Archive | April 2023

கைகளின் வலிமை

நீதி:  உண்மை /அன்பு

உப நீதி:  நன்றி உணர்வு

பாட்டி…. தொண்ணூறு வயதைக் கடந்தவர். முற்றத்தில் உள்ள பலகையில் அமர்ந்து இருந்தார். அவள் அசையவில்லை, தலையைக் குனிந்து தனது கைகளை பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.

அவரின் பேரன் அருகில் வந்து அமர்ந்ததைக் கூட அவர் சட்டை செய்யவில்லை.  வெகு நேரம் ஆனதும், அவன் பாட்டியின் நலம் குறித்து கவலை கொண்டான்.  

பிறகு,  அவரைத் தொந்தரவு செய்ய மனமில்லாமல்,  அதே சமயம் அவர் சரியாக இருக்கிறாளா என்று பார்ப்பதற்கு அவரிடம் நலம் விசாரித்தான். அவர் தலையை தூக்கி பார்த்து புன்முறுவலுடன்,” நான் நன்றாக இருக்கிறேன். கேட்டதற்கு நன்றி,” என்று கணீரென்ற குரலில் கூறினார்.

பேரன் “உங்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. ஆனால் நீங்கள் அப்படியே அமர்ந்து உங்கள் கைகளையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அதனால்தான் பேச்சு கொடுத்தேன்”, என்று கூறினான்.

பாட்டி “ நீ எப்பொழுதாவது உனது கைகளை கூர்ந்து கவனித்திருக்கிறாயா?, என்று வினவினார்.

அவன் மெதுவாகக் கைகளை உற்று நோக்கினான். முன்னும் பின்னும் பார்த்துவிட்டு,” இல்லை.  நான் கூர்ந்து கவனித்தது இல்லை”, என்று கூறிவிட்டு பாட்டி என்ன சொல்ல வருகிறாள் என்பதை சிந்தித்தான்.

பாட்டி புன்னகைத்து, “நிறுத்தி நிதானமாக உனது கைகளை பற்றி யோசித்துப் பார். உனது வாழ்நாள் முழுவதும் அவை உனக்கு எவ்வாறு சேவை செய்திருக்கின்றன; எனது கைகள் இப்போது சுருக்கங்கள் விழுந்து பலவீனமாகி இருந்தாலும்,  இவை உபகரணங்களாக இருந்து எனது வாழ்நாள் முழுவதையும்  அணைத்துக் கொள்ள உதவியிருக்கின்றன” என்று கூறினார்.

நான் சிறு குழந்தையாய் இருந்த போது, அந்தக் கைகள் நான் கீழே விழாமல் தடுத்து பிடித்துக் கொண்டன.

உணவை வாயில் போடவும் உடைகளை அணிந்து கொள்ளவும் உதவியன. குழந்தைப் பருவத்தில், எனது கைகளைக் கூப்பி,  கடவுளை வணங்க என் தாய் கற்றுத் தந்தார்.   எனது காலணிகளை அணிந்து கொள்ள உதவியிருக்கின்றன.

என் மகன் பிறந்த போது அவனைப் பிடித்துக் கொள்ளத் தெரியாமல் கைகள் தவித்தன. மோதிரத்தை அணிவித்து அழகு பார்த்த போது, நான் திருமணமானவள் என்பதை உலகிற்கு தெரிவித்து,  என் மனதுக்கு பிடித்தவர் மேல் இருந்த காதலை பறைசாற்றின. என் கணவனை பிடித்துக் கொள்ளவும் பிறகு அவர் போருக்குச் சென்ற போது என் கண்ணீரைத் துடைக்கவும் செய்தன.

அவருக்கான எனது கடிதங்களை எழுதின.  பெற்றோரையும்,  துணைவரையும்  மண்ணில் புதைத்த போது நடுங்கின.

எனது குழந்தைகளையும், பேரப்பிள்ளைகளையும் சுமந்தன. அண்டை அயலாருக்கு ஆறுதல் அளித்துள்ளன.  கோபத்தில் சில சமயம் அதிர்ந்துள்ளன.

என் முகத்தை மூடி இருக்கின்றன. தலையை கோதி இருக்கின்றன. உடலை சுத்தப்படுத்தி இருக்கின்றன. அவை ஈரமாய், பிசுபிசுப்பாய், வளைந்து உடைந்து காய்ந்து போனதுண்டு.  அழுக்காய்,  அடிபட்டு,  வீங்கி காய்ந்து போயிருக்கின்றன.  இன்று,  எனது மற்ற அங்கங்கள் சரியாக வேலை செய்யாவிட்டாலும் இந்த கைகள் என்னைத் தாங்கிப் பிடிக்கின்றன. படுக்க வைக்கின்றன.  மீண்டும் பிரார்த்தனையில் கூப்புகின்றன.

இந்தக் கைகள் தான் வாழ்க்கையில் நான் கடந்து வந்த கரடு முரடான பாதைக்கான அடையாளங்கள்.  

ஆனால் அதைவிட முக்கியமாக, கடவுள் என்னை மீண்டும் அவர் வீட்டிற்கு அழைத்துப் போவதற்கு பிடித்துக் கொள்ள உதவப் போவதும் இந்த கைகள் தான். இந்தக் கைகளை பிடித்து,  என்னைத்  தூக்கி அவர் பக்கத்தில் இருத்திக் கொள்வார். நான் அப்போது கடவுளின் முகத்தை தொட்டுப் பார்ப்பதற்கு உதவப் போவதும் இந்தக் கைகள் தான்.

அதன் பிறகு அந்தப் பேரன், தன் கைகளை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்கத் துவங்கினான். கடவுள் அவர் கைகளை நீட்டி பாட்டியின் கைகளைப் பற்றி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றது அவன் நினைவில் நின்றது. அவனும் கூட, கடவுளின் முகத்தை தொட்டுப் பார்க்கவும், அவனது முகத்தில் அவரது கரங்கள் படர்வதை உணரவும்  விரும்பினான்.

பாட்டி என்பவர் நமது இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர். அவர் ஒரு தேவதையைப் போன்றவர். நம்மை அவர் அடை காப்பது போல் காத்து, நமக்காக பிரார்த்தனை செய்து, அவரது கவனத்திலேயே நம்மை வைத்து, நமக்காக எதையும் தருபவர்.

நீதி:  

கடவுள் நமக்கு பல அழகான விஷயங்களையும்,  நல்ல மனிதர்களையும் பரிசாக அளித்துள்ளார். ஆனால் பல நேரங்களில் நாம் அவற்றை உணராமல் அலட்சியப்படுத்தி விடுகிறோம்.  அப்படி அவர் நமக்கு அளித்துள்ள  சில நல்ல விஷயங்கள்—நமக்கு பார்வை தரும் கண்கள், நடக்க உதவும் கால்கள், நல்ல வாசனைகளை நுகர உதவும் நாசி,  நல்ல இசையைக் கேட்டு ரசிக்கும் காதுகள், ருசியான உணவுகளை சுவைக்கும் நாவு,  மென்மையான ஸ்பரிசத்தை உணரும் சருமம்—இவை அனைத்துமே கடவுளால் நமக்கு அளிக்கப்பட்ட ஈடு இணையற்ற பரிசுகளாகும்.  அவற்றை நாம் மதிப்பதில்லை. பிரபஞ்சமே,  கடவுள் அளித்துள்ள இப்படிப்பட்ட அழகிய விஷயங்களால் நிரம்பி இருக்கிறது. நாம் இவ்வழகிய விஷயங்களை உணர்வதற்கு நமது மனதை, நன்றியுணர்வு, பொறுமை,  நிலையான விழிப்புணர்வு போன்ற நற்குணங்களால் நிரப்ப வேண்டும். அப்போதுதான்,  நம்மை சுற்றி நடக்கும்,  ஒவ்வொரு சிறிய நிகழ்வும் எவ்வாறு நம்மை பாதிக்கிறது என்பதை உணர முடியும்.

எனவே நமக்கு பரிசாக அளிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கும் மனிதர்களுக்கும் நாம் நன்றியுடன் இருப்போம். நம்மை சுற்றியுள்ள மனிதர்களின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்தால், வாழ்க்கை மேலும் அர்த்தமுள்ளதாக அமையும்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி கணேஷ்சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

தாயின் அன்பு

நீதி: நிபந்தனையற்ற அன்பு

உப நீதி: நன்றி உணர்வு

 உனக்கு 1 வயது, அப்போது அவள் உனக்கு உணவளித்தாள், குளிப்பாட்டினாள்.

-உனது நன்றியை இரவு முழுவதும் அழுது தெரிவித்தாய்.

உனக்கு 2 வயது, அவள் நடக்கக் கற்றுக் கொடுத்தாள்.

-உனது நன்றியை தெரிவிக்க அவள் அழைக்கும் போது நீ ஓடி விடுவாய்.

உனக்கு 3 வயது, அவள் உனது உணவை மிகவும் அன்புடன் சமைத்தாள்.

-தட்டினை கீழே கவிழ்த்து உனது நன்றியை தெரிவித்தாய்.

உனக்கு 4 வயது , அவள் உனக்கு சில வண்ணத்தீட்டுக் கோல்களைக் கொடுத்தாள்.

-சாப்பாட்டு மேஜை முழுவதும் கிறுக்கல்களால் உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு 5 வயது, விடுமுறை காலத்தில் உனக்கு அழகான உடைகளை உடுத்தினாள்.

-சேற்றில் விழுந்து எழுந்து உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு 6 வயது , உன்னை பள்ளிக்கு அழைத்துச் சென்றாள்.

-“நான் போக மாட்டேன்”, என்று அடம் பிடித்து உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு 7 வயது, உனக்கு ஒரு மட்டைப் பந்து பரிசளித்தாள்.

-அடுத்த வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்து உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு 8 வயது, உனக்குப் பிடித்த ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தாள்.

-அதை உன் மேலே வழியவிட்டு உனது நன்றியை தெரிவித்தாய்.

உனக்கு 9 வயது, உனது பியானோ வகுப்புக்கு பணம் கட்டினாள்.

-அதை வாசிக்க முயற்சி கூட எடுக்காமல் உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு 10 வயது, உன்னை விளையாட்டு, உடற்பயிற்சி, பிறந்தநாள் விழாக்கள் என்று ஒவ்வொரு இடமாக காரில் அழைத்துச் சென்றாள்.

-நீ காரிலிருந்து இறங்கி, திரும்பிக்கூட பார்க்காமல் சென்று உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு 11 வயது, உன்னையும் உனது நண்பர்களையும் சினிமாவுக்கு அழைத்துச் சென்றாள்.

-அவளை வேறு வரிசையில் அமரச் சொல்லி உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு 12 வயது, தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளைப் பார்க்க வேண்டாம் என்று எச்சரித்தாள்.

-அவள் வெளியே செல்லும் வரை காத்திருந்து விட்டு பிறகு பார்த்து, உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு 13 வயது, உனது தலை முடியை திருத்திக் கொள்ள சொன்னாள்.

-அவளுக்கு பாராட்ட தெரியவில்லை என்று கூறி உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு 14 வயது, உனது கோடைகால சுற்றுலாவுக்கு பணம் செலுத்தினாள்.

-அவளுக்கு ஒரு கடிதம் கூட எழுதாமல் உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு 15 வயது, வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் உன்னை அன்புடன் தழுவி, கட்டி அணைக்க  நினைத்தாள்.

-உனது அறைக் கதவை பூட்டி வைத்து உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு வயது 16 , உனக்கு கார் ஓட்டக் கற்றுக் கொடுத்தாள்.

– நினைத்த போதெல்லாம் நீ காரை எடுத்துச் சென்று உனது நன்றியை தெரிவித்தாய்.

உனக்கு வயது 17, ஒரு முக்கியமான அழைப்புக்காக காத்திருந்தாள்.

-இரவு முழுவதும் தொலைப்பேசியை கீழே வைக்காமல் பேசி உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு வயது 18, உனது பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் கண்கலங்கினாள்.

-இரவு முழுவதும் நண்பர்களுடன் கொண்டாடி உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு வயது 19, உனது கல்லூரி படிப்புக்காக பணம் செலுத்தி, உன்னை காரில் அழைத்துச் சென்று உனது உடைமையை சுமந்து வந்தாள்.

-நண்பர்களிடம் அவளை அறிமுகம் செய்ய வெட்கப்பட்டு அவளை வெளியிலேயே நிறுத்தி விடை கொடுத்து அனுப்பி உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு வயது 20, நீ யாரையாவது நேசிக்கிறாயா என்று கேட்டாள்.

-“அது உனக்கு சம்பந்தம் இல்லாத விஷயம்” என்று கூறி உனது நன்றியை தெரிவித்தாய்.

உனக்கு வயது 21, உனது எதிர்காலத்திற்கான சில யோசனைகளைச் சொன்னாள்.

-“உன்னைப் போல் ஆக விரும்பவில்லை” என்று கூறி உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு வயது 22, பட்டமளிப்பு விழாவில் கட்டியணைத்து ஆனந்தப்பட்டாள்.

-வெளிநாட்டு சுற்றுலாவிற்கு பணம் கொடுக்க முடியுமா எனக் கேட்டு நீ உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு வயது 23, உனது முதல் வீட்டிற்கு தேவையான சில பொருட்களை வாங்கித் தந்தாள்.

-அவை மிகவும் அசிங்கமாக இருப்பதாக நண்பரிடம் கூறி உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு வயது 24, உன் வாழ்க்கை துணையை சந்தித்து உங்களின் வருங்காலத்தைப் பற்றி வினவினாள்.

-அவளை முறைத்து, கடுமையாகப் பேசி உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு வயது 25, உனது திருமணத்திற்கு செலவு செய்து உனக்காக அழுது, உன் மேல் மிகுந்த அன்பு வைத்திருப்பதை கூறினாள்.

-அவளிடம் இருந்து வெகுதூரம் விலகிச் சென்று உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு வயது 30, குழந்தைக்கு தேவையான சில அறிவுரைகளைச் சொன்னாள்.

-“காலம் மாறிவிட்டது” என்று கூறி உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு வயது 40, உறவினர் ஒருவரின் பிறந்த நாளை ஞாபகப்படுத்தினாள்.

-“மிகுந்த வேலைப் பளுவில் இருக்கிறேன்” என்று கூறி உனது நன்றியைத் தெரிவித்தாய்.

உனக்கு வயது 50, அவள் உடல் நலிவுற்று உனது உதவியை எதிர் நோக்கினாள்.

-பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எவ்வளவு சுமையாக இருக்கிறார்கள் என்பதை படித்துக் காண்பித்து உனது நன்றியை தெரிவித்தாய்.

பிறகு ஒரு நாள் அவள் அமைதியாக மரணம் அடைந்தாள்.

அவளுக்கு நீ செய்ய மறந்த அத்தனை விஷயங்களும் உன் இதயத்தில் இடியாக வந்து இறங்கின.

தாய் உயிருடன் இருந்தால் அவளிடம் எப்போதும் அன்பு காட்ட மறவாதீர்கள். அவள் இல்லை என்றால் அவளது நிபந்தனையற்ற அன்பை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

நீதி:

இவ்வுலகில் சுயநலமற்றவள் தாய் மட்டுமே. தன் குழந்தை பிறப்பதற்கு முன்பிலிருந்தே அதன் மீது அன்பு செலுத்துபவள். தாயின் தூய்மையான அன்புக்கு முன்னால் இந்த உலகில் எதுவும் ஈடாகாது. தன் குழந்தைக்காக எதையும் செய்யத் துணிபவள் தாய். தன் குழந்தையின் முதன்மையான முழுமையான ஆதரவு தாய் மட்டுமே.

தாய் தன் குழந்தைகளை சிறிது காலம் கையில் சுமக்கிறாள். பிறகு தன் இதயத்தில் என்றென்றும் சுமக்கிறாள்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி கணேஷ்சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

இறை அருள்

நீதி: உண்மை

உபநீதி – நன்றி உணர்வு

சொர்க்கத்திற்குப் புதிதாக வந்த ஒரு ஆத்மா, செயின்ட் பீட்டரை சந்தித்தது. அவர் சொர்க்கம் முழுவதையும் அதற்கு சுற்றிக் காண்பித்தார்.

இருவரும் தேவதைகள் நிறைந்த ஒரு பெரிய அறைக்குள் நுழைந்தனர்.

செயின்ட் பீட்டர் அந்த ஆத்மாவை முதல் பிரிவிற்கு அழைத்துச் சென்று,”இதுதான் கோரிக்கைகளை பெறும் இடம். பிரார்த்தனைகள் மூலமாக கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன” என்றார். ஆத்மா சுற்றிப் பார்த்தது. தேவதைகள் மிகவும் பரபரப்பாக, உலகம் முழுவதிலுமிருந்து வந்த கோரிக்கைகளை பிரித்துக் கொண்டிருந்தனர்.

செயின்ட் பீட்டர் அதனை அடுத்த பிரிவிற்கு அழைத்துச் சென்றார். “இது அனுப்பும் இடம். இங்கிருந்து தான் அருளும், ஆசிகளும், பூமியில் பிரார்த்தனை செய்யும் மனிதர்களுக்கு அனுப்பப் படுகின்றன” என்றார். இந்த இடமும் மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டது. பல தேவதைகள் அங்கே அருளாசிகளை பூமிக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர்.

பீட்டர் அந்த ஆத்மாவை கடைசியாக ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்றார். அதிசயமாக அங்கே ஒரே ஒரு தேவதை, செய்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லாமல் உட்கார்ந்து இருந்தார்.

ஆத்மா “இங்கே வேலை ஒன்றும் இல்லையா? இது என்ன பகுதி?”, என்றது.

செயின்ட் பீட்டர் “இது பெற்றுக் கொண்டதை ஒப்புக் கொள்ளுதலுக்கான  இடம். சோகமான விஷயம் என்னவென்றால் அருளாசி பெறும் வெகு சிலரே அதனை ஒப்புக் கொள்கின்றனர்” என்றார்.

அந்த ஆத்மா “கடவுளின் அருளாசியை எப்படி ஒருவர் ஒப்புக் கொள்ள வேண்டும்”, என்று வியந்து கேட்டது.

பீட்டர் “எளிமையானது. நன்றி கடவுளே என்று சொன்னால் போதும்”, என்றார். நமக்கு வழங்கப்பட்டுள்ள ஆசீர்வாதங்களை நாம் உணர்ந்து கொள்வதற்கு, நன்றியுணர்வு மட்டுமே போதும்.

நீதி:

நமக்கு கிடைத்த ஆசீர்வாதங்களை எண்ணி எப்போதும் நன்றி உணர்வுடன் இருக்க வேண்டும். உலகத்தில் பெரும்பாலான மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகள் கூட கிடைக்காத போது, நாம் விருப்பப்படும் தேவைகளை யோசனை செய்து கவலை படக் கூடாது. நன்றி உணர்வுடன் இருந்தால், எதிர்மறையான எண்ணங்களிலிருந்து நாம் நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம். மேலும் மன அழுத்தத்தை அகற்றி, ஆறுதல் கொடுப்பதோடு, நன்றி உணர்வு வாழ்க்கையில் பல நல்ல விஷயங்களை பெற உதவும். அதனால், நாம் தினமும் நன்றி உணர்வுடன் இருக்க பழக்கிக் கொள்வோம்.

அத்தகையான மனப்பான்மை இருந்தால், நமக்கு கிடைக்க இருக்கும் பாக்கியங்களை நன்று உணர முடியும்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி கணேஷ்சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

கடவுள் ஒரு பிரார்த்தனை தூரத்தில் தான் உள்ளார்

நீதி: சரணாகதி, விசுவாசம்

உப நீதி: நம்பிக்கை, பொறுமை

இனிய காலை வணக்கம். நான் கடவுள். இன்று நான் உங்களது அனைத்து பிரச்சனைகளையும் பார்த்துக் கொள்வேன்.

எனக்கு உங்களின் உதவி தேவை இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். உங்களால் கையாள முடியாத அளவிற்கு ஏதாவது ஒரு சூழ்நிலை உங்கள் முன் இருந்தால், அதை சரி செய்ய நீங்கள் முயற்சி செய்ய வேண்டாம். என்னிடம் விட்டு விடுங்கள். சரியான நேரத்தில் அதை நான் சரி செய்வேன், நீங்கள் நினைக்கும் பொழுது அல்ல.

பிரச்சனைகளை என்னிடம் விட்டு விட்டால், நீங்கள் அதை நினைத்து கவலைப் படுவதோ, அல்லது உங்கள் வாழ்க்கையிலிருந்து தூக்கி எறியவோ நினைக்காதீர்கள். அப்படி செய்தால் அதற்கான தீர்வு தள்ளிப் போகலாம்.

நீங்களே தீர்வு கண்டு கொள்ளும்படியான சூழ்நிலையாக இருந்தால், பிரார்த்தனையின் மூலம் என்னிடம் ஆலோசித்து அது சரியான தீர்வா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நான் உறக்கம் கொள்வதோ ஓய்வெடுப்பதோ இல்லை. அதனால் நீங்கள் தூக்கத்தைத் தொலைக்க வேண்டிய அவசியமில்லை. அமைதி கொள் குழந்தாய்!! நீ என்னுடன் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் நான் ஒரு பிரார்த்தனை தூரத்தில் தான் உள்ளேன்.

நீதி:

சரணாகதி என்ற பிரார்த்தனை மிகவும் கடுமையான பிரார்த்தனை. நம் நம்பிக்கையை மிகக் கடுமையான சோதனைக்கு உள்ளாக்குகிறது – நமது நம்பிக்கைகள் மற்றும் அச்சங்கள், ஏன், வாழ்வதற்கான ஒரு மன உறுதியைக் கூட கடவுளிடம் விட்டு விட வேண்டும். எத்தனை நபர்கள் கடவுளிடம் முழுமையாக சரணடைந்து, “எல்லாமே நீங்கள் நினைக்கும்படி மட்டுமே நடக்கும்; நான் நினைக்கும்படி அல்ல” என்று விட்டு விட முடியும்! கடவுளை முழுமையாக நம்பக் கற்றுக் கொள்ளுங்கள்; ஆனால் உங்கள் வேலையை நீங்கள் தளரா ஊக்கத்துடன் செய்ய வேண்டும்.

ஒரு பிரச்சனைக்கும் அதன் தீர்வுக்கும் இடையே உள்ள தூரம் என்பது உங்கள் முழங்காலுக்கும் தரைக்கும் உள்ள தூரம் தான். கடவுளின் முன் மண்டியிடுபவர்கள், எந்த பிரச்சனையையும் தைரியமாக சந்திக்கலாம். ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருங்கள்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி கணேஷ், சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE