நீதி – அன்பு
உபநீதி – மன்னிக்கும் குணம்
ராஜ் ஒரு அமைதியான மனிதர். அவர் யாருடனும் அதிகமாகப் பேச மாட்டார்; 50 வருடங்களாக அதே சுற்றுப்புறத்தில் வாழ்ந்தாலும், எவருக்கும் அவரைப் பற்றிய விவரங்கள் சரியாக தெரியவில்லை. அவர் விருந்தினர்களைப் புன்சிரிப்புடன், திடமான ஒரு கைக் குலுக்கலோடு வரவேற்பார். பணியிலிருந்து ஓய்வு எடுப்பதற்கு முன், அவர் தினமும் பேருந்தில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். இரண்டாம் உலகப் போரில், துப்பாக்கிக் குண்டு அடியினால் பாதிக்கப்பட்டதால், அவரால் சரியாக நடக்க முடியவில்லை. போரில் உயிர் பிழைத்த போதிலும், அவர் நடப்பதற்கு தடுமாறியதை பார்க்கும் போது வேதனையாக இருந்தது. சுற்றுப்புறச் சூழலில் நடக்கும் தீவிரவாத செயல்கள் மற்றும் போதை மருந்து நடவடிக்கைகளைப் பார்க்கும் பொழுது, அவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்ற பயம் இருந்தது.
ஒரு நாள், ராஜ் தேவாலயத்திற்குச் சென்ற போது, அங்கிருந்த அறிவிப்பை படித்தார். அமைச்சரின் பூந்தோட்டத்தில் வேலை செய்ய தொண்டூழியர்கள் தேவை என்பதை கவனித்து விட்டு, தன் விருப்பத்தை தெரிவித்தார். அவரது 87 வது வயதில், நாங்கள் பல நாட்களாக பயந்த அந்த நிகழ்வு நடந்தது.
ஒரு நாள், அவர் அமைச்சரின் வீட்டு செடிகளுக்கு நெளிவுக்குழாய் (ஹோஸ் பைப்) வழியாக தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். திடீரென, மூன்று முரடர்கள் அவரை பயமுறுத்த, ராஜ் அதை பொருட்படுத்தாமல், “தண்ணீர் வேண்டுமா?” என்று கேட்டார். அவர்கள் போக்கிரித்தனமான சிரிப்புடன், “ஆம்” என்றார்கள். ஒருவனுக்கு நெளிவுக்குழாவை நீட்டியவுடன், மற்றவர்கள் அவரை கீழே தள்ளினார்கள். ஒரு பக்கம் நீர் போய் கொண்டிருந்தது; மற்றொரு பக்கம், இந்த மூன்று மனிதர்களும், அவர் கடிகாரத்தையும், பணப்பையையும் எடுத்துக் கொண்டு ஓடினார்கள். அவரால் எழுந்திருக்க முடியவில்லை. அதற்குள், அமைச்சர் அவருக்கு உதவி புரிய ஓடி வந்தார்.
ஜன்னல் வழியாக அமைச்சர் இந்த சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்; ஆனால் அவர் அங்கு வருவதற்குள் எல்லாம் நடந்து முடிந்திருந்தது. “சரியாக இருக்கிறீர்களா?” என்று அவர் கேட்டதற்கு, ராஜ் அந்த பிரச்சனையை பெரிதாகப் பொருட்படுத்தாமல், “ஏதோ தெரியாமல் செய்து விட்டார்கள். வாழ்க்கை அவர்களுக்கு பாடங்களைக் கற்றுக் கொடுக்கும்” என்று மிருதுவாகக் கூறினார்.
ஒரு நிமிடத்தில் எழுந்துக் கொண்டு, நெளிவுக் குழாயையும், உடைகளையும் சரிப் படுத்திக் கொண்டு, அவர் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற தயாரானார். உடனடியாக அமைச்சர், “உங்களால் முடியுமா?” என்று கேட்டதற்கு, அவர் “நான் நன்றாக இருக்கிறேன். செடிகள் காய்ந்து போய்விட்டன. இன்று கட்டாயமாக தண்ணீர் ஊற்ற வேண்டும்” என்று கூறினார்
ராஜின் விசித்திரமான மனப்பான்மையைப் பார்த்து, அமைச்சர் வியந்தார். சில வாரங்களுக்குப் பிறகு, மறுபடியும் அதே மூன்று முரடர்கள் வந்தனர். இந்த சமயமும், “தண்ணீர் வேண்டுமா?” என்று ராஜ் கேட்டார். அதற்கு கேலித்தனமாக நெளிவுக்குழாயை அவர் கையிலிருந்து பிடுங்கி, தலையிலிருந்து கால் வரை தண்ணீரை ஊற்றி, அவர் முழுவதும் நனையும்படி அவர்கள் செய்தனர். இந்த முறை, அவர்கள் அவரிடமிருந்து எதையும் அபரிக்கவில்லை.
அவரை அவமானப் படுத்திய பிறகு, சிரித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு அவர்கள் சென்றனர். ராஜ் இந்த அவமானத்திற்குப் பிறகும் பெரிதாகப் பாதிக்கப்படவில்லை. சூரியனின் கதிர்கள் படும் இடத்தில் சென்று, நெளிவுக் குழாயை மறுபடியும் எடுத்து செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற அவர் ஆரம்பித்தார்.
கோடைக்காலம் முடிவடையும் சமயம். ஒரு நாள், ராஜ் பூந்தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, பின்புறம் யாரோ வரும் சத்தத்தைக் கேட்டு, திடுக்கிட்டு, தடுமாறி, செடிகளுக்கு நடுவில் விழுந்தார். அவர் எழுந்திருக்க முயற்சித்த போது, ஒரு உயரமான மனிதன் தன் அருகில் வருவதை கவனித்தார். அம்மனிதன் மூன்று முரடர்களில் ஒருவன். அவனது தாக்குதலுக்கு ராஜ் தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்த போது, அம்மனிதன், ‘கவலைப் படாதீர்கள். இம்முறை நான் உங்களை துன்புறுத்த மாட்டேன்” என்றான்.
அந்த மனிதன், கனிவாகப் பேசி, அவர் எழுந்திருக்க உதவினான். பிறகு, ஒரு கசங்கிய பணப்பையை அவரிடம் நீட்டியபடி, “இது உங்களுடையது. உங்கள் பணம் அனைத்தும் இதனுள் இருக்கிறது” என்றான். அதற்கு ராஜ், “எனக்கு ஒன்றும் புரியவில்லை. நீ எதற்காக எனக்கு உதவுகிறாய்” என்று கேட்டார். அதற்கு அவன் தர்ம சங்கடத்துடன், “நான் உங்களிடமிருந்து சரியான பாடம் கற்றுக் கொண்டேன். நான் அந்த கும்பலுடன் சேர்ந்து வயதானவர்களைத் துன்புறுத்தி, பணத்தையும் திருடி, அவர்களை வேதனைப் படுத்தியிருக்கிறேன். ஒவ்வொரு முறையும், நீங்கள் எங்களுடன் சண்டை போடாமல் பரிவுடன் நடந்து கொண்டு, தண்ணீர் கொடுத்தீர்கள். எங்கள் பகைமையை வெளிப்படுத்திய போதிலும், அன்போடு இருந்தீர்கள். நாங்கள் உங்களை வெறுத்த போதிலும், நீங்கள் எங்களை வெறுக்காமல் அன்போடு இருந்தீர்கள்” என்றான்.
ஒரு நிமிட தயக்கத்திற்குப் பிறகு அவன், “உங்கள் பொருட்களை அபகரித்தப் பிறகு, என்னால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. அதை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள். இந்தப் பை நான் திருந்தியதற்கு நன்றி கூறும் ஒரு விதம்” என்று கூறி தன் வழியை நோக்கி சென்று விட்டான்.
அவன் சென்ற சில நிமிடங்களில், ராஜ் பணப்பையைத் திறந்தார். அதில் அவருடைய பணி ஓய்வுக்கு கிடைத்த கடிகாரம் இருந்தது. அதை கைகளில் அணிந்து கொண்டு, பணப்பையில் இருந்த திருமணப் படத்தை பார்த்தார்; பல வருடங்களுக்கு முன்பு இறந்த மனைவியின் புன்சிரிப்பை ஞாபகப் படுத்திக் கொண்டார்.
குளிர் காலத்தில், கிறிஸ்துமஸ் தினத்திற்குப் பிறகு ராஜ் மரணமடைந்தார். கடைசி சடங்குகளுக்கு பல மனிதர்கள் வந்திருந்தனர். ராஜ் பராமரித்த பூந்தோட்டம், வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒரு பாடம் என்று அமைச்சர் சொல்லிக் கொண்டிருந்தார். அங்கு ஒரு ஓரத்தில் அந்த உயரமான மனிதன் உட்கார்ந்திருப்பதையும் கவனித்தார்.
அமைச்சர் கண்ணீருடன், “எல்லோரும் ராஜைப் போல பூந்தோட்டத்தை நன்றாக பராமரித்து, அவரின் நல்ல எண்ணங்களை நினைத்து வாழ வேண்டும். நாம் அவரையும், அவரின் தோட்டத்தையும் ஒரு நாளும் மறக்க முடியாது” என்றார்.
சில நாட்களுக்குப் பிறகு மற்றொரு அறிக்கை – “ராஜ் அவர்களின் பூந்தோட்டத்தைப் பராமரிக்க ஆள் தேவை.”
இரண்டு நாட்களுக்கு பிறகு, அமைச்சரின் கதவை தட்டிய சத்தம் கேட்டது. கதவைத் திறந்த பொழுது, அந்த உயரமான மனிதன் நின்று கொண்டிருந்தான். முரடனாக இருந்த அந்த மனிதன், ராஜின் நடவடிக்கைகளைப் பார்த்து நல்லவராகத் திருந்தியதைப் பார்த்து அமைச்சர் மகிழ்ச்சியுற்றார்.
அமைச்சர் அவர் கையில் சாவிகளைக் கொடுத்து, “உன் நன்றி உணர்வை அவருக்கு வெளிப்படுத்தும் வகையில், அவர் பூந்தோட்டத்தை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார். கொடுத்த வாக்குக்கு ஏற்ப மிக ஆசையாக பூந்தோட்டத்தைப் அவன் பார்த்து கொண்டான்.
இம்மனிதன் வேலைக்கு சென்று, சில வருடங்களில் ராஜ் போலவே தோட்டத்தை நன்றாக பராமரித்து, காய்கறிகளையும், பழங்களையும் விளைவித்தான். அந்த சமயத்தில், அவன் கல்லூரி சென்று படித்து, திருமணம் செய்து கொண்டு, சமூகத்தில் பிரபலமான மனிதனாகத் திகழ்ந்தான். ஆனால், அமைச்சருக்கு அளித்த வாக்குறுதியை மறக்காமல், ராஜின் ஞாபகமாக அவரைப் போலவே தோட்டத்தை பராமரித்தான்.
சில வருடங்களுக்குப் பிறகு, இம்மனிதன் புதிய அமைச்சரிடம், “இதற்கு மேல் பூந்தோட்டத்தை பார்த்து கொள்வது கடினமாக இருக்கும். என் மனைவிக்குக் குழந்தை பிறந்திருக்கிறது” என்று சொன்னான்.
தோட்டத்தின் சாவிகளை பெற்றுக் கொண்ட அமைச்சர், அவனை வாழ்த்தி குழந்தையின் பெயரைக் கேட்டார்.
அதற்கு அவன் பெருமையோடு சொன்ன பதில், “ராஜ்!”
நீதி:
மற்றவர்கள் நம் மனதை வேதனைப் படுத்தினாலும், நாம் கோபப்படாமல் சூழ்நிலையைச் சரியாக சமாளித்து நல்லவர்களாக இருந்தால், அவர்களின் மனதில் ஒரு மாறுதல் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. நாம் இந்த உலகத்தை விட்டுச் செல்லும் போது, எதுவும் எடுத்துக் கொண்டு போவதில்லை. நாம் நல்ல மனிதர்களாக வாழ்ந்து, மற்றவர்களின் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை ஏற்படுத்தி, அன்போடு இருப்பது தான் முக்கியம்.
மொழி பெயர்ப்பு:
சரஸ்வதி, ரஞ்சனி
Source: http://saibalsanskaar.wordpress.com