நீதி: உண்மை
உப நீதி: ஏற்றுக் கொள்ளும் மனநிலை / மனநிறைவு
ஒரு நாள் என் நண்பருடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது “வாழ்க்கை ஒரு போராட்டம் இல்லையா?” என்று கேட்டார். அது எனக்கு ஒரு புதிய தகவலாக இருந்தது. அனைவருக்கும் வாழ்க்கை கடினமாக அல்லாமல் இனிதாகவே அமையும் என்று நான் எப்போதும் நினைத்தேன். ஆனால் நான் நினைத்ததில் தவறு இருப்பது போல் தெரிகிறதே? உண்மையில், வாழ்க்கை என்பது சிக்கல்களால் ஏற்படும் கவலைகலாகும்; ஆனால் போராட்டங்கள் இருக்குமா? ஒருவேளை இந்த “போராட்டங்களின்” மூலம் வாழ்க்கை நமக்கு எதாவது முக்கிய செய்தியை தெரிவிக்க முயற்சிக்கிறதோ?
இந்த கேள்வி என் சிந்தனையை தூண்டியது. வாழ்க்கையில் சிலர் ஏன் தொடர்ந்து போராட்டங்களை சந்திக்கின்றனர்? வாழ்நாள் முழுவதும் போராடியவர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு வாழ்க்கையில் துயரங்கள் முடிவடைவதே இல்லை. சிலருக்கு ஏன் வாழ்க்கை மிகவும் எளிதாக இருக்கிறது? எதை நினைக்கிறார்களோ அதை ஒரு சிட்டிகையில் பெற்று விடுகிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கை மிக சுலபம். அவர்களுக்கு வாழ்க்கை என்பதே தங்க தட்டில் வைத்து தரப்படுகிறது. இக்கேள்விக்கான பதிலை சமீபத்தில் என் மின்னஞ்சலில் வந்த ஒரு கதையின் மூலம் கிடைக்கப் பெற்றேன். கதையை மேற்கோள் காட்ட:
“ஒரு மனிதன் பட்டாம்பூச்சியின் குக்கூன் ஓடு ஒன்றை கண்டான். ஒரு நாள் அதில் ஒரு சிறிய துவாரம் தோன்றியது; அந்தச் சிறிய துவாரத்தின் வழியாக, தன் உடலை வலுக்கட்டாயமாக வெளியேற்ற, பல மணி நேரம் போராடிக் கொண்டிருந்த ஒரு வண்ணத்துப்பூச்சியை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். பின்னர் சில நிமிடம் அது எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல் இருந்தது. முடிந்த அளவு பிரயத்தனம் செய்து, பின்னர் தன் முயற்சியை கைவிட்டது போல் அந்த மனிதனுக்கு தோன்றியது. அவன் அந்த பட்டாம்பூச்சிக்கு உதவ முடிவெடுத்தான். ஒரு கத்தரிக்கோலை எடுத்து வந்து, மீதமுள்ள குக்கூனை துண்டித்தான். சிறிது நேரத்தில் வண்ணத்துப்பூச்சி அந்த ஓடிலிருந்து எளிதாக வெளிப்பட்டது. ஆனால் அது வீங்கிய உடலுடனும், சிறிய, சுருங்கிய இறக்கைகளுடனும் இருந்தது.
எந்த நேரத்திலும், இறக்கைகள் பெரிதாக விரிவடைந்து உடலைத் தாங்கும் மற்றும் வீங்கி இருந்த உடலும் காலப்போக்கில் சுருங்கிவிடும் என்று எதிர்பார்த்து அந்த மனிதன் காத்திருந்தான்.
இரண்டுமே நடக்கவில்லை! உண்மையில், அந்த பட்டாம்பூச்சி தனது வாழ்நாள் முழுவதும் வீங்கிய உடலுடனும், சுருங்கிய இறக்கைகளுடனும் ஊர்ந்து சென்றது. அதனால் ஒருபோதும் பறக்க இயலவில்லை.
தன் அவசர புத்தியாலும் காருண்யத்தினாலும் பட்டாம்பூச்சிக்கு உதவிய அந்த மனிதனுக்கு, ஒன்று புரிபட வில்லை. பட்டாம்பூச்சியின் சிறிய வரையறுக்கப்பட்ட குக்கூன் ஓடும், அதில் ஏற்பட்ட துவாரத்தினூடாக அந்த வண்ணத்துப்பூச்சி வருவதற்குத் தேவையான போராட்டமும், அதன் உடலிலிருந்து ஒருவித திரவத்தை அதன் இறக்கைகளுக்குள் புகுத்தும். இதுவே கூட்டில் இருந்து சுதந்திரம் அடைந்தவுடன் அந்த வண்ணத்துப்பூச்சி பறப்பதற்கு தயார் நிலைக்கு கொண்டுவர இயற்கையின் வழியாகும்.
சில சமயங்களில் போராட்டங்களே நம் வாழ்க்கைக்கு தேவையான ஒன்றாக இருக்கும். எந்த தடையும் இல்லாமல் நம் வாழ்க்கையை கடந்து செல்ல இயற்கை அனுமதித்தால், அது நம்மை முடமாக்கிவிடும். நாமமும் முழு வலிமையுடன் / உறுதியுடன் முயற்சிக்க மாட்டோம். மேலும் நம்மால் நம் “சிறகை விரித்து பறக்க” முடியாமலே போகக் கூடும்.
நாம் உயரமாக பறக்க விரும்பினால், நமது இலக்குகள் உயர்ந்ததாக இருந்தால், நாம் கண்டிப்பாக போராட வேண்டும். மேலும் உயர்ந்த இலட்சியங்கள் இல்லாத வாழ்க்கை, வாழத் தகுதியற்றது. வெள்ளித் தட்டுடன் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை ஒரு மகிழ்ச்சியான சவாரியாக இருக்கலாம். ஆனால் ஒரு ரோலர் கோஸ்டர் சவாரிக்குப் பிறகு வெற்றியை சுவைத்தவர்களுக்கு, அதன் இனிப்பு கூடுதலாக தோன்றும். இதை அனுபவித்தவர்கள் அதனை உறுதி செய்வார்கள்.
பட்டாம்பூச்சியின் உடலில் இருக்கும் திரவம் அதனை கூட்டை விட்டு வெளியே வருவதற்கு உதவுவது போல, போராட்டங்களிலிருந்து வெளியே வருவதற்கு நமக்கும் இயற்கை ஒரு பொறிமுறையை வழங்கியுள்ளது. அதை எப்படி, எங்கு தேடுவது என்ற சந்தேகமா? மன்னிக்கவும், “பிழையறிதலும் தீர்வுகளும்” என்ற தலைப்புடன் வாழ்க்கைக்கான வழிமுறை கையேடு எதுவும் இவ்வுலகில் இல்லை. இது இயற்கை நமக்கு இயல்பாக உள்ளமைத்த பொறிமுறையாகும். இந்த பொறிமுறையானது போராடுவதற்கான வழிமுறையாகும். நம் ஒவ்வொருவரிடமும் இந்த மனவலிமை பல்வேறு சதவிகிதங்களில் உள்ளது. சிலர் இடைவிடாமல் போராட்டங்களை எதிர்கொண்டு முயற்சிப்பதற்கும், சிலர் பாதி வழியில் கைவிடுவதற்கும் இதுவே காரணம். பல தற்கொலைகள், மனவலிமை இல்லாததால் நடக்கின்றன.
ஆம், இப்போது நான் தெளிவடைந்து விட்டேன். நான் தவறாக எண்ணியிருக்கவில்லை. வாழ்க்கை எவருக்கும் இன்னல்களை அளிப்பது இல்லை. நம் நலனை, நாம் மேலும் உயர்ந்து பறக்க வேண்டும் என்றே இயற்கை விரும்புகிறது. இதுவும் ஒரு கருணை தான்.
நீதி:
மகத்தான மனிதர்களின் வாழ்க்கை புத்தகத்தை திருப்பி பார்த்தோமானால், ஏதோ ஒரு கட்டத்தில் – அவர்கள் உச்சத்தை எட்டுவதற்கு சில போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்ததை நாம் அறிந்து கொள்ளலாம். வாழ்க்கையில் அசாதாரணமான ஒன்றைப் பெறுவது எளிதல்ல. நம் முன் பளபளவென ஜொலிக்கும் ஆபரணம், அவ்வித பிரகாசத்தை இறுதியாக பெறவதற்குமுன், தீயினாலும் சுத்தியலினாலும் நிறைய பதப்பட வேண்டியிருக்கும். நம்மை வசீகரிக்கின்ற வைரம் அந்த மினுமினுப்பை பெற, பல கூரிய வெட்டுகளை சந்தித்து, பட்டைத் தீட்டப்பட்ட வேண்டியிருக்கும்.
போராட்டம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி; அதில் நாம் வெற்றி பெற்றால் – சிறப்பு; இல்லையேல் குறைந்தபட்சம் நம்மால் இயன்ற அளவு முயற்சித்தோம் என்ற மனநிறைவு கொள்ளலாமே.
மொழி பெயர்ப்பு:
வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி
SOURCE: SSSIE