நீதி – நன் நடத்தை / அன்பு
உப நீதி – கடமை உணர்ச்சி /விடா முயற்சி
ஒரு எட்டு வயதுச் சிறுமிக்கு, தன் பெற்றோர்கள் தம்பியைப் பற்றி ஏதோ பேசிக் கொண்டிருப்பது காதில் விழுந்தது. அவளுக்குத் தெரிந்தவரை, தம்பியின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்தது. சிகிச்சை செய்ய அவர்களிடம் தேவையான பணத் தொகை இல்லாததனால், ஒரு சிறு வீட்டிற்கு குடி போகத் தீர்மானித்துக் கொண்டிருந்தார்கள். டாக்டருக்குப் பணம் கொடுப்பதோடு, குடும்பத்தையும் நடத்த முடியாத ஒரு சூழ்நிலை. அதிகத் தொகை தேவையான அறுவை சிகிச்சை செய்தால் தான், அவளுடைய தம்பி உயிர் பிழைக்க முடியும்; ஆனால் கடன் கொடுக்க ஒருவரும் முன்வரவில்லை.
“ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் தான், மகனின் உயிரைக் காப்பாற்ற முடியும்” என மெல்லிய குரலில் அவள் தந்தை, கண்ணீருடன் இருந்த தாயிடம் சொல்லிக் கொண்டிருந்ததை இச்சிறுமி கேட்டாள். தன் அறைக்கு ஓடிச் சென்று, தன் சேமிப்புப் பெட்டியைத் திறந்து, அதில் இருந்த காசுகளை எண்ண ஆரம்பித்தாள். 100 ரூபாய் மற்றும் சில்லறை காசுகள் அதில் இருந்தன.
சிறுமி சேமிப்புப் பெட்டியைத் தன் கையில் எடுத்துக் கொண்டு, வீட்டிற்கு அருகிலிருந்த மருந்துக் கடைக்கு ஓடிச் சென்றாள். பெட்டியைப் பணம் செலுத்துமிடத்தில் வைத்ததும், கடைக்காரர் அச் சிறுமியிடம் “என்ன வேண்டும்?” எனக் கேட்டார். அதற்கு அச்சிறுமி, “என் தம்பியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. எனக்கு ஒரு அதிசயம் வாங்க வேண்டும்” எனக் கூறினாள். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை.
“என் தம்பியின் பெயர் ஆகாஷ்; அவன் தலைக்குள் ஏதோ வளர்வதால், அதிசயம் நடந்தால் தான் அவனைக் காப்பாற்ற முடியும்” என என் தந்தை சொல்வதைக் கேட்டேன். அதிசயத்தின் விலை என்ன? எனக் கேட்டாள். “நாங்கள் அதிசயம் எதுவும் விற்பதில்லை” எனக் கடைக்காரர் வருத்தத்துடன் தெரிவித்தார். தன்னிடம் பணம் இருப்பதாகவும், வேண்டுமென்றால் இன்னும் சேமித்துக் கொடுப்பதாகவும், அதிசயத்தின் விலையை மறுபடியும் அச்சிறுமி விசாரித்தாள்.
ஒழுக்கமான உடை அணிந்த ஒரு வாடிக்கையாளர் அப்போது கடைக்கு வந்திருந்தார். அவர் குனிந்து, அச்சிறுமியிடம் எந்த விதமான அதிசயம் அவள் தம்பிக்குத் தேவை என விசாரித்தார். கண்ணீருடன் அச்சிறுமி, தனக்கு விவரமாக ஒன்றும் தெரியாது; ஆனால், தம்பிக்கு அறுவை சிகிச்சை தேவை எனத் தன் தாயார் கூறுவதாகவும், அதற்கு வேண்டிய பணம் தன் தந்தையிடம் இல்லை; ஆதலால் தான் தன் சிறு சேமிப்பைக் கொண்டு வந்துள்ளதாகவும் கூறினாள். அவளிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என அம்மனிதர் கேட்டதும், தன்னிடம் 100 ரூபாய் மற்றும் சில்லறை காசுகள் இருப்பதாகவும் கூறி, மேலும் தேவைப்பட்டால் சேகரித்துத் தருவதாகவும் கூறினாள். “ஆஹா! தற்செயலாக, அதிசயத்தின் சரியான விலை அவ்வளவு தான்” என அம்மனிதன் கூறினார். அவர், சிறுமியின் பணத்தை ஒரு கையில் வைத்துக் கொண்டு, மறு கையால் அவள் கையைப் பிடித்துக் கொண்டு, அவள் இருக்கும் வீட்டிற்கு தன்னை அழைத்துச் செல்லுமாறு கேட்டார். தான், அவள் தம்பியையும் பெற்றோர்களையும் சந்திக்க விரும்புவதாகவும், அவள் தம்பிக்கு தேவையான அதிசயம் தன்னிடம் இருக்கிறதா எனப் பார்ப்பதாகவும் கூறினார். அவர்களைச் சந்தித்த பிறகு, அவள் தம்பியின் அறுவைச் சிகிச்சையை இலவசமாகச் செய்தார். சில வாரங்களுக்குப் பிறகு, சிறுவன் ஆகாஷ் உடல் நிலை தேறி, வீடு திரும்பி வந்தான்.
ஒரு நாள் மதிய நேரத்தில், சிறுமியும் அவள் தாயாரும் பேசிக் கொண்டிருக்கும் போது, தாயார், “அறுவைச் சிகிச்சை நடந்தது பெரிய அதிசயம்; எவ்வளவு பணம் செலவு ஆகியிருக்கும் எனத் தெரியவில்லை” எனக் கூறினார். அதற்கு அச்சிறுமி புன்சிரிப்புடன், “100 ரூபாய் மற்றும் சில்லறை காசுகள்” என பதிலுரைத்தாள். அத்துடன், ஒரு சிறுமியின் நம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் பல அதிசயங்கள் நிகழலாம்.
நீதி
இக்கதை ஒரு சகோதரிக்கு, அவள் சகோதரன் மேல் இருந்த பாசத்தை வெளிப்படுத்துகின்றது. அவளது நம்பிக்கையும், விடாமுயற்சியும் அவள் தம்பியைக் காப்பாற்றியது. அன்பு, நம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால், வெற்றிகரமாகத் திகழலாம். எல்லோரிடமும் அன்பாக இருப்போம். பல அதிசயங்களை அனுபவிப்போம்.
மொழி பெயர்ப்பு:
சரஸ்வதி, ரஞ்சனி
Source: http://saibalsanskaar.wordpress.com