நீதி – அன்பு
உபநீதி – மனிதாபிமானம், கருணை
ஊனமுற்ற குழந்தைகளுக்கு கல்வி புகட்டிக் கொண்டிருக்கும் ஒரு அமெரிக்கப் பள்ளியின் நிதி திரட்டும் பிரதான விருந்தில், ஒரு மாணவரின் தந்தை அளித்த சொற்பொழிவு மறக்க முடியாததாக இருந்தது. பள்ளியையும், ஆழ்ந்த ஈடுபாட்டுடன் அங்கு பணி புரிந்த பணியாளர்களையும் மிக உயர்வாகப் புகழ்ந்த பிறகு, அவர் ஒரு கேள்வியைக் கேட்டார் –
“வெளிப்புறத்திலிருந்து குறுக்கீடுகள் ஒன்றுமே இல்லையென்றால், இயற்கையின் செயல்கள் யாவும் சிறப்பாக இருக்கும். அப்படியிருந்தும், என் மகனுக்கு மற்ற குழந்தைகளைப் போல கற்றுக் கொள்ளவும் முடியவில்லை; புரிந்து கொள்ளவும் இயலவில்லை. என் மகனைப் பொறுத்த வரை இயற்கை என்ன பதில் கூறும்?” இக்கேள்வியைக் கேட்ட மக்கள் திகைத்து நின்றனர்.
தொடர்ந்து தந்தை, “உடல் மற்றும் மனக் குறைகளால் பாதிக்கப்பட்ட என் மகன் ஷ்ரேய்க்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும்; மற்றவர்கள் அவனை நடத்தும் விதத்திலிருந்து, அவர்களின் இயல்பான மனித குணத்தை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு நமக்கு கிடைக்கிறது” என்று கூறினார். பிறகு கீழ்வரும் சம்பவத்தை எடுத்துச் சொன்னார்.
ஷ்ரேய்யும் அவன் தந்தையும் சில நாட்களுக்கு முன்பு ஒரு பூங்கா வழியாகச் சென்று கொண்டிருந்தனர். அங்கு ஷ்ரேய்க்கு தெரிந்த சில குழந்தைகள் அடிப்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்தனர். ஷ்ரேய், “அவர்கள் என்னை விளையாட அனுமதிப்பார்களா?” என்று தந்தையிடம் கேட்டான். ஷ்ரேய் போன்ற ஒரு குழந்தை தங்களின் குழுவில் இருப்பதை எவரும் விரும்ப மாட்டார்கள் எனத் தந்தைக்கு தெரிந்தது. ஷ்ரேய் போன்ற ஊனமுற்றோர்களுக்கு இடையூறுகள் இருந்தும், அவர்களை ஏற்றுக் கொண்டு ஒரு வாய்ப்பு அளித்தால், அவர்களின் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும் என அவர் எண்ணினார்.
எதிர்பார்ப்பு ஒன்றுமே இல்லாமல், மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனிடம் சென்று, ஷ்ரேய்யும் அவர்களுடன் விளையாடலாமா என்று தந்தை கேட்டார். உதவி ஏதேனும் கிடைக்குமா என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்த அச்சிறுவன், “வெல்வதற்கு இன்னும் ஆறு ரன்கள் வேண்டும். நாங்கள் இப்போது எட்டாவது ஆட்டத்தில் இருக்கிறோம். எங்கள் அணியில் அவன் இருக்கலாம். ஒன்பதாவது ஆட்டத்தில் அவனை ஆட்டக்காரராக அனுப்புவதற்கு முயற்சிக்கிறோம்” என்றான்.
அணியின் ஆட்டக்காரர்கள் அமர்ந்திருக்கும் இருப்பிடத்திற்குச் சென்று, ஷ்ரேய் புன்சிரிப்புடன் அணியின் சட்டையை அணிந்துக் கொண்டான். அவன் தந்தையின் கண்களில் நீர்த் துளிகளும், மனதில் ஒரு இதமான உணர்வும் இருந்தது. அங்கு இருந்த எல்லா மாணவர்களும் ஷ்ரேய்யை விளையாட்டில் சேர்த்துக் கொண்டதால் அவன் தந்தையின் பேரின்பத்தை கவனித்தனர். எட்டாவது ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் ஷ்ரேய்யின் குழுவினர் சில ரன்களை எடுத்திருந்தாலும், வெல்வதற்கு இன்னும் மூன்று ரன்கள் வேண்டியிருந்தன. ஒன்பதாவது ஆட்டத்தின் துவக்கத்தில், ஷ்ரேய் கையுறையை அணிந்து கொண்டு விளையாடினான்.
பந்தை அடிப்பதற்கு சந்தர்ப்பம் ஒன்றும் கிடைக்காவிட்டாலும், விளையாட்டில் பங்கெடுத்துக் கொண்டு, அவ்வப்போது தந்தையின் கை அசைவை பார்த்த ஷ்ரேய் பரவசப் பட்டான். ஒன்பதாவது ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் அவன் குழு சிறு புள்ளிகளை எடுத்தனர். தற்சமயம் ஆடிய இரண்டு ஆட்டக்காரர்கள் வெளியேறிய பிறகு, ஷ்ரேய் அடுத்ததாக விளையாட இருந்தான்.
அந்த சமயம், ஷ்ரேய்யிடம் அடிப்பதற்கு சந்தர்ப்பத்தைக் கொடுத்து, விளையாட்டில் வெற்றி பெறாமல் இருந்தால்? வியக்கத்தக்க வகையில், ஷ்ரேய்க்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. “பேட்” ஐ பிடிக்கக் கூட அவனுக்கு தெரியவில்லை; பந்து வருவதை கவனித்து அடிப்பது மற்றொரு சவால்.
ஷ்ரேய் இருந்த அணி, வெல்வதை விட அவனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று தீவிரமாக இருந்தது. அதனால், அவன் விளையாடத் தயாராக இருந்த போது, மற்றொரு அணியின் பந்து வீச்சாளர் சற்று பின் சென்று, எப்படியாவது ஷ்ரேய் பந்து வருவதை கவனித்து விளையாட வேண்டும் என்பதற்காக, பந்தை மெதுவாக வீசினான். ஷ்ரேய்யால், முதல் பந்தை சரியாக விளையாட முடியவில்லை. பந்து வீச்சாளர் மறுபடியும் சற்று பின் சென்று, பந்தை இன்னும் நிதானமாக வீசினான்; ஷ்ரேய் பந்தை மெதுவாக பந்து வீச்சாளரிடமே அடித்தான்.
பந்து வீச்சாளர் அவனிடம் வந்த பந்தை அருகில் இருந்த நபரிடம் வீசி, ஷ்ரேய்யை விளையாட்டை விட்டு சுலபமாக நீக்கியிருக்கலாம். விளையாட்டும் நிறைவு பெற்றிருக்கும்.
அதற்கு பதிலாக, பந்து வீச்சாளர் பந்தை அருகில் இருந்த நபரின் தலைக்கு மேல் வீசி, எவருமே அதை பிடிக்க முடியாத தருணத்தை ஏற்படுத்தினான். பார்வையாளர்கள் எல்லோரும், “ஷ்ரேய், சீக்கிரமாக ஓடு, சீக்கிரமாக ஓடு!” என்று கத்தினர். இத்தனை வருடங்களில் ஷ்ரேய்க்கு இது போல ஒரு நிகழ்வு நடந்ததில்லை; அவன் சற்று பதட்டமாக ஓடினான்.
எல்லோரும், “திரும்பி ஓடி வா, திரும்பி ஓடி வா!” என்று அலறினர். மூச்சை நிறுத்திக் கொண்டு, எப்படியாவது இந்தப் பக்கம் சேர்ந்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் கஷ்டப்பட்டு ஓடினான். அணியின் வலது பக்கத்தில் இருந்த சிறுவனிடம் பந்து இருந்தது. அவன் நினைத்திருந்தால், பந்தை சரியான நபரிடம் வீசியிருக்கலாம்; ஆனால், அவன் சூழ்நிலையை புரிந்து கொண்டு, பந்தை சற்று தூரம் வீசி, ஷ்ரேய் இடத்திற்கு போய் சேரும்படி விளையாடினான். அந்த அணியில் இருந்தவர்களில், அச்சிறுவன் தான் எல்லோரையும் விட இளையவனாக இருந்தான்; ஆனால், அன்றைக்கு விளையாட்டின் “ஹீரோ” என அவனைக் கூறலாம்.
“ஷ்ரேய், ஷ்ரேய் விரைவாக ஓடு” என்று எல்லோரும் அவனை உற்சாகப் படுத்தினர். எதிர் அணியில் இருக்கும் ஒரு நபர் அவன் ஓட வேண்டிய திசையை காண்பித்து, “மூன்றாவது முறையாக மறுபடியும் ஓடு” என்றான். அவன் ஓடிய பிறகு, அங்கு இருக்கும் எல்லா சிறுவர்களும் “கடைசியாக இந்த முறை ஓடி விளையாட்டை நிறைவு செய்யவும்” என்றனர். அவன் ஓடிய பிறகு, இந்த விளையாட்டில் வெற்றி பெற்று அந்த அணிக்கு பெருமையை சேர்த்து விட்டதாக ஊக்குவித்தனர்.
அந்நாள், இரண்டு அணிகளில் இருந்த அனைத்து மாணவர்களும் சாசுவதமான அன்பு மற்றும் மனிதத் தன்மைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தனர். ஷ்ரேய் அதற்குப் பிறகு பல காலம் உயிர் வாழவில்லை; ஆனால் அவன் “ஹீரோ” வாகத் திகழ்ந்து, தந்தையை சந்தோஷப்படுத்தி, தாயார் அவனை அணைத்துக் கொள்ளும் தருணத்தை ஏற்படுத்தினான்.
நீதி:
அன்பும், பரிவும் கலந்த ஒரு செயல், புண்பட்ட மனதிற்கு இதமாக இருக்கும்.
மொழி பெயர்ப்பு:
சரஸ்வதி, ரஞ்சனி