நீதி: அன்பு
உபநீதி: நம்பிக்கை, விடாமுயற்சி
டெஸ் ஒரு சுட்டியான எட்டு வயது சிறுமி. ஒரு நாள் அவளுடைய பெற்றோர் அவளது தம்பி ஜானைப் பற்றி பேசிக் கொண்டிருந்த விஷயம் அவள் செவிகளில் விழுந்தது. தம்பியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதோடு, அவர்களிடம் முற்றிலும் பணமும் இல்லாத விஷயம் அவளுக்குத் தெரிய வந்தது. மேலும் மருத்துவ செலவிற்கும் வீட்டுக் கடனை அடைப்பதற்கும் தந்தையிடம் போதுமான பணம் இல்லாததால் அவர்கள் அடுத்த மாதம் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்ல இருந்தனர் என்பதும் தெரிய வந்தது. மிகுந்த பணம் செலவழித்து செய்யும் அறுவைச் சிகிச்சையினால் மட்டுமே இப்போது தம்பியை காப்பாற்ற முடியும் என்ற சூழ்நிலையில், அவர்களுக்குக் கடன் கொடுக்கவும் யாரும் முன்வரவில்ல. விழிகளில் நீர் ததும்ப அமர்ந்திருந்த தன் தாயிடம், “இனி ஒரு அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே அவனைக் காப்பாற்ற இயலும்” என்று விரக்தியுடன் அவள் தந்தை பேசியதை டெஸ் கேட்டாள்.
டெஸ் தனது படுக்கையறைக்குச் சென்று, மறைவிலிருந்து ஒரு கண்ணாடி ஜாடியை எடுத்தாள். அதிலுள்ள நாணயங்களை தரையில் கொட்டிய பின், அதில் எவ்வளவு இருக்கிறது என்று மூன்று முறை கவனமாக கணக்கு பார்த்தாள்; பிறகு, நாணயங்களை மீண்டும் ஜாடியில் நிரப்பி மூடி வைத்தாள். பின்புறமாக வீட்டிலிருந்து சென்று, சில கட்டிடங்களை கடந்து, வாயிலில் பெரிய சிவப்பு வண்ணம் கொண்ட இந்திய தலைமை அடையாளத்துடன் இருந்த ரெக்ஸாலின் மருந்துக் கடைக்கு விரைந்தாள்.
மருந்துக் கடைக்காரர் இந்த சிறுமியை பொருட்படுத்தாமல் வேறொரு மனிதருடன் பேசிக் கொண்டிருந்தார். அவள் அதுவரை பொறுமையாகக் காத்திருந்தாள். டெஸ் தன் மேல் கவனம் செலுத்துவதற்காக காலணிகளால் தரையை உராய்த்து சிறு சத்தத்தை எழுப்பினாள்; ஆனால், அவள் நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை. அவளால் இயன்ற அளவு வெறுப்புணர்ச்சியை தூண்டுகின்ற வகையில், தன் குரலால் ஒலியை எழுப்பினாள். இப்பொழுதும் பலன் ஒன்றுமில்லை. கடைசியாக அவள் ஜாடியிலிருந்து ஒரு நாணயத்தை எடுத்து கண்ணாடி மேஜையில் ஓசையுடன் எறிந்தாள். அது வேலை செய்தது!
மருந்துக் கடைக்காரர் எரிச்சலுடன், “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். பின்னர் தனது கேள்விக்கான பதிலுக்கு காத்திருக்காமல் “பல ஆண்டுகளுக்கு பிறகு சிகாகோவிலிருந்து வந்திருக்கும் எனது சகோதரருடன் பேசிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.
டெஸ் எரிச்சலுடன், “நான் எனது சகோதரனைப் பற்றி உங்களுடன் பேச விரும்புகிறேன். என் சகோதரன் மிகவும் நோய்வாய் பட்டிருக்கிறான். அதனால் ஒரு அற்புதம் வாங்க விரும்புகிறேன்” என பதிலளித்தாள்.
மருந்துக் கடைக்காரர், “மன்னிக்கவும். நீ என்ன சொல்கிறாய்?” என புரியாமல் கேட்டார்.
அதற்கு அவள், “அவன் பெயர் ஜான். அவன் தலைக்குள் ஏதோ கெட்டதொன்று வளர்ந்து கொண்டிருக்கிறது. என் அப்பா ஒரு அற்புதத்தினால் மட்டுமே இப்போது அவனைக் காப்பாற்ற முடியும் என்று கூறுகிறார். அதற்கு எவ்வளவு செலவாகும்?” என விசாரித்தாள்.
உடனே கடையில் இருந்த அவர், “நாங்கள் அற்புதங்களை விற்பதில்லை, குழந்தாய். அதனால் எங்களால் உனக்கு உதவ இயலாது. அதற்கு வருந்துகிறேன்” என்றார். இம்முறை சிறிது மென்மையாக பதிலளித்தார்.
டெஸ், “அதற்கு போதுமான பணம் என்னிடம் உள்ளது. அப்படி போதாது என்றால், மீதியை கொண்டு தருவேன். அதற்கு எவ்வளவு செலவாகும் என்று சொல்லுங்கள்” என வினவினாள்.
நன்றாக உடையணிந்திருந்த மருந்தாளுனரின் சகோதரர் குனிந்து சிறுமியிடம், “உன் தம்பிக்கு என்ன மாதிரியான அதிசயம் தேவை?” என்று கேட்டார்.
டெஸ் கண்களிலிருந்து நீர் மல்க “எனக்குத் தெரியாது,” என பதிலளித்தாள். மேலும் அவள், “என் தம்பி மிக மோசமான உடல்நிலையில் இருப்பதை மட்டுமே நான் அறிவேன். அவனுக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அம்மா கூறினார். ஆனால் என் அப்பாவிடம் அதற்கு தேவையான பணம் இல்லை. எனவே எனது பணத்தை நான் பயன்படுத்த விரும்புகிறேன்” என்று மன வருத்தத்துடன் கூறினாள்.
சிகாகோவைச் சேர்ந்த அம்மனிதர் “உன்னிடம் எவ்வளவு இருக்கிறது?” எனக் கேட்டார்.
டெஸ் மெல்லிய குரலில் “ஒரு டாலர் மற்றும் பதினொரு காசுகள். இது என்னிடம் தற்போது உள்ள பணம், ஆனால் மேலும் தேவைப்பட்டால் இன்னும் கொண்டு தர முடியும்,” என பதிலளித்தாள்.
அதற்கு அவர், “என்ன ஒரு தற்செயலான நிகழ்வு! ஒரு டாலர் மற்றும் பதினொரு காசுகள் – உன் தம்பியின் சிகிச்சைக்கு தேவையான பணம் உன்னிடம் இருக்கிறது” என புன்னகைத்தார்.
அவர் பணத்தை ஒரு கையில் வாங்கிக் கொண்டார். மறு கையால் அவளைப் பிடித்துக் கொண்டு, “நீ வசிக்கும் இடத்திற்கு என்னை அழைத்துச் செல். நான் உன் சகோதரன் மற்றும் பெற்றோரை சந்திக்க விரும்புகிறேன். உங்களுக்கு தேவையான அதிசயம் என்னிடம் இருக்கிறதா என்று பார்ப்போம்” எனக் கூறினார்.
நன்கு உடையணிந்திருந்த அம்மனிதர், டாக்டர் கார்ல்டன் ஆம்ஸ்ட்ராங், நரம்பியல் அறுவை சிகிச்சையில் தனித்துறை வல்லுநர். கட்டணம் ஏதும் வசூலிக்காமல் ஜானின் அறுவை சிகிச்சை முடிந்தது. ஜான் மீண்டும் வீட்டிற்கு திரும்பி, உடல்நலம் நன்றாக தேறுவதற்கு நீண்ட நேரம் ஆகவில்லை. டெஸ்ஸின் பெற்றோர், தற்போதைய மகிழ்ச்சியான தருணத்தை அடைவதற்கு முன் கடந்து சென்ற பாதைகளையும் நிகழ்வுகளையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
டெஸ்ஸின் தாய், “அந்த அறுவை சிகிச்சை நிச்சயமாக ஒரு அற்புதம் தான். அதற்கு எவ்வளவு செலவாகியிருக்கும்?” என்று கேட்டார்.
டெஸ்ஸின் முகத்தில் புன்சிரிப்பு தெரிந்தது. ஒரு அற்புதத்தின் விலை என்னவென்று அவளுக்கு தெரிந்திருந்தது… ஒரு டாலர் மற்றும் பதினொரு காசுகள் …. மற்றும் ஒரு சிறு குழந்தையின் நம்பிக்கை.
நீதி:
ஒரு சகோதரிக்கு சகோதரன் மீது இருந்த அன்பையும், எவ்வளவு விலையானாலும் தன் சகோதரனைக் காப்பாற்றுவதற்கான அவளுடைய நம்பிக்கையையும் விடாமுயற்சியையும் இக்கதை உணர்த்துகிறது. அன்பு, நம்பிக்கை மற்றும் விடாமுயற்சி நிச்சயமாக ஒரு அதிசயத்தை ஏற்படுத்தும். அனைவரையும் நம் பந்தங்கள் போன்று நேசிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வோம்.
நம்பிக்கை கண்ணுக்கு தெரியாததை காணும், நம்ப இயலாததை நம்பும்……… சாத்தியமற்றதை பெறும்.
மொழி பெயர்ப்பு:
வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி
Source: http://saibalsanskaar.wordpress.com