நீதி: நன்னடத்தை / உண்மை
உபநீதி – பொறுமை
ஒரு பெண், தனது மூன்று வயது சிறுமியுடன் பல்பொருள் அங்காடியில் இருப்பதை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார். இருவரும் பிஸ்கட் இருக்கும் பிரிவை தாண்டி சென்றனர். அப்பொழுது அந்த பெண் குழந்தை சிணுங்கி அழத் தொடங்கினாள். அதற்கு தாய் மெதுவாக, “ப்ரியா, நாம் வேலையை சற்று நேரத்தில் முடித்துக் கொண்டு வீடு திரும்பி விடலாம், அமைதியாக இரு, வருத்தம் வேண்டாம்” என்று கூறினாள்.
அந்த மனிதர் தொடர்ந்து அவர்களுடன் அங்காடியில் நடந்து கொண்டே நிகழ்வுகளை பார்த்துக் கொண்டிருந்தார். தாய் தன் சிறுமியுடன் மிட்டாய் இருக்கும் பிரிவை கடந்து சென்றார். அந்தக் குழந்தை தனக்கு மிட்டாய் வேண்டும் என்று மறுபடியும் அழத் தொடங்கினாள். அதற்கு தாய், “ப்ரியா, அங்காடியை கடந்து செல்வதற்கு இன்னும் இரண்டே பிரிவுகள் மட்டுமே உள்ளன. நாம் சீக்கரம் சென்றுவிடலாம்” என்று கூறினாள்.
இப்பொழுது அந்தத் தாய் சிறுமியுடன் பணம் கட்டும் பிரிவில் நின்று கொண்டிருந்தார். அங்கு வைத்துள்ள மற்ற தின் பண்டங்களைப் பார்த்து, தனக்கு எதுவும் கிடைக்காது என்பதை அறிந்து, குழந்தை அழுதாள். அதற்கு தாய், “ப்ரியா இப்பொழுது ஐந்து நிமிடங்களில் பில்லிங் முடிந்து விடும், பின்பு வீட்டிற்கு சென்று உறங்கலாம்” என்று கூறினாள். இதையும் அந்த மனிதர் கவனித்துக் கொண்டிருந்தார்.
இவ்வனைத்தையும் கவனித்த அந்த மனிதர் தொடர்ந்து, பின் சென்று அவளிடம் , “பெண்ணே, நீங்கள் சிறுமியிடம் இவ்வளவு பொறுமையாக நடந்து கொள்வதை கண்டு எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது”. உங்களை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை என்று கூறினார்.
அதற்கு தாய், “என் மகளின் பெயர் தான்யா, நான் தான் ப்ரியா” என்றாள்.
பொறுமை ஒரு நல்லொழுக்கம் என்பார்கள். ஆனால், பிடிவாதமாக இருப்பவர்களிடமும், ப்ரியா சந்தித்தது போன்ற சில சோதனைச் சூழ்நிலைகளிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது பாராட்டுக்குரியது. இங்கே ஒரு நல்ல செய்தியும், ஒரு கெட்ட செய்தியும் உள்ளன . கெட்ட செய்தி என்னவென்றால், காரணத்திற்கு அப்பாற்பட்டு ஒருவர் அவதிக்கு உள்ளாகலாம். ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், இந்த நல்லொழுக்கத்தைப் பயன்படுத்துவது சிக்கலானது அல்ல. உண்மையில் அது மிகவும் எளிதானது.
இதை நாம் ஆராய்ந்தால், பொறுமையின்மை, நம் விருப்பங்கள் உடனடியாக நிறைவேற வேண்டும் என்ற உணர்வால் எழுகிறது என்பது புரியும். நாம் எதற்காகவும் காத்திருக்கும் மனநிலையில் இல்லை. எல்லாம் உடனடியாக நிறைவேற வேண்டும் என்று நினைக்கிறோம்.
நாம் மருத்துவரிடம் செல்கிறோம். மருத்துவர் சில சமயங்களில் தாமதமாக வந்து நம்மை காத்திருக்க வைக்கிறார். பொறுமையை இழக்கிறோம். மருத்துவர் “இப்போது” வர வேண்டும் என்று நினைக்கிறோம். காலையில் வேலைக்குச் செல்லும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொறுமையை இழக்கிறோம். உடனடியாக அலுவலகத்தை அடைய விரும்புகிறோம். மாலையில் வீடு திரும்பும்போதும் அதே போக்குவரத்து நெரிசல். கதை மீண்டும் தொடர்கிறது. “இப்போது” வீட்டை அடைய விரும்புகிறோம். விமானங்கள் தாமதமாக புறப்படும் – விமானம் “இப்போது” புறப்பட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.
அந்த “இப்போது” தான் நம் மனதில் அழிவை உருவாக்குகிறது. அந்த “இப்போது” என்பதை மனதில் இருந்து அழித்துவிட்டு வேறு வழியைப் பார்ப்பதே வாழ்க்கையின் ரகசியம். மனதை ஏமாற்றுவதற்கான சிறந்த வழி, சூழ்நிலையை அனுபவிக்கத் தொடங்குவதுதான். நாம் மருத்துவருக்காகக் காத்திருக்கும் நேரத்தில், வீட்டில் படிக்க நேரம் கிடைக்காமல் இருந்த புத்தகத்தைப் படிக்கலாம் அல்லது “சுடோகு” மற்றும் குறுக்கெழுத்துக்களைத் தீர்ப்பதற்கு நேரத்தைப் பயன்படுத்தலாம் . நாம் அனுபவிக்கும் சிறந்த நேரம் இது. அந்த ஜன நெரிசல் நகரும் வரை சில நல்ல இசையைக் கேட்டு மகிழலாம் அல்லது அந்த எஃப்.எம்.மில் ஆர்.ஜே அடிக்கும் நகைச்சுவைகளை ரசிக்கலாம். இந்த ஆர்.ஜேகளுக்கு எந்த ஒரு சூழ்நிலையையும் எளிதாக்கும் உண்மையான திறமை இருக்கிறது. அந்த விமானம் புறப்படுவதற்காகக் காத்திருக்கும் போது, உங்களைச் சுற்றி இருக்கும் எண்ணற்ற மனிதர்களை பார்த்துக் கொண்டிருப்பதன் மூலம் நேரத்தை செலவிடலாம் ……. வாழ்க்கை சுவாரஸ்யமானது! அதை மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
ஜினா வெஹ்மனின் அழகான நிஜ வாழ்க்கைக் கதையை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
கடந்த இலையுதிர்காலத்தில் நான் என் ஜன்னலுக்கு வெளியே பறவைகளுக்கு உணவு அளிப்பதற்காக ஒரு பறவை தீவனத்தை வைத்திருந்தேன். காட்டுப் பறவைகளைப் பற்றி எனக்கு அனுபவம் இல்லாததால், அந்தப் பறவைத் தீவனத்தை நான் வெளியே தொங்கவிட்டவுடன், பல அழகான பறவைகள் வரும் என்று கருதினேன். நாட்கள், வாரங்கள் மற்றும் மாதங்கள் சென்றன; பறவைகள் வரவில்லை. என்ன செய்வது என்று நான் பலரிடம் கேட்டேன். நான் என்ன தவறு செய்து கொண்டிருந்தேன்? “ஒன்றுமில்லை” என்று அவர்களில் பெரும்பாலோர் பதிலளித்தனர். “சற்று காத்திரு” என்றனர். எனவே நான் இந்த பறவைகளை ஈர்ப்பதற்காக முடிந்த அனைத்தையும் முயற்சித்து காத்திருந்தேன்.
நான் டெக்கை சுத்தம் செய்தேன், உணவை மாற்றினேன், தீவனத்தை சுத்தம் செய்தேன், பூனையையும் வெளியே அனுப்பினேன். ஆனால் எதுவும் பயன் அளிக்கவில்லை. அதனால்… நான் பொறுமையோடும் நம்பிக்கையோடும் காத்திருந்தேன்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஒரு சனிக்கிழமை மதியம், நான் உறைந்தேன்! பறவை தீவனத்தில் என் கண்களுக்கு ஒரு அழகான காட்சி , என் வாழ்க்கையில் நான் பார்த்த மிக அழகான பறவை! திடீரென்று எல்லா இடங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான பறவைகள் தோன்றின!
இந்த சிறிய உயிரினத்திலிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம் எவ்வளவு அழகானது. “பொறுமை மற்றும் நம்பிக்கை” வாழ்க்கையில் அழகான விஷயங்களை ஈர்க்கும். நான் உண்மையில் பொறுமையாக மற்றும் நம்பிக்கையுடன் இதயத்தில் உள்ள கேள்விகளின் பதிலுக்கு காத்திருக்கிறேன் என்பதை உணரவில்லை.
வாழ்க்கையில் அவசரப்பட முடியாத சில விஷயங்கள் இருக்கின்றன என்பதே இங்கு வாழ்க்கை நமக்குக் கற்றுத் தரும் பாடம். காலம் கனியும் போது அவை நடக்கும். பொறுமையாக காத்திருக்க வேண்டும். சரியான நேரத்தில் பழுத்த பழம் நம் கைகளில் விழும்போது, அது சுவையாக இருக்கிறது. அந்த உணர்வுக்கு வேறெதுவும் ஈடாகாது. பேரின்ப உணர்வு.
“வாழ்க்கையில் வேகமாக ஓடாதீர்கள். ஒவ்வொரு அடியிலும் ரசிக்க வேண்டிய பயணம் தான் வாழ்க்கை” என்றார் ஒருவர்.
நீதி:
பொறுமை என்பது நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு நற்பண்பு. நாம் ஆராய்ந்தால், பொறுமையின்மை நம் விருப்பங்கள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற உணர்வால் எழுகிறது என்பது புரியும். பொறுமையை வளர்ப்பதற்கான சிறந்த வழி “ஏற்றுக்கொள்ளுதல்”. நாம் சூழ்நிலையை ஏற்றுக் கொள்ளும் போது, அது ஒரு அமைதியான மனதை உருவாக்குகிறது. பொறுமையுடன் சூழ்நிலையை அணுகுவது நாம் வாழும் சுற்றுச் சூழலிலும் அமைதியை ஏற்படுத்தும்.
மொழி பெயர்ப்பு:
லக்ஷ்மி, சரஸ்வதி, ரஞ்சனி
SOURCE: SSSIE