Archive | July 2017

ராஜா ஹரிச்சந்திரன் – உண்மையின் திருவுருவம்

நீதி – உண்மை

உபநீதி – வாய்மை

King Harischandra - picture 1

ரகுகுல திலகமாக திகழ்ந்த ஸ்ரீ ராமபிரானின் முன்னோராக வாழ்ந்த திரிசங்குவின் மகன் ஹரிச்சந்திரன், தன் மனைவி தாராமதி மற்றும் மகன் ரோஹிதாசனுடன் அயோத்திய நாட்டை ஆட்சி புரிந்தார். ராஜா ஹரிச்சந்திரன் மிக அன்பாகவும், நியாயமான விதத்திலும் ஆட்சி புரிந்ததால், மக்களும் சந்தோஷமாக இருந்தனர்.

மிக சிறு வயதிலேயே, ஹரிச்சந்திரன் உண்மையின் சக்தியை அறிந்து, எக்காரணத்தைக் கொண்டும் பொய் சொல்லக் கூடாது என்றும், கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் எனவும் தீர்மானித்தார்.  காலப் போக்கில், உண்மை, வாய்மை மற்றும் நேர்மை ஆகிய நற்பண்புகள் அவருடைய புகழை மேம்படுத்தி தேவ லோகத்திற்கே கொண்டு சேர்த்தன. தேவர்கள் ராஜாவை சோதிக்க தீர்மானித்து, இந்த பணிக்கு விச்வாமித்திரரை தேர்ந்தெடுத்தனர்.

விச்வாமித்திரர் இந்த பணியை வெற்றிகரமாக முடிக்க தீவிரமாக முயற்சித்தார். ஆனால், ராஜா தன் வாக்கை எப்போதும் காப்பாற்றி வந்ததால், விச்வாமித்திரரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

King Harischandra - picture 2இறுதியாக, விச்வாமித்திரர் சூழ்ச்சி செய்து, ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி, ராஜாவிடம் இருந்த உடைமைகளை பறித்துக் கொண்டார். இதற்குப் பிறகும், ராஜா புன்சிரிப்போடு ராஜ்ஜியத்தையே விச்வாமித்திரரிடம் அர்ப்பணித்து விட்டு, கிழிந்த ஆடைகளோடு, தன் மனைவி மற்றும் மகனுடன் காட்டிற்குச் செல்ல தயாரானார். ராஜாவின் தாராள மனப்பான்மையைப் பார்த்து வியப்புற்று, இறுதியாக விச்வாமித்திரர் ராஜாவை தூண்டுவதற்காக, தக்ஷிணையாக நன்கொடை கொடுக்கச் சொன்னார்.

ராஜா, அவருக்கென சொந்தமான அனைத்தையும் பறிக் கொடுத்ததால், தக்ஷிணையாக கொடுக்க ஒன்றுமில்லை; ஆனால், பிராமணருக்கு கேட்டதை கொடுக்காவிட்டால், பாவங்கள் சுமக்க வேண்டியிருக்கும் என எண்ணி, விச்வாமித்திரரிடம் சற்று அவகாசம் கேட்டார். ராஜா, முனிவரைப் பார்த்து, “எனக்கென்று ஒன்றுமில்லை. ஒரு மாதம் அவகாசம் கொடுத்தால், நான் எப்படியாவது தக்ஷிணையை கொடுத்து விடுகிறேன்” எனக் கெஞ்சினார். இந்த பணிவான வேண்டுகோளை கேட்டவுடன், விச்வாமித்திரர் அவருக்கு ஒரு மாதம் அவகாசம் கொடுத்தார்.

எப்படியாவது பணத்தை சம்பாதித்து விடலாம் என்று எண்ணி ராஜா நாடு முழுவதும் சுற்றினார்; ஆனால், அவருக்கு சாதகமாக ஒன்றும் அமையவில்லை. இறுதியாக, இன்று வாரணாசி என்று அழைக்கப்படும் புண்ணிய ஸ்தலமான காசிக்கு சென்றார்.

நெருக்கடியான காசி நகரத்தில் மக்கள் பொங்கி வழிந்தனர். பண்டிதர்கள் தன் அறிவை மேம்படுத்திக் கொள்ள வந்தனர்; யாத்திரிகள் பக்தி பரவசமோடு கூட்டம் கூட்டமாக வந்தனர்; வயதானவர்கள் புண்ணியத்தை சேர்த்துக் கொண்டு தன் கடைசி காலத்தை இந்த புண்ணிய ஸ்தலத்தில் கழிக்க வந்தனர். இந்த நகரத்திலும் வேலை கிடைக்காமல் ராஜா தவித்தார்.

விச்வாமித்திரர் கொடுத்த அவகாசம் முடிய சில நாட்களே இருந்ததால், ராஜா கவலையுற்றார். கொடுத்த வார்த்தையை காப்பாற்ற முடியவில்லையே என்று ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தார். இறுதியாக, ராஜாவின் தர்ம பத்தினி தாராமதி, “நான் சொல்வதை சற்று கேளுங்கள். இந்த யோசனை உங்களுக்கு பொருத்தமானதாக இல்லாவிட்டாலும், வேறு வழி தெரியவில்லை. இந்த நகரத்தில், செல்வந்தர்களுக்கு அடிமையாக வேலை செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. என்னை விற்று, அதில் வரும் பணத்தை முனிவருக்கு கொடுத்து விடுங்கள். பிறகு, பணம் சம்பாதித்தவுடன் என்னை மறுபடியும் மீட்டு விடலாம்” என்ற யோசனையை கொடுத்தார்.

ராஜா இந்த யோசனையைக் கேட்டு பதறினார். “என் கஷ்டங்களைப் பகிர்ந்து கொண்ட மனைவியை விற்று விடுவதா. முடியவே முடியாது!” எனக் கதறினார். ஆனால், ராஜா பணமும் சம்பாதிக்க முடியாதலால் வேறு வழி தெரியாமல் மனைவி சொன்னதையே செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

King Harischandra - picture 3ராஜா மனைவியை சந்தைக்குக் கூட்டிச் சென்று, மிகவும் அதிகமாக ஏலம் கேட்பவரிடம் விற்று விட்டார்; ஒரு வயதான பிராமணர், ராஜாவின் குழந்தையை மனைவியுடன் பார்த்தவுடன், சற்று அதிக தொகையை ராஜாவிடம் அளித்து விட்டு, மனைவியையும், குழந்தையையும் அழைத்துச் சென்றார். ராஜா பணத்தை வாங்கிக் கொண்டு, வேறு வழி தெரியாமல் கிளம்பும் போது, விச்வாமித்திரர் அங்கு வந்து தக்ஷிணையை அதிகாரத்துடன் கேட்டார். ராஜா, அவரிடம் இருந்த எல்லாப் பணத்தையும் கொடுத்து விட்டார்; ஆனால், விச்வாமித்திரரை திருப்தி செய்ய முடியவில்லை. “என்னைப் போல தகுதியுள்ள முனிவருக்கு இவ்வளவு தான் தக்ஷிணை கொடுப்பாயா. இந்த பணம் மிகவும் குறைவு!” என முனிவர் கூறினார்.

ராஜா மன வேதனையுடன் என்ன செய்வது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, சுடுகாட்டில் பிணங்களை எரிக்கும் வேலை செய்து கொண்டிருந்த சண்டாளன் ஒருவன் அங்கு வந்து, வேலைக்கு ஆள் தேவை என்று கேட்டான். உடனே விச்வாமித்திரர், “நீ ஏன் இவனுக்கு அடிமையாகக் கூடாது? அதில் வரும் தொகையை எனக்குக் கொடுத்து தக்ஷிணையை பூர்த்தி செய்து விடு” என்றார்.

King Harischandra - picture 4இதைக் கேட்ட ஹரிச்சந்திரன் அதிர்ச்சியுற்றார். ராஜாவாக இருப்பவர் ஒரு சண்டாளனுக்கு வேலை செய்ய வேண்டுமா! இந்த மாதிரியான எண்ணங்கள் இருந்தாலும், ராஜாவிற்கு வேறு வழி தெரியவில்லை. தன்னை சண்டாளனுக்கு விற்று விட்டு, அதிலிருந்து சம்பாதித்த தொகையையும் கொடுத்த பின், விச்வாமித்திரர் திருப்தி அடைந்தார். இப்போது, ராஜாவை சண்டாளனுக்கு அடிமையாக விட்டு விட்டு முனிவர் சென்று விட்டார்.

சுடுகாட்டில், சண்டாளன் ராஜாவிற்கு வேலை கொடுத்தான். மனதிற்கு சற்று வேதனையாக இருந்தாலும், ராஜா சுடுகாட்டில் தங்கி, எல்லா வேலைகளையும் கற்றுக் கொண்டார்.

ராஜாவின் எண்ணங்கள், தொடர்ந்து மனைவி மற்றும் குழந்தையின் மீது இருந்தன; மனதிற்கு வேதனையாக இருந்தது. “அவர்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருப்பார்களோ? நான் சென்று அவர்களை அழைத்து வருவதற்கு காத்து கொண்டிருப்பார்களோ? நானே அடிமையாக வேலை செய்கிறேன் என்பது கூட அவர்களுக்கு தெரியாதே!” என்ற யோசனைகளுடன் வாழ்ந்து வந்தார்.

நாட்கள் கழிந்தன; ராஜாவிற்கு வேலை பழக்கமாகி விட்டது. அவர் மனைவியும், மகனும் பிராமணர் வீட்டில் கடினமான வாழ்க்கை மற்றும் ஏழ்மையான சூழ்நிலைக்கு பழக்கம் ஆகிவிட்டார்கள். ஒரு நாள், அச்சிறுவன் பூந்தோட்டத்திற்கு மலர்கள் கொண்டு வர செல்லும் பொழுது, பாம்பு கடித்து இறந்தான். தாராமதி, சமாதானம் செய்ய முடியாத நிலைமையில் இருந்தாள். அவள், மன வேதனை தாங்காமல் மிகவும் அழுதாள்; இறுதியாக, குழந்தையை தூக்கிக் கொண்டு சுடுகாட்டிற்குச் சென்றாள்.

தாராமதி குழந்தையை தூக்கிக் கொண்டு வந்த பொழுது, சுடுகாட்டில் ராஜா வேலை செய்து கொண்டிருந்தார். ஏழ்மை மற்றும் கடினமான வாழ்க்கையின் காரணமாக, ஒருவரை ஒருவர் அடையாளம் கூட கண்டு பிடிக்க முடியவில்லை. ராஜா தன் வேலையை செய்வதற்கு பணம் கேட்டார். உடனே தாராமதி, “நான் அடிமையாக வேலை செய்து கொண்டிருக்கிறேன். நான் அணிந்திருக்கும் ஆடைகளைத் தவிர என்னிடம் வேறு ஒன்றுமில்லை. என் குழந்தையும் இறந்து விட்டான். நான் எங்கிருந்து பணத்தை கொடுப்பது?” என்று கூறி அழுதாள். ராஜாவிற்கு வேதனையாக இருந்தாலும், தன் கடமை தான் முக்கியம் என்ற கண்ணோட்டத்தில், அவர் செய்யும் தொழிலுக்கு பணம் வாங்க வேண்டும் என்ற கருத்துடன் இருந்தார்.

உடனே, “நீ ஏன் பொய் சொல்கிறாய்? கொடுப்பதற்கு ஒன்றுமே இல்லை என சொன்னாய். நான் செய்ய போகின்ற வேலைக்கு உன் தாலியை கழட்டி கொடுக்கலாமே” எனக் கூறினார்.

King Harischandra - picture 5இதைக் கேட்ட தாராமதி பிரமித்து போனார். அவள் அணிந்திருந்த தாலி, கணவனுக்கு மட்டுமே அடையாளம் தெரிந்த வகையில் சிறப்பு பெற்றிருந்தது. தன் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்ள முடியாமல், “நாம் இருவரும் முந்தைய ஜன்மத்தில் பாவங்கள் அதிகமாக பண்ணி இருக்கிறோம் போல தோன்றுகிறது. அதனால் தான், நாம் இந்த நிலைமையில் இருக்கிறோம். உங்களின் மனைவியையே உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையே. இது நம் மகன், ஒரு இளவரசன், ஆனால், இங்கு மாண்டு கிடக்கிறான். இறுதி சடங்குகளை செய்வதற்குக் கூட பணமில்லை!” என்று வருந்தினாள்.

தாராமதி இவ்வார்த்தைகளை பேசியவுடன், ராஜாவிற்கு தன் மனைவியை அடையாளம் தெரிந்து விட்டது. மகனுக்காக தந்தை அழுதார்; ஆனால், தன் கடமையிலிருந்து தப்பித்து விடவில்லை. அவர், “சந்தர்ப்ப சூழ்நிலை எப்படி இருந்தாலும், உன்னிடமிருந்து இறுதி சடங்குகளை செய்து முடிப்பதற்கான பணத்தை நான் வாங்க வேண்டும்!” என்று கூறினார்.

தர்ம பத்தினியாக இருந்த தாராமதி, “நான் சுமங்கலியாக இருப்பதற்கு அடையாளமான இந்த திருமாங்கல்யத்தை கழட்டி, இறுதி சடங்குகளுக்கான தொகையாகக் கொடுக்கிறேன்” என்றாள். அந்த சமயம், தேவ லோகத்திலிருந்து பலத்த கரகோஷம் எழும்பியது.

தேவ லோகமே மலர்களைத் தூவி, தம்பதியரை ஆசீர்வதித்தது; விச்வாமித்திரர் அவர்களுக்கு முன் தோன்றி, “இந்த கடினமான சம்பவங்கள், நீங்கள் அனுபவித்தது எல்லாமே உங்களின் உண்மை மற்றும் வாய்மையை சோதிக்க வேண்டும் என்பதற்காக தான். நீங்கள் போட்டியை வென்றதோடு, சொர்க்கத்திலும் இடம் பிடித்து விட்டீர்கள். இப்போது நீங்கள் உங்களின் ராஜ்ஜியத்திற்கு மனைவியுடனும், மகனுடனும் சென்று, பொருத்தமான நேரம் வரும் வரை ராஜ்ஜியத்தை ஆட்சி செய்யலாம்” எனக் கூறினார். இதைக் கேட்டவுடன், மாண்டிருந்த இளவரசன், ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுந்ததைப் போல கண் முழித்துக் கொண்டான்.

ராஜா தன் மகன் உயிரோடு இருப்பதைப் பார்த்து பேரின்பத்துடன் இருந்தார். தன் கஷ்டங்கள் எல்லாமே முடிவடைந்ததை நினைத்து மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். ஆனால் ராஜா, “முனிவரே, நீங்கள் இந்த கஷ்டங்கள் எல்லாமே என்னை சோதிக்க கொடுத்திருக்கலாம். என்ன சொன்னாலும், நான் ஒரு சண்டாளனுக்கு அடிப் பணிந்து வேலை செய்தேன், என் மனைவி ஒரு பிராமணருக்கு அடிமையாக வேலை செய்தாள். நாங்கள் அடிமைகளாக இருந்ததால், உங்களிடமிருந்து ஒன்றுமே ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார்.

முனிவர் சந்தோஷமாக இருந்தார். அவர், “ஹரிச்சந்திரன், நீ நற்குணங்கள் நிறைந்த மனிதராக திகழ்கிறாய். உண்மையும், வாய்மையும் பேசும் உன்னைப் போல எவரையும் பார்த்ததில்லை. நீங்கள் யாரிடம் வேலை செய்தீர்கள் என்பதை தற்சமயம் காண்பிக்கிறேன்” என்றார். பிராமணர் தேவேந்திரனாகவும், சண்டாளன் யமராஜனாகவும் வருவதை ராஜா கவனித்தார். அவர்கள் ராஜாவிடம், “நாங்கள் உங்களை சோதிப்பதற்காக எடுத்துக் கொண்ட வேஷம். எங்களை மன்னித்து விடுங்கள். நீங்கள் ராஜ்ஜியத்தை நிம்மதியாக இப்போது ஆட்சி செய்யலாம்” என்றனர்.

ஹரிச்சந்திரன் அயோத்தியாவிற்கு சென்று, நல்ல விதத்தில் ராஜ்ஜியத்தை ஆட்சி செய்து, சரியான சமயத்தில் தன் மகன் ரோஹிதாசனிடம் பொறுப்புகள் அனைவற்றையும் கொடுத்து விட்டு மோக்ஷத்தை அடைந்தார்.

நீதி:

ஹரிச்சந்திரன்  என்ற பெயரைக் கேட்டால், உண்மை மற்றும் வாய்மை என்ற நற்பண்புகள் மனதிற்கு ஞாபகம் வருகின்றன. அவர் கதையைக் கேட்ட பல ஆயிக்கணக்கான மக்கள் உற்சாகத்துடன் இருப்பதைப் பற்றி சந்தேகமே இல்லை. ஹரிச்சந்திரனை உண்மையிலேயே சிரஞ்சீவி எனக் கூறலாம். அவர் நடைமுறையில், உண்மை மற்றும் வாய்மை என்ற நற்பண்புகளை ஒவ்வொரு செயலிலும் பின்பற்றினார். எந்த கஷ்டத்திலும், உண்மையாக செயற்பட்டால், இறுதியில் வெற்றி நிச்சயம். எச்சமயத்திலும், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை எல்லோருக்கும் உதாரணமாக இருக்கிறது.

சத்யமேவ ஜெயதே என்ற கொள்கையை, ஹரிச்சந்திரன்  நடைமுறையில் வாழ்ந்து காட்டினார்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

 

 

 

 

சாதுவைப் போல் நடித்த மீனவன்

நீதி நன் நடத்தை

உப நீதி – மாற்றம்

The fisherman who pretended like a sage - picture 1ஒரு நள்ளிரவு நேரம், மீனவன் ஒருவன், தனியார் தோட்டத்திற்குள் திருட்டுத்தனமாக நுழைந்தான்; அங்கு, மீன்கள் நிறைந்த ஒரு குளம் இருந்தது. அந்த வீடு இருட்டாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தான். வீட்டில் உள்ள அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள் என எண்ணி, அந்தக் குளத்திலிருந்து சில மீன்களைப் பிடிக்கலாம் என்று முடிவு செய்தான்.

the fisherman who pretended like a sage - picture 2ஆனால், மீனவன் வலையை தண்ணீரில் வீசும் போது, அந்த சத்தம் வீட்டுக்காரரை எழுப்பியது. உடனே அவர், “உனக்கு அந்த சப்தம் கேட்டதா? யாரோ நம் மீன்களைத் திருடுகிறார்கள் போலிருக்கே!” எனக் கூறினார்.

எஜமானன் வேலையாட்களை அழைத்து வெளியில் சென்று பார்க்கச் சொன்னார். மீனவன் குழப்பத்தில் தவித்து, “அவர்கள் இந்தப் பக்கம் தான் வருகிறார்கள்! என்னை அடிக்க விரைவில் வந்து விடுவார்களே. நான் என்ன செய்வேன்? ” என்று முணுமுணுத்துக் கொண்டான்.

the fisherman who pretended like a sage - picture 3அவன் அவசரமாக வலையை ஒரு புதருக்குள் ஒளித்து விட்டு ஓடத் துவங்கினான். ஆனால் தப்பிக்க வழி ஏதும் இல்லாததால், ஒளிந்து கொள்ள ஒரு இடத்தைத் தேடிக் கொண்டிருந்தான். அச்சமயம், அங்கு  எரிந்து கொண்டிருக்கும் தீ ஒன்றைப் பார்த்தான். அநேகமாக, ஒரு சாது அங்கு யாகம் செய்து விட்டு சென்றிருப்பார் என எண்ணினான்.

இதைவிட சாதகமான சந்தர்ப்பம் கிடைக்காது என்று எண்ணினான்; விதிக்கு நன்றி கூறி, சற்று நிம்மதியடைந்தான். அவன் உடனடியாக தன் தலைப்பாகையைக் கழற்றி, சிறிது சாம்பலைத் தன் கைகளிலும், நெற்றியிலும் பூசிக் கொண்டு, ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் ஒரு சாதுவைப் போல நடித்து, அந்தத் தீயின் முன் அமர்ந்தான்.

துரத்திய வேலையாட்கள் சாதுவைக் கண்டு, தொந்தரவு செய்யாமல் விட்டு விடலாம் என்று முடிவு செய்தனர்.

“என்ன ஆயிற்று? திருடனைக் கண்டு பிடித்தீர்களா?” என்று கேட்டார் வீட்டு எஜமானர்.

“அதிர்ஷ்டம் இல்லை ஐயா. அவன் தப்பிவிட்டான். ஆனால் சாது ஒருவர் நமது தோட்டத்தில் தியானம் செய்து கொண்டிருக்கிறார்” என்று வேலையாட்கள் கூறினர்.

உடனே வீட்டுக்காரர், “என் தோட்டத்தில் ஒரு சாதுவா! நான் பெரும் பாக்கியசாலி. என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள்” என்று கூறினார்.

வேலையாட்கள் அவரை,  மீனவன் தியானம் செய்வது போல அமர்ந்திருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் அருகில் சென்ற போது,  எஜமானன் அந்த மகரிஷிக்குத் தொந்தரவாக இருக்கக் கூடாதென்று தம் ஆட்களை அமைதியாக இருக்கும்படிக் கூறினார்.

“நான் அவர்களை ஏமாற்றி விட்டேன், அந்த வீட்டு எஜமானனைக் கூட!” என்று நடித்துக் கொண்டிருக்கும் மீனவன் நினைத்தான்.

ஒரு வழியாக அந்த வீட்டு எஜமானனும் அவருடைய வேலையாட்களும் கிளம்பிச் சென்றனர். மீனவன், இன்னும் சில மணி நேரங்கள் அமைதியாக அமர்ந்து கழித்து விடலாம், பின்னர் விடியும் சமயத்தில் தப்பித்து விடலாம் என்று முடிவு செய்தான். அதிகாலை நேரம்,  அவன் தப்பிக்க முயன்ற போது, ஒரு இளம் தம்பதியர் கையில் குழந்தையுடன் அவனை நோக்கி வருவதைக் கண்டான்.

அவர்கள், “ஸ்வாமி! நாங்கள் உங்களைப் பற்றி கேள்விப்பட்டு, ஆசீர்வாதம் பெற இங்கு வந்துள்ளோம். எங்கள் குழந்தையை ஆசீர்வதியுங்கள்” என்று கூறினர்.

நடித்து கொண்டிருக்கும் மீனவன், “பகவான் உங்களை ரக்ஷிக்கட்டும்!” எனக் கூறினார்

the fisherman who pretended like a sage - picture 4அந்த தம்பதி கிளம்பியவுடன், ஒரு பெரிய மக்கள் கூட்டமே அவனிடமிருந்து ஆசீர்வாதம் பெற வருவதை மீனவன் கண்டான். அவர்கள் பூ, இனிப்பு வகைகள், மேலும் வெள்ளித் தட்டுகள் போன்ற பல விதமான பொருட்களை அவனுக்கு காணிக்கையாக தம் கைகளில் வைத்திருந்தனர்.

மீனவன், மக்கள் காட்டும் மரியாதை மற்றும் பக்தியைக் கண்டு  நெகிழ்ந்தான். இனிமேல் நடிப்பதை விட்டுவிட்டு, ஒரு உண்மையான சாதுவாக மாறுவதென்று முடிவெடுத்தான். திருட்டுத் தொழிலைக் கைவிட்டு மீதி இருந்த தம் வாழ்நாட்களை பக்தியிலும் தியானத்திலுமே செலவிட்டான்.

நீதி

இக் கதையில் வரும் திருடனைப் போல,  பல சந்தர்ப்ப சூழ்நிலைகள் நம் வாழ்கையை மாற்றுகின்றன. முதலில் ஒருவன் நடிக்கத் துவங்குகிறான். விரைவில் அவன் அதுவாகவே மாறிவிடுகிறான். சிறிது நேரம் நடித்ததற்கே இப்படி ஒரு மாற்றம் என்றால், தொடர்ந்து நல்லதையே செய்தால் நம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்று யோசிக்க இந்த கதை தூண்டுகிறது. அதனால், எச்சமயத்திலும் நற்செயல்கள் செய்வதில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டால், நம் எண்ணங்களும், மனப்பான்மையும் நல்ல விதத்தில் திருப்பம் அடையும்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

 

ஓய்வுபெற்ற படைக்கப்பல் முதல்வர்

The retired Sea Captain1நீதி நன் நடத்தை

உபநீதி – நம்பிக்கை, தெளிவான மனப்பான்மை, கடமையுணர்ச்சி 

ஒரு ஓய்வுபெற்ற படைக்கப்பல் முதல்வர், பொழுது போக்காக தினமும் பிரயாணிகளை அந்தமான் தீவுகளுக்கு படகில் அழைத்து சென்று வந்தார்.

The retired Sea Captain2ஒரு சமயம், படகில் இளைஞர்கள் மட்டுமே இருந்தனர். படகோட்டி கரையிலிருந்து புறப்படுவதற்கு முன்பு, தினமும் இறைவனுக்கு நன்றி கூறும் வகையில் ஒரு சிறிய பிரார்த்தனை செய்வார். அன்றும் அவர் அப்படிச் செய்வதைப் பார்த்த இளைஞர்கள், “கடல் அமைதியாக தானே இருக்கிறது, எதற்கு இவர் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்?” என்று அவரைப் பார்த்து சிரித்தனர்.

The retired Sea Captain3புறப்பட்ட சற்று நேரத்திலேயே புயல் வீசி, படகு  கடல் அலைகளுக்கேற்ப கொந்தளிக்க ஆரம்பித்தது. இளைஞர்கள் பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல், படகோட்டியிடம் தங்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்ய அழைத்தனர்.

அதற்கு படகோட்டி, “கடல் அமைதியாக இருக்கும் போது  நான் பிரார்த்தனை செய்வேன். புயல் வந்தால் என் கவனம் எல்லாம் படகு மேல் மட்டுமே இருக்கும்” என்றார்.

நீதி:

அமைதியான நேரங்களில் கடவுளை அணுகாமல் இருந்தால், இடர்ப்பாடுகள் இருக்கும் சமயங்களில் ஒருமுகச் சிந்தனையோடு பிரார்த்தனை செய்வது கடினம்; பிரச்சனையின் மேல் முழுதாக கவனத்தையும் செலுத்த முடியாது. இச்சமயங்களில், பதற்றம் மட்டுமே உண்டாகும்.

அதனால், அமைதியான நேரங்களில் கடவுளிடம் பிரார்த்தனை செய்து, அவர் மேல்  நம்பிக்கை வைத்தால்,  பிரச்சனைகள் ஏற்படும் போது, அதன் மீது கவனத்தை செலுத்தலாம்; கடவுளின் அருளையும் நிச்சயமாக பெறலாம்!

மொழி பெயர்ப்பு:

சுப்ரியா, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

திருடனின் மனமாற்றம்

நீதி – நன் நடத்தை

உபநீதி – உண்மை

The thiefs transformation - picture 1

சாது ஒருவர் மலைப் பகுதியில் குதிரை மீது வந்து கொண்டிருந்தார். அவர் வரும் வழியில் பாதையின் ஓரமாக ஒருவன் மயங்கிக் கிடந்தான். அவனை கண்ட சாது குதிரை மேலிருந்து கீழே இறங்கினார்.

the thiefs transformation - picture 2சாது அவனை அசைத்துப் பார்த்தார், அவன் அசையாமல் கிடக்கவே தனது குதிரையின் பக்கவாட்டில் தொங்கிய குடுவையில் இருந்த நீரை எடுத்து அவன் முகத்தில் தெளித்து வாயிலும் ஊற்றினார்.

The thiefs transformation - picture 3மயக்கம் தெளிந்து கண்விழித்த அந்த நபரை மெல்லப் பிடித்துத் தூக்கிக் குதிரை மீது ஏற்றினார். குதிரை மீது உட்கார்ந்த மறுகணமே அவன் அந்த குதிரையின் கடிவாளத்தை உலுக்கவும் குதிரை தடதடவென்று பறந்தோடி மறைந்து விட்டது.

The thiefs transformation - picture 4திகைத்துப் போனார் சாது. அப்போது தான் அவன் ஒரு திருடன் என்றும்,  இதுவரை அவன் நடித்துள்ளான் என்பதும் தெரிந்தது அவருக்கு.

குதிரை இல்லாததால் இரவு முழுவதும் மெல்ல நடந்து வீட்டை அடைந்தவர் சில தினங்கள் கழித்து சந்தைக்கு குதிரை வாங்கப் போனார்.

the thiefs transformation - picture 5அங்கே குதிரைகள் விற்குமிடத்தில் அந்த திருடன் இவரது குதிரையுடன் நின்று கொண்டிருந்தான்.

சாது மெல்லச் சென்று அவனது தோளைத் தொட்டார். திரும்பிப் பார்த்த திருடன் பேயறைந்தது போல் நின்றான்.

சாது மெல்லச் சிரித்தார்.

“சொல்லாதே!” என்றார்.

The thiefs transformation - picture 6

திருடன் மிரண்டான். “எது? என்ன?” என்று சம்பந்தமில்லாமல் உளறிக் கொட்டினான்.

சாது, “குதிரையை நீயே வைத்துக்கொள். ஆனால், நீ அதை அடைந்த விதத்தை யாரிடத்திலும் சொல்லாதே. மக்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரியவந்தால் எதிர்காலத்தில் உண்மையிலேயே யாராவது சாலையில் மயங்கிக் கிடந்தால் கூட உதவ முன் வரமாட்டார்கள்” என்றார்.

நான் இந்த குதிரையை இழந்ததால் எனக்கு ஏற்படும் இழப்பை பற்றி கவலைப்படவில்லை. காரணம், சில தினங்கள் உழைத்து சம்பாதித்து வேறு ஒரு குதிரையை நான் வாங்கி விட முடியும்.

தீயவன் நீ ஒருவன் தவறு செய்ய நல்லவர்கள் பலருக்கு காலா காலத்துக்கும் உதவி கிடைக்காமல் உயிர் போகக் கூடும்.

புரிகிறதா?”…

திருடனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

நீதி:

குறுகிய லாபங்களுக்காக நல்ல கோட்பாடுகளைச் சிதைத்து விடக் கூடாது.

நல்லவர்களையும்,  நல்ல நட்பையும் இழந்து விடக் கூடாது.

 

குருவிற்குப் பிடித்த சீடன்

நீதி – நன் நடத்தை

உபநீதி – நம்பிக்கை, சரணாகதி

The masters favourite - picture 1முன்பொரு காலத்தில், மகரிஷி ஆங்கீரஸர் ஒரு காட்டில் வசித்து வந்தார். அவருக்கு பல சிஷ்யர்கள் இருந்தனர். அவர்கள் அனைவருமே முனிவரின் ஞானத்தினால் மிகவும் பயனடைந்திருந்தனர். எனினும், அவர்களில் சில பக்திமான்கள் மற்றவர்களை விட விரைவாக அனைத்தையும் கற்றனர். மற்றும், குருவின் வார்த்தைகளை மிகவும் நுணுக்கமாகப் பின்பற்றினர். மேலும், அவர்கள் தம் பக்தி மனப்பான்மையால் மற்ற சிஷ்யர்களிடமிருந்தும் நன்மதிப்பைப் பெற்றிருந்தனர்.

அவர்களுள் சில மந்தமான சிஷ்யர்களும் இருந்தனர். அவர்கள் அதிக பக்தியுள்ள சிஷ்யர்களைக் கண்டு பொறாமை கொண்டனர். குரு கற்றுக் கொடுக்கும் பாடங்களை விரைவில் கிரகித்துக் கொள்ளாமல் இருப்பது, தங்களின் தவறு தானே என்ற உண்மையை அவர்கள் மறந்தனர். மாறாக, அவர்கள் குருவின் பாரபட்சமற்ற தன்மையை சந்தேகிக்கத் தொடங்கினர். குரு, அதிக பக்தியுடன் காணப்படும் சிஷ்யர்களுக்கு ஏதோ ரகசியமாக சிறப்புப் பாடம் போதிக்கிறார் என்று நினைத்தனர்.

அதனால், ஒரு நாள் குரு தனிமையில் இருக்கும் சமயத்தில் அவரிடம் சென்று, “குருவே! தாங்கள் எங்களிடம் பாரபட்சமாக நடந்து கொள்வதாக எங்களுக்கு தோன்றுகிறது. தங்களுடைய முழு ஞானத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருடன் மட்டும் பகிர்ந்து கொள்வதாக நினைக்கிறோம். தாங்கள் ஏன் எங்களுக்கும் அதே மாதிரியான சலுகைகளை அளிக்கக் கூடாது?” என்று வினவினர்.

அவர்களின் இந்த வார்த்தைகளைக் கேட்டு குரு அதிர்ச்சியடைந்தார். ஆனால், அமைதியாக, “நான் அனைவரையும் ஒரே மாதிரிதான் நடத்துகிறேன். மேலும், நான் எவருக்கும் எந்த ஒரு சிறப்பு சலுகையும் அளிக்கவில்லையே. உங்களில் எவரேனும் விரைவாக முன்னேறினால், அதற்குக் காரணம் என் வார்த்தைகளுக்கு நீங்கள் காட்டும் மதிப்பின் உணர்வுதான். நீங்கள் இன்னும் முயற்சிகள் எடுப்பதை யார் தடுத்தார்கள்?” என்று கூறினார்.

ஆனால், சீடர்களோ சமாதானம் ஆகவில்லை. அதனால் குரு சற்றே சிந்தித்துவிட்டு, ”சரி, உங்களில் இந்தப் புகார் கூறுபவர்களுக்கு மட்டும் நான் சிறப்பு கவனம் செலுத்துகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. நான் ஒரு சிறிய எளிய சோதனை வைப்பேன். அதை நீங்கள் கடக்க வேண்டும். அந்த சோதனை என்னவென்றால், நீங்கள் அனைவரும் அடிக்கடி சென்று வரும்  அருகிலுள்ள கிராமத்திற்குச் சென்று ஒரு நல்லவரை என்னிடம் அழைத்து வர வேண்டும். அவ்வளவுதான்.” என்று கூறினார்.

முணுமுணுத்துக் கொண்டிருந்த சீடர்கள், சோதனை மிகவும் எளிமையானது, ஆனால் கிடைக்கப் போகும் பரிசோ மகத்தானது என்றெண்ணி மகிழ்ச்சியடைந்தனர். உடனே, அவர்களில் ஒருவனை இந்த பணிக்கு தேர்ந்தெடுத்தனர்.  நாம் கண்டிப்பாக ஒரு நல்ல மனிதரைக் கண்டு பிடிப்போம் என்ற முழு நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் அவன் உடனடியாக தேடலை தொடங்கினான். ஆனால், அவனுடைய துரதிஷ்டம், அவன் எங்கு சென்றாலும், எவரைச் சந்தித்தாலும் ஒவ்வொருவரும் தன் மேல் ஏதோ ஒரு குற்றத்தை சுமந்துக் கொண்டிருந்தனர். ஒரு நீண்ட பயனற்றத் தேடுதலுக்குப் பிறகு மிகவும் ஏமாற்றமடைந்த அவன் தன் குழுவிடமும் குருவிடமும் திரும்பி வந்தான்.  குருவை நோக்கி, “குருவே! மன்னிக்கவும், அந்த முழு கிராமத்திலும் ஒரு நல்லவர் கூட இல்லை. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு தவறான செயலோ குற்றமோ அல்லது பாவமோ செய்திருக்கின்றனர். அந்தக் கிராமம் முழுவதும் தீயவர்களால் நிரம்பியிருக்கிறது” என்று கூறினான். குரு ஒரு போலியான துக்கத்துடன், “ஓ அப்படியா? சரி பார்க்கலாம். நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்த அந்த மாணவர்களில் ஒருவரை அனுப்புவோம்” என்று கூறினார்.

பின்னர், அந்த ஒழுக்கமிக்க சீடர்களில் ஒருவரை அழைத்து “நீ இந்த சீடன் சென்று பார்த்து வந்த அருகிலுள்ள கிராமத்திற்குச் சென்று ஒரு தீய மனிதரைக் கண்டுப் பிடித்து அழைத்து வருவாயா” என்று குரு கேட்டார். “தங்கள் ஆசீர்வாதத்துடன் அடியேன் முயற்சி செய்கிறேன் குருவே” என்று கூறித் தன் முயற்சியில் இறங்கினான் அந்த சீடன்.

முணுமுணுத்துக் கொண்டிருந்த சீடர்களுக்கு மீண்டும் அதிர்ச்சியாக இருந்தது. “குருவே! தாங்கள் இந்த முறையும் எங்களுக்கு அந்நியாயம் செய்திருக்கிறீர்கள். அவன் நிச்சயம் நிறைய தீயவர்களை அழைத்து வருவான், ஏனென்றால் அந்தக் கிராமம் தீயவர்களால் நிரம்பி வழிகிறது” என்று கூறினர்

இருப்பினும், குரு பொறுமையாகக் காத்திருந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த ஒழுக்கமிக்க சீடனும் அந்தக் குறை கூறும் சீடர்களை அதிர்ச்சியடையச் செய்வது போல் வெறும் கையுடன் திரும்பி வந்தான். குருவிற்கு வந்தனம் செய்துவிட்டு, “குருவே! தங்களுக்கு ஏமாற்றமளிப்பதற்கு மன்னிக்கவும். அடியேன் அந்த முழுக் கிராமத்தையும் தேடி பார்த்தேன். ஒரு தீயவர் கூடக் கிடைக்கவில்லை” என்று கூறினான்.

இதனைக் கேட்ட அந்தக் குறைகூறிய  சீடர்கள் வெகுவாகச் சிரித்தனர். ஆனால் அந்த சீடன் தொடர்ந்தான், “ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நற்செயல்  செய்திருக்கின்றனர். எந்த ஒரு நற்செயலும் செய்யாத ஒருவரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. என் தோல்விக்கு என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறிவிட்டு, குருவின் அனுமதியுடன் அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டான். குரு அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்த அந்த மூட சீடர்களைப் பார்த்து, “என் அன்பான பக்தர்களே! இங்குதான் நன்மை மற்றும் தீமை, சரி மற்றும் தவறு, நேர்மறை மற்றும் எதிர்மறை போன்ற வேறுபாடுகளின் தனிப்பட்ட கண்ணோட்டம்  மாறுபடுகிறது. நீ காணும் ஒவ்வொன்றிலும் ஒரு ஒழுக்கத்தைக் கண்டால் உன் ஞானம் விரிவடைகிறது. மாறாக ஒரு குறையைக் கண்டால் அந்த ஞானம் உன்னை விட்டு விலகுகிறது.” என்று கூறினார்.

நீதி:

இந்த உலகம் இன்பம் மற்றும் துன்பத்தின் ஒரு கலவை. உன்னுடைய ஞானம், நீ எதைத் தேர்ந்தேடுக்கிறாயோ அதற்கேற்ப அமைகிறது. வாழ்க்கையில் நேர்மறை அணுகுமுறை இருப்பவர்கள் விரைவாக முன்னேற்றமடைவர். ஆனால் எதிர்மறை அணுகுமுறை இருப்பவர்களுக்கோ முன்னேற்றம் என்று ஒன்றிருந்தால் அது மிகவும் மெதுவாகத் தான் இருக்கும். குருவிற்கு அனைவரும் சமம்தான். குருவிடமிருந்துத் தன்னைப் பிரித்துப் பார்ப்பது அந்த சீடனின் தவறு. எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு சீடன் குருவின் அருகில் இருக்கிறானோ அதற்கேற்ப அவனுடைய வளர்ச்சி இருக்கும். நம் எல்லா நடவடிக்கைகளும் இந்த அடிப்படைப் புரிதலுக்கு இணங்கி இருத்தல் வேண்டும். ஒருவர் தம் வாழ்க்கை மற்றும் அதில் வரும் சவால்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை இந்தக் கதை விளக்குகிறது.  மேலும்,  ஒருவன் தன் குருவிடம் பூரண சரணாகதி அடைந்தால், அவன் தன் வாழ்க்கையின் சவால்களை எளிதில் கையாள்வதற்கு உதவும் என்பதையும் இக்கதை காட்டுகிறது.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com