Archive | May 2020

நற்குணங்களை வேரூன்றி ஆழமாக பதிக்க வேண்டும்

நீதி: சரியான அணுகுமுறை

உப நீதி: நேர்மை / மன வலிமை

ஆறு வயது சிறுவன் ஒருவன், ஒவ்வொரு நாளும் ஒரு கடைக்கு வந்து கொண்டிருதான். அக்கடையில் ஆவலைத் தூண்டும் பொருட்கள் நிரம்பி இருந்ததால், அவன் அலமாரிகளைப் பார்த்து கொண்டே கடையின் வெவ்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்தான். பளபளவென்று பிரகாசிக்கும் உறைகளில் சாக்லேட்டுகள், வண்ணமயமான காகிதத்தில் இனிப்புகள், ஆசையைத் தூண்டுகின்ற வடிவங்களில் பிஸ்கெட்டுகள்…… அதையெல்லாம் அவன் தொடவும் இல்லை; வாங்கவும் இல்லை.

பொதுவாக, விற்பனையாளர்கள் இவ்வகையான சந்தேகத்திற்கிடமான நபர்களை நன்கு அறிவர். எனவே அவர்களை கண்காணித்து, இயன்ற வரை அவர்களை அகற்ற முயற்சி செய்வார்கள்.

விற்பனையாளர், “ஏய், எதையும் வாங்காமல் ஏன் இப்படி சுற்றித் திரிகிறாய்?” என்று அவனை முரட்டுத்தனமாகக் கேட்டார்.

அதற்கு சிறுவன், “நான் எதையும் வாங்கப் போவதில்லை” என்று அமைதியாக பதிலளித்தான்.

விற்பனையாளர், “பிறகு இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? மூன்றாவது முறையாக உன்னை நான் பார்க்கிறேன். எதை வாங்குவது என்று முடிவு செய் அல்லது வீட்டிற்கு செல்” என்றார்.

அதற்கு சிறுவன், “நான் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்,” என்று மீண்டும் அமைதியாகக் கூறினான்.

விற்பனையாளர் “பயிற்சியா? என்ன பயிற்சி?” என்று குழப்பத்தோடு கேட்டார்.

சிறுவன் “நான் என் நேர்மையை பரிசோதனை செய்து கொண்டிருக்கிறேன்” என்று பதிலளித்தான்.

விற்பனையாளர், “என்ன சொல்கிறாய்?” என்று இன்னும் குழப்பமாகப் பார்த்தார். இதற்கு முன்பு யாரும் இப்படி கூறி அவர் கேட்டதில்லை.

மேலும் அவர், “ஏய், எப்படி அதை செய்வாய்?” என்று கேட்டார்.

அதற்கு சிறுவன், “இப்படித் தான். நான் பல முறை அலமாரி வழியாகக் கடந்து சென்று, பிஸ்கெட்டுகள் மற்றும் சாக்லேட்டுகளை பார்க்கிறேன் …… அவை என்னைத் திரும்பிப் பார்க்கின்றன. நான் அவற்றிடம் “ஆகட்டும், என்னைப் பார்த்துக் கொண்டே இரு. நான் உன்னைப் பற்றி கவலைப்பட போவதில்லை. நான் உன்னை விரும்பவில்லை” என்று கூறுவேன். முதலில் அது போல செய்வது எளிதாக இருக்காது; ஆனால் நானே என்னை பழக்கிக் கொண்ட பின், இப்போது அவற்றையெல்லாம் பார்த்து எளிதாக கடந்து செல்ல முடிகிறது” என்றான்.

நேர்மையை எவ்விதமான வழிகளில் பயிலலாம் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மையை வெளிப்படுத்திய அச்சிறுவனை பார்த்த விற்பனையாளர் திகைத்துப் போனார்.

அதற்குப் பிறகு,  சிறுவன் கடைக்குள் நுழைந்த போதெல்லாம், விற்பனையாளர் முகத்தில் ஒரு புன்னகை நிரம்பியது. அவர் அனைவரிடமும் பெருமையுடன், “இதோ, தனது நேர்மையை சோதனை செய்யும் சிறுவன் வந்து விட்டான்” என்று கூறினார்.

தைரியமாக பிரச்சனைகளை எதிர்கொண்டு, நம் வேர்களை மண்ணில் ஆழமாக ஊன்றி வைத்தால், வாழ்க்கையின் புயல்களை தாங்கும் வலிமையை அது நமக்கு தரும்.

நீதி:

நாம் வளர்த்து கொள்ள வேண்டிய நற்பண்பு நேர்மை ஆகும். இந்த குணம் நாம் உண்மையாக இருக்கவும், மனநிறைவு மற்றும் மன அமைதிக்கும் வழி வகுக்கும்.

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

விமர்சனம் ஒரு பயனுள்ள கருவி

நீதி: தன்னம்பிக்கை / சரியான அணுகுமுறை

உப நீதி: விடாமுயற்சி / நேர்மறை சிந்தனை

கடந்த நூற்றாண்டின் பிரபலமான வயலின் கலைஞர்களுள், நார்வேயைச் சேர்ந்த ஓலே புல் பிரபலமாக இருந்தார்.

வேதியியலாளராக பணிபுரிந்த அவனது தந்தை, அவன் மிகவும் ஆசைப்பட்ட வயலினை வாசிப்பதற்கு தடை விதித்து, சமயத்துறை கல்வியில் பயிற்சி பெற பல்கலைக்கழகம் அனுப்பி வைத்தார்.

அவன் பரீட்சைகளில் தோல்வியடைந்து, பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறி, தனது முழு நேரத்தையும், சக்தியையும் வயலின் பயிற்சிக்காக அர்ப்பணித்தான். அவன் திறமைசாலியாக இருந்த போதிலும், எதிர்பாராதவிதமாக தனது முதல் இசை நிகழ்ச்சியை சரியான முறையில் அளிக்க அவன் தயாராக இருக்கவில்லை.

இத்தாலி நாட்டில், மிலான் செய்தித்தாள் விமர்சகர் ஒருவர்: “அவன் முறையாக  இசை பயிற்சி பெறாத இசைக் கலைஞன். அவன் திறமை வைரம் போல ஜொலிக்கிறது என்று நினைத்தால், நிச்சயமாக செப்பனிடாத மற்றும் மெருகேற்று அடையாத நிலையில் உள்ளான்” என்று ஓலே புல்லை பற்றி விமர்சனம் செய்திருந்தார்.

அந்த விமர்சனத்திற்கு ஓலே புல் இருவிதமாக எதிர்விளைவு அளித்திருக்கலாம் –

  1. அந்த வார்த்தைகள் ஓலேவை கோபத்திற்கு உகந்தவனாக மாற்றியிருக்கலாம் அல்லது
  2. அந்த சம்பவத்திலிருந்து தன்னை மேம்படுத்திக் கொள்ள ஏதேனும் கற்றுக் கொள்ளலாம்.

அதிர்ஷ்டவசமாக ஓலே இரண்டாவது வழியை தேர்ந்தெடுத்தார். செய்தித்தாள் அலுவலகத்திற்குச் சென்று விமர்சகரை காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். திகைத்துப் போன செய்தி ஆசிரியர், அவரை ஒரு முதியவருக்கு அறிமுகப்படுத்தினார். ஓலே, 70 வயதான விமர்சகருடன் மாலையைக் கழித்து, தனது குறைகளைப் பற்றி கேட்டறிந்து, அவற்றை சரி செய்வதற்கான ஆலோசனையைப் பெற்றார்.

பின்னர் அவர் தனது சுற்றுப்பயணத்தின் மற்ற கச்சேரிகளை ரத்து செய்து விட்டு வீடு திரும்பினார். அடுத்த ஆறு மாதங்கள், நல்ல திறமையான வித்வான்களிடம் பயின்றார். அவர் தனது குறைகளை சரி செய்வதற்கு, பல மணி நேரம் பயிற்சி செய்தார்.

இறுதியாக, அவர் தனது இசை நிகழ்ச்சிகளை மறுபடியும் துவங்கி, 26 வயதிலேயே ஐரோப்பாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஒரு நபர் விமர்சனத்தை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதை பொருத்தே பெரும்பாலும் அவரது வெற்றியும் தோல்வியும் நிச்சயிக்கப்படுகிறது. விமர்சனத்தை நேர்மறையாகக் கையாளுவது என்பது ஒரு அவசியமான வாழ்க்கைத் திறன்.

நாம் அதை எப்படி செய்வது?

முதலில், இரண்டு வகையான விமர்சனங்கள் உள்ளன என்பதை புரிந்து கொள்ள வேண்டும் –

  1. ஆக்கப்பூர்வமான அல்லது ஆதாரமுள்ளவை
  2. அழிக்கக்கூடிய அல்லது நியாயமற்றவை.

இந்த இரண்டிற்கும் இடையிலான வேறுபாட்டை அடையாளம் காணக் கற்றுக் கொண்டால், நாம் பெறக்கூடிய எந்த ஒரு விமர்சனத்தையும் சமாளிக்க உதவும்.

அழிக்கக்கூடிய அல்லது நேர்மையற்ற விமர்சனம் என்பது பெயருக்கு ஏற்றார் போல் நம்மை காயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பெரும்பாலும் விமர்சிப்பவரின் மீது கோப உணர்ச்சியையும், போர்க் குணத்தையும் ஏற்படுத்துகிறது. இது எவ்விதமான ஊக்கமளிக்கும் கருத்தையும் / எண்ணத்தையும் அளிக்காது. மேலும் விமர்சிக்கப்பட்டவரை தாழ்த்தி அதைரியப்படுத்துகிறது.

அதே சமயத்தில், ஆக்கப்பூர்வமான அல்லது ஆதாரமுள்ள விமர்சனம், ஒரு பயனுள்ள பின்னூட்டமாகக் கருதப்படுகிறது. இதுவும் நம்மை காயப்படுத்தக் கூடும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதை ஏற்றுக் கொள்வது எளிது, ஏனெனில் இது நம் தவறுகளை சுட்டிக்காட்டுவது மட்டுமல்லாமல், எங்கு / எதை / எப்படி மாற்றி முன்னேற்றமடைய முடியும் என்பதை காண்பிக்கும். நம்மை தாழ்த்துவதை விட நம்மை மேம்படுத்த இது உதவும்.

எவர் ஒருவருக்கு உதவி செய்யும் நோக்கம் இருக்கிறதோ அவருக்கு மட்டுமே விமர்சிக்க உரிமை உண்டு,”  – ஆபிரகாம் லிங்கன்.

நம் திறன்களில் முழு நம்பிக்கை கொள்வது முக்கியமான நிலையாகும். தன்னம்பிக்கை இருந்தால் விமர்சனம் அச்சுறுத்தல் அல்ல, ஒரு பயனுள்ள கருவி என்பது புரியும்.

விமர்சனம் என்பது மழை போல; வேர்களை அழிக்காமல், வளர்ச்சிக்கு ஊட்டம் அளிக்கும் வகையில் மென்மையாகவும், அளவாகவும் இருக்க வேண்டும்.

நீதி:

எந்த ஒரு சூழ்நிலையிலும் நாம் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கக் கூடாது. இறுதி இலக்கை மனதில் வைத்துக் கொண்டு, விடாமுயற்சியுடனும், நம்பிக்கையுடனும் நம்மால் முடிந்ததை அளிக்க வேண்டும். சரியான அணுகுமுறை நேர்மறையான சிந்தனைக்கு வழி வகுக்கும். மேலும் கடினமாக உழைப்பதற்கும், உள்ளிருந்து திறன்களை வெளிப்படுத்தி இறுதியாக வெற்றி அடைவதற்கும், நமக்கு நம்பிக்கையை அளிக்கும்.

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

அற்புதத்தின் விலை

நீதி: அன்பு

உபநீதி: நம்பிக்கை, விடாமுயற்சி

டெஸ் ஒரு சுட்டியான எட்டு வயது சிறுமி. ஒரு நாள் அவளுடைய பெற்றோர் அவளது தம்பி ஜானைப் பற்றி பேசிக் கொண்டிருந்த விஷயம் அவள் செவிகளில் விழுந்தது. தம்பியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதோடு, அவர்களிடம் முற்றிலும் பணமும் இல்லாத விஷயம் அவளுக்குத் தெரிய வந்தது. மேலும் மருத்துவ செலவிற்கும் வீட்டுக் கடனை அடைப்பதற்கும் தந்தையிடம் போதுமான பணம் இல்லாததால் அவர்கள் அடுத்த மாதம் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்ல இருந்தனர் என்பதும் தெரிய வந்தது. மிகுந்த பணம் செலவழித்து செய்யும் அறுவைச் சிகிச்சையினால் மட்டுமே இப்போது தம்பியை காப்பாற்ற முடியும் என்ற சூழ்நிலையில், அவர்களுக்குக் கடன் கொடுக்கவும் யாரும் முன்வரவில்ல. விழிகளில் நீர் ததும்ப அமர்ந்திருந்த தன் தாயிடம், “இனி ஒரு அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே அவனைக் காப்பாற்ற இயலும்” என்று விரக்தியுடன் அவள் தந்தை பேசியதை டெஸ் கேட்டாள்.

டெஸ் தனது படுக்கையறைக்குச் சென்று, மறைவிலிருந்து ஒரு கண்ணாடி ஜாடியை எடுத்தாள். அதிலுள்ள நாணயங்களை தரையில் கொட்டிய பின், அதில் எவ்வளவு இருக்கிறது என்று மூன்று முறை கவனமாக கணக்கு பார்த்தாள்; பிறகு, நாணயங்களை மீண்டும் ஜாடியில் நிரப்பி மூடி வைத்தாள். பின்புறமாக வீட்டிலிருந்து சென்று, சில கட்டிடங்களை கடந்து, வாயிலில் பெரிய சிவப்பு வண்ணம் கொண்ட இந்திய தலைமை அடையாளத்துடன் இருந்த ரெக்ஸாலின் மருந்துக் கடைக்கு விரைந்தாள்.

மருந்துக் கடைக்காரர் இந்த சிறுமியை பொருட்படுத்தாமல் வேறொரு மனிதருடன் பேசிக் கொண்டிருந்தார். அவள் அதுவரை பொறுமையாகக் காத்திருந்தாள். டெஸ் தன் மேல் கவனம் செலுத்துவதற்காக காலணிகளால் தரையை உராய்த்து சிறு சத்தத்தை எழுப்பினாள்; ஆனால், அவள் நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை. அவளால் இயன்ற அளவு வெறுப்புணர்ச்சியை தூண்டுகின்ற வகையில், தன் குரலால் ஒலியை எழுப்பினாள். இப்பொழுதும் பலன் ஒன்றுமில்லை. கடைசியாக அவள் ஜாடியிலிருந்து ஒரு நாணயத்தை எடுத்து கண்ணாடி மேஜையில் ஓசையுடன் எறிந்தாள். அது வேலை செய்தது!

மருந்துக் கடைக்காரர் எரிச்சலுடன், “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். பின்னர் தனது கேள்விக்கான பதிலுக்கு காத்திருக்காமல் “பல ஆண்டுகளுக்கு பிறகு சிகாகோவிலிருந்து வந்திருக்கும் எனது சகோதரருடன் பேசிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

டெஸ் எரிச்சலுடன், “நான் எனது சகோதரனைப் பற்றி உங்களுடன் பேச விரும்புகிறேன். என் சகோதரன் மிகவும் நோய்வாய் பட்டிருக்கிறான். அதனால் ஒரு அற்புதம் வாங்க விரும்புகிறேன்” என பதிலளித்தாள்.

மருந்துக் கடைக்காரர், “மன்னிக்கவும். நீ என்ன சொல்கிறாய்?” என புரியாமல் கேட்டார்.

அதற்கு அவள், “அவன் பெயர் ஜான். அவன் தலைக்குள் ஏதோ கெட்டதொன்று வளர்ந்து கொண்டிருக்கிறது. என் அப்பா ஒரு அற்புதத்தினால் மட்டுமே இப்போது அவனைக் காப்பாற்ற முடியும் என்று கூறுகிறார். அதற்கு எவ்வளவு செலவாகும்?” என விசாரித்தாள்.

உடனே கடையில் இருந்த அவர், “நாங்கள் அற்புதங்களை விற்பதில்லை, குழந்தாய். அதனால் எங்களால் உனக்கு உதவ இயலாது. அதற்கு வருந்துகிறேன்” என்றார். இம்முறை சிறிது மென்மையாக பதிலளித்தார்.

டெஸ், “அதற்கு போதுமான பணம் என்னிடம் உள்ளது. அப்படி போதாது என்றால், மீதியை கொண்டு தருவேன். அதற்கு எவ்வளவு செலவாகும் என்று சொல்லுங்கள்” என வினவினாள்.

நன்றாக உடையணிந்திருந்த மருந்தாளுனரின் சகோதரர் குனிந்து சிறுமியிடம், “உன் தம்பிக்கு என்ன மாதிரியான அதிசயம் தேவை?” என்று கேட்டார்.

டெஸ் கண்களிலிருந்து நீர் மல்க “எனக்குத் தெரியாது,” என பதிலளித்தாள். மேலும் அவள், “என் தம்பி மிக மோசமான உடல்நிலையில் இருப்பதை மட்டுமே நான் அறிவேன். அவனுக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அம்மா கூறினார். ஆனால் என் அப்பாவிடம் அதற்கு தேவையான பணம் இல்லை. எனவே எனது பணத்தை நான் பயன்படுத்த விரும்புகிறேன்” என்று மன வருத்தத்துடன் கூறினாள்.

சிகாகோவைச் சேர்ந்த அம்மனிதர் “உன்னிடம் எவ்வளவு இருக்கிறது?”  எனக் கேட்டார்.

டெஸ் மெல்லிய குரலில் “ஒரு டாலர் மற்றும் பதினொரு காசுகள். இது என்னிடம் தற்போது உள்ள பணம், ஆனால் மேலும் தேவைப்பட்டால் இன்னும் கொண்டு தர முடியும்,” என பதிலளித்தாள்.

அதற்கு அவர், “என்ன ஒரு தற்செயலான நிகழ்வு! ஒரு டாலர் மற்றும் பதினொரு காசுகள் – உன் தம்பியின் சிகிச்சைக்கு தேவையான பணம் உன்னிடம் இருக்கிறது” என புன்னகைத்தார்.

அவர் பணத்தை ஒரு கையில் வாங்கிக் கொண்டார். மறு கையால் அவளைப் பிடித்துக் கொண்டு, “நீ வசிக்கும் இடத்திற்கு என்னை அழைத்துச் செல். நான் உன் சகோதரன் மற்றும் பெற்றோரை சந்திக்க விரும்புகிறேன். உங்களுக்கு தேவையான அதிசயம் என்னிடம் இருக்கிறதா என்று பார்ப்போம்” எனக் கூறினார்.

நன்கு உடையணிந்திருந்த அம்மனிதர், டாக்டர் கார்ல்டன் ஆம்ஸ்ட்ராங், நரம்பியல் அறுவை சிகிச்சையில் தனித்துறை வல்லுநர். கட்டணம் ஏதும் வசூலிக்காமல் ஜானின் அறுவை சிகிச்சை முடிந்தது. ஜான் மீண்டும் வீட்டிற்கு திரும்பி, உடல்நலம் நன்றாக தேறுவதற்கு நீண்ட நேரம் ஆகவில்லை. டெஸ்ஸின் பெற்றோர், தற்போதைய மகிழ்ச்சியான தருணத்தை அடைவதற்கு முன் கடந்து சென்ற பாதைகளையும் நிகழ்வுகளையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

டெஸ்ஸின் தாய், “அந்த அறுவை சிகிச்சை நிச்சயமாக ஒரு அற்புதம் தான். அதற்கு எவ்வளவு செலவாகியிருக்கும்?” என்று கேட்டார்.

டெஸ்ஸின் முகத்தில் புன்சிரிப்பு தெரிந்தது. ஒரு அற்புதத்தின் விலை என்னவென்று அவளுக்கு தெரிந்திருந்தது… ஒரு டாலர் மற்றும் பதினொரு காசுகள் …. மற்றும் ஒரு சிறு குழந்தையின் நம்பிக்கை.

நீதி:

ஒரு சகோதரிக்கு சகோதரன் மீது இருந்த அன்பையும், எவ்வளவு விலையானாலும் தன் சகோதரனைக் காப்பாற்றுவதற்கான அவளுடைய நம்பிக்கையையும் விடாமுயற்சியையும் இக்கதை உணர்த்துகிறது. அன்பு, நம்பிக்கை மற்றும் விடாமுயற்சி நிச்சயமாக ஒரு அதிசயத்தை ஏற்படுத்தும். அனைவரையும் நம் பந்தங்கள் போன்று நேசிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வோம்.

நம்பிக்கை கண்ணுக்கு தெரியாததை காணும், நம்ப இயலாததை நம்பும்……… சாத்தியமற்றதை பெறும்.

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

நீதி: உண்மை / சரியான அணுகுமுறை

உப நீதி: சுய ஆய்வு, மற்றவர்களுக்கு மரியாதை

அவசரத் தேவை…… இரத்தம் அல்ல….கீழ்கண்ட பல விஷயங்கள்

மின்வல்லுனர்: ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாத மக்களுக்கு இடையில் உள்ள மின்னோட்டத்தை மீட்டெடுக்க.

பார்வை நிபுணர்: மக்கள் பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றுவதற்காக.

கலைஞர்: அனைவரின் முகத்திலும் புன்னகையை கொண்டு வர.

கட்டுமான தொழிலாளர்: அண்டை வீட்டுக்காரர்களுக்கு இடையே தோழமையை மேம்படுவதற்காக.

தோட்டக்காரர்: நல் எண்ணங்களை விதைத்து, வளர்ப்பதற்காக.

குழாய் செப்பனிடுபவர்: தடைப்பட்ட மற்றும் அடைக்கப்பட்ட மனநிலைகளுக்கு வடிகால் அமைக்க.

விஞ்ஞானி: இரக்கத்தை மீண்டும் கண்டறிய.

மொழி ஆசிரியர்: நம்மிடையே உள்ள தொடர்புத் திறனை மேம்படுத்துவதற்காக.

இறுதியாக கணித ஆசிரியர்: மனிதர்களுக்கிடையில் உள்ள நம்பிக்கையை மேம்படுத்துவதற்காக.

நல்லொழுக்கம் இல்லாமல் வாழ்வது, வாழ்க்கையின் மிக முக்கிய அங்கமான சமூகத்திலிருந்து பிரிந்து வாழ்வதற்கு சமமாகும்.

மாற்றம் சமூகத்திலிருந்து தொடங்குகிறது. அதன் சக்தி நம் கைகளில் இருக்கிறது.

நீதி:

தொழில், தோற்றம், செல்வம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு அனைவரையும் அவரவர் தனித்துவத்திற்காக மதிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு சமூகமாக நாம் ஒருவரையொருவர் சார்ந்து இருக்கிறோம்; எனவே மாற்றம் ஒவ்வொரு நபரிடமிருந்தும் தொடங்க வேண்டும். இவ்வாறு, பரந்த மனப்பான்மையுடன் பார்க்கும் போது, இணக்கமாகவும் அமைதியுடனும் வாழும் ஒரு சமூகம் நமக்கு கிடைக்கும்.

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

வார்த்தைகளை விட செயல்களே சிறந்தவை

நீதி – நன் நடத்தை

உபநீதி – முயற்சி / தன்னலமற்ற உதவி

action speaks greater than words 1ஒரு விவசாயி, சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது, பாதையில் ஒரு சிறிய பாறாங்கல்லைக் கண்டான். உடனே, அவன் நடு வழியில் யார் இந்தக் கல்லைப் போட்டிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு, அதை யாருமே ஓரமாக நகர்த்தவில்லையே எனக் குற்றம் சாட்டிக் கொண்டே சென்றான்.

அடுத்த நாள், ஒரு பால்காரனும் இதே கல்லைப் பார்த்துவிட்டு முணு முணுத்துக் கொண்டே சென்றான். மற்றொரு நாள், ஒரு மாணவனும் இதே காட்சியைக் கண்டான். எவரேனும் தடுக்கி விழுந்து காயப்படுத்தி கொள்வார்களோ என்ற எண்ணத்தோடு அவன் அந்த பாறாங்கல்லை நகர்த்த முயற்சித்தான். அவன் தனியாகவே கஷ்டப்பட்டு, கல்லை சாலையின் ஓரத்தில் நகர்த்தினான். திரும்பி வந்த பொழுது, அங்கே ஒரு சிறிய காகிதத்தைப் பார்த்தான்.

அதில் எழுதியிருந்த வார்த்தைகள், “நீ தான் நாட்டின் உயர்ந்த பொக்கிஷம்”.

உலகத்தில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கின்றனர். பேசுபவர்கள் ஒரு விதம், செயல்படுபவர்கள் மற்றொரு விதம்.

நீதி:

செயற்பட விருப்பம் இல்லாத போது, மற்றவர்களை குற்றம் சாட்ட நமக்கு அதிகாரம் இல்லை. எந்த ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறோமோ, அதை நாம் முன்னின்று செயல்படுத்த வேண்டும். சமூகத்திற்குச் செய்யும் சேவை நாம் இந்த உலகத்தில் வாழ்வதற்குக் கொடுக்கும் வாடகை.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

 

மாற்றம் முதலில் நம்மிடம் ஏற்பட வேண்டும்

நீதி – சரியான அணுகுமுறை / புத்தி சாதுர்யம்

உப நீதி – சுய பரிசோதனை

முன்பொரு காலத்தில், மன்னன் ஒருவர் ஒரு வளமான நாட்டை ஆட்சி புரிந்து வந்தார்.

ஒரு முறை, தனது நாட்டிலுள்ள சில தொலைவான பகுதிகளுக்கு, அவர் பயணம் செய்ய நேர்ந்தது.

Change yurself first - picture 1அவர் இத்தகைய நீண்ட பயணம் மேற்கொண்டது இதுவே முதல் முறையாக இருந்தது. ஆதலால், அவர் தனது அரண்மனைக்கு திரும்பிய போது, கால்களில் ஏற்பட்ட வலியினால் மிகுந்த வேதனை அடைந்தார். மேலும், மிகுந்த கரடுமுரடான, கடினமான பாதையில் சென்ற காரணத்தினாலும் இந்த அசௌகரியம் ஏற்பட்டது.

Change yourself first - picture 2அதற்கு பின் தனது குடிமக்களை, நாட்டின் ஒவ்வொரு சாலையையும் தோலால் மூட கட்டளையிட்டார். இதை செய்வதற்கு, ஆயிரக்கணக்கான பசுக்களின் தோல் மற்றும் அதிகமான பொருட்செலவும் ஏற்படும். அச்சமயம் அவருடைய ஊழியர்களில் ஒருவர், புத்திசாலியாக இருந்ததால் துணிச்சலுடன் அரசரிடம், “பணத்தை ஏன் இவ்விதம் வீணாக செலவழிக்க வேண்டும்? அதற்கு பதில் தங்கள் கால்களை சிறிதளவு தோலினால் பாதுகாத்துக் கொள்ளலாமே?” என்றார். இந்த பரிந்துரையை கேட்ட மன்னர் முதலில் ஆச்சரியப்பட்டார். பின்னர் தனக்கு ஒரு காலணி செய்யுமாறு கூறி அந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்டார்.

“அனைவரும் உலகை மாற்ற நினைக்கின்றனர்; ஆனால் எவருமே தன்னை மாற்றிக் கொள்ள நினைப்பதில்லை” – லியோ டால்ஸ்டாய்.

“உலகில் நாம் காண விரும்பும் மாற்றமாக நாமே இருக்க வேண்டும்” – மகாத்மா காந்தி

நீதி:

நம்மைச் சுற்றியுள்ள நபர்களையோ அல்லது சூழ்நிலையையோ மாற்ற முயற்சிப்பதை விட, நாம் சுய பரிசீலனை செய்து முதலில் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். நமது நடத்தையே மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக இருக்க வேண்டும்.

இந்த உலகத்தை, வாழ்வதற்கு ஒரு மகிழ்ச்சியான இடமாக மாற்ற, நாம் நம்மை மாற்றிக் கொள்வதே சிறந்தது ஒவ்வொருவரும் தங்களின் மனதை மாற்றிக் கொள்ள வேண்டும்; உலகத்தை அல்ல.

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com