நீதி: நன்னடத்தை
உபநீதி: எல்லாவற்றிலும் சமநிலை
புத்தருக்கு சோனா என்ற ஒரு இளம் சிஷ்யன் இருந்தான். வசதியான குடும்பத்தில் பிறந்த அவன் விடாமுயற்சி, மதிநுட்பம் மற்றும் உற்சாகத்துடன் செயற்பட்டான்.
சோனா லௌகிக வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, தியானப் பயிற்சியில் உற்சாகம் கொண்டு, அதில் தீவிரமாக வசியமானான். நாட்கள் செல்லச் செல்ல, அவன் மதி மயங்கி மிகவும் துக்கத்துக்கு ஆளானான். இது அவனுக்கு ஏமாற்றத்தையும், வாக்குவாதம் செய்யும் குணத்தையும், துயரத்தையும் கொடுத்தது. விரைவில் அவன், உடல் மெலிந்து, எலும்புக் கூடு போல் தோற்றமளித்தான்.
ஆன்மீகத்தில் வளர்ச்சி பெறாததால், அதற்கு உண்டான வழியை அறிய அவன் புத்தரிடம் சென்றான்.
புத்தர், “சோனா! முன்பெல்லாம் நீ தந்திக் கம்பிகள் கொண்ட இசைக் கருவியை எளிதாக வாசித்தாய் அல்லவா?” என்று கேட்டார்.
அதற்கு சோனா “வாசிப்பது எளிதல்ல” என்று பதிலளித்தான்.
அதற்கு புத்தர், “சோனா! உன் இசைக்கருவியின் கம்பிகளை மிகவும் இறுக்கமாகவோ, இறுக்கமற்ற நிலையிலோ இல்லாமல், ஸ்ருதிக்கு ஏற்றாற்போல் அமைத்துக் கொண்டால், இனிமையான இசை வருவதுடன், வாசிப்பதும் எளிதாகும் அல்லவா?” எனக் கேட்டார்.
அதற்கு சோனா “ஆம்” என்று பதிலளித்தான்
உடனே புத்தர், “அதே போல் தான் பயிற்சி செய்யும் போது, சக்தியை அதிகம் செலுத்தினால் அது மன அழுத்தத்தையும், நிம்மதியின்மையையும் கொடுக்கும். சக்தியைக் குறைவாக செலுத்தினால், அது களைப்பில் முடியும். அதனால் உன் சக்தியை சம நிலையில் வைத்துக் கொண்டால் உன் ஆன்மீக வளர்ச்சியில் நீ முழு கவனம் செலுத்த முடியும்” என்று கூறினார்.
நீதி:
மிதமான பயிற்சி மகிழ்ச்சிக்கு வழி வகுக்கும். உணவு முறையோ, தூக்கமோ, செய்யும் வேலையோ, எதுவானாலும் சரியான அளவில் செய்தால், நம் வாழ்க்கை சமநிலையில் அமைந்து மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே, விளையாடுவது, சாப்பிடுவது, கற்பது போன்ற எல்லா விஷயங்களிலும் சமநிலையை பயிற்சி செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். இது அவர்களை உணவின் மதிப்பறிந்து அதனை வீணடிக்காமல் இருப்பது, குறிப்பிட்ட நேரத்தில் விளையாட்டு மற்றும் படிப்பு, இரண்டையும் சமாளித்து வெற்றி காண்பது போன்றவற்றை சாதிக்க வைக்கும்.
அதே சமயம், இன்னொரு முக்கியமான விஷயத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். நம் இலக்கை விட்டு நம் கவனம் விலகக் கூடாது. இலக்கை நோக்கிச் செல்லும் போது, இடையில் வரும் குறுக்கீடுகளைப் பற்றி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட மாணவர்கள் முழு ஆளுமையோடும், சந்தோஷமாகவும் இருந்து, ஒரு முழுமை பெற்ற மனிதனாக பிற்காலத்தில் உருவெடுப்பார்கள். இந்த மிதமான பயிற்சியை சிறு வயதிலிருந்தே பழகி வந்தால், வாழ்க்கை அர்த்தமுள்ளதாகவும், மன நிறைவுடனும், சமநிலையிலும் அமையும். இந்நிலை அடைந்த மனிதர்களுக்கு நிஜத்திற்கும், நிழலுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர முடியும். அதன் மூலம் ஒரு செயலைத் தடையின்றி முடிக்க முடியும்.
சுவாமி சிவானந்தர் கூறியபடி
எல்லாவற்றிலும் மிதமாக இரு. அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம்.
மொழி பெயர்ப்பு:
கோதண்டராமன், சரஸ்வதி, ரஞ்சனி