Archive | November 2021

சமைப்பவரின் எண்ணங்கள் உணவை பாதிக்கும்

நீதி நேர்மை / வாய்மை

உப நீதி உள்ளார்ந்து நோக்குதல் / பழக்கம் / எண்ணங்களில் தூய்மை

ஸ்ரீ ஸத்ய ஸாயி பாபாவின் “சின்ன கதா” என்ற புத்தகத்திலிருந்து எடுத்தது.

மைசூர் மாநிலத்தில், மாலூர் என்ற ஊரில், பக்தியுள்ள பிராமண பண்டிதர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவியும் அவருக்கேற்றாற் போல பக்தி உடையவளாகத் திகழ்ந்தாள். பிராமணர் எப்பொழுதும் பூஜை, ஜபம், மற்றும் தியானத்திலேயே ஈடுபட்டிருந்தார். அவர் நற்குணங்களோடு வாழ்ந்ததால், அவ்வூரில் எல்லோரும் அவரை அறிந்திருந்தனர். ஒரு நாள், நித்யானந்தா என்ற ஒரு சந்நியாசி பிக்ஷைக் கேட்டு இவர் வீட்டிற்கு வந்தார். அதனால், பிராமணர் எல்லையற்ற மகிழ்ச்சியுற்றார். அவருக்குச் சிறந்த முறையில் விருந்தோம்பல் செய்யலாம் என்றெண்ணி, அந்தத் துறவியை அடுத்த நாள் இரவு உணவிற்குத் தம் வீட்டிற்கு வருமாறு பிராமணர் அழைத்திருந்தார்.

This image has an empty alt attribute; its file name is image-2.png

வீட்டு வாசலில் மாவிலைத் தோரணங்கள் கட்டி, துறவியை வரவேற்க பலத்த ஏற்பாடுகள் செய்திருந்தார்; ஆனால், கடைசி நேரத்தில், பிராமணரின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால், சமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது; பக்கத்து வீட்டுப் பெண்மணி சமைத்துக் கொடுப்பதாக விருப்பம் தெரிவித்து சமையலறைக்கு வந்தார். எல்லாமே நல்ல முறையில் நடந்து கொண்டிருந்தது.

அனைவரும் ஆனந்தத்தில் மூழ்கியிருந்த அந்த சூழ்நிலையில் துறவி மட்டும் சரியான மனோபாவத்தில் இருக்கவில்லை. அவருடைய தட்டிற்கு அருகில் இருந்த வெள்ளிக் கோப்பையை எப்படியாவது திருட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும், அவரால் மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. துறவி அந்தக் கோப்பையைத் தன் அங்கியின் மடிப்பில் மறைத்துக் கொண்டு, அவசர அவசரமாகத் தன் குடிலுக்குச் சென்றார். அன்றிரவு அவரால் தூங்க முடியவில்லை; மனசாட்சி உறுத்தியது. தன் குருவிற்கும், மந்திரங்களை உச்சரித்து தன் முன் வரவழைத்த ரிஷிகள் அனைவருக்கும் அவமானத்தை உண்டு பண்ணியதாக அவர் எண்ணினார். உடனே அந்தப் பிராமணரின் வீட்டிற்கு ஓடிச் சென்று, அவர் காலில் விழுந்து,  கண்களில் நீர் வழிய மன்னிப்புக் கோரி, அந்தப் பொருளை அவரிடம் ஒப்படைத்தார். அதுவரை துறவியின் மனம் அமைதி அடையவில்லை.

ஒரு துறவி கீழ்த்தரமான செயலை எவ்வாறு செய்திருப்பார் என்று அனைவரும் வியந்தனர். பின்னர் ஒருவர், “இந்தத் தவறான குணம், துறவிக்கு சமையல் செய்தவரிடமிருந்து உணவு மூலம் ஏற்பட்டிருக்கும்” என்று கூறினார். பக்கத்து வீட்டுப் பெண்மணியின் கதையைக் கேட்ட போது, அவளுக்கு கட்டுப்படுத்த முடியாத திருடும் குணம் இருந்தது என்று தெரிய வந்தது. அந்தத் திருட்டு குணம் அவள் சமைத்த உணவையும் பாதித்தது. இந்தக் காரணத்தினால் தான், துறவிகள் ஆன்மீகச் சாதனையில் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்தவுடன், பழம் மற்றும் கிழங்கு வகைகளையே சாப்பிட்டு வாழ வேண்டும் என்று கூறப்படுகிறது.

நம் மனதும், மதியும் புனிதமாக இருந்து, நம்முள் இருக்கும் ஆத்மாவை பிரதிபலிப்பதற்காக, உணவு விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். உணவின் மீது கவனம் செலுத்துவது எல்லோருக்கும் அத்தியாவசியம்.

நீதி:

நாம் உண்ணும் உணவு நமது எண்ணங்களை பாதித்து, மனதையும், மதியையும் உருமாற்றம் செய்கிறது. அதனால், நாம் என்ன உண்ணுகிறோம் என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு முறையும் உண்ணுவதற்கு முன்னால் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதை பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். கடவுளிடம் பிரார்த்தனை செய்து, நம் முன் இருக்கும் உணவுக்குக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி கூறினால், உணவு புனிதமாகிறது. அதற்கு பின், அதை உண்ணும் போது, உணவு நன்றாக ஜீரணமாகி, நல்ல எண்ணங்கள் ஏற்படுகின்றன. இந்த நல்ல எண்ணங்களினால், நம் மனது மற்றும் உடலில் மாறுபாடு ஏற்பட்டு, நற்பண்புகளோடு செயற்படும் வகையில் மாற்றம் தெரிகிறது.

அன்புடனும் நல்லெண்ணங்களுடனும் சமைக்கப்படும் உணவு எப்பொழுதும் அதிக ருசியாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

எல்லா உணவும் கடவுளிடமிருந்து வருகிறது. அவரிடமிருந்து வரும் உணவை முதலில் அவருக்கே அர்ப்பணித்து விட்டு, பிறகு தான் நாம் உண்ண வேண்டும். அப்போது தான் அது சாத்வீக உணவாக மாறுகிறது. நாம் வாங்கும் தானியங்கள் மற்றும் காய்கறிகளில் தூய்மைக்கேடுகள் இருக்கின்றன. இவை உண்ணும் போது நம் உடலுக்குள் செல்கின்றன. உணவு சம்பந்தப்பட்ட குறைபாடுகளை நீக்க, நாம் கடவுளுக்கு அர்ப்பணித்து விட்டு, பிறகு பிரஸாதமாக உட்கொள்ள வேண்டும். அதை கடவுளுக்கு அர்ப்பணிக்கும் போது (நைவேத்தியம்) குறைபாடுகள் நீக்கப்படுகின்றன – ஸ்ரீ ஸத்ய ஸாயி பாபா (தெய்வீக சொற்பொழிவுகள் – மை டியர் ஸ்டூடன்ட்ஸ் – தொகுதி 2, அத்தியாயம் 2

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

துன்பமே வெற்றிக்கு வழிகாட்டி

நீதி – நன்னம்பிக்கை, உண்மை

உபநீதி – நம்பிக்கை, விசுவாசம் 

பெயர் தெரியாத கதாசிரியர்

ஓர் அரசருக்கு அழகான இரண்டு வல்லூறுகள் பரிசாகக் கிடைத்தன. அவை இரண்டும் அரசன் இதுவரை கண்டிராத அளவுக்கு மிகவும் அழகான பைரி வல்லூறுகளாக இருந்தன. அவர் தனது தலைமை பறவை வளர்ப்பவனிடம், அவைகளுக்குப் பயிற்சி அளிக்க ஒப்படைத்தார்.

மாதங்கள் கடந்தன. பறவை பயிற்சியாளன் மன்னனிடம், இரண்டு பறவைகளில் ஒன்று கம்பீரமாக வானத்தில் மிக உயரத்தில் பறப்பதாகவும், மற்றொன்று வந்த நாளிலிருந்தே தான் அமர்ந்த கிளையை விட்டு நகராமல் அங்கேயே உட்காரந்திருப்பதாகவும் கூறினான்.

நாட்டிலுள்ள மருத்துவர்கள், மந்திரவாதிகள் அனைவரையும் அரசர் அழைத்து, பறவையை பறக்க வைக்க முயற்சி செய்தார். ஆனால் எவராலும் பறவையைப் பறக்க வைக்க முடியவில்லை.

அரசர் இந்தக் கடினமான வேலையை தன் அரசவையிலுள்ள ஒரு நபரிடம் ஒப்படைத்தார். மறுநாள் காலை அரண்மனை ஜன்னல் வழியாக அரசர் பார்த்த போது,  பறவை இன்னமும் இருந்த இடத்தை விட்டு நகராமல் கிளையிலேயே உட்கார்ந்திருந்தது.

அரசர் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தும் பலன் இல்லை. இது போன்ற பறவைகள் சம்பந்தபட்ட விஷயங்களில் கிராமத்தில் இருப்பவர்கள் அனுபவம் பெற்றிருப்பார்கள் என்று அரசர் நினைத்தார். ஆகையால் ஒரு விவசாயியை அழைத்து வருமாறு அரசவைக்குக் கட்டளையிட்டார்.

மறுநாள் காலை அந்தப் பறவை அரண்மனை நந்தவனத்தின் மேல் உயரப் பறந்து கொண்டிருப்பதைக் கண்டு அரசர் ஆச்சரியமுற்றார். “இந்த அதிசயத்தை நடத்திக் காட்டிய மனிதனை இங்கு அழைத்து வாருங்கள்” என்று அவர் ஆணையிட்டார்.

அந்த விவசாயியும் சற்று நேரத்தில் அரசர் முன் வந்து நின்றான். அரசர் அவனிடம் “இந்த வல்லூறுவைப் பறக்க வைக்க என்ன செய்தாய்?” என்று கேட்டார்.

குனிந்த தலை நிமிராமல் மரியாதையுடன் நின்றிருந்த விவசாயி, “இது மிகவும் சுலபம் மஹாராஜா. பறவை உட்காரந்திருந்த கிளையை நான் வெட்டி விட்டேன். அவ்வளவுதான்” என்றான்.

நீதி:

வாழ்க்கை பல தடைகளையும், துன்பங்களையும் நமக்குக் கொடுக்கிறது. அவை நமது வளர்ச்சியை நிறுத்துவதற்கோ துன்பங்கள் கொடுப்பதற்கோ அல்ல; நிறைய அனுபவத்துடன் நாம் முன்னேறுவதற்கு உரிய உதவியையும், சக்தியையும் கொடுப்பதற்கே ஆகும். இதைப் புரிந்து கொள்வதற்கு நாம் முன்னேறிச் சென்று கொண்டே இருக்க வேண்டும். புரிந்து கொள்வது என்பது துன்பங்களுக்கு தீர்வு காண்பது அல்ல. அந்தத் தடைகளைப் பின் தள்ளி, நாம் முன்னேறிக் கொண்டு இருந்தால் போதுமானது. அச்சம் எனும் கிளையை முறித்து, வெற்றி என்ற வானவெளியில் பறக்க நாம் கற்றுக்கொள்வோமாக. சரியான பாதையில் சுய நம்பிக்கையுடன் சென்றால், நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு சுலபமாக தீர்வு காணலாம்.

“நீங்கள் கூட்டுக்குள் அடைந்து கிடக்கும் பறவை அல்ல; வானில் பறக்க வேண்டிய பறவை”.

மொழி பெயர்ப்பு:

கோதண்டராமன், சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

துணிவே பலன் தரும்

நீதி: நன்னம்பிக்கை, உண்மை

உபநீதி: மன உறுதி,  திட நம்பிக்கை

தந்தையும், மகனுமாக இரு குரங்குகள் ஒரு பெரிய மரத்தில் ஒன்றாக அமர்ந்திருந்தன.

மகன் தந்தையிடம் “எனக்குப் பசிக்கிறது; சாப்பிடுவதற்கு சில இலைகளை கொண்டு வர முடியுமா” என்று கேட்டது.

தந்தை மகனைப் பார்த்து புன்சிரிப்புடன், “உனக்கு வேண்டுமென்றால் நீயே போய் எடுத்துக் கொள்” என்று சொன்னது.

அதற்கு மகன் “எனக்கு எப்படி என்று தெரியாது” என்று மறுப்பு தெரிவித்தது.

அதற்குத் தந்தை, “அடிமரம் அருகில் உள்ள காய்ந்த, சுவையில்லாத இலைகளையோ அல்லது கிளையின் நுனிக்குச் சென்று, அங்குள்ள பசுமையான, புதிய இலைகளையோ பறித்து உண்ணலாம்; நீயே தேர்வு செய்து கொள்” என்று சொன்னது.

மகன் “இது முறையல்ல. சுவையான பசும் இலைகள், எல்லோரும் எளிதில் பறிக்கும் இடத்தில் ஏன் இருக்கக் கூடாது? என்று கேட்டது.

அதற்குத் தந்தை, “அது தான் விஷயம். எல்லோரும் எளிதில் எடுக்கக் கூடியதாக இருந்தால், அந்த இலைகள் இவ்வளவு பசுமையாக இருக்காது” என்றது.

உடனே மகன், “சிறிய கிளைகளுக்கு போவது மிகவும் ஆபத்தானது அல்லவா? கிளைகள் முறியலாம் அல்லது நான் பிடியைத் தவறவிட்டுக் கீழே விழலாம்” என்றது.

அதற்குத் தந்தை “மகனே! நன்கு கவனி. இதை நீ நினைவில் கொண்டால், நீ செய்யும் எல்லாச் செயல்களிலும் வெற்றி அடைவாய். மேலும் உனக்கு எப்பொழுதுமே சுவையான இலைகள் உண்ணக் கிடைக்கும். நீ துணிந்து சிறு கிளையில் இறங்கினால், நீ நினைக்கும் அளவிற்கு மோசமாகக் கீழே விழ மாட்டாய்” என்று கூறியது.

மகன் “எல்லாக் குரங்குகளும் மரக்கிளையின் நுனியில் போய் பசுமையான இலைகளை ஏன் எடுப்பதில்லை?” என்று கேட்டது.

அதற்குத் தந்தை “பல குரங்குகள் ஆபத்து வந்துவிடும் என்று பயந்து, தனக்குப் பிடித்ததை முயற்சி செய்து சாப்பிடாமல், அருகில் கிடைக்கும் மோசமான இலைகளை சாப்பிட்டுக் குறை கூறுகின்றன. மகனே! சவால்கள் நமக்கு முன் உள்ளன. அவைகளை தைரியமாக எதிர்கொள்!” என்று கூறியது.

நீதி:

நம் வாழ்க்கையில் வரும் வாய்ப்புகள் நம்முள் இருக்கும் அளவற்ற ஆற்றல்களையும், திறமைகளையும் வெளியே கொண்டு வருகின்றன.  நல்லதையே நினைத்து நாம் முன்னேறிச் செல்வோம். யார் முயற்சி செய்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியோ, தோல்வியோ ஒரு முடிவைக் காண முடியும். அப்போது நம் தவறுகளை அறிந்து, நம்மை மேம்படுத்திக் கொண்டு, இலக்கை அடைய முடியும். சோதனைகள் இல்லாமல் நமக்கு பலன் கிடைக்காது. அதனால் நாம் சவால்களை உறுதியுடனும், சரியான மனப்பான்மையுடனும் எதிர் கொண்டு, முன்னேறிச் செல்ல வேண்டும்.

சவால்கள் நம் வாழ்க்கையை சுவாரஸ்யமாக மாற்றுகின்றன.

சவால்களை சமாளிப்பதில் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக ஆகிறது.

மொழி பெயர்ப்பு:

அன்னப்பூரணிசரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

நீதி: அமைதி

உபநீதி: ஒற்றுமை, பொறுப்பு

ஒரு குடும்பத்தில் தாய், தந்தை, நான்கு மகன்கள் மற்றும் மருமகள்களும் ஒன்றாக வாழ்ந்தனர்.

நான்கு மருமகள்களும் நல்லவர்களாக இருந்தனர்; ஆனால் எச்சமயமும் அவர்களுக்குள் யார் எந்த வேலையை செய்ய வேண்டும் என்ற சச்சரவு இருந்தது. 

ஒரு நாள், மாமியார் இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்காக ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் பொறுப்பை ஒதுக்கினார். மாமியார் நான்கு மருமகள்களையும் அழைத்து “நீங்கள் எல்லோரும் நல்லவர்கள்; பொறுப்புகள் தெளிவாக இல்லாததனால் உங்களுக்குள் பிரச்சனைகள் அதிகமாக இருக்கின்றன. இப்போது பொறுப்பை சரியாக தீர்மானிக்கலாம்.

முதல் மருமகள் உணவைத் தயாரிக்க வேண்டும்.

இரண்டாவது மருமகள் மேஜையை சீராக அமைக்க வேண்டும்.

மூன்றாவது மருமகள் உணவை பரிமாற வேண்டும்.

நான்காவது மருமகள் பாத்திரங்களை சுத்தம் செய்து, மேஜையைத் துடைக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் அவரவர் வேலையை முடித்த பிறகு அறிவித்தால், மற்றவர்கள் தங்களின் வேலையை செய்வதற்கு உதவியாக இருக்கும்.

ஒவ்வொரு வாரமும் இந்த பொறுப்புகள் மாறி மாறி வரும்” என்று கூறினார்.

எல்லோரும் இந்த சிந்தனையை ஒப்புக் கொண்டனர்.

அடுத்த நாள் முதல் மருமகள் சமையலை முடித்த பிறகு, எல்லோரிடமும் “சமையல் முடிந்து விட்டது” என்றாள்.

இரண்டாவது மருமகள் உணவை மேஜையில் வைத்து விட்டு, “மேஜையில் உணவு வைக்கப் பட்டிருக்கிறது. எல்லோரும் சாப்பிட வாருங்கள்” என்றாள்.

மூன்றாவது மருமகள் உணவை பரிமாறிய படி “உணவு எல்லோருக்கும் பரிமாறி விட்டேன்” என்றாள்.

நான்காவது மருமகள் எல்லா தட்டுகளையும், பாத்திரங்களையும் மேஜையிலிருந்து எடுத்து, சுத்தம் செய்து, “பாத்திரமும், மேஜையும் சுத்தம் செய்தாகி விட்டது” என்றாள்.

மாமியார் வாயடைத்து போனார்.

எல்லோரும் தங்கள் பணியையும், பொறுப்பையும் சரிவர செய்தனர்; ஆனால் உணவை எவருமே உண்ணாததால் எல்லாமே வீணாகியது.

இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம்? பொறுப்புகளை பகிர்வது முக்கியமல்ல; குழுவாக விவேகத்துடன் செயற்படுவது மிகவும் முக்கியம்.

நீதி:

ஒற்றுமை வலிமை. எல்லோரும் ஒன்றாக சேர்ந்து பணி புரிவது என்பது வேலையை பகிர்ந்து கொள்வது மட்டுமல்ல; இலக்கை மனதில் வைத்துக் கொண்டு, பணியை சரியாக செய்து, அதன் விளைவுகள் வெற்றிகரமாக இருக்க வேண்டும். ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்யும் போது, பல விஷயங்களை கற்றுக் கொள்வதோடு, பணியை குறைவான நேரத்தில் முடிக்கலாம்.

“நீங்கள் செய்ய முடியாததை நான் செய்யலாம், நீங்கள் செய்ய முடிந்ததை நான் செய்ய முடியாமல் இருக்கலாம்; ஒன்று சேர்ந்தால் நாம் சிறப்பான விஷயங்களை செய்யலாம்”. மதர் தெரேசா  

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE