நீதி: உண்மை, சகிப்புத் தன்மை
உப நீதி: ஏற்புத் தன்மை, ஒற்றுமை
பாடம் 1 ( முள்ளெலிகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம்)
மிகக் கடுமையான குளிர் காலம்; அதனால், பல மிருகங்கள் இந்த சீதோஷ்ணநிலை தாங்காமல் மாண்டன.
இந்த இக்கட்டான நிலையைப் புரிந்து கொண்டு, சில முள்ளெலிகள் ஒன்றாகக் கூடின;
ஒன்றுக்கு ஒன்று அருகில் இருந்து, வெப்ப நிலையைப் பராமரித்து, தங்களைச் சூடாக வைத்துக் கொண்டன; இவ்வகையில், குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடிந்தது. ஆனால், அதனுடைய முட்கள் குத்திக் கொண்டே இருந்ததால், சற்று பிரச்சனையாக இருந்தது.
சில நாட்களுக்குப் பிறகு, காயம் உண்டானதால், ஒன்றாக இருந்த முள்ளெலிகள் தனித் தனியாக பிரிந்தன. கடுங்குளிரால் தாக்கப்பட்ட முள்ளெலிகள் உறைந்து ஒவ்வொன்றாக உயிர் இழந்தன. அதனால், ஒரு தீவிரமான முடிவு எடுக்க வேண்டிய நிலை வந்தது; முட்கள் குத்தினாலும், ஒன்றாகச் சேர்ந்து தங்களைக் குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம், அல்லது தனியாக உறைந்து மாண்டு போகலாம் என்பது தான் அந்த தீர்வு.
விவேகமுள்ள முள்ளெலிகள் மறுபடியும் ஒன்றாகக் கூடின. அதன் முட்களால் உண்டான சிறு காயங்களைப் புறக்கணித்து, ஒன்றாக இருந்து கிடைத்த நற்பயன்களை எண்ணி நன்றியோடு வாழ்ந்தன. இவ்வகையில், குளிர்காலத்தை சமாளிக்க முடிந்தது.
பாடம் 2 ( வாத்துகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம்)
குளிர் காலத்தில் வாத்துகள் இடம் விட்டு வேறு இடத்திற்கு செல்லும் போது, “வி” போன்ற
உருவமைப்பில் அவை பறந்து செல்கின்றன. இந்த செயலினால் அவை நமக்கு என்ன
பாடம் கற்றுக் கொடுக்கின்றன என்று நாம் புரிந்து கொள்வதில்லை.
- தனியாக பறப்பதை விட்டு விட்டு, இந்த “வி உருவமைப்பில்” பறப்பதனால், பறவைகளால் 71 சதவீதம் அதிக தூரம் பறக்க முடிகிறது.
நாம் கற்றுக் கொள்ளும் பாடம்:
இலக்கை மனதில் வைத்துக் கொண்டு, ஒரே திசையில் ஒற்றுமையாக செயற்பட்டால், மற்றவர்களின் ஆதரவு இருப்பதால் நாம் விரைவாக இலக்கை சென்றடைய முடியும்.
- ஒரு வாத்து அந்த “வி உருவமைப்பை” விட்டு வெளியே விலகிச் சென்றால், எதிர்ப்பு சக்தி குறைந்து, பறப்பதற்கு கடினமாகி விடுகிறது. அதனால் அது விரைவாக அந்த “வி உருவமைக்கு” வந்து விடுகிறது. அதற்கு முன்னே பறக்கும் பறவையிடமிருந்து தூக்கும் சக்தி அனுகூலத்தை பயன்படுத்திக் கொள்கிறது.
நாம் கற்றுக் கொள்ளும் பாடம்:
நம்மை போல இலக்கை வைத்துக் கொண்டு எவர் செயற்படுகிறார்களோ,
அவர்களுடன் நாமும் இருக்க வேண்டும்.
- தலைமை வாத்து சோர்ந்து போகும் போது, மற்றொரு வாத்து அந்த தலைமையை ஏற்றுக் கொண்டு உதவி செய்கிறது.
நாம் கற்றுக் கொள்ளும் பாடம்:
சரியாக செயற்பட முடியாமல் இருக்கும் தலைவராக இருப்பதற்கு பதிலாக, அவசியம் இருக்கும் போது, குழுவில் மற்றவர்களிடம் வேலையை ஒப்படைக்க வேண்டும்.
- வேகத்தை கட்டுப்படுத்தி, முன்னே பறக்கும் வாத்துகளுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில், பின்புறம் பறக்கும் வாத்துகள் சத்தம் கொடுக்கின்றன.
நாம் கற்றுக் கொள்ளும் பாடம்:
நாம் மற்றவர்களுடன் வேலை செய்யும் போது, அவர்களின் தன்னம்பிக்கையை இழக்கச் செய்யாமல், அவர்களை உற்சாகப் படுத்துவோம்.
- குழுவில் ஒரு வாத்துக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்து, “வி” உருவமைப்பிலிருந்து வெளியே சென்றால், மற்ற இரண்டு வாத்துக்கள் அதன் பின்னாலேயே தொடர்ந்து சென்று அதற்கு உதவி செய்து பாதுகாக்கின்றன. உடல் நிலை சரியாகும் வரையோ அல்லது அது இறக்கும் வரையோ அந்த வாத்துக்கள் அதனுடனேயே இருக்கும். அதற்கு பிறகு தான் அவை பறந்து செல்லும்; அல்லது மற்றொரு “வி உருவமைப்பை” தேடி செல்லும்.
நாம் கற்றுக் கொள்ளும் பாடம்:
பிரச்சனைகள் வரும் போது, நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய வேண்டும்.
நீதி:
ஒற்றுமையே பலம். நாம் எல்லோரும் சமூகத்தில் வாழ்கின்றோம்; ஒவ்வொருவரும் கடவுளின் தலைசிறந்த படைப்பு. அதனால், மனிதர்கள் எப்படி இருக்கிறார்களோ, அப்படியே அவர்களை ஏற்றுக் கொள்ள கற்றுக் கொள்வோம். சுற்றுப்புறச் சூழலில் இருக்கும் நிகழ்வுகளை சரியான கண்ணோட்டத்துடன் ஏற்றுக் கொண்டு, பொறுமை மற்றும் நன்றி உணர்வுடன் இருந்தால், நாம் சந்தோஷமாக இருக்கலாம். எங்கு ஒற்றுமை மற்றும் சந்தோஷம் இருக்கிறதோ, அங்கு உண்மையான மகிழ்ச்சி இருக்கும்.
மொழி பெயர்ப்பு:
சரஸ்வதி, ரஞ்சனி
SOURCE: SSSIE