நீதி – உண்மை
உபநீதி – வாய்மை
ரகுகுல திலகமாக திகழ்ந்த ஸ்ரீ ராமபிரானின் முன்னோராக வாழ்ந்த திரிசங்குவின் மகன் ஹரிச்சந்திரன், தன் மனைவி தாராமதி மற்றும் மகன் ரோஹிதாசனுடன் அயோத்திய நாட்டை ஆட்சி புரிந்தார். ராஜா ஹரிச்சந்திரன் மிக அன்பாகவும், நியாயமான விதத்திலும் ஆட்சி புரிந்ததால், மக்களும் சந்தோஷமாக இருந்தனர்.
மிக சிறு வயதிலேயே, ஹரிச்சந்திரன் உண்மையின் சக்தியை அறிந்து, எக்காரணத்தைக் கொண்டும் பொய் சொல்லக் கூடாது என்றும், கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் எனவும் தீர்மானித்தார். காலப் போக்கில், உண்மை, வாய்மை மற்றும் நேர்மை ஆகிய நற்பண்புகள் அவருடைய புகழை மேம்படுத்தி தேவ லோகத்திற்கே கொண்டு சேர்த்தன. தேவர்கள் ராஜாவை சோதிக்க தீர்மானித்து, இந்த பணிக்கு விச்வாமித்திரரை தேர்ந்தெடுத்தனர்.
விச்வாமித்திரர் இந்த பணியை வெற்றிகரமாக முடிக்க தீவிரமாக முயற்சித்தார். ஆனால், ராஜா தன் வாக்கை எப்போதும் காப்பாற்றி வந்ததால், விச்வாமித்திரரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
இறுதியாக, விச்வாமித்திரர் சூழ்ச்சி செய்து, ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி, ராஜாவிடம் இருந்த உடைமைகளை பறித்துக் கொண்டார். இதற்குப் பிறகும், ராஜா புன்சிரிப்போடு ராஜ்ஜியத்தையே விச்வாமித்திரரிடம் அர்ப்பணித்து விட்டு, கிழிந்த ஆடைகளோடு, தன் மனைவி மற்றும் மகனுடன் காட்டிற்குச் செல்ல தயாரானார். ராஜாவின் தாராள மனப்பான்மையைப் பார்த்து வியப்புற்று, இறுதியாக விச்வாமித்திரர் ராஜாவை தூண்டுவதற்காக, தக்ஷிணையாக நன்கொடை கொடுக்கச் சொன்னார்.
ராஜா, அவருக்கென சொந்தமான அனைத்தையும் பறிக் கொடுத்ததால், தக்ஷிணையாக கொடுக்க ஒன்றுமில்லை; ஆனால், பிராமணருக்கு கேட்டதை கொடுக்காவிட்டால், பாவங்கள் சுமக்க வேண்டியிருக்கும் என எண்ணி, விச்வாமித்திரரிடம் சற்று அவகாசம் கேட்டார். ராஜா, முனிவரைப் பார்த்து, “எனக்கென்று ஒன்றுமில்லை. ஒரு மாதம் அவகாசம் கொடுத்தால், நான் எப்படியாவது தக்ஷிணையை கொடுத்து விடுகிறேன்” எனக் கெஞ்சினார். இந்த பணிவான வேண்டுகோளை கேட்டவுடன், விச்வாமித்திரர் அவருக்கு ஒரு மாதம் அவகாசம் கொடுத்தார்.
எப்படியாவது பணத்தை சம்பாதித்து விடலாம் என்று எண்ணி ராஜா நாடு முழுவதும் சுற்றினார்; ஆனால், அவருக்கு சாதகமாக ஒன்றும் அமையவில்லை. இறுதியாக, இன்று வாரணாசி என்று அழைக்கப்படும் புண்ணிய ஸ்தலமான காசிக்கு சென்றார்.
நெருக்கடியான காசி நகரத்தில் மக்கள் பொங்கி வழிந்தனர். பண்டிதர்கள் தன் அறிவை மேம்படுத்திக் கொள்ள வந்தனர்; யாத்திரிகள் பக்தி பரவசமோடு கூட்டம் கூட்டமாக வந்தனர்; வயதானவர்கள் புண்ணியத்தை சேர்த்துக் கொண்டு தன் கடைசி காலத்தை இந்த புண்ணிய ஸ்தலத்தில் கழிக்க வந்தனர். இந்த நகரத்திலும் வேலை கிடைக்காமல் ராஜா தவித்தார்.
விச்வாமித்திரர் கொடுத்த அவகாசம் முடிய சில நாட்களே இருந்ததால், ராஜா கவலையுற்றார். கொடுத்த வார்த்தையை காப்பாற்ற முடியவில்லையே என்று ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தார். இறுதியாக, ராஜாவின் தர்ம பத்தினி தாராமதி, “நான் சொல்வதை சற்று கேளுங்கள். இந்த யோசனை உங்களுக்கு பொருத்தமானதாக இல்லாவிட்டாலும், வேறு வழி தெரியவில்லை. இந்த நகரத்தில், செல்வந்தர்களுக்கு அடிமையாக வேலை செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. என்னை விற்று, அதில் வரும் பணத்தை முனிவருக்கு கொடுத்து விடுங்கள். பிறகு, பணம் சம்பாதித்தவுடன் என்னை மறுபடியும் மீட்டு விடலாம்” என்ற யோசனையை கொடுத்தார்.
ராஜா இந்த யோசனையைக் கேட்டு பதறினார். “என் கஷ்டங்களைப் பகிர்ந்து கொண்ட மனைவியை விற்று விடுவதா. முடியவே முடியாது!” எனக் கதறினார். ஆனால், ராஜா பணமும் சம்பாதிக்க முடியாதலால் வேறு வழி தெரியாமல் மனைவி சொன்னதையே செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.
ராஜா மனைவியை சந்தைக்குக் கூட்டிச் சென்று, மிகவும் அதிகமாக ஏலம் கேட்பவரிடம் விற்று விட்டார்; ஒரு வயதான பிராமணர், ராஜாவின் குழந்தையை மனைவியுடன் பார்த்தவுடன், சற்று அதிக தொகையை ராஜாவிடம் அளித்து விட்டு, மனைவியையும், குழந்தையையும் அழைத்துச் சென்றார். ராஜா பணத்தை வாங்கிக் கொண்டு, வேறு வழி தெரியாமல் கிளம்பும் போது, விச்வாமித்திரர் அங்கு வந்து தக்ஷிணையை அதிகாரத்துடன் கேட்டார். ராஜா, அவரிடம் இருந்த எல்லாப் பணத்தையும் கொடுத்து விட்டார்; ஆனால், விச்வாமித்திரரை திருப்தி செய்ய முடியவில்லை. “என்னைப் போல தகுதியுள்ள முனிவருக்கு இவ்வளவு தான் தக்ஷிணை கொடுப்பாயா. இந்த பணம் மிகவும் குறைவு!” என முனிவர் கூறினார்.
ராஜா மன வேதனையுடன் என்ன செய்வது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, சுடுகாட்டில் பிணங்களை எரிக்கும் வேலை செய்து கொண்டிருந்த சண்டாளன் ஒருவன் அங்கு வந்து, வேலைக்கு ஆள் தேவை என்று கேட்டான். உடனே விச்வாமித்திரர், “நீ ஏன் இவனுக்கு அடிமையாகக் கூடாது? அதில் வரும் தொகையை எனக்குக் கொடுத்து தக்ஷிணையை பூர்த்தி செய்து விடு” என்றார்.
இதைக் கேட்ட ஹரிச்சந்திரன் அதிர்ச்சியுற்றார். ராஜாவாக இருப்பவர் ஒரு சண்டாளனுக்கு வேலை செய்ய வேண்டுமா! இந்த மாதிரியான எண்ணங்கள் இருந்தாலும், ராஜாவிற்கு வேறு வழி தெரியவில்லை. தன்னை சண்டாளனுக்கு விற்று விட்டு, அதிலிருந்து சம்பாதித்த தொகையையும் கொடுத்த பின், விச்வாமித்திரர் திருப்தி அடைந்தார். இப்போது, ராஜாவை சண்டாளனுக்கு அடிமையாக விட்டு விட்டு முனிவர் சென்று விட்டார்.
சுடுகாட்டில், சண்டாளன் ராஜாவிற்கு வேலை கொடுத்தான். மனதிற்கு சற்று வேதனையாக இருந்தாலும், ராஜா சுடுகாட்டில் தங்கி, எல்லா வேலைகளையும் கற்றுக் கொண்டார்.
ராஜாவின் எண்ணங்கள், தொடர்ந்து மனைவி மற்றும் குழந்தையின் மீது இருந்தன; மனதிற்கு வேதனையாக இருந்தது. “அவர்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருப்பார்களோ? நான் சென்று அவர்களை அழைத்து வருவதற்கு காத்து கொண்டிருப்பார்களோ? நானே அடிமையாக வேலை செய்கிறேன் என்பது கூட அவர்களுக்கு தெரியாதே!” என்ற யோசனைகளுடன் வாழ்ந்து வந்தார்.
நாட்கள் கழிந்தன; ராஜாவிற்கு வேலை பழக்கமாகி விட்டது. அவர் மனைவியும், மகனும் பிராமணர் வீட்டில் கடினமான வாழ்க்கை மற்றும் ஏழ்மையான சூழ்நிலைக்கு பழக்கம் ஆகிவிட்டார்கள். ஒரு நாள், அச்சிறுவன் பூந்தோட்டத்திற்கு மலர்கள் கொண்டு வர செல்லும் பொழுது, பாம்பு கடித்து இறந்தான். தாராமதி, சமாதானம் செய்ய முடியாத நிலைமையில் இருந்தாள். அவள், மன வேதனை தாங்காமல் மிகவும் அழுதாள்; இறுதியாக, குழந்தையை தூக்கிக் கொண்டு சுடுகாட்டிற்குச் சென்றாள்.
தாராமதி குழந்தையை தூக்கிக் கொண்டு வந்த பொழுது, சுடுகாட்டில் ராஜா வேலை செய்து கொண்டிருந்தார். ஏழ்மை மற்றும் கடினமான வாழ்க்கையின் காரணமாக, ஒருவரை ஒருவர் அடையாளம் கூட கண்டு பிடிக்க முடியவில்லை. ராஜா தன் வேலையை செய்வதற்கு பணம் கேட்டார். உடனே தாராமதி, “நான் அடிமையாக வேலை செய்து கொண்டிருக்கிறேன். நான் அணிந்திருக்கும் ஆடைகளைத் தவிர என்னிடம் வேறு ஒன்றுமில்லை. என் குழந்தையும் இறந்து விட்டான். நான் எங்கிருந்து பணத்தை கொடுப்பது?” என்று கூறி அழுதாள். ராஜாவிற்கு வேதனையாக இருந்தாலும், தன் கடமை தான் முக்கியம் என்ற கண்ணோட்டத்தில், அவர் செய்யும் தொழிலுக்கு பணம் வாங்க வேண்டும் என்ற கருத்துடன் இருந்தார்.
உடனே, “நீ ஏன் பொய் சொல்கிறாய்? கொடுப்பதற்கு ஒன்றுமே இல்லை என சொன்னாய். நான் செய்ய போகின்ற வேலைக்கு உன் தாலியை கழட்டி கொடுக்கலாமே” எனக் கூறினார்.
இதைக் கேட்ட தாராமதி பிரமித்து போனார். அவள் அணிந்திருந்த தாலி, கணவனுக்கு மட்டுமே அடையாளம் தெரிந்த வகையில் சிறப்பு பெற்றிருந்தது. தன் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்ள முடியாமல், “நாம் இருவரும் முந்தைய ஜன்மத்தில் பாவங்கள் அதிகமாக பண்ணி இருக்கிறோம் போல தோன்றுகிறது. அதனால் தான், நாம் இந்த நிலைமையில் இருக்கிறோம். உங்களின் மனைவியையே உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையே. இது நம் மகன், ஒரு இளவரசன், ஆனால், இங்கு மாண்டு கிடக்கிறான். இறுதி சடங்குகளை செய்வதற்குக் கூட பணமில்லை!” என்று வருந்தினாள்.
தாராமதி இவ்வார்த்தைகளை பேசியவுடன், ராஜாவிற்கு தன் மனைவியை அடையாளம் தெரிந்து விட்டது. மகனுக்காக தந்தை அழுதார்; ஆனால், தன் கடமையிலிருந்து தப்பித்து விடவில்லை. அவர், “சந்தர்ப்ப சூழ்நிலை எப்படி இருந்தாலும், உன்னிடமிருந்து இறுதி சடங்குகளை செய்து முடிப்பதற்கான பணத்தை நான் வாங்க வேண்டும்!” என்று கூறினார்.
தர்ம பத்தினியாக இருந்த தாராமதி, “நான் சுமங்கலியாக இருப்பதற்கு அடையாளமான இந்த திருமாங்கல்யத்தை கழட்டி, இறுதி சடங்குகளுக்கான தொகையாகக் கொடுக்கிறேன்” என்றாள். அந்த சமயம், தேவ லோகத்திலிருந்து பலத்த கரகோஷம் எழும்பியது.
தேவ லோகமே மலர்களைத் தூவி, தம்பதியரை ஆசீர்வதித்தது; விச்வாமித்திரர் அவர்களுக்கு முன் தோன்றி, “இந்த கடினமான சம்பவங்கள், நீங்கள் அனுபவித்தது எல்லாமே உங்களின் உண்மை மற்றும் வாய்மையை சோதிக்க வேண்டும் என்பதற்காக தான். நீங்கள் போட்டியை வென்றதோடு, சொர்க்கத்திலும் இடம் பிடித்து விட்டீர்கள். இப்போது நீங்கள் உங்களின் ராஜ்ஜியத்திற்கு மனைவியுடனும், மகனுடனும் சென்று, பொருத்தமான நேரம் வரும் வரை ராஜ்ஜியத்தை ஆட்சி செய்யலாம்” எனக் கூறினார். இதைக் கேட்டவுடன், மாண்டிருந்த இளவரசன், ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுந்ததைப் போல கண் முழித்துக் கொண்டான்.
ராஜா தன் மகன் உயிரோடு இருப்பதைப் பார்த்து பேரின்பத்துடன் இருந்தார். தன் கஷ்டங்கள் எல்லாமே முடிவடைந்ததை நினைத்து மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். ஆனால் ராஜா, “முனிவரே, நீங்கள் இந்த கஷ்டங்கள் எல்லாமே என்னை சோதிக்க கொடுத்திருக்கலாம். என்ன சொன்னாலும், நான் ஒரு சண்டாளனுக்கு அடிப் பணிந்து வேலை செய்தேன், என் மனைவி ஒரு பிராமணருக்கு அடிமையாக வேலை செய்தாள். நாங்கள் அடிமைகளாக இருந்ததால், உங்களிடமிருந்து ஒன்றுமே ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார்.
முனிவர் சந்தோஷமாக இருந்தார். அவர், “ஹரிச்சந்திரன், நீ நற்குணங்கள் நிறைந்த மனிதராக திகழ்கிறாய். உண்மையும், வாய்மையும் பேசும் உன்னைப் போல எவரையும் பார்த்ததில்லை. நீங்கள் யாரிடம் வேலை செய்தீர்கள் என்பதை தற்சமயம் காண்பிக்கிறேன்” என்றார். பிராமணர் தேவேந்திரனாகவும், சண்டாளன் யமராஜனாகவும் வருவதை ராஜா கவனித்தார். அவர்கள் ராஜாவிடம், “நாங்கள் உங்களை சோதிப்பதற்காக எடுத்துக் கொண்ட வேஷம். எங்களை மன்னித்து விடுங்கள். நீங்கள் ராஜ்ஜியத்தை நிம்மதியாக இப்போது ஆட்சி செய்யலாம்” என்றனர்.
ஹரிச்சந்திரன் அயோத்தியாவிற்கு சென்று, நல்ல விதத்தில் ராஜ்ஜியத்தை ஆட்சி செய்து, சரியான சமயத்தில் தன் மகன் ரோஹிதாசனிடம் பொறுப்புகள் அனைவற்றையும் கொடுத்து விட்டு மோக்ஷத்தை அடைந்தார்.
நீதி:
ஹரிச்சந்திரன் என்ற பெயரைக் கேட்டால், உண்மை மற்றும் வாய்மை என்ற நற்பண்புகள் மனதிற்கு ஞாபகம் வருகின்றன. அவர் கதையைக் கேட்ட பல ஆயிக்கணக்கான மக்கள் உற்சாகத்துடன் இருப்பதைப் பற்றி சந்தேகமே இல்லை. ஹரிச்சந்திரனை உண்மையிலேயே சிரஞ்சீவி எனக் கூறலாம். அவர் நடைமுறையில், உண்மை மற்றும் வாய்மை என்ற நற்பண்புகளை ஒவ்வொரு செயலிலும் பின்பற்றினார். எந்த கஷ்டத்திலும், உண்மையாக செயற்பட்டால், இறுதியில் வெற்றி நிச்சயம். எச்சமயத்திலும், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை எல்லோருக்கும் உதாரணமாக இருக்கிறது.
சத்யமேவ ஜெயதே என்ற கொள்கையை, ஹரிச்சந்திரன் நடைமுறையில் வாழ்ந்து காட்டினார்.
மொழி பெயர்ப்பு:
சரஸ்வதி, ரஞ்சனி
Source: http://saibalsanskaar.wordpress.com