மரணத்திற்கும் இடையில் இருந்தது.

அதிர்ஷ்டவசமாக, அவன் உயிர் பிழைத்தான். விளக்குகள் மீண்டும் எரிந்ததும் அவன் தனது நிகழ்ச்சியை மக்கள் பாராட்டும்வண்ணம் முடித்தான்.

பின்னர், ஒரு நேர்காணலின் போது பயிற்சியாளரிடம், புலிகள் அவனை பார்க்க முடியும் என்பதை அறிந்தும் மின்சாரம் வெட்டுப்பட்ட தருணத்தில் எவ்வித உணர்ச்சிகள் அவன் மனதில் நிறைந்தன என்று கேட்கப்பட்டது. அதற்கு தான் முற்றிலும் இருளில் இருந்ததாகவும், பயம் தனது முதுகுத்தண்டில் வடிந்து சிலிர்க்க வைத்ததையும் அவன் ஒப்புக் கொண்டான். ஆனால் தன்னால் இருட்டில் பார்க்க இயலாது என்பதை புலிகள் அறிந்திராது என்பதை அவன் உணர்ந்தான். “நான் என் சாட்டையை செலுத்திக் கொண்டே இருந்தேன், மேலும் விளக்குகள் மீண்டும் எரியும் வரை நான் அவர்களுடன் பேசிக் கொண்டே இருந்தேன். நான் அவர்களைப் பார்க்க முடியாது என்பதை அவ்விலங்குகளுக்கு சிறிதும் சந்தேகம் வராமல் செயல்பட்டுக் கொண்டிருந்தேன்.” என்று விளக்கினான்.

சந்தேகமில்லாமல் நம் வாழ்க்கையிலும் சிலநேரங்களில் மேலே உள்ள கதையில் நடந்ததற்கு இணையான சில சம்பவங்கள் அமைந்திருக்கும்.

ஒரு கட்டத்தில், நாம் அனைவரும் இருட்டில் புலிகளுடன், அதாவது கண்ணுக்கு புலப்படாத பயங்கரங்களுடன் போராடுவோம். ஆனால் நமக்கு உண்மை என்று தெரிந்ததை நம்பிக்கையுடன் ‘துணிவு’ என்ற சாட்டையை செலுத்திக் கொண்டே விடியலுக்காக காத்திருந்தால், எல்லாம் சரியாகிவிடும்.

நீதி:

பொறுமையும் நம்பிக்கையும் நம் அன்றாட வாழ்க்கை முறையில் புகுத்தபட வேண்டிய நற்பண்புகள். பொறுமை என்பது வெறும் காத்திருக்கும் திறன் அல்ல – அது ஒரு நல்ல அணுகுமுறை. எது நடந்தாலும் அமைதியாக இருந்து, நாம் சரி என்று நம்பும் நற்பண்புகளை இறுதி வரை கைவிடாமல் கடைப்பிடித்து, அவற்றை நேர்மறையான வளர்ச்சி வாய்ப்புகளாக மாற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதுமே ஆகும். நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்று எல்லாம் வல்ல இறைவனை நம்பி, எவ்வித பலனையும் எதிர்பாராமல் செயல்படவேண்டும். வாழ்வில் நடக்கும் அனைத்தையும் சரிசமமாக ஏற்றுக் கொள்ளவும், கடவுளிடம் முழுமையாக சரணடையவும் கற்றுக் கொள்ள வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

வள்ளிசரஸ்வதிரஞ்சனி

SOURCE: SSSIE

மனித நேயம்

நீதி: அன்பு / உண்மை

உப நீதி: கருணை

ஒரு மனிதன், 200 மைல்களுக்கு அப்பாற்பட்டு வசித்து வந்த தன் தாய்க்கு, மலர்கள் அனுப்ப வேண்டும் என்று ஒரு பூக்கடைக்கு முன், தன் வாகனத்தை நிறுத்தினான்.

அவன் காரை விட்டு இறங்கியதும், நடை பாதை ஓரத்தில் ஒரு சிறுமி அழுது கொண்டிருப்பதைக் கண்டான்.

அவளிடம் சென்று என்ன பிரச்சனை என்று கேட்டான். அதற்கு அவள், “நான் என் தாய்க்கு ஒரு சிவப்பு ரோஜா வாங்க விரும்பினேன். என்னிடம் 75 காசுகள் தான் உள்ளன. ஆனால் ஒரு ரோஜாவின் விலையோ இரண்டு ரூபாய்” என்று கூறினாள்.

அந்த மனிதன் புன்முறுவலுடன், “நீ என்னுடன் உள்ளே வா! நான் உனக்கு ஒரு ரோஜா வாங்கி தருகிறேன்” என்றான்.

அந்த சிறுமி கேட்ட ரோஜாப் பூவை வாங்கி கொடுத்து விட்டு, தன் அன்னைக்கும் மலர்கள் அனுப்ப ஆணை  கொடுத்தான்.

அங்கிருந்து கிளம்பும் போது சிறுமியிடம், “நான் உன்னை உன் வீட்டில் இறக்கி விடவா?” என்று கேட்டான். அந்த சிறுமி, “சரி! தயவு செய்து என் அம்மாவிடம் கொண்டு விடுங்கள்” என்று கூறினாள்.

அந்தச் சிறுமி அவனுக்கு வழிகாட்டி கொண்டே சென்று, ஒரு  கல்லறையின் முன் நிறுத்தச் சொன்னாள். அங்கு புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு சமாதியில் அந்த ரோஜா மலரை வைத்தாள்.

உடனே அந்த மனிதன், தன் காரைத் திருப்பிக் கொண்டு அந்தப் பூக்கடைக்குச் சென்றான். தன் தாய்க்கு மலர் அனுப்பக் கொடுத்திருந்த ஆணையை ரத்து செய்து விட்டு, ஒரு மலர்க் கொத்து வாங்கிக் கொண்டு 200 மைல்கள் காரை ஓட்டிக் கொண்டு, நேராகத் தன் அன்னையின் வீட்டிற்கு சென்றான்.

அவன் அதற்கு மேல் ஒரு வினாடி கூட வீண் செய்ய விரும்பவில்லை.

நீதி:

நீங்கள் அன்பானவர்களை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்க, கிடைக்கும் ஒவ்வொரு தருணத்தையும் நழுவ விடாதீர்கள்.

உங்களுக்கு இன்னும் ஒரு நாள் கிடைக்குமா என்று கூற முடியாது. எந்த ஒரு விஷயமும் தாமதமாகிவிட்டது என்ற நிலைக்குச் செல்வதை தவிர்க்க, செயல்களின் முக்கியத்துவத்தை பொறுத்து வரிசைப்படுத்தி செயல்பட வேண்டும். உன் பெற்றோரை நேசி. நாம் வளர வளர, நம் பெற்றோரும் முதிர்வடைகின்றனர்.

மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியில் அடுத்த கட்டம், மனிதன் மனித நிலையில் இருந்து, அன்பு நிலைக்கு மாறுவது தான்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரிசரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

உயர்ந்து செல்

நீதி: உண்மை

உப நீதி: ஏற்றுக் கொள்ளும் மனநிலை / மனநிறைவு

ஒரு நாள் என் நண்பருடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது “வாழ்க்கை ஒரு போராட்டம் இல்லையா?” என்று கேட்டார். அது எனக்கு ஒரு புதிய தகவலாக இருந்தது. அனைவருக்கும் வாழ்க்கை கடினமாக அல்லாமல் இனிதாகவே அமையும் என்று நான் எப்போதும் நினைத்தேன். ஆனால் நான் நினைத்ததில் தவறு இருப்பது போல் தெரிகிறதே? உண்மையில், வாழ்க்கை என்பது சிக்கல்களால் ஏற்படும் கவலைகலாகும்; ஆனால் போராட்டங்கள் இருக்குமா? ஒருவேளை இந்த “போராட்டங்களின்” மூலம் வாழ்க்கை நமக்கு எதாவது முக்கிய செய்தியை தெரிவிக்க முயற்சிக்கிறதோ?

இந்த கேள்வி என் சிந்தனையை தூண்டியது. வாழ்க்கையில் சிலர் ஏன் தொடர்ந்து போராட்டங்களை சந்திக்கின்றனர்? வாழ்நாள் முழுவதும் போராடியவர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு வாழ்க்கையில் துயரங்கள் முடிவடைவதே இல்லை. சிலருக்கு ஏன் வாழ்க்கை மிகவும் எளிதாக இருக்கிறது? எதை நினைக்கிறார்களோ அதை ஒரு சிட்டிகையில் பெற்று விடுகிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கை மிக சுலபம். அவர்களுக்கு வாழ்க்கை என்பதே தங்க தட்டில் வைத்து தரப்படுகிறது. இக்கேள்விக்கான பதிலை சமீபத்தில் என் மின்னஞ்சலில் வந்த ஒரு கதையின் மூலம் கிடைக்கப் பெற்றேன். கதையை மேற்கோள் காட்ட:

“ஒரு மனிதன் பட்டாம்பூச்சியின் குக்கூன் ஓடு ஒன்றை கண்டான். ஒரு நாள் அதில் ஒரு சிறிய துவாரம் தோன்றியது; அந்தச் சிறிய துவாரத்தின் வழியாக, தன் உடலை வலுக்கட்டாயமாக வெளியேற்ற, பல மணி நேரம் போராடிக் கொண்டிருந்த ஒரு வண்ணத்துப்பூச்சியை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். பின்னர் சில நிமிடம் அது எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல் இருந்தது. முடிந்த அளவு பிரயத்தனம் செய்து, பின்னர் தன் முயற்சியை கைவிட்டது போல் அந்த மனிதனுக்கு தோன்றியது. அவன் அந்த பட்டாம்பூச்சிக்கு உதவ முடிவெடுத்தான். ஒரு கத்தரிக்கோலை எடுத்து வந்து, மீதமுள்ள குக்கூனை துண்டித்தான். சிறிது நேரத்தில் வண்ணத்துப்பூச்சி அந்த ஓடிலிருந்து எளிதாக வெளிப்பட்டது. ஆனால் அது வீங்கிய உடலுடனும், சிறிய, சுருங்கிய இறக்கைகளுடனும் இருந்தது.

எந்த நேரத்திலும், இறக்கைகள் பெரிதாக விரிவடைந்து உடலைத் தாங்கும் மற்றும் வீங்கி இருந்த உடலும் காலப்போக்கில் சுருங்கிவிடும் என்று எதிர்பார்த்து அந்த மனிதன் காத்திருந்தான்.

இரண்டுமே நடக்கவில்லை! உண்மையில், அந்த பட்டாம்பூச்சி தனது வாழ்நாள் முழுவதும் வீங்கிய உடலுடனும், சுருங்கிய இறக்கைகளுடனும் ஊர்ந்து சென்றது. அதனால் ஒருபோதும் பறக்க இயலவில்லை.

தன் அவசர புத்தியாலும் காருண்யத்தினாலும் பட்டாம்பூச்சிக்கு உதவிய அந்த மனிதனுக்கு, ஒன்று புரிபட வில்லை. பட்டாம்பூச்சியின் சிறிய வரையறுக்கப்பட்ட குக்கூன் ஓடும், அதில் ஏற்பட்ட துவாரத்தினூடாக அந்த வண்ணத்துப்பூச்சி வருவதற்குத் தேவையான போராட்டமும், அதன் உடலிலிருந்து ஒருவித திரவத்தை அதன் இறக்கைகளுக்குள் புகுத்தும். இதுவே கூட்டில் இருந்து சுதந்திரம் அடைந்தவுடன் அந்த வண்ணத்துப்பூச்சி பறப்பதற்கு தயார் நிலைக்கு கொண்டுவர இயற்கையின் வழியாகும்.

சில சமயங்களில் போராட்டங்களே நம் வாழ்க்கைக்கு தேவையான ஒன்றாக இருக்கும். எந்த தடையும் இல்லாமல் நம் வாழ்க்கையை கடந்து செல்ல இயற்கை அனுமதித்தால், அது நம்மை முடமாக்கிவிடும். நாமமும் முழு வலிமையுடன் / உறுதியுடன் முயற்சிக்க மாட்டோம். மேலும் நம்மால் நம் “சிறகை விரித்து பறக்க” முடியாமலே போகக் கூடும்.

நாம் உயரமாக பறக்க விரும்பினால், நமது இலக்குகள் உயர்ந்ததாக இருந்தால், நாம் கண்டிப்பாக போராட வேண்டும். மேலும் உயர்ந்த இலட்சியங்கள் இல்லாத வாழ்க்கை, வாழத் தகுதியற்றது. வெள்ளித் தட்டுடன் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை ஒரு மகிழ்ச்சியான சவாரியாக இருக்கலாம். ஆனால் ஒரு ரோலர் கோஸ்டர் சவாரிக்குப் பிறகு வெற்றியை சுவைத்தவர்களுக்கு, அதன் இனிப்பு கூடுதலாக தோன்றும். இதை அனுபவித்தவர்கள் அதனை உறுதி செய்வார்கள்.

பட்டாம்பூச்சியின் உடலில் இருக்கும் திரவம் அதனை கூட்டை விட்டு வெளியே வருவதற்கு உதவுவது போல, போராட்டங்களிலிருந்து வெளியே வருவதற்கு நமக்கும் இயற்கை ஒரு பொறிமுறையை வழங்கியுள்ளது. அதை எப்படி, எங்கு தேடுவது என்ற சந்தேகமா? மன்னிக்கவும், “பிழையறிதலும் தீர்வுகளும்” என்ற தலைப்புடன் வாழ்க்கைக்கான வழிமுறை கையேடு எதுவும் இவ்வுலகில் இல்லை. இது இயற்கை நமக்கு இயல்பாக உள்ளமைத்த பொறிமுறையாகும். இந்த பொறிமுறையானது போராடுவதற்கான வழிமுறையாகும். நம் ஒவ்வொருவரிடமும் இந்த மனவலிமை பல்வேறு சதவிகிதங்களில் உள்ளது. சிலர் இடைவிடாமல் போராட்டங்களை எதிர்கொண்டு முயற்சிப்பதற்கும், சிலர் பாதி வழியில் கைவிடுவதற்கும் இதுவே காரணம். பல தற்கொலைகள், மனவலிமை இல்லாததால் நடக்கின்றன.

ஆம், இப்போது நான் தெளிவடைந்து விட்டேன். நான் தவறாக எண்ணியிருக்கவில்லை. வாழ்க்கை எவருக்கும் இன்னல்களை அளிப்பது இல்லை. நம் நலனை, நாம் மேலும் உயர்ந்து பறக்க வேண்டும் என்றே இயற்கை விரும்புகிறது. இதுவும் ஒரு கருணை தான்.

நீதி:

மகத்தான மனிதர்களின் வாழ்க்கை புத்தகத்தை திருப்பி பார்த்தோமானால், ஏதோ ஒரு கட்டத்தில் – அவர்கள் உச்சத்தை எட்டுவதற்கு சில போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்ததை நாம் அறிந்து கொள்ளலாம். வாழ்க்கையில் அசாதாரணமான ஒன்றைப் பெறுவது எளிதல்ல. நம் முன் பளபளவென ஜொலிக்கும் ஆபரணம், அவ்வித பிரகாசத்தை இறுதியாக பெறவதற்குமுன், தீயினாலும் சுத்தியலினாலும் நிறைய பதப்பட வேண்டியிருக்கும். நம்மை வசீகரிக்கின்ற வைரம் அந்த மினுமினுப்பை பெற, பல கூரிய வெட்டுகளை சந்தித்து, பட்டைத் தீட்டப்பட்ட வேண்டியிருக்கும்.

போராட்டம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி; அதில் நாம் வெற்றி பெற்றால் – சிறப்பு; இல்லையேல் குறைந்தபட்சம் நம்மால் இயன்ற அளவு முயற்சித்தோம் என்ற மனநிறைவு கொள்ளலாமே.

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE