நீதி: மகிழ்ச்சி / நேர்மறை சிந்தனை
உப நீதி: விடாமுயற்சி / ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புவார்கள். மகிழ்ச்சி என்பது அவரவர் கையில் உள்ளது என்பதை ஒருவரும் நம்புவதில்லை. மக்கள் பெரும்பாலும் உறவுகள், விதி, வேலை செய்யும் இடத்தில் கிடைக்கும் அனுபவங்கள் போன்ற வெளி விஷயங்களையே மகிழ்ச்சியின்மைக்குக் காரணமாகக் கூறுவர்.
ஒரு விஷயத்தை நினைவு படுத்திக் கொள்ளவும். நீங்கள் படைப்பாக இருக்கலாம் அல்லது படைப்பாளியாக இருக்கலாம். முடிவு உங்கள் கையில் மட்டுமே இருக்கிறது. நீங்கள் எடுக்கும் இந்த முடிவு தான் உங்களைப் படைப்பிலிருந்து, படைப்பாளியாக உயர்த்த உதவுகிறது. நேர்மறை அணுகுமுறையை வளர்த்துக் கொண்டால், அது நம் வாழ்வில் குறிப்பிடத்தக்க நல்ல மாற்றங்களை நமக்குப் பெற்றுத் தரும். இவ்வாறு இருப்பது, நாம் மகிழ்ச்சியாக இருக்க உதவும்.
உண்மைதான். செய்வதை விட சொல்வது மிக எளிது; ஆனால் அதைக் கடைப்பிடிக்கக் கடின முயற்சி எடுத்தோமேயானால், சற்று முன் பாதகமாகத் தெரிந்த நிலைமை, தற்பொழுது சாதகமாகப் புலப்படும். முயற்சி திருவினையாக்கும்.
ஒரு சிறுவன் கையில் கிரிக்கெட் மட்டையையும், பந்தும் வைத்துக் கொண்டு, விளையாட்டு மைதானத்தில் நடந்து செல்கிறான். அப்பொழுது, “இந்த உலகத்திலேயே நான்தான் சிறந்த விளையாட்டு வீரன்” என்று தனக்குத் தானே கூறிக் கொண்டே நடக்கிறான்.
பின்னர், பந்தை வானத்தை நோக்கி சுழற்றி வீசுகிறான். தன் மட்டையால் பந்தை அடிக்க முற்படுகிறான். ஆனால் பந்து தவறி விடுகிறது.
சற்றும் தளராமல் பந்தை எடுத்து மீண்டும் வீசினான். மட்டையால் அடிக்க முற்பட்டான். இரண்டாம் முறையும் தவறியது.
இதே போல் மேலும் நான்கு முறை செய்தான். நான்கு முறையும் தவறவிட்டான்.
ஆறாவது முறை தவற விடும் பொழுது, “நான் தான் இந்த உலகத்திலேயே சிறந்த பந்து வீச்சாளர்!” என்று உரக்கக் கத்தினான்.
வாழ்க்கை சில நேரங்களில் கடினமாக இருக்கலாம், சில நேரங்களில் வலி தருவதாகவும் இருக்கலாம், மேலும் சில நேரங்களில் சோதனையாகவும் இருக்கலாம். ஆனால், அச்சிறுவனைப் போல், நிலைமையை நமக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வதில் தான் நம் திறமை இருக்கிறது. அப்படிப்பட்ட மனோபாவத்தைத் தான் நாம் கண்டிப்பாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நீதி:
மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலை; நமக்கு ஏற்படும் சந்தர்ப்பச் சூழ்நிலைகளை நேர்மறை அணுகுமுறையோடு ஏற்றுக் கொண்டு முன்னேறினால், வாழ்க்கையை சிறந்ததாக மாற்றலாம்.
எல்லா நாட்களும் நல்ல நாளாக அமையாது; ஆனால், ஒவ்வொரு நாளிலும் கண்டிப்பாக ஒரு நன்மை இருக்கும்.
மொழி பெயர்ப்பு:
காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி
Source: http://saibalsanskaar.wordpress.com