நீதி: உண்மை, அமைதி
உப நீதி: பற்றின்மை, உறுதி
ஶ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்ஸர் கூறியபடி:
“ஒரு சமயம் எனக்குத் தங்க ஜரிகையால் அலங்கரிக்கப்பட்ட உடை அணிவது, விரலில் மோதிரம் அணிவது, மற்றும் நீண்ட குழாயால் புகைப் பிடிப்பது போன்றவற்றில் விருப்பம் இருந்தது. மாத்தூர் பாபு எனக்காக இந்தப் பொருட்களை எல்லாம் வாங்கி வந்தார்.
நான் அந்தத் தங்க ஜரிகையினாலான உடையை அணிந்து கொண்டு எனக்குள்ளே கூறிக் கொண்டேன், ‘மனமே! இதற்குப் பெயர்தான் தங்க ஜரிகையால் அலங்கரிக்கப்பட்ட உடை’
பிறகு நான் அதை எடுத்துத் தூக்கி எறிந்தேன். என்னால் அந்த உடையை அதற்கு மேல் அணிய முடியவில்லை.
மறுபடியும் நான் மனதுக்குள் கூறிக் கொண்டேன், ‘மனமே! இதற்குப் பெயர்தான் சால்வை, இது மோதிரம், இது புகை பிடிக்கும் நீண்ட குழாய்’ இவை அனைத்தையும் நான் முடிவு செய்து தூக்கி எறிந்தேன். இவற்றை அனுபவிக்க வேண்டும் என்ற விருப்பம், அதன் பிறகு எனக்கு எப்போதுமே தோன்றியதில்லை.”
நீதி:
நம் வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பல விருப்பங்கள், நாம் காணும் சமூகச் சுற்றுப்புறத்திலிருந்து உண்டாகிறது. அதனால் நம் மனம் குழம்புவது இயற்கைதான். அதுமாதிரியான தருணத்தில் நாம் மெளனமாக அமர்ந்து, ஆழமாக சுவாசித்து, அமைதியாக நாம் எடுக்கப் போகும் முடிவுகளின் விளைவுகளை சிந்திக்க வேண்டும். இயற்கையாக, நமது மனம் நம்மை சரியான பாதையில் செலுத்தி, நம்மை எதிர்மறையான மனப்பான்மையை கடைப்பிடித்து போவதையும், தேவையற்ற சொத்துக்களையும் பொருட்களையும் குவிப்பதையும் தடுக்கும்.
“மனம் என்ற வேரிலிருந்துதான் அனைத்தும் வளர்கின்றன. மனதை உங்களால் புரிந்து கொள்ள முடியுமானால், மற்ற அனைத்தும் அதனுள் அடங்கும். அது மரத்தின் வேர் போன்றது. மரத்தின் அனைத்துப் பழங்களும், பூக்களும், கிளைகளும், இலைகளும் அதன் வேரை சார்ந்திருக்கும். நீங்கள் வேரை வளப் படுத்தினால், மரம் பெருகும். நீங்கள் வேரைத் துண்டித்தால், அது இறக்கும். மனதைப் புரிந்து கொள்பவர்கள், குறைந்த முயற்சியிலேயே அறிவொளியை அடைவார்கள்.” – போதிதர்மம், போதி தர்மரின் ஜென் நீதிகள்.
மொழி பெயர்ப்பு:
அன்னப்பூரணி, சரஸ்வதி, ரஞ்சனி
SOURCE: SSSIE