நீதி: அன்பு
உபநீதி: இரக்கம், பரிவு
பெயர் தெரியாத கதாசிரியர்
டிசம்பர் மாதத்தின் ஒரு குளிர்ச்சியான நாளன்று, சுமார் பத்து வயதுள்ள ஒரு சிறுவன் கால்களில் செருப்பு கூட அணியாமல், கடுங்குளிரில் நடுங்கிக் கொண்டு, ஒரு காலணிக் கடையின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு பெண்மணி அவனிடம் வந்து, “சிறுவனே, நீ அந்த ஜன்னல் வழியாக ஆவலாக என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார்.
வேதனையுடன் இருந்த சிறுவன் சற்று தயக்கத்துடன் “ஒரு ஜோடி காலணிகள் வேண்டும் என நான் கடவுளிடம் கேட்டுக் கொண்டிருந்தேன்” என்றான்.
அப்பெண்மணி சிறுவனின் கையைப் பிடித்துக் கொண்டு கடைக்குள் சென்று, அங்கு வேலை செய்து கொண்டிருந்தவரிடம் அரை டசன் ஜோடி காலுறைகள் கேட்டார். பிறகு, ஒரு வட்டிலில் தண்ணீரும், துடைக்கத் துண்டும் கேட்டார். கடையில் இருந்தவன் உடனடியாக அவைகளை எடுத்து வந்தான்.
பெண்மணி அச்சிறுவனை கடையின் பின் பக்கத்திற்குக் கூட்டிச் சென்று, அங்கு அவர் தன் கையுறையை கழட்டி விட்டு, கீழே குனிந்துக் கொண்டு, சிறுவனின் கால்களை கழுவி, துண்டால் துடைத்து விட்டார். அதற்குள் கடையில் இருந்த அந்த வேலையாள் காலுறைகளை கொண்டு வந்தான்.
அப்பெண்மணி அவன் கால்களில் காலுறையை போட்டு, காலணியும் வாங்கிக் கொடுத்து, மீதி இருந்த காலுறைகளை அவன் கையில் கொடுத்தார். அவர் சிறுவனின் தலையை தடவிக் கொடுத்து, “சிறுவனே! உனக்கு இப்போது சுகமாக இருக்கிறதா?” என்று கேட்டார்.
சிறுவன் பிரமித்து போய், பெண்மணியின் கையைப் பிடித்துக் கொண்டு, கண்ணீருடன் அவர் முகத்தைப் பார்த்து, “நீங்கள் கடவுளின் மனைவியா?” என்று கேட்டான்.
ஒரு குழந்தை பட்டை தீட்டாத வைரக் கல் போன்றவன். மேலும், ஒளிமயமான கற்பனையுடன் அவன் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறான்.
நீதி:
கடவுள் நமக்குக் கொடுத்த பாக்கியங்களை எண்ணி, நன்றி உணர்வு என்ற மனப்பான்மையுடன் நாம் இருக்க வேண்டும். எவருக்குத் தேவையோ, அவர்களுடன் பாக்கியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒருவரை புன்சிரிப்புடன் பார்க்கும் போது, இன்பமாக இருக்கிறது. அந்த இன்பத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது, அது அதிகரிக்கிறது. பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் பரிவுடன் இருத்தல் நடைமுறையில் செயற்படுத்த வேண்டிய நற்பண்புகள் என்பதனால், ஒருவருக்கு துக்கங்கள் அதிகரிக்கும் போது, இந்த நற்பண்புகளை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அந்த அனுபவம் நபரின் முகத்தில் புன்சிரிப்பை கொண்டு வரும்; அதற்கு நாம் தான் காரணமாக இருந்திருக்கிறோம் என்று தெரியும் போது, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
மொழி பெயர்ப்பு:
வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி
SOURCE: SSSIE