நீதி – உண்மை
உபநீதி – ஞானம், திடநம்பிக்கை
ஒரு புத்த மடத்தின் நிர்வாகத்தை, மகா குரு ஒருவரும், பாதுகாவலரும் பகிர்ந்து கொண்டனர்.
ஒரு நாள், பாதுகாவலர் இறந்து விட்டதால் வேறு ஒருவரை கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. தன்னுடன் வேலை செய்வதற்காக, பொருத்தமானவர் ஒருவரை தேர்ந்தெடுக்க, மகா குரு அனைத்து சீடர்களையும் அழைத்தார்.
மகா குரு “உங்கள் அனைவருக்கும் ஒரு பிரச்சனையை கொடுக்கப் போகிறேன். அந்த பிரச்சனைக்கு முதலில் யார் தீர்வு காண்கின்றார்களோ, அவரை மடத்தின் புதிய பாதுகாவலராக நியமிப்பேன்” என்று கூறினார்.
இந்த சுருக்கமான பேச்சு முடிந்ததும், மகா குரு அறையின் நடுவில் ஒரு முக்காலியை போட்டார். அதற்கு மேல், அவர் அழகான சிவப்பு ரோஜாவை, ஒரு விலை மதிப்பற்ற பீங்கான் குவளைக்குள் வைத்தார்.
மகா குரு “இது தான் பிரச்சனை” என்றார்.
சீடர்கள் அவர்கள் முன் இருந்ததை குழப்பத்துடன் பார்த்தனர். பீங்கான் குவளையின் மேல் அரிதான, மதிநுட்பமான வடிவமைப்புகள் இருந்தன; அதற்குள் அழகான மலர் இருந்தது. இது எதை குறிக்கின்றது? என்ன செய்ய வேண்டும்? புரிந்து கொள்ள முடியாத இந்த புதிரின் அர்த்தம் என்ன?
சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு சீடன் எழுந்து நின்று, மகா குருவையும், மற்ற சீடர்களையும் பார்த்தான். பிறகு, உறுதியான மனப்பான்மையுடன் குவளையை கீழே எறிந்தான்; அது உடைந்து சிதறியது.
மகா குரு “நீ தான் புதிய பாதுகாவலர்” என்றார்.
அந்த சீடன் திரும்பி வந்து “நான் தெளிவாக பிரச்சனையை புரிந்து கொண்டு, அதற்குத் தீர்வு வேண்டும் என எண்ணினேன். எவ்விதமான பிரச்சனையாக இருந்தாலும் சரி, அதை அகற்ற வேண்டும். அதனால் பீங்கான் குவளையை உடைத்தேன்” என்று விவரமாகக் கூறினான்.
நீதி:
ஒரு பிரச்சனை பிரச்சனை தான். அது அரிதான பீங்கான் குவளையோ, அர்த்தமில்லாத உறவு முறையோ, ஒரு செயல்முறையை தடுத்து நிறுத்துவதோ…..
பிரச்சனையை சமாளிக்க ஒரே வழி – நேரடியாக அதை தீர்ப்பது. பிரச்சனையை விட்டு தூரம் விலகினால், தீர்விலிருந்து வெகு தூரம் செல்வதாகும். ஒரு பிரச்சனையிலிருந்து தப்பித்துக் கொள்ள நாம் அதை நேரடியாக எதிர்கொள்ள வேண்டும். நாம் விவேகமுள்ள மனப்பான்மையுடன், சாந்தமாக பிரச்சனையைக் கையாளுவது நன்மை பயக்கும்; ஏனெனில் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு இருக்கிறது.
பிரச்சனைகள் தவிர்க்க முடியாதவை
வேதனைப்படுதல் நம்முடைய விருப்பம்
பிரச்சனைகளுக்கு தீர்வுகள் இருக்கின்றன
மொழி பெயர்ப்பு:
சரஸ்வதி, ரஞ்சனி
SOURCE: SSSIE