நீதி – நன் நடத்தை
உபநீதி – பணிவு
மேல்பத்தூர் நாராயண பட்டாதிரி என்ற ஒரு சமஸ்கிருதப் புலவர், கேரளாவில் பதினாறாம் நூற்றாண்டில் வசித்து வந்தார். அவர் குருவாயூரப்பனின் ஆழ்ந்த பக்தர். அச்யுத பிஷரோடி என்பவரின் சிஷ்யன். குருவிற்குப் பக்கவாதம் என்ற கொடூர நோய் வந்ததனால், குரு தக்ஷிணையாக அந்த நோயை நாராயண பட்டாதிரி தன் மேல் எடுத்துக் கொண்டார்.
குணப்படுத்த முடியாத நோயாக இருந்ததனால், எழுத்தச்சன் என்ற மலையாளப் புலவர் ஒருவர் குருவாயூரப்பனிடம் சரணடைவது தான் ஒரே வழி என்று அவரிடம் சொன்னார். சமஸ்கிருதப் புலவராக இருந்ததால், பட்டாதிரி குருவாயூர் கோவிலில் தங்கியிருந்து தினமும் ஒரு காண்டம் (பத்து செய்யுள்) இயற்றினார். செய்யுட்கள் அனைத்தையும் முடித்தவுடன் அவர் நோயும் குணமாகி விட்டது. அவர் இயற்றிய பாகவத புராணத்தில் பதினெட்டு ஆயிரம் செய்யுட்கள் உள்ளன. அதை ஆயிரத்து முப்பத்தி நான்கு செய்யுட்களாகவும், நூறு காண்டங்களாகவும் பிரித்தார். இந்த அழகான நூலின் பெயர் தான் நாராயணீயம்.
பட்டாதிரி வாழ்ந்த காலத்திலே மற்றொரு புலவர் பூந்தானம் நம்பூதிரி என்பவர் இருந்தார். அவரும் குருவாயூரப்பன் பக்தர். “ஞானப்பனா” என்ற பெயரில் ஒரு மலையாள இறைவணக்கம் இயற்றினார். பட்டாதிரி அளவுக்கு புலமை மிக்கவராக இல்லாவிட்டாலும், அவர் இயற்றிய பாடல் வரிகள் எளிமையாகவும், பக்தி உணர்ச்சி ஊட்டுவதாகவும் இருக்கும். பட்டாதிரியிடம் அவர் இயற்றியிருப்பதை மறு ஆய்வு செய்து மாற்றுதல்கள் ஏதாவது இருந்தால் செய்யுமாறு கெஞ்சினார். ஆனால் பட்டாதிரிக்கு பணிவு என்ற நற்குணம் இல்லாமல் போனதால், அவர் கேட்ட உதவியை பொருட்படுத்தாமல், சமஸ்கிருத அறிவும் அவருக்குக் குறைவு என்ற பார்வையுடன் இருந்தார். பூந்தானம், வீட்டிற்குச் சென்றவுடன் வேதனையில் குருவாயூரப்பன் முன் நின்று அழுதார்.
அன்று இரவு பட்டாதிரி கனவில், அவர் நாராயணீயம் சொல்ல இருந்த போது, ஒரு சிறிய பையன் தோன்றினான். அந்தச் சிறுவனைப் பக்கத்தில் உட்கார வைத்து நாராயணீயம் சொல்லத் தொடங்கினார். முதல் செய்யுளில் அந்தச் சிறுவன் ஒரு பிழையைக் கண்டுப் பிடித்தான். அதை ஒத்துக் கொண்டு அடுத்த செய்யுளைச் சொல்ல ஆரம்பித்தார். அதில் இரண்டு பிழைகள். மூன்றாவதில் மூன்று பிழைகள் என்று போய்க் கொண்டிருந்தது. பத்தாவது செய்யுள் ஆரம்பித்தவுடன் பட்டாதிரிக்கு எல்லாம் புரிந்து விட்டது. அந்தச் சிறுவன் சாக்ஷாத் குருவாயூரப்பன் தான். பட்டாதிரியின் விபக்தியை (சமஸ்கிருத அறிவு) விட பூந்தானத்தின் பக்தி தான் உயர்ந்தது. அடுத்த நாள் பூந்தானத்தின் வீட்டிற்குச் சென்று அவர் மன்னிப்புக் கேட்டார்.
“ஞானப்பனா” என்ற இறைவணக்கத்தைப் படித்த போது அதில் ஒரு தவறு கூட இல்லை. மலையாள இலக்கியத்தில் இது ஒரு பெரிய படைப்பு. செய்யுள் வடிவில் எழுதப்பட்ட, பக்தி நிறைந்த ஒரு சிறப்பு இலக்கியமாகும். கேரளாவில் பெரிய அளவில் பேசக்கூடிய ஒரு அழகான படைப்பு.
நீதி:
திடநம்பிக்கையும், பக்தியும் அறிவை விடச் சிறந்தவை. அன்பும், பணிவும் இல்லாத அறிவு பயனற்றது. பணிவு தான் பண்பின் அதிகார முத்திரை.
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற
அடக்கமான பண்பும், இயல்பாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு எதுவும் இருக்க முடியாது.
மொழி பெயர்ப்பு:
சரஸ்வதி, ரஞ்சனி