நீதி: அன்பு / உண்மை
உபநீதி: அக்கறை / இரக்கம்
மிச்சிகனில் (MICHIGAN) உள்ள தனது வீட்டு தேவாலயத்திற்குச் சென்ற போது, சமயப்பரப்பாளர் ஒருவர் பிரசங்கத்தில் சொன்ன உண்மைக் கதை இது.
ஒரு சமயப்பரப்பாளர் , ஆப்பிரிக்காவை சென்றடைந்த போது, இரண்டு ஆண்கள் சண்டையிடுவதைக் கவனித்தார். அவர்களில் ஒருவர் பலத்த காயமடைந்தார். அவர் காயங்களுக்கு சிகிச்சை அளித்தார்; அதே நேரத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி அவரிடம் பேசினார். பின்னர் அவர் இரண்டு நாட்கள் பயணம் செய்தார். ஒரு இரவு காட்டுக்குள் தங்கி, அசம்பாவிதம் இல்லாமல் வீட்டிற்கு வந்தார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர் தனது பயணத்தை மீண்டும் தொடங்கினார். ஊருக்கு வந்ததும், அவர் சிகிச்சை அளித்த இளைஞன் அவரை அணுகினார்.
அந்த இளைஞன் அவரிடம், “நீங்கள் பணம் மற்றும் மருந்துகளை எடுத்துச் சென்றது தெரிந்து, நானும் சில நண்பர்களும் உங்களைப் பின்தொடர்ந்து காட்டுக்குள் வந்தோம். நீங்கள் ஒரு இரவு இங்கு தங்குவீர்கள் என்று தெரிந்து கொண்டோம். நாங்கள் உங்களைக் கொன்று உங்கள் பணத்தையும் மருந்துப் பொருட்களையும் கொண்டு செல்ல திட்டமிட்டோம். ஆனால், நாங்கள் உங்கள் முகாமுக்குள் நுழைய முயன்ற போது, 26 ஆயுதமேந்திய காவலர்களால் உங்கள் முகாம் சூழப்பட்டிருந்தது.
இதைக் கேட்ட சமயப்பரப்பாளர் சிரித்துவிட்டு, அந்த காட்டு முகாமில் தான் மட்டும் தனியாக இருந்ததாகக் கூறினார். ஆனால் அந்த இளைஞன், “இல்லை ஐயா, நான் மட்டும் காவலாளிகளைப் பார்க்கவில்லை, என் ஐந்து நண்பர்களும் அவர்களைப் பார்த்தார்கள். அந்த காவலர்களைப் பார்த்து பயந்து உங்களை விட்டு நாங்கள் வெளியேறினோம்” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினான்.
பிரசங்கத்தின் இந்த கட்டத்தில், சபையில் இருந்தவர்களில் ஒருவன் சமயப்பரப்பாளரை குறுக்கிட்டு, இது நடந்த சரியான நாளை சொல்ல முடியுமா என்று கேட்டான். சமயப்பரப்பாளர் சபைக்குத் தேதியைக் கூறினார். குறுக்கிட்டவன் அவரிடம் இந்தக் கதையைச் சொன்னான்:
அவன், “ஆப்பிரிக்காவில் சம்பவம் நடந்த அன்றிரவு, இங்கே காலை நேரம். நான் கோல்ஃப் விளையாடத் தயாராகிக் கொண்டிருந்தேன். உங்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்ற ஆவலை உணர்ந்தபோது நான் விளையாட இருந்தேன். உண்மையில், கர்த்தருடைய வற்புறுத்தல் மிகவும் வலுவாக இருந்தது. நான் உங்களுக்காக ஜெபிக்க இந்த தேவாலயத்தில் உள்ள மனிதர்களை இங்கே சரணாலயத்தில் என்னுடன் சந்திக்க அழைத்தேன். அன்று என்னைச் சந்தித்த ஆண்கள் அனைவரும் எழுந்து நிற்க வேண்டுகிறேன்” என்றான்.
அன்று ஜெபிக்க ஒன்றாகக் கூடியிருந்த மனிதர்கள் எழுந்து நின்றனர். சமயப்பரப்பாளர் அவர்கள் யார் என்பதைப் பற்றி கவலைப்படவில்லை – அவர் எத்தனை மனிதர்களைப் பார்த்தார் என்று எண்ணுவதில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார். 26 மனிதர்கள் இருந்தனர்.
நீங்கள் எப்போதாவது ஒருவருக்காக ஜெபிக்க வேண்டும் என்ற ஆசையை உணர்ந்திருக்கிறீர்களா? நான் அவர்களுக்காக பின்னர் பிரார்த்தனை செய்கிறேன்? என்று சொல்லி ஒரு பட்டியலில் வைத்துள்ளீர்களா?
பிரார்த்தனை செய்ய தூண்டுதல் ஏற்பட்டால் உடனே செய்யுங்கள்.
நீதி:
மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்வது என்பது நாம் அவர்களுக்காக அக்கறை காட்டுவதாகும். நாம் மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் போது, அவர்களின் சுமைகளில் பங்கு கொள்கிறோம். “பிரார்த்தனை என்பது விஷயங்களை வெளிப்புறமாக மாற்றுவது அல்ல, ஆனால் ஒரு நபரின் உள் இயல்பில் மாற்றம் செய்யும் அற்புத நிகழ்வாகும்.” மற்றவர்களுக்காக நாம் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் போது, அவர்களை குணப்படுத்தவோ அல்லது கடினமான நேரங்களில் வலிமையை கொடுக்கவோ கடவுளிடம் மன்றாடுகிறோம். நாமும் மாற்றத்திற்காக நம் இதயங்களைத் திறக்கிறோம். மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் போது, அவர்களின் இதயங்களை மாற்றுவதற்கும், அவர்களின் சூழ்நிலைகளில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும், வல்லவராகிய இறைவனுடன் இணைகிறோம். அதே நேரத்தில், அது நம் மனதையும் திருத்துகிறது.
பிரார்த்தனையின் சக்தியை விளக்க முடியாது; அதை அனுபவிக்க மட்டுமே முடியும்.
மொழி பெயர்ப்பு:
சங்கீதா ராஜேஷ், சரஸ்வதி, ரஞ்சனி
SOURCE: SSSIE