நீதி: அன்பு / நன்நடத்தை
உபநீதி: பணிவு
பல வருடங்களுக்கு முன், ஒரு மனிதன் தான் சந்தித்த அனைவரிடமும் அன்பையும், மன்னிப்புத் தன்மையையும் வெளிப்படுத்தினான். அதனால் கடவுள் அவனிடம் பேசுவதற்கு ஒரு தேவதையை அனுப்பி வைத்தார்.
தேவதை “உன்னுடைய நல்ல செய்கைக்காக, கடவுள் உனக்குப் பரிசளிக்க விரும்புவதாகத் தெரிவித்து, என்னை உன்னிடம் அனுப்பினார்” என்று கூறி, “நீ விரும்பும் எந்தப் பரிசானாலும் உனக்கு அளிக்கப்படும். உனக்குப் பரிசாக, குணப்படுத்தும் கலையை நீ பெற விரும்புகிறாயா?” என்று கேட்டார்.
அதற்கு அம்மனிதன் “கண்டிப்பாக இல்லை” என்றான். மேலும் “எவரை குணப்படுத்த வேண்டுமோ அவரை கடவுளே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று பதிலளித்தான்.
பிறகு தேவதை “பாவம் செய்தவர்களை, உண்மையின் பாதையில் திருப்பி அழைத்துச் செல்லும் கலை வேண்டுமா?” என்று கேட்டார்.
உடனே அம்மனிதன் “அது உங்களைப் போல தேவதைகளின் வேலை. அனைவராலும் போற்றப்படும் ஒருவனாகவோ, அனைவருக்கும் எப்பொழுதும் ஒரு நிரந்தரமான உதாரணமாகவோ இருக்க நான் விரும்பவில்லை” என்று கூறினான்.
மீண்டும் தேவதை “இதோ பார்! உனக்கு ஒரு வரம் தராமல் நான் சொர்க்கத்திற்குத் திரும்ப முடியாது. நீ தேர்ந்தெடுக்காவிட்டால், நானே உனக்காக ஒன்றைத் தேர்ந்தெடுப்பேன்” என்று கூறினார்.
அந்த மனிதன் ஒரு நிமிடம் சிந்தித்த பிறகு, “அப்படியானால் சரி; என் மூலமாக எல்லோருக்கும் நன்மை நடக்கட்டும்; ஆனால், தற்பெருமை என்ற பாவத்திற்கு ஆளாகாமல் இருக்க, இந்த நற்செயல்கள் மற்றவர்கள் மட்டுமல்லாமல், நானும் அறியக் கூடாது” என்று கூறினான்.
அதனால் அந்த தேவதை, சூரிய ஒளி அந்த மனிதனின் முகத்தில் விழும் போது, அந்த மனிதனின் நிழலுக்குப் பிறரைக் குணப்படுத்தும் சக்தியை அளித்தார். இதனால், அவன் எங்கே சென்றாலும், நோயுற்றவர்கள் குணமானார்கள்; பூமி வளம் மிகுந்ததாக ஆனது; துன்பத்தில் இருந்தவர்கள் இன்பத்தை அனுபவித்தனர்.
அம்மனிதன், தான் நிகழ்த்தும் அதிசயங்களை அறியாமல், பல வருடங்கள் பூமியில் பயணம் செய்தான்; ஏனென்றால் சூரியனை நோக்கி அவன் இருக்கும் போது, அவன் நிழல் எப்பொழுதும் அவன் பின்னால் இருக்கும். இவ்வாறாகத் தன் புனிதத் தன்மையை அறியாமல் அவன் பல வருடங்கள் வாழ்ந்து மறைந்தான்.
நீதி:
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்கு உதவுதல் தான், ஒருவர் பெறக்கூடிய மிகச் சிறந்த பண்பாகும்; மேலும் செய்யும் செயல்கள் யாவும் நாம் செய்பவை அல்ல என்று எச்சமயமும் உணர்ந்தால், நாம் தற்பெருமை என்ற பாவத்தை செய்யாமல் இருக்கலாம். இது நமக்குப் பணிவை வளர்க்க உதவும். பற்றில்லாமல், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பணிவாக இருப்பதென்பது, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நல்ல மாறுதலை ஏற்படுத்தும்.
நாம் செய்த உதவிக்கு பிரதிபலன் கிடைக்காது என்று அறிந்தும் நாம் எந்த நாளன்று மற்றோருக்கு உதவி செய்கிறோமோ, அன்று நமக்கு மன நிறைவு கிடைக்கும்.
மொழி பெயர்ப்பு:
அன்னப்பூரணி, சரஸ்வதி, ரஞ்சனி
SOURCE: SSSIE