நீதி – அன்பு
உபநீதி – பக்தி
குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோவில் மிகவும் பிரபலமானது. ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் அங்கு செல்கின்றனர்.
பக்தர் ஒருவர், தன் கால் வலி குணமாக வேண்டும் என்ற நோக்கத்துடன் நாற்பத்தி ஒன்று நாட்கள் பிரார்த்தனை செய்ய தீர்மானித்தார். நடக்க முடியாததால், அவரை எல்லாச் சமயங்களிலும் தூக்கி செல்ல வேண்டிய நிலமை. அவர் பணக்காரராக இருந்ததால் பணத்திற்குப் பிரச்சனை ஒன்றும் இருந்ததில்லை. ஒவ்வொரு நாளும் காலையில், கோவில் குளத்தில் குளிப்பதற்கு யாராவது அவரை தூக்கிச் செல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம். நாற்பது நாட்கள், அவருடைய மனமார்ந்த வேண்டுதல் முடிந்து விட்டது; ஆனால் வலி குறையவில்லை.
அதே சமயத்தில், வேறு ஒரு ஏழ்மையான கிருஷ்ண பக்தர், தன் பெண்ணின் கல்யாணம் முடிய வேண்டும் என்று நாற்பத்தி ஒன்று நாட்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். மணமகன் கிடைத்து, ஒப்பந்தம் செய்தார்கள்; ஆனால் கல்யாணம் செய்வதற்கோ, தங்க ஆபரணங்கள் வாங்குவதற்கோ அவரிடம் பணம் இல்லை. இவர் கனவில் வந்து கடவுள், “நாளை கோயில் குளத்திற்குச் செல்லும் பொழுது, படியில் ஒரு சிறிய பை இருக்கும். அதை எடுத்துக் கொண்டு பின் நோக்கிப் பார்க்காமல் ஓடவும்” என்று கூறினார்.
அடுத்த நாள், இரண்டு பக்தர்களுக்குமே நாற்பத்தி ஒன்றாவது நாள். பணக்கார பக்தர் ஒரு சிறிய பையில் தங்க நாணயங்களைக் கடவுளுக்கு அர்ப்பணம் செய்வதற்காகக் கொண்டு வந்தார். குளத்தில் இறங்குவதற்கு முன், படியில் வைத்து விட்டுச் சென்றார். அந்த சமயம் ஏழை பக்தர் அங்கு வந்தார். பையை எடுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தார். அதைப் பார்த்து இந்த பக்தர் தண்ணீரிலிருந்து வெளியே வந்து ஓடியும் பயனில்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தார்.
திடீரென, அவரால் நன்றாக ஓட முடிகின்றதே என்ற விஷயத்தை உணர்ந்தார். இது வரை நடக்க இயலாமல் இருந்தவர், கடவுளின் அருளால் குணமாகி விட்டார் . கடவுளிடம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். ஏழை பக்தனுக்குப் பணம் கிடைத்ததால் பெண்ணின் கல்யாணத்தை நன்றாக நடத்த முடிந்தது. இரண்டு பக்தர்களுக்கும் வேண்டியதை கடவுள் நடத்திக் கொடுத்தார்.
நீதி:
இரண்டு பக்தர்களுக்கும் கடவுள் வேறுபடுத்தாமல் சமமாக பரிசை அளித்தார். பக்தி தான் முக்கியம், யாரென்பது முக்கியமில்லை. நாம் நம்பிக்கையுடனும், பக்தியுடனும் கடவுளிடம் பிரார்த்தனை செய்தால், நல்லதே நடக்கும். கடவுள் செய்வதெல்லாம் நன்மைக்கே என்ற ஏற்புத் தன்மை நமக்கு நிச்சயமாக வேண்டும்.
மொழி பெயர்ப்பு:
சரஸ்வதி, ரஞ்சனி