நீதி: உண்மை
உபநீதி: உள்ளார்ந்து நோக்குதல்
இறைவனைப் பற்றிய உள்ளார்ந்த உண்மையை, நாமதேவர் முழுதாக உணரவில்லை என்பதை அறிந்த விட்டோபா, அதை அவருக்கு உணர்த்த விரும்பினார்.
ஞானேஷ்வரரும், நாமதேவரும் தங்கள் புனித யாத்திரையை முடித்து விட்டு திரும்பிய போது, கோரா கும்பார் தன் இருப்பிடத்தில் அனைத்து ஞானிகளுக்கும் ஒரு விருந்து வைத்தார். அங்கு ஞானேஷ்வரரும், நாமதேவரும் இருந்தனர். விருந்தில் ஞானேஷ்வரர், கோரா
கும்பாருடன் இணைந்து ஒரு நாடகம் நடத்த நினைத்தார். அவர் எல்லோர் முன்னினையிலும் கோராவைப் பார்த்து, “நீங்கள் ஒரு குயவர். தினமும் பானைகள் செய்து, பக்குவப் படுத்திய மற்றும் பக்குவப் படுத்தாத பானைகள் எது என்று சோதனை செய்கிறீர்கள்.
உங்கள் முன் அமர்ந்திருக்கும் ஞானிகள், நம்மைப் படைத்த பிரம்மன் உருவாக்கிய பானைகள். இவர்களை உங்கள் பாணியில் சோதனை செய்து, பக்குவம் அடைந்த ஞானிகளையும், பக்குவம் அடையாத ஞானிகளையும் கண்டு பிடித்து சொல்லவும்” என்றார்.
கட்டளையை மேற்கொண்ட கோரா தான் அவ்வாறே செய்வதாகக் கூறி, பானைகளின் சப்தத்தை வெளிப்படுத்தும் கோலை எடுத்துக் கொண்டார். அதை ஒவ்வொருவர் தலையிலும், பானையைப் பரிசோதிப்பது போல தட்டிப் பார்த்தார். எல்லா ஞானிகளும் கோரா செய்யும் சோதனைக்கு பணிந்து ஒத்துழைத்தனர். கோரா நாமதேவரை நெருங்கிய போது அவர் கோபத்துடன், “ஏய் குயவனே! என்னை உன் கையிலுள்ள கோலால் தட்டிப் பார்க்க உனக்கு என்ன அருகதை இருக்கிறது?” என்று கேட்டார். கோரா ஞானேஷ்வரரிடம், “சுவாமி! மற்ற எல்லாப் பானைகளும் பக்குவம் அடைந்துள்ளன. இந்த ஒன்று மட்டும் (நாமதேவர்) பக்குவம் அடையாத நிலையில் இருக்கின்றது” என்றார். அங்கு கூடியிருந்த ஞானிகள் அனைவரும் இதைக் கேட்டு சிரித்து விட்டனர்.
அவமானம் தாங்காமல் நாமதேவர் தான் வணங்கும் விட்டலாவிடம் ஓடினார்; ஏனெனில் விட்டலா நாமதேவரின் நெருங்கிய நண்பர். விளையாடுவது, சாப்பிடுவது, தூங்குவது போன்ற பல விஷயங்களை இருவரும் ஒன்றாகவே செய்தனர். நாமதேவர் தனக்கு நேர்ந்த அவமானத்தை விட்டலாவிடம் கூறினார். எல்லாம் அறிந்த விட்டலா, ஒன்றும் அறியாதது போல் நாமதேவரை பரிதாபமாகப் பார்த்து, கோரா கும்பர் வீட்டில் நடந்தவற்றை விசாரித்தார். எல்லாவற்றையும் கேட்ட விட்டலா, “எல்லோரும் கோலால் தட்டுவதற்கு சம்மதித்த போது, நீ மட்டும் ஏன் ஒத்துழைக்கவில்லை? எல்லா பிரச்சனைகளுக்கும் இது தான் காரணம்” என்றார். இதைக் கேட்ட நாமதேவர் இன்னமும் எரிச்சலாகி, “நீங்களும் அவர்களுடன் சேர்ந்து என்னை பரிகாசம் செய்கிறீர்களா? எல்லோரையும் போல நானும் ஏன் பணிய வேண்டும்? நான் உங்களுடைய நெருங்கிய நண்பனல்லவா? உங்களுடைய குழந்தையல்லவா?” என்று கேட்டார். விட்டலா, “உண்மையை நீ இன்னமும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. நான் சொன்னாலும் உனக்கு புரியப் போவதில்லை. ஆனால் அந்த அடர்ந்த காட்டில் உள்ள பாழடைந்த கோவிலில் உள்ள முனிவரிடம் செல். அவர் உனக்கு தெளிவு படுத்துவார்” என்றார்.
நாமதேவர் அந்தக் கோவிலுக்குள் சென்ற போது, ஒரு மூலையில், வயதான, தற்பெருமையற்ற ஒருவர் தன் கால்களை ஒரு சிவலிங்கத்தின் மேல் வைத்துக் கொண்டு உறங்குவதைக் கண்டார். விட்டலாவின் நண்பனான தன்னை, இந்த மனிதர் தெளிவூட்டப் போகிறார் என்பதை நாமதேவரால் நம்ப முடியவில்லை. ஆனால் அந்த இடத்தில் வேறு ஒருவரும் இல்லாததால், அந்த மனிதரிடம் சென்று கைகளைத் தட்டினார். அவர் விழித்தெழுந்து, “விட்டல் அனுப்பிய நாமதேவர் நீங்கள் தானா? வாருங்கள்” என்றார். இதைக் கேட்ட நாமதேவர் பேச முடியாமல் மௌனமானார். “இவர் ஒரு மகானாகத் தான் இருக்க வேண்டும். ஆனால், எவ்வளவு உயர்ந்த மனிதனாக இருந்தாலும், சிவலிங்கத்தின் மேல் காலை வைப்பது தவறான செயல் ஆகும்” என எண்ணினார். அவரிடம், “உங்களைப் பார்த்தால் சிறந்த மனிதராகத் தெரிகிறது. ஆனால் சிவலிங்கத்தின் மேல் காலை வைப்பது முறையான செயலா?” என்று நாமதேவர் கேட்டார். அதற்கு அந்த வயதானவர், “ஆஹா, என் கால்கள் லிங்கத்தின் மீதா இருக்கிறது? அதை வேறு எங்கேயாவது திருப்பி வைத்து விடுங்கள்” என்றார்.
நாமதேவர் பெரியவரின் பாதங்களை வெவ்வேறு இடங்களில் வைத்த போது, அங்கெல்லாம் சிவலிங்கங்கள் தோன்றியன; இறுதியாக, அந்தப் பாதங்களைத் தனது மடியில் வைத்துக் கொண்ட போது, தானே சிவலிங்கமாக மாறியதை நாமதேவர் கண்டார். அப்போது தான், கடவுளைப் பற்றிய உண்மையை உணர்ந்தார். பெரியவர் நாமதேவரை திரும்பிப் போக அனுமதித்தார்.
நீதி:
நாம் பரிபூரண சரணாகதியடைந்து, குருவின் பாதங்களைப் பற்றினால் ஞானத்தைப் பெறலாம் என்பது இந்தக் கதையின் மூலம் புலனாகிறது. நாமதேவர் பரிபூரண ஞான வரம் பெற்ற பின், வழக்கமாக செல்லும் விட்டலாவின் கோவிலுக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். சிறிது நாட்களுக்குப் பின் விட்டலா நாமதேவரின் வீட்டிற்குச் சென்று ஒரு கபடமும் இல்லாதவரைப் போல், இத்தனை நாள் தன்னை நாமதேவர் எவ்வாறு மறந்தார் எனவும், தன்னை ஏன் பார்க்க வரவில்லை எனவும் வினவினார். அதற்கு நாமதேவர், “என்னை இனியும் முட்டாளாக்க வேண்டாம். நீங்கள் இல்லாத இடம் எது? உங்களுடன் இருப்பதற்கு நான் கோவிலுக்குத் தான் செல்ல வேண்டுமா? நீங்கள் இல்லாமல் நான் ஏது?” என்றார். விட்டலா “இப்பொழுது நீ உண்மையை உணர்ந்திருக்கிறாய். அதற்காகத் தான் நான் உன்னை அங்கு அனுப்பினேன்” என்றார்.
புனித யாத்திரை செல்லுதல், தர்மம் செய்தல், தர்ம சாஸ்திரத்தைப் படித்தல் போன்றவை நமக்கு கட்டுப்பாடு, நம்பிக்கை, பொறுமை இவைகளை அளிக்கும். இவை எல்லாம் மனம் தூய்மை பெற மிகவும் அவசியம். ஆனால் ஞானம் பெறுவதற்கு உண்மையான பயிற்சி மிகவும் அவசியம். இதற்கு நம்மை நாமே உணர வேண்டும். தன்னை உணர்ந்தவன் மாயைக்கு ஆட்படுவதில்லை. இதை அறியாதவன், தான் எனும் அகந்தையால் சூழப்பட்டிருப்பான். தான் எனும் தன்மை மாயையான ஒன்றே தவிர, உண்மையான தன்னிலை அல்ல; அகந்தை, நம்மிலிருந்து கடவுளை வெளியேற்றிவிடும். நமது உண்மை நிலை தெரியாத போது அகந்தை வெளிப்படுகிறது. உண்மையான தன்னிலையை உணராத போது, நாம் மாயை நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.
நாம் வெளியில் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், மனதில் இருள் சூழ்ந்திருந்தால், ஆசைகளிலிருந்து விடுபட முடியாது. குரு வாக்கின்படி, நாம் மாயையை அகற்றி, நம் உண்மை நிலையை அறிய பயிற்சி செய்ய வேண்டும். இதற்காக, ஓ! மூட மனமே! கோவிந்தனை நாடு.
மொழி பெயர்ப்பு:
கோதண்டராமன், சரஸ்வதி, ரஞ்சனி
Source: http://saibalsanskaar.wordpress.com