நீதி: அன்பு, பொறுமை
உப நீதி: நன்றியுணர்வு, சுய பரிசோதனை
“உலகைக் குணப்படுத்து. உனக்கும் எனக்கும் ஏற்ற ஓர் நல்ல இடமாக அதை மாற்று” என்று மைக்கேல் ஜாக்சன் பாடினார். மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த ஓர் உலகத்தில் வாழ வேண்டும் என்பதே நம் அனைவரின் கனவாக இருக்கும். நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை மாற்ற வேண்டும் என்று நாமும் மிக வீரமாக அடி எடுத்து வைப்போம். ஒரே எண்ணத்தில் நம்மை நிறுத்திக் கொண்டு, உண்மையை உணர மறுப்போம். நாம் உலகை மாற்றி ஒரு சாதனை செய்யப் போகிறோம் என்று நினைப்போம். ஆனால், இவ்வுலகம் மாற வேண்டும் என்று நினைப்பதை விட நம்முடைய எண்ணங்கள் மற்றும் நம் கண்ணோட்டத்தை மாற்றுவதே எளிது என்பதை விரைவில் புரிந்து கொள்வோம். ”உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக இருங்கள்” என்பது மகாத்மா காந்தியின் பிரபலமான பொன்மொழி.
லியோ டால்ஸ்டாய் ,“எல்லோரும் உலகை மாற்ற நினைக்கிறார்கள், ஆனால் எவரும் தன்னை மாற்றிக் கொள்ள நினைப்பதில்ல.” என்று கூறுகிறார்.
முன்னொரு காலத்தில், வளமான நாட்டை ஆண்ட ஒரு அரசன் இருந்தான். ஒரு நாள், அவர் தனது நாட்டின் சில தொலைதூர பகுதிகளுக்கு சுற்றுலா சென்றான். அவன் தனது அரண்மனைக்குத் திரும்பியபோது, தனது கால்கள் மிகவும் வலிப்பதாகக் கூறினான், ஏனெனில் அரசன் இவ்வளவு நீண்ட பயணத்திற்குச் செல்வது இதுவே முதல் முறை. மேலும் அவன் சென்ற பாதை, மிகவும் கரடுமுரடானதாக இருந்தது. பின்னர் அவன், நாட்டின் அனைத்து சாலைகளையும் தோலால் மூடும்படி கட்டளையிட்டான்.
நிச்சயமாக, இதற்கு ஆயிரக்கணக்கான மாடுகளின் தோல் தேவைப்படும், மேலும் பெரும் தொகையும் செலவாகும்.
அப்போது அவனுடைய புத்திசாலித்தனமான வேலைக்காரன் ஒருவன் அரசனிடம், “அந்தத் தேவையில்லாத பணத்தை ஏன் செலவழிக்க வேண்டும்? உங்கள் கால்களை மறைக்க ஒரு சிறிய தோலை மட்டும் ஏன் வெட்டக் கூடாது?” என்று தைரியமாகச் சொன்னான்.
ராஜா ஆச்சரியமடைந்தார். பிறகு அவர் தனக்கென ஒரு “காலணி” செய்யும் ஆலோசனையை ஒப்புக் கொண்டார்.
இந்தக் கதையில், உண்மையில் வாழ்க்கையின் மதிப்புமிக்க பாடம் உள்ளது: இந்த உலகத்தை, மகிழ்ச்சியாக வாழும் இடமாக மாற்ற, நீங்கள் உங்களை மாற்றிக் கொள்வது நல்லது – அதாவது உங்கள் இதயத்தை; இந்த உலகை அல்ல.
நாம் சந்திக்கும் பிரச்சனைகள் வெளியிலிருந்து தோன்றுபவை அல்ல; மாறாக நமக்குள்ளேயேதான் இருக்கின்றன. வெளிப்புற யதார்த்தத்தை மாற்ற, நாம் சில உள் மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டும்.
“மனிதர்களாகிய நமது மகத்துவம், உலகத்தை சீர்திருத்துவதில் இல்லை – அது அணு யுகத்தின் கட்டுக்கதை – நம்மை நாமே சீர்திருத்திக் கொள்வதில்தான் உள்ளது” என்கிறார் மகாத்மா காந்தி.
நம்மையே மாற்றிக் கொள்வதா? பழைய படங்கள் மற்றும் பழைய பாடல்களை மாற்றி அமைப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். காந்தி பேசும் மாற்றம் என்ன? மாற்றத்தை நோக்கிய நமது பாதையில் உள்ள முக்கியத் தடைகள், கவலை, கோபம், நன்றியின்மை, இரக்கமின்மை, நேர்மையின்மை போன்றவை. அவற்றைக் கடக்க முடிந்தால், நம்மை நாமே மாற்றிக் கொள்ளலாம்.
நீங்கள் ரெய்கியை கற்கச் சென்றால், முதலில் அவர்கள் பின்வரும் 5 கொள்கைகளைப் பின்பற்றச் சொல்கிறார்கள்:
இன்றைக்கு மட்டும், எனக்கு கிடைத்திருக்கிற பல நன்மைகளுக்கு நன்றி கூறுகிறேன்.
இன்றைக்கு மட்டும், நான் கவலைப்பட மாட்டேன்.
இன்றைக்கு மட்டும் நான் கோபப்பட மாட்டேன்.
இன்றைக்கு மட்டும், நான் என் வேலையை நேர்மையாக செய்வேன்.
இன்றைக்கு மட்டும், நான் எல்லா உயிர்களிடத்திலும் கருணை காட்டுவேன்.
வெளிப்படையாக, இவற்றைப் பின்பற்ற நீங்கள் ரெய்கி மாணவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. இவை அனைவருக்கும் பொருந்தும். இந்த எளிய உறுதிமொழிகளை நாம் ஒவ்வொரு நாளும் உண்மையாகப் பயிற்சி செய்தால், நாம் நம்முள் கடலளவு மாற்றத்தைக் காணலாம்.
வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (1100 A.D) ஆங்கிலிகன் பிஷப்பின் கல்லறையில் பின்வருமாறு பொறிக்கப்பட்டுள்ளது.
“நான் இளமையாகவும் சுதந்திரமாகவும் இருந்த போது, எனது கற்பனைக்கு எல்லையே இல்லை, நான் உலகத்தை மாற்ற வேண்டும் என்று கனவு கண்டேன். நான் புத்திசாலியாக வளர்ந்த பின், உலகம் மாறாது என்பதைக் கண்டுபிடித்தேன், அதனால் என் பார்வையை ஓரளவு சுருக்கி, என் நாட்டை மட்டும் மாற்ற முடிவு செய்தேன்.
ஆனால் அதுவும் இயலாததாகத் தோன்றியது.
நான் வயோதிக காலத்தில், இறுதி முயற்சியாக, என் குடும்பத்தை, எனக்கு மிக நெருக்கமானவர்களை மட்டும் மாற்ற எண்ணினேன., ஆனால் அதுவும் இயலாமல் போனது.
இப்போது, நான் என் மரணப் படுக்கையில் படுத்திருக்கையில், நான் திடீரென்று உணர்கிறேன்: நான் முதலில் என்னை மாற்றியிருந்தால், ஒரு முன்னுதாரணமாக இருந்து, என் குடும்பத்தை மாற்றியிருப்பேன்.
அவர்களின் உத்வேகம் மற்றும் ஊக்கத்திலிருந்து, நான் என் நாட்டை மேம்படுத்த முடிந்திருக்கும், யாருக்குத் தெரியும், நான் உலகையே மாற்றியிருக்கலாம்.”
நீதி:
நிலையான மாற்றம் உள்ளிருந்து வர வேண்டும். நாம் மாறும்போது, சுற்றுச்சூழலை முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்துடன் பார்க்கிறோம். நாம் ஒவ்வொருவரும் மாற்றத்தின் உதாரணமாகத் திகழ முடியும். மேலும், நாம் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒருவருக்காவது, ‘மாற்றம் உள்ளிருந்து தான் வரவேண்டும்‘ என்ற எண்ணத்தை விதைப்போம். அதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வோம் என்று உறுதி பூணுவோம்.
“உலகைக் குணப்படுத்து. உனக்கும் எனக்கும் ஏற்ற ஓர் நல்ல இடமாக அதை மாற்று” – மைகேல் ஜாக்சன்
மொழி பெயர்ப்பு:
காயத்ரி வெங்கட், சரஸ்வதி, ரஞ்சனி
SOURCE: SSSIE