Archive | September 2023

கடவுளின் படைப்பிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள்

நீதி: உண்மை, சகிப்புத் தன்மை

உப நீதி: ஏற்புத் தன்மை, ஒற்றுமை

பாடம் 1 ( முள்ளெலிகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம்)

மிகக் கடுமையான குளிர் காலம்; அதனால், பல மிருகங்கள் இந்த சீதோஷ்ணநிலை தாங்காமல் மாண்டன.

இந்த இக்கட்டான நிலையைப் புரிந்து கொண்டு, சில முள்ளெலிகள் ஒன்றாகக் கூடின;

ஒன்றுக்கு ஒன்று அருகில் இருந்து, வெப்ப நிலையைப் பராமரித்து, தங்களைச் சூடாக வைத்துக் கொண்டன; இவ்வகையில், குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடிந்தது. ஆனால், அதனுடைய முட்கள் குத்திக் கொண்டே இருந்ததால், சற்று பிரச்சனையாக இருந்தது.

சில நாட்களுக்குப் பிறகு, காயம் உண்டானதால், ஒன்றாக இருந்த முள்ளெலிகள் தனித் தனியாக பிரிந்தன. கடுங்குளிரால் தாக்கப்பட்ட முள்ளெலிகள் உறைந்து ஒவ்வொன்றாக உயிர் இழந்தன. அதனால், ஒரு தீவிரமான முடிவு எடுக்க வேண்டிய நிலை வந்தது; முட்கள் குத்தினாலும், ஒன்றாகச் சேர்ந்து தங்களைக் குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம், அல்லது தனியாக உறைந்து மாண்டு போகலாம் என்பது தான் அந்த தீர்வு.

விவேகமுள்ள முள்ளெலிகள் மறுபடியும் ஒன்றாகக் கூடின. அதன் முட்களால் உண்டான சிறு காயங்களைப் புறக்கணித்து, ஒன்றாக இருந்து கிடைத்த நற்பயன்களை எண்ணி நன்றியோடு வாழ்ந்தன. இவ்வகையில், குளிர்காலத்தை சமாளிக்க முடிந்தது.

 பாடம் 2 ( வாத்துகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம்)

குளிர் காலத்தில் வாத்துகள் இடம் விட்டு வேறு இடத்திற்கு செல்லும் போது, “வி” போன்ற

உருவமைப்பில் அவை பறந்து செல்கின்றன. இந்த செயலினால் அவை நமக்கு என்ன

பாடம் கற்றுக் கொடுக்கின்றன என்று நாம் புரிந்து கொள்வதில்லை.

  • தனியாக பறப்பதை விட்டு விட்டு, இந்த “வி உருவமைப்பில்” பறப்பதனால், பறவைகளால் 71 சதவீதம் அதிக தூரம் பறக்க முடிகிறது.

நாம் கற்றுக் கொள்ளும் பாடம்:

இலக்கை மனதில் வைத்துக் கொண்டு, ஒரே திசையில் ஒற்றுமையாக செயற்பட்டால், மற்றவர்களின் ஆதரவு இருப்பதால் நாம் விரைவாக இலக்கை சென்றடைய முடியும்.

  • ஒரு வாத்து அந்த “வி உருவமைப்பை” விட்டு வெளியே விலகிச் சென்றால், எதிர்ப்பு சக்தி குறைந்து, பறப்பதற்கு கடினமாகி விடுகிறது. அதனால் அது விரைவாக அந்த “வி உருவமைக்கு” வந்து விடுகிறது. அதற்கு முன்னே பறக்கும் பறவையிடமிருந்து தூக்கும் சக்தி அனுகூலத்தை பயன்படுத்திக் கொள்கிறது.  

நாம் கற்றுக் கொள்ளும் பாடம்:

நம்மை போல இலக்கை வைத்துக் கொண்டு எவர் செயற்படுகிறார்களோ,

அவர்களுடன் நாமும் இருக்க வேண்டும்.

  • தலைமை வாத்து சோர்ந்து போகும் போது, மற்றொரு வாத்து அந்த தலைமையை ஏற்றுக் கொண்டு உதவி செய்கிறது.

நாம் கற்றுக் கொள்ளும் பாடம்:

சரியாக செயற்பட முடியாமல் இருக்கும் தலைவராக இருப்பதற்கு பதிலாக, அவசியம் இருக்கும் போது, குழுவில் மற்றவர்களிடம் வேலையை ஒப்படைக்க வேண்டும்.

  • வேகத்தை கட்டுப்படுத்தி, முன்னே பறக்கும் வாத்துகளுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில், பின்புறம் பறக்கும் வாத்துகள் சத்தம் கொடுக்கின்றன.

நாம் கற்றுக் கொள்ளும் பாடம்:

நாம் மற்றவர்களுடன் வேலை செய்யும் போது, அவர்களின் தன்னம்பிக்கையை இழக்கச் செய்யாமல், அவர்களை உற்சாகப் படுத்துவோம்.

  • குழுவில் ஒரு வாத்துக்கு உடல் நிலை சரியில்லாமல்  இருந்து, “வி” உருவமைப்பிலிருந்து வெளியே சென்றால், மற்ற இரண்டு வாத்துக்கள் அதன் பின்னாலேயே தொடர்ந்து சென்று அதற்கு உதவி செய்து பாதுகாக்கின்றன. உடல் நிலை சரியாகும் வரையோ அல்லது அது இறக்கும் வரையோ அந்த வாத்துக்கள் அதனுடனேயே இருக்கும். அதற்கு பிறகு தான் அவை பறந்து செல்லும்; அல்லது மற்றொரு “வி உருவமைப்பை” தேடி செல்லும்.

நாம் கற்றுக் கொள்ளும் பாடம்:

பிரச்சனைகள் வரும் போது, நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய வேண்டும்.

நீதி:

ஒற்றுமையே பலம். நாம் எல்லோரும் சமூகத்தில் வாழ்கின்றோம்; ஒவ்வொருவரும் கடவுளின் தலைசிறந்த படைப்பு. அதனால், மனிதர்கள் எப்படி இருக்கிறார்களோ, அப்படியே அவர்களை ஏற்றுக் கொள்ள கற்றுக் கொள்வோம். சுற்றுப்புறச் சூழலில் இருக்கும் நிகழ்வுகளை சரியான கண்ணோட்டத்துடன் ஏற்றுக் கொண்டு, பொறுமை மற்றும் நன்றி உணர்வுடன் இருந்தால், நாம் சந்தோஷமாக இருக்கலாம். எங்கு ஒற்றுமை மற்றும் சந்தோஷம் இருக்கிறதோ, அங்கு உண்மையான மகிழ்ச்சி இருக்கும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

பலூன் விளையாட்டு

நீதி: உண்மை, அன்பு

உபநீதி: பணிவு

நான்காம் வகுப்பு பாடங்கள் நடந்து கொண்டிருந்தது. அப்போது ஆசிரியர் “பலூன் ஸ்டாம்ப்” (balloon stomp) என்ற விளையாட்டை அறிமுகப்படுத்தினார். ஒவ்வொரு குழந்தையின் காலிலும் ஒரு பலூன் கட்டப்பட்டது, மேலும் விளையாட்டின் நோக்கம் ஒருவரின் சொந்த பலூனைப் பாதுகாக்கும் போது மற்ற அனைவரின் பலூன்களையும் உடைக்க வேண்டும். கடைசியாக பலூனை வைத்திருப்பவர் வெற்றி பெறுவார்.

நான்காம் வகுப்பு மாணவர்கள் விறுவிறுப்புடன் விளையாட்டில் நுழைந்தனர். பலூன்கள் இடைவிடாமல் குறிவைத்து உடைக்கப்பட்டன.

ஒரே ஒரு பலூனை மட்டும் உடைக்காமல் விடுத்து, சில நொடிகளில் மற்ற அனைத்து பலூன்களும் உடைக்கப்பட்டன. அதன் உரிமையாளர், நிச்சயமாக, வகுப்பில் மிகவும் பிடிக்காத குழந்தையாகத் தான் இருக்க வேண்டும்.

பலூன் ஸ்டாம்ப் போன்ற விளையாட்டில் உண்மையில் வெற்றி பெறுவது கடினம். உங்கள் பணியை முடிக்க, நீங்கள் அழுத்தமாகவும், முரட்டுத்தனமாகவும், தாக்குதலுடனும் இருக்க வேண்டும்.

அதே விளையாட்டு மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

அவர்களுக்கு முதல் வகுப்பில் கொடுத்த அதே விளக்கம் கொடுக்கப்பட்டது; மேலும் விளையாட்டு தொடங்கியது.

ஆனால் ஆட்டம் மிகவும் வித்தியாசமாக நடந்தது. கற்றல் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு அவற்றைப் புரிந்து கொள்வதற்கு அறிவுறுத்தல்கள் மிக விரைவாக வழங்கப்பட்டிருக்கலாம்.

பலூன்கள் உடைக்க வேண்டும் என்பது ஒரு யோசனை. எனவே, பலூன்கள் தான் எதிரிகளாக பார்க்கப்பட்டன, மற்றவர்கள் அல்ல.

ஒருவருக்கொருவர் சண்டையிடுவதற்குப் பதிலாக, அவர்கள் ஒருவருக்கொருவர் பலூன்களை உடைக்க உதவத் தொடங்கினர். ஒரு சிறுமி மண்டியிட்டு, தனது பலூனைக் கவனமாகப் பிடித்துக் கொண்டாள். ஒரு சிறுவன் அதை உடைத்தான். பிறகு மண்டியிட்டு தன் பலூனை அவளுக்காகப் பிடித்தான். எல்லா பலூன்களும் அழிக்கப்படும் வரை பல நிமிடங்கள் இப்படியே சென்றது, அனைவரும் ஆரவாரம் செய்தனர். அனைவரும் வெற்றி பெற்றனர்.

யார் விளையாட்டை சரியாகப் புரிந்து கொண்டார்கள், யார் விளையாட்டை தவறாகப் புரிந்து கொண்டார்கள்?

நீதி:

நம் உலகில், மற்றொரு நபரின் வெற்றி நம் வெற்றியின் வாய்ப்பைக் குறைப்பதாக நினைக்கிறோம். எப்போதாவது வெற்றி பெரும் நிலையில் நாம் காணப்பட்டால், அதைத் தக்க வைத்துக் கொள்ள போராடுவோம். வாழ்க்கையில், விதிகள் மாறுகின்றன. இறைவனே எப்பொழுதும் முதன்மை வகுக்கிறார். அவருடைய நோக்கங்களுக்குச் சேவை செய்ய நாங்கள் இங்கு இருக்கிறோம், மற்றவர்களை உயர்த்துவதன் மூலமும், நம்மைத் தாழ்த்திக் கொள்வதன் மூலமும் அதை மிகச் சிறப்பாகச் செய்கிறோம். ஒன்றாகச் செல்வதும், மற்றவர்களை வெல்ல வைப்பதும் ஒரு அழகான பண்பு. பிறர் கற்க, தன்னம்பிக்கையுடன் முன்னேற ஊக்குவிப்பதே சிறந்த தலைமை ஆகும்.

இந்த கதையில், மனநலம் குன்றியவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக் கொடுக்கிறார்கள். உண்மையில், நாம் பொறாமை, அகம்பாவம் போன்ற தீமைகளால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறோம்.

மொழி பெயர்ப்பு:

யுகஸ்ரீ, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

சொற்களால் ஒருவரை காயப்படுத்த முடியும் அல்லது குணப்படுத்த முடியும்

ஸத்ய ஸாயி பாபா, மை டியர் ஸ்டுடென்ட்ஸ், பகுதி 5, மார்ச் 9, 1993

நீதி: உண்மை, அமைதி, சரியான நடத்தை

உபநீதி: பணிவு, பொறுமை, ஞானம்

நீங்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பருக்கைகளை உணவாக உட்கொள்கிறீர்கள். நீங்கள் எத்தனை பருக்கைகளை உண்டீர்கள் என்பதை எப்போதாவது கணக்கிட்டுப் பார்த்திருக்கிறீர்களா? எனினும், ஒரு சிறு கல் நீங்கள் உண்ணும் உணவில் இருந்தால், நாள் முழுவதும் நீங்கள் வருத்தத்துடன் இருக்கிறீர்கள். நீங்கள் உண்ட உணவு முழுவதும் கற்களாக இருந்தன என குறை கூறுகிறீர்கள்.

அது போல உங்களுடைய வாழ்க்கையானது நான்கில் மூன்று பங்கு மகிழ்ச்சி நிறைந்ததாகவும் மீதி ஒரு பங்கு துயரம் நிறைந்ததாகவும் இருக்கிறது. ஆனால் நீங்கள் சோகத்திற்கு பலியாகி விடுகிறீர்கள். நீங்கள் மகிழ்ச்சியைக் காட்டிலும் துயரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதையே தேர்ந்தெடுக்கிறீர்கள். இது ஒரு விலங்கு குணம் ஆகும்.( மிருக லட்சணம்).

தவறான பாதையில் செல்வதன் மூலம் தன்னுடைய நற் பெயரை இழந்து விடக்கூடாது என்று நீங்கள் உங்களுடைய நாவிற்கு கற்றுக் கொடுக்க வேண்டும். உங்களுடைய நாவு உங்களை தெய்வீக நிலைக்கு உயர்த்த அல்லது விலங்கை போன்ற கீழான நிலைக்கு தள்ளும் திறன் கொண்டது ஆகும்.

ஒருவர் உங்களுக்கு ஒரு நன்மை செய்கிறார் என்றால் உங்களுடைய நாவு அவரை இறைவன் என்று புகழ்கிறது. ஒருவர் உங்களுக்கு ஒரு கெடுதல் செய்கிறார் என்றால் அவர்களை நாவு விலங்குக்கு சமமாக பேசுகிறது. எப்போதும் இறைவன் நாமத்தையே உச்சரிக்கும் படியும், எவரையும் விமர்சிக்காத படியும் இருக்க நீங்கள் உங்களுடைய நாவிற்கு கற்றுக் கொடுங்கள்.

பயங்கரவாதிகள் என்பவர்கள் துப்பாக்கிகள் மற்றும் கைத் துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் மட்டும் அல்லர். எவர் ஒருவர் தன்னுடைய எண்ணம், சொல், செயல் ஆகியவற்றினால் மற்றவர்களை காயப்படுத்துகிறார்களோ அவரே பயங்கரவாதி ஆவார்.

நீங்கள் முக்கியமாக எண்ணங்கள், சொற்கள் மற்றும் செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒரு எண்ணம் இருக்கும் போது, வார்த்தை தொடரும், பிறகு உடல் செயலில் ஈடுபடும். எண்ணங்கள் வரும் போது, ஒரு போதும் மற்றவர்களுக்கு தீங்கு எண்ணாதீர்கள்.

அடுத்ததாக சொல். ஒருபோதும் கடுமையான சொற்களை பயன் படுத்துதல் கூடாது. உங்களுடைய கடுமையான சொற்களினால் மற்றவர்களை அவமானப்படுத்தவோ அவர்களை ஏமாற்றவோ முயலக்கூடாது. ஒருவரை கத்தியினாலோ அல்லது கைத்துப்பாக்கியினாலோ கொல்லும் போது அவர்கள் உடனே இறந்து விடுகிறார்கள். ஆனால் நீங்கள் ஒருவரை உங்களுடைய சொற்களினால் காயப்படுத்தினால், அது அவனுக்கு அல்லது அவளுக்கு இறக்கும் வரையிலும் வலியைக் கொடுக்கும்.

எல்லா வெளிக் காயங்களுக்கும் மருந்து உண்டு. எனினும் சொற்களினால் விளைவிக்கப் பட்ட காயங்களை குணப்படுத்துவதற்கு மருந்தோ மருத்துவரோ இல்லை.

எனவே சொற்கள் ஏற்படுத்துகின்ற காயங்கள் மிகவும் பயங்கரமானதாக இருக்கும். அவை குணமாவதற்கு நீண்ட நாட்கள் ஆகும். எண்ணம் , சொல், செயல் இவற்றின் மூலம் ஏற்படுகின்ற தீங்குகளை ஆன்மீக வழிகளால் மட்டுமே மாற்ற முடியும்.

நீதி:

நாம் நம்முடைய எண்ணங்களின் மேல் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் எண்ணங்கள் மேலும் சொற்களாக மாறுகின்றன.நம்முடைய செயல்கள் நாம் பேசும் சொற்களை ஏற்றுக் கொள்கின்றன. நாம் நினைப்பதை விட நம் சொற்கள் ஒருவரின் உணர்வுகளை மிகவும் மோசமாக புண்படுத்தும் என்பதால் நாம் பேசுவதற்கு முன் எப்போதும் சிந்திக்க வேண்டும். எனவே நாம் நம்முடைய நாட்களை நேர்மறை எண்ணங்களினால் தொடங்குவோம். அதன் மூலம் நம்முடைய சொற்களையும் செயல்களையும் நேர்மறையாக மாற்றுவோம். இதனால், நம்மை சுற்றி அமைதி மற்றும் மகிழ்ச்சி உண்டாகும்.

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு

தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.

மொழி பெயர்ப்பு:

வெங்கட்ராம், சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

கடவுள் புகைப்படக்காரர்

நீதி: உண்மை, அன்பு

உபநீதி: நம்பிக்கை

ஒரு சிறுமி தினமும் பள்ளிக்கு நடந்து சென்று வந்தாள். அன்று காலை வானிலை கேள்விக்குறியாக இருந்த போதிலும், மேகமூட்டமாக இருந்த போதிலும், அவள் ஆரம்பப் பள்ளிக்கு செல்லத் தொடங்கினாள். மதிய வேளையில், இடி மின்னலுடன் காற்று வீசியது.

புயலால் தன் மகள் பயந்துவிடுவாளோ அல்லது காயமடைவாளோ என்று கவலைப்பட்ட குழந்தையின் தாய், தன் காரில் ஏறி, பள்ளிக்கு செல்லும் வழியில் சென்றார்.

அவள் அவ்வழியில் செல்லும் போது, அவளுடைய சிறிய மகள் மகிழ்ச்சியுடன் நடப்பதைக் கண்டாள்; ஆனால் ஒவ்வொரு மின்னலின் போதும் அந்த குழந்தை நின்று, நிமிர்ந்து பார்த்து, சிரித்தாள்.

காரை நிறுத்திய தாய், குழந்தையை தன்னுடன் ஏறுமாறு அழைத்தாள். அவர்கள் பள்ளியை நோக்கிச் செல்லும் போது, அந்த குழந்தை ஒவ்வொரு மின்னலையும் நோக்கி மறுபடியும் புன்னகைத்தாள்.

தாய் தன் குழந்தையை நோக்கி, “நீ என்ன செய்கிறாய்?” என்று கேட்டாள்.

அதற்கு குழந்தை, “கடவுள் என் புகைப்படத்தை எடுப்பதால், நான் புன்னகை புரிகிறேன்” என்றாள்.

நீதி:

நம் அன்றாட வாழ்வில் உள்ள சூழ்நிலைகளை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு ஏற்றுக் கொண்டால், வாழ்க்கை எளிதாகவும், மகிழ்ச்சியாகவும் மாறும். நம்பிக்கை என்பது இன்றைய சூழ்நிலை எப்படி மாறினாலும், நாளை எப்பொழுதும் வாய்ப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்து கொள்வதற்கான ஒரு வழிமுறையாகும். வாழ்க்கை எப்போதுமே நீங்கள் விரும்பும் விதத்தில் இருக்காது என்பதை ஏற்றுக் கொள்வதில் இது தொடங்குகிறது, எனவே நீங்கள் முரண்பாடுகளை உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு, முன்னேறிச் செல்ல வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

யுகஸ்ரீ, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

முயற்சி திருவினையாக்கும்

நீதி: உண்மை, நகைச்சுவை

உபநீதி: விடாமுயற்சி, வெற்றி

பல நேரங்களில், கணினி தொழில்நுட்பங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் ஸ்மார்ட் ஃபோன்கள் போன்றவற்றில் நாம் வலுவான கவனத்தை செலுத்துகிறோம், கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றின் மதிப்பை மறந்து விடுகிறோம். முடிவு?

வேலையில்லாத ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல ஐ.டி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் காவலாளி பதவிக்கு விண்ணப்பித்தார்.

அவர், மனித வளத் துறையால் நேர்காணல் செய்யப்பட்டார், மற்றும் தேவையான அனைத்து தேர்விலும் வெற்றி பெற்றார்.

பின்னர், வேலை வாய்ப்பு தொகுப்பை அனுப்புவதற்காக,  அவரிடம் ஒரு மின்னஞ்சல் முகவரி கேட்கப்பட்டது.

அந்த நபர் பீதியடைந்து, தன்னிடம் மின்னஞ்சல் முகவரி இல்லை என்று மனித வளத் துறையினரிடம் ஒப்புக் கொண்டார்.

மேலாளர் அவரிடம் மின்னஞ்சல் முகவரி இல்லையென்றால், அவரால் அந்த நிறுவனத்தில் வேலை செய்ய முடியாது என்று கூறினார்.

அந்த நபர் மனமுடைந்து, நேர்காணலை விட்டு வெளியேறினார்.

அவரிடம் இறுதியாக இருந்த சில காசுகளுடன் அவர் ஒரு பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து ஸ்ட்ராபெர்ரிகளை வாங்கினார்.

பின்னர் அவர் ஸ்ட்ராபெர்ரிகளை வீடு வீடாகச் சென்று விற்று, இரண்டு மணி நேரத்தில் தனது பணத்தை இரட்டிப்பாக்கினார்.

அவர் மீண்டும் முன்பை போலவே செய்தார். அவரது பாக்கெட்டில் சற்று அதிக காசுகளுடன் அந்த நாளை முடித்தார்.

அவரது சிறிய வெற்றியால் உற்சாகமடைந்த அவர், அடுத்த நாள் முன்னதாகவே எழுந்து ஸ்ட்ராபெர்ரிகளை வாங்கி விற்றார். ஒவ்வொரு நாளும் அதிக பணம் சம்பாதிக்க அவர் கடினமாக உழைத்தார்.

காலப்போக்கில், அவர் ஒரு சக்கர வண்டியில் முதலீடு செய்ய முடிந்தது, பின்னர் ஒரு டிரக் மற்றும் சிறிது நாட்களில் அவர் தயாரிப்புகளை விநியோகிக்கும் லாரிகளில் முதலீடு செய்ய முடிந்தது.

ஆண்டுகள் செல்லச் செல்ல, அவர் பல கடைகளின் உரிமையாளராக ஆனார். அத்தகைய தாழ்மையான தொடக்கத்தில் இருந்து ஒரு அற்புதமான வெற்றியை அவர்  கண்டார்.

அவர் தற்சமயம் மிகவும் செல்வந்தராக ஆனார்; தனது எதிர்காலத்தையும் குடும்பத்தையும் கருத்தில் கொண்டு சில ஆயுள் காப்பீட்டைப் பெறுவது குறித்து ஆராய்ந்தார். அவர் ஒரு முகவரைத் தொடர்பு கொண்டு, தனது தேவைகளைப் பூர்த்தி செய்யும் பாலிசியைத் தேர்ந்தெடுத்தார்.

உரையாடலின் முடிவில், ஏஜென்ட் அவரது மின்னஞ்சல் முகவரியைக் கேட்டார்; அதன் மூலம் அவர் பாலிசிக்கு தேவையானவற்றை அவருக்கு அனுப்புவதாக கூறினார்.

அந்த நபர், “ என்னிடம் மின்னஞ்சல் முகவரி இல்லை” என்று பதிலளித்தார்.

முகவர் ஆச்சரியப்பட்டு, “அற்புதம்!! உங்களிடம் மின்னஞ்சல் இல்லை, ஆனாலும் உங்களால் இந்தப் பேரரசை உருவாக்க முடிந்தது. உங்களிடம் மின்னஞ்சல் முகவரி இருந்தால் நீங்கள் எங்கே இருப்பீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்” என்று கூறினார்.

அந்த நபர் ஒரு கணம் யோசித்து விட்டு, “ஆம், நான் ஒரு பிரபலமான ஐ.டி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் கழிப்பறைகளை சுத்தம் செய்திருப்பேன்” என்று பதிலளித்தார்.

நீதி:

கடின உழைப்பு வெற்றிக்கு திறவுகோல். நமது முயற்சிகள் நிலையாக இருக்க வேண்டும், தொடர்ந்து கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். விடாமுயற்சி என்பது வெற்றியை அடைவதற்கும், நீங்கள் விரும்பிய இலக்குகளை நிறைவேற்றுவதற்கும் ஏற்ற திறன் ஆகும். நீங்கள் சந்திக்கும் அனைத்து தடைகளையும் தைரியாமாக எதிர்கொண்டு, தொடர்ந்து முயற்சி செய்து இலக்கை அடையவும்.

மொழி பெயர்ப்பு:

யுகஸ்ரீ, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

மேலாண்மைப் பாடம்

நீதி: உண்மை

உபநீதி: ஞானம்

ஒரு காகம், ஒரு வேலையும் செய்யாமல் நாள் முழுவதும் ஒரு மரத்தின் மேல் அமர்ந்திருந்தது.

ஒரு சிறு முயல் அக்காகத்தைப் பார்த்தது. பிறகு, நானும் உன்னைப் போலவே ஒரு வேலையும் செய்யாமல் நாள் முழுவதும் அமர்ந்திருக்க முடியுமா” என்று கேட்டது

அதற்கு அந்த காகம் “ஏன் முடியாது?” என்று கேட்டது.

எனவே அந்த முயலும் அந்த மரத்தின் அடியில் அமர்ந்து, காகத்தைப் போலவே ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தது.

அப்போது திடீரென்று ஒரு நரி அம் முயலின் மேல் பாய்ந்து அதனை கொன்று தின்றது.

மேலாண்மைப் பாடம்: ஒரு வேலையும் செய்யாமல் அமர்ந்திருக்க வேண்டுமென்றால், நாம் மிக மிக உயரத்தில் இருக்க வேண்டும்.

நீதி:

நாம் மற்றவர்களை கண்மூடித்தனமாக நம்பக் கூடாது. நாம் மற்றவர்கள் கூறுகின்ற கருத்துகளை கூர்ந்து கவனிக்க வேண்டும். ஆனால் நம்முடைய பலமும் பலவீனமும் நமக்கு தெரியும் என்பதால், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். எனவே நிலையான ஒருங்கிணைந்த விழிப்புணர்வு ஒன்றே நமது நல் வாழ்விற்கும் மகிழ்ச்சிக்கும் உரிய திறவு கோல் ஆகும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

என்றும் இளமையாக இருக்கவும்

நீதி: உண்மை, விடாமுயற்சி

உபநீதி: நன்னம்பிக்கை, நகைச்சுவை

நடுத்தர வயதில், மக்கள் வயது அதிகரிப்பதை நினைத்து கவலைப் படுகின்றனர். பெரும்பாலான மக்கள் பயப்படுகின்றனர்; ஏனென்றால் வயதுக்கும் ஆரோக்கியத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக நினைக்கின்றனர். உடல் பிரச்சனைகள் வரும் என்ற அச்சம்.

ஒருவருக்கு வயதாகிறது என்று எந்த கட்டத்தில் கூறலாம்? அளவுகோல் என்ன? பாட்டி தாத்தா ஆகும் போதா? 50 கடக்கும் போதா? 60 கடக்கும் போதா? தலைமுடி நரைக்கும் போதா? அரசாங்க கொள்கையின் படி, ஓய்வு எடுக்கும் வயது 60. அப்படியென்றால், அதற்குப் பிறகு வேலை செய்ய முடியாதா? அவ்வயதில் உண்மையில் வயதாகி விடுமா?  இல்லை, அது ஒரு கட்டுக்கதை. “வயது ஒரு எண் மட்டுமே” என்று லெக்சி ஸ்டார்லிங் கூறுகிறார்.

மைக்கேலாஞ்சலோ,  வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவின் கட்டிடக் கலைஞராக 71வது வயதில் நியமிக்கப் பட்டார். KFC நிறுவனத்தை கண்டுபிடித்த ஹர்லாந்து சான்டர்ஸ், தனது 75வது வயதில் கனடாவிற்கு சென்று, அங்கு இருக்கின்ற KFC நிறுவனத்தின் உரிமையாளராக பணிபுரிந்தார். 80வது வயது வரை அவர் சுறுசுறுப்பாக இருந்தார். அவர் 70 ம் வயதில் சமையலைப் பற்றி ஒரு புத்தகம் எழுதினர். KFC காப்பகத்தில் அப்புத்தகம் கண்டுபிடிக்கப் பட்டது. ஜான் மில்டன், பாரடைஸ் ரீகேன்ட் என்ற புத்தகத்தை 63வது வயதில் எழுதினார். புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் தாமஸ் எடிசன் தன் ஆய்வுக்கூடத்தில் 83 வயது வரை பணிபுரிந்தார். மார்க் ட்வேன் அவருடைய தலை சிறந்த படைப்புகளை 71 ம் வயதில் எழுதினார். கலீலியோ தன் 72ம் வயதில் மிகச் சிறந்த கண்டுபிடிப்பை செய்தார். போதுமா? இல்லை, கீழ்வரும் நிகழ்வு மிகவும் அற்புதமானது.

ரோஸ் என்றவர் 87ம் வயதில் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

பேராசிரியர் அவரை மற்ற மாணவர்களுக்கு அறிமுகம் செய்த போது, ஒரு மாணவன், “இவ்வளவு இளம் வயதில், ஒன்றுமே அறியாத நிலையில் பல்கலைக்கழகத்தில் ஏன் சேர்ந்தாய்?” என ரோஸிடம் கேட்டான். 

அதற்கு அவள் விளையாட்டாக, “நான் பணக்கார கணவனை தேர்ந்தெடுத்து, கல்யாணம் செய்து கொண்டு, பல குழந்தைகளை பெற்றெடுத்து, ஓய்வெடுத்த பின் பிரயாணம் செய்யப் போகிறேன்” என்றார். 

பிறகு சற்று தீவிரமாக அவர், “நான் எப்போதுமே பல்கலைக்கழகத்தில் சென்று படிக்க வேண்டும் என்று கனவு கண்டேன். அதை தான் தற்போது செய்கிறேன்” என்றார்.

ரோஸ் நாளடைவில் பிரபலமாகி எங்கு சென்றாலும் எல்லோரிடமும் நன்றாக பழக ஆரம்பித்தார். ரோஸுக்கு உடை அலங்காரம் செய்வதற்கு மிகவும் விருப்பம். அப்படி செய்து, பலரும் அவரை கவனிக்க ஆரம்பித்தனர்.

செமஸ்டர் முடியும் போது, கால்பந்து விருந்து ஒன்றில் அவளைப் பேச அழைத்தனர். அவரின் பேச்சைக் கேட்டால் உங்களுக்கு எல்லாமே புரிந்து விடும்.

அவர், “நம் வயது அதிகரிப்பதால் நாம் விளையாடுவதை நிறுத்தி விடுவதில்லை; விளையாடுவதை நிறுத்துவதால் தான் நாம் வயதாகி விடுகிறோம். இளமையாக இருப்பது, சந்தோஷமாக இருப்பது மற்றும் வெற்றியை சந்திப்பதற்கு நான்கு ரகசியங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் நகைச்சுவையான விஷயங்களை கண்டுபிடித்து, சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். உங்களுக்கு ஒரு கனவு இருக்க வேண்டும். கனவு இல்லையென்றால், நீங்கள் இறந்து விடுவீர்கள். நம்மைச் சுற்றி பலர் இறந்த நிலையில் இருக்கின்றனர்; ஆனால் அவர்களுக்கே அது தெரிவதில்லை.

வயதாகி விடுவதற்கும் வளர்வதற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. நீங்கள் 19 வயது என்று எடுத்துக் கொள்வோம். ஒரு வருடத்திற்கு ஒன்றுமே செய்யாமல் படுத்துக் கொண்டே இருந்தால், 20 வயதாகி விடுவீர்கள். அதே போல, எனக்கு  87 வயது ஆகிறது என்று எடுத்துக் கொள்வோம். ஒரு வருடம் ஒன்றுமே செய்யாமல் இருந்தால், அடுத்த வருடம் 88 ஆகிவிடும். யார் வேண்டுமானாலும் வயதாகி விடலாம். அதற்கு முயற்சியோ திறமையோ தேவையில்லை.

ஏதாவது ஒரு மாறுதல் இருக்கும் போது, அதில் ஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடித்தால் நாம் வளர்கின்றோம். எதற்கும் வருத்தப் படாதீர்கள். வயதானவர்கள், செய்ததை  நினைத்து வருத்தப்பட மாட்டார்கள்; செய்யாததை நினைத்து தான் வருத்தப் படுவார்கள். வருத்தப் படுபவர்கள் தான் இறப்பை நினைத்து பயப்படுவார்கள்.

“தி ரோஸ்” என்ற பாட்டை தைரியமாக பாடி, அவர் தன் பேச்சை முடித்தார். ஒவ்வொருவரையும் அந்த பாட்டின் வார்த்தைகளை படித்து, அதை நடைமுறையில் செயலாற்ற சவால் விடுத்தார்.

பல வருடங்களுக்கு முன் ஆரம்பித்த தன் பல்கலைக்கழகப் பட்டப் படிப்பை அந்த ஆண்டு இறுதியில் ரோஸ் முடித்தார்.  பட்டப் படிப்பை முடித்த ஒரு வாரத்தில் ரோஸ் தன் தூக்கத்தில் அமைதியாக இறந்தார். அவரது இறுதி யாத்திரையை இரண்டாயிரத்திற்கும்  மேற்பட்ட மாணவர்கள் வந்தனர். அவர் தன் வாழ்க்கையில், வயதுக்கும் வெற்றிக்கும் நேரம் ஒரு தடையில்லை என்று நிரூபித்தார். 

கட்டாயமாக, வயதாகும் போது வாழ்க்கை, சில மாறுதல்களையும், உடல் உபாதைகளையும் ஏற்படுத்துகின்றன. உதாரணத்திற்கு ஞாபக மறதி; ஆனால் அது ஒரு பெரிய பிரச்சனை இல்லை. யார் தான் மறப்பதில்லை? வயதாகும் போதும் சில நல்ல விஷயங்கள் இருக்கின்றன. ரோஸ் கூறியது போல, இளமையாக இருப்பதின் ரகசியம் என்னவென்றால், எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கு ஒரு உதாரணம் –

வயதான தம்பதி மற்றொரு வயதான தம்பதி வீட்டிற்கு உணவு உண்ணச் சென்றனர். சாப்பிட்ட பிறகு, இரு மனைவிகளும் சமயலறைக்கு சென்றனர். கணவர் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். ஒருவர், “நேற்று இரவு நாங்கள் ஒரு புதிய உணவகத்துக்கு சென்றோம். மிகவும் நன்றாக இருந்தது. நீங்களும் அங்கு செல்ல வேண்டும்” என்றார்.

மற்றொருவர், “உணவகத்தின் பெயர் என்ன?” என்று கேட்டார்.

அதற்கு இவர் அதிக நேரம் யோசித்து, “நீங்கள் ஒருவரை அதிகமாக விரும்பினால், எந்த மலரை கொடுப்பீர்கள்? சிகப்பு நிறத்தில் முட்களோடு இருக்கும்” என்றார்.

மற்றொருவர், “ரோஜாவா?” என்றார்.

ஆம், என்று கூறிவிட்டு, சமையலறையை நோக்கி, “ரோஸ், நேற்று இரவு நாம் எந்த உணவகத்துக்கு சென்றோம்?” என்று கேட்டார்.

நீதி:

வயதாகும் விஷயத்தை யாராலும் தடுக்க முடியாது. அதனால் அந்த ஒரு நிகழ்வை நேர்மறை மனப்பான்மையுடன் நல்ல விதமாக எடுத்துக் கொள்வோம். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல மாற்றங்களை கொண்டு வரும். இந்த உண்மையை ஏற்றுக் கொண்டு, நன்னம்பிக்கையுடன் அதை எதிர் கொண்டு, வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்போம்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE