Archive | March 2017

தன்னலமற்ற அன்பு – சீக்கியரின் மாறுவேடம்

வலிமை நீதி – அன்பு

உபநீதி – கருணை, குரு பக்தி

Selfless Love - Langar disguise 1

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, சீக்கியர்களின் 10வது குருவாகக் கருதப்படுகிற குரு கோபிந்த் சிங், எல்லோராலும் போற்றப்பட்ட தலைவராகத் திகழ்ந்தார். அவர் இளமையாகவும், வலிமை வாய்ந்தவராகவும் இருந்தார்; பல சமயங்களில், உரத்த குரலில் சிரிப்பார். கடவுளின் மேல் அவர் வைத்திருந்த ஆழ்ந்த அன்பும், பக்தியும் நிரந்தரமாக இருந்தது. அவர் அருகில் இருந்தவர்கள் அந்த பேரின்பத்தை அனுபவித்தனர். கேளிக்கை, சவால்கள் மற்றும் பக்தி வாய்ந்த உலகம் எனக் கூறலாம்! சீக்கியர்கள் அனைவரும், அடுத்ததாக என்ன பாடம் குரு கற்பிக்கப் போகிறார் என்ற ஆர்வத்துடன் காணப் பட்டனர்!

ஒரு முறை குரு கோபிந்த் சிங், அவர் கொள்கைகளைப் பின்பற்றும் மக்களிடம், “ஒவ்வொரு வீட்டிலும் லங்கர் சாப்பாடு அளிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்”Selfless Love - Langar disguise 2 என்றார். சீக்கியர்களே, உங்கள் வீட்டிற்குப் பயணிகள் மற்றும் விருந்தாளிகள் வரும் பொழுது, அது உணவை இலவசமாகப் பரிமாறும் விடுதியாக இருக்க வேண்டும். வேண்டியவர்களுக்கு எல்லாச் சமயங்களிலும் உணவை அளிக்கவும். வீட்டிற்கு வருபவர்களை உணவு உண்ணாமல் அனுப்பக் கூடாது!” என்று அறிவித்தார்.

எல்லோரும் குரு சொன்னதைக் கேட்டனர். சீக்கியர்களின் சேவை மனப்பான்மையை மக்கள் பாராட்டினர். ஆனால், எல்லாச் சமயங்களிலும் சேவை செய்யத் தயாராக இருக்கிறார்களா என்று பரிசோதனை செய்ய குரு விரும்பினார்.

ஒரு நாள், அதிகாலையில் வேடிக்கையான சம்பவம் நிகழ்ந்தது. அது, எல்லாம் அறிந்த குருவின் தெய்வீகக் குறும்பு எனக் கூறலாம். அவர் சாதாரண பயணியைப் போல மாறுவேடத்தில் வந்தார்!

வழக்கமாக குரு தூய்மையான, குறைபாடற்ற, சுருக்கங்கள் இல்லாத உடைகளை அணிவது பழக்கம். ஆனால், அன்று காலை ஒருவரும்  அடையாளம் கண்டறியாத விதத்தில் அழுக்கான உடைகளை அணிந்திருந்தார்.

ஒவ்வொரு பக்தனின் வீட்டிற்கும் செல்லத் திட்டமிட்டார்; “லங்கர் சாப்பாடு” பரிமாறப் படுகின்றதா என்று பார்க்க, மிகவும் சிரமமாக இருக்கும் நேரங்களில், அவர்கள் வீட்டிற்குச் சென்றார். அதிகாலையில் சென்ற பொழுது, அவர்கள் அச்சமயம் வெளியே செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்; அல்லது தினசரி பிரார்த்தனையைத் துவங்க இருந்தார்கள். குரு கதவைத் தட்டி, “தொந்தரவிற்கு மன்னிக்கவும்; நான் ஒரு சாதாரணப் பயணி. உங்களிடம் சாப்பிடுவதற்கு ரொட்டி இருக்குமா?” எனக் கேட்பார்.

“அப்படியா, மிகவும் சீக்கிரமாக வந்திருக்கிறீர்களே! மன்னிக்கவும், தற்போது உணவில்லை. சற்று நேரத்திற்குப் பிறகு வந்தால், தயார் செய்ய முடியும்” என்று பதிலளித்தனர்.

குரு பக்தர்களைப் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். ஒரு எளிமையான விஷயத்தை, மறக்க முடியாத விதத்தில் பக்தர்களுக்குப் பாடம் கற்பிக்க முயற்சித்தார். தன்னலமற்ற மனப்பான்மையுடன்  இல்லாமல், சற்றுSelfless Love - Langar disguise 3 சுயநலவாதிகளாக மக்கள் இருந்தார்கள். ஒவ்வொரு நிமிடமும் மற்றவர்களுக்காக என்றில்லாமல், அவர்களுக்கெனவே சிந்தித்தார்கள்.

அதனால் குரு வீடு வீடாகச் சென்று, “இந்தச் சமயத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு மன்னியுங்கள். நான் ஒரு சாதாரணப் பயணி. உங்களிடம் சாப்பிடுவதற்கு சிறிதளவு பருப்பு இருக்குமா?” என்று கேட்பார். ஒரு மனிதன், “பருப்பா? இவ்வளவு விரைவில் வந்திருக்கிறீர்களே. இது சிற்றுண்டி நேரம் இல்லை. உங்களுக்கு உணவளிக்க சந்தோஷம்; ஆனால் சற்று நேரத்திற்குப் பிறகு வரவும்” எனக் கூறி விடுவான்.

குரு ஒவ்வொரு வீடாகப் போகும் போது, கண்கள் பிரகாசத்துடன், புன்சிரிப்புடன் காணப்பட்டார். ஆனால், ஒரு சீக்கியர் கூட சேவை செய்ய தயாராக இல்லை.

கடைசியாக குரு, நந்தலால் என்ற ஒரு மனிதரின் வீட்டிற்கு வந்தார். நந்தலால் ஒரு விவேகமுள்ள கவிஞராகத் திகழ்ந்தார். குருவை விட 23 வருடங்கள் வயதில் பெரியவராக இருந்தாலும், குரு பக்தி மற்றும் அளவுகடந்த அன்பின் காரணத்தால், எச்சமயமும் குருவின் காலடியில் இருக்க வேண்டும் என்று விருப்பப் பட்டார்.

நந்தலால் பயணியை அன்புடன் வரவேற்றார். மாறுவேடத்தில் இருந்த குரு, “ஒரு நிமிடம்” என்றவுடன் நந்தலால், “வாருங்கள்! தயவு செய்து Selfless Love - Langar disguise 5உட்காருங்கள். சற்று ஓய்வெடுங்கள்” என்றார். உடனே குரு, “நான் ஒரு சாதாரணப் பயணி. ஏதாவது உணவு இருக்குமா?” எனக் கேட்டதற்கு, “கட்டாயமாக!! உடனே உணவு பரிமாறப் படும்” என்ற பதில் வந்தது.

இந்த சேவையை செய்ய சந்தர்ப்பம் கிடைத்ததற்கு மகிழ்ச்சியுற்று, இருக்கும் உணவை நந்தலால் எடுத்து வந்தார். சமைக்கப்படாத மாவு, சரியாக வேகாத பருப்பு, பச்சைக் காய்கறிகள், சற்று வெண்ணை எல்லாம் எடுத்து வந்தார். ஒழுங்காக சமைக்காத உணவை பயணியின் முன் கருணையுடனும், மரியாதையுடனும் அளித்தார்.

நந்தலால் பெருந்தன்மையுடன், “இங்கு என்ன இருக்கிறதோ, உங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளவும். நீங்கள் அனுமதித்தால், நான் மாவைத் தயார் செய்து ரொட்டி செய்கிறேன்; பருப்பு மற்றும் காய்கறிகளை நன்றாக வேக வைத்து, ருசியாக சமைத்துக் கொடுப்பேன். உங்களுக்கு சேவை செய்ய நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும். தயவு செய்து ஓய்வெடுத்துக் கொண்டு இன்பமாக இருக்கவும்” என்றார்.

நந்தலால் சேவை செய்து, குருவை மகிழச் செய்தார். உணவு ருசியாகவும், அளவுகடந்த அன்புடன் சமைத்த உணர்வுடனும் இருந்தது. “எந்த சமயத்தில் யார் வந்தாலும், உணவளிக்க வேண்டும்” என்ற குருவின் வார்த்தைகளை மனதில் ஏற்று, அவ்வாறே செயற்பட்டார். யார் வந்தாலும் உணவளிக்கும் மனப்பான்மை இருந்ததனால், கடவுள் நந்தலால் வீட்டில் பரிபூர்ணமாக இருப்பது குருவிற்குத் தெரிந்தது.

அடுத்த நாள் காலை குரு, “இந்த நகரத்தில் ஒருவர் தான் மனதளவில் சேவை செய்ய விருப்பப் படுகிறார். அவர் பெயர் நந்தலால். அவருக்கு அன்பு மற்றும் பக்தி என்ற மொழி தான் தெரியும். சேவைக்கு அவரின் அர்ப்பணிப்பு விலைமதிப்பற்றது. அவரின் அன்பு எல்லோரையும் ஈர்க்கின்றது. அவர் நடத்தும் இலவச உணவளிப்பு தான் மிகவும் சிறந்தது” என்றார்.

புன்சிரிப்புடன் சீக்கியர்கள் அனைவரும் குருவின் பரிசோதனையைப் புரிந்து கொண்டார்கள். அவர்கள் நற்பண்புகளுடன் திகழ்ந்தாலும், எச்சமயமும் சேவை செய்யத் தயாராக இருந்த நந்தலாலின் மனப்பான்மையை அறிந்தனர். விளக்கம் ஒன்றும் கொடுக்காமல், நந்தலால் உணவை அளித்தார். தன்னலமற்ற மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால், காரணங்கள் ஒன்றுமே இல்லாமல், எச்சமயமும் இன்பமாகSelfless Love - Langar disguise 4 இருக்கலாம். நந்தலால், வருவோரை எப்படி கவனிக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணாமாக இருந்தார்.

நந்தலால், “மகான்களுக்குத் தண்ணீர் கொடுப்பது, பேரரசனாக இருப்பதற்குச் சமம். அவர்களுக்கு உணவளிப்பது எல்லாப் பொன்னுலகமும் சேர்ந்திருப்பதற்கு சமம். குருவிற்கு “லங்கர் சாப்பாடு” அளிப்பது அனைத்து வல்லரசு மற்றும் செல்வங்களுக்கும் சமம். புனிதமானவர்கள் ஏழை மனிதர்களைப் பார்த்துக் கொள்கிறார்கள்; அவர்கள் மத்தியில் இருப்பதே மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது. குருவின் புனிதமான வார்த்தைகளுக்குள் எல்லாமே அடங்கியுள்ளது” என்றார்.

நீதி

நாம் எல்லோரும் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டு, எல்லாச் சமயங்களிலும் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அன்பு மற்றும் சேவை செய்வதற்கு அளவே இல்லை என்று நாம் வழிபடும் குருக்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். நம் வீட்டிற்கு யார் வந்தாலும், மரியாதையுடன் சேவை செய்ய வேண்டும். எல்லோரிலும் கடவுள் இருக்கிறார் என்று உணர்ந்து செயற்பட வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி,  ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

யானையும் அதன் வயதான பார்வையற்ற தாயும்

நீதி – நன் நடத்தை / அன்பு 

உபநீதி – பெற்றோருக்கு மரியாதை, கடமை உணர்ச்சி  

The elephant and old blind mother1

பல வருடங்களுக்கு முன்பு, இமய மலைக் குன்றுகளின் தாமரைத் தடாகத்தின் அருகில், புத்தர் ஒரு சிறு யானையாகப் பிறவி எடுத்திருந்தார். யானைக் குட்டி தூய வெண்மை நிறத்துடன், பவழ நிறப் பாதங்களுடன் மிகவும் அழகாக இருந்தது. அதன் துதிக்கை வெள்ளிக் கயிறு போல மின்னியது. அதன் தந்தங்கள் வில் போல் வளைந்து இருந்தன.

யானைக் குட்டி தன் தாயைப் பின் தொடர்ந்து, எல்லா இடங்களுக்கும் சென்றது. தாய் கொழுந்து இலைகளையும், பழுத்த ருசியான மாம்பழங்களையும் உயரமான மரங்களிலிருந்து பறித்து “முதலில்The elephant and old blind mother2 உனக்கு, பிறகு எனக்கு” என்று கூறி குட்டிக்கு கொடுத்து வந்தது. நறுமணம் கொண்ட தாமரை மலர்களுக்கிடையில், தாமரைத் தடாகத்தில் இருந்த குளிர்ந்த நீரால் குட்டி யானையை குளிப்பாட்டியது; தன் துதிக்கையில் தண்ணீரை நிரப்பி குட்டி யானையின் உடம்பு பளபளவென மின்னும் வரை, உடம்பு முழுவதும் தண்ணீரை வாரி இறைத்தது. குட்டி யானையும், தன் துதிக்கையில் நீரை நிரப்பி, குறி பார்த்து, தன் தாயாரின் கண்களுக்கு மத்தியில் பீச்சாங்குழல் போல தண்ணீரை வீசியது. தாயாரும் கண் கொட்டாமல், குட்டியுடன் இவ்வாறே விளையாடியது. சற்று நேரத்திற்குப் பிறகு, இரு யானைகளும் மிருதுவான மணலில், தன் துதிக்கைகளைச் The elephant and old blind mother3சுருட்டி, ஓய்வு எடுத்தன. தாய் யானை, ஆப்பிள் மரத்தின் நிழலில் ஓய்வு எடுத்தவாறு, குட்டி தன் நண்பர்களுடன் விளையாடுவதைப் பார்த்து மகிழ்ந்தது.

சில காலங்களுக்குப் பிறகு குட்டி யானை வளர்ந்து, காளை போல உயரமாகவும், பலசாலியாகவும் திகழ்ந்தது. குட்டி யானை வளர வளர, தாய் யானையும் முதுமை அடைந்தது. அதன் தந்தங்கள் உடைந்து மஞ்சள் நிறமாகியது. அத்துடன் தாய் யானை தன் கண் பார்வையையும் இழந்தது. இப்பொழுது இளம் யானை தினமும் கொழுந்து இலைகளையும், பழுத்த ருசியான மாம்பழங்களையும் உயரமான மரங்களிலிருந்து பறித்துத் தன் தாயாரிடம், “முதலில் உனக்கு, பிறகு எனக்கு” எனக் கூறிக் கொடுக்க ஆரம்பித்தது.The elephant and old blind mother5

சிறு வயதில் தன் தாய் செய்த அனைத்தையும் இப்பொழுது கைமாறாக தாய்க்கு செய்ய ஆரம்பித்தது. ஒரு நாள், வேட்டையாட வந்த அரசர், இந்த அழகான வெள்ளை யானையைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, “மிக அழகான மிருகம்; நான் இதன் மீது சவாரி செய்ய வேண்டும்” என நினைத்தார். ஆதலால் இளம் யானையைப் பிடித்து, தன் அரண்மனைக் கொட்டிலில் வைத்தார். அதற்குப் பட்டுத் துணியும், ஆபரணங்களும் அணிவித்து, தாமரை மலர்களால் ஆன மாலையையும் சூட்டினார். சுவையான புற்களையும், சாறு நிறைந்த பழங்களையும் அதற்கு உணவாக வைத்து, சுத்தமான நீரால், தண்ணீர்த் தொட்டியை நிரப்பினார்.

The elephant and old blind mother6ஆனால், இளம் யானை இவை எதையும் உண்ணவும் இல்லை, அருந்தவும் இல்லை. அழுது அழுது,  நாளுக்கு நாள் உடல் இளைத்தது. அதற்கு அரசர், “சிறந்த மிருகம்! பட்டு, ஆபரணங்கள், நல்ல சுவையான உணவு,  சுத்தமான நீர் இவற்றை எல்லாம் கொடுத்தாலும், உண்ணாமல், அருந்தாமல் இருக்கிறாய். உனக்கு எது தான் மகிழ்ச்சி தரும்?” எனக் கேட்டார். அதற்கு இளம் யானை, “உடையோ, ஆபரணமோ, உணவோ எனக்கு மகிழ்ச்சி அளிக்காது. கண் பார்வையற்ற என் தாய், காட்டில் தனியாக இருக்கிறார். அவரை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை. நான் இறப்பதாக இருந்தாலும் இந்த உணவையோ, தண்ணீரையோ, முதலில் என் தாயாருக்குக் கொடுக்கும் வரை உண்ணவோ அருந்தவோ மாட்டேன்” என்றது.

அரசர், “இவ்வளவு அன்பை நான் மனிதர்களிடம் கூட கண்டதில்லை. இனி உன்னை அடைத்து வைப்பது சரியல்ல” என்று கூறி இளம் யானையை விடுதலை செய்தார். இளம் யானை காட்டுக்கு ஓடோடிச் சென்று, தன் தாயாரைத் தேடியது. தாமரைத் தடாகத்தின் அருகில், மணலில் தன் தாய் நடக்க முடியாமல், பலவீனமாகப் படுத்திருப்பதைக் கண்டது. கண்ணீருடன், தன் துதிக்கையில் நீரை நிரப்பி, உடம்பு பளபளவென மின்னும் வரை, தாயின் உடம்பின் மீது வாரி இறைத்தது. உடனே தாயார், “மழை பொழிகிறதா, அல்லது என் மகன் திரும்பி வந்து விட்டானா?” எனக் கேட்டது. “உன் மகன் வந்து விட்டேன். அரசர் என்னை விடுதலை செய்து விட்டார்” என இளம் யானை கூறி, தன் தாயாரின் கண்களைத் தண்ணீரால் சுத்தம் செய்தது. அங்கு ஒரு அற்புதம் நிகழ்ந்தது! தாய் யானைக்குக் கண்பார்வை திரும்பவும் வந்து விட்டது. தாய் யானை, “நான் என் மகனுடன் சந்தோஷமாக இருப்பது போல, அரசரும் தன் மகனுடன் சந்தோஷமாக இருக்கட்டும்” என வாழ்த்தியது.

இளம் யானை கொழுந்து இலைகளையும், பழுத்த ருசியான பழங்களையும் பறித்து, “முதலில் நீ, பிறகு நான்” என்று கூறியவாறு தாய் யானைக்குக் கொடுத்தது.

நீதி

The elephant and old blind mother7நம் பெற்றோர் நம்மிடம் அளவற்ற அன்பு வைத்திருக்கிறார்கள். “மாதா, பிதா, குரு, தெய்வம்” என நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். (முதலில் தாய், தந்தை, குரு, பிறகு தெய்வம்)

நம் வாழ்வில் தாயாருக்கு உயர்ந்த ஸ்தானம் கொடுக்கப் பட்டிருக்கிறது. நாம் பெற்றோரிடம், முக்கியமாக அவர்களுக்குத் தேவையான போது, அன்புடனும், மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி,  ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

நீதி: சரியான மனப்பான்மை / ஒற்றுமை 

உபநீதி: சகிப்புத்தன்மை / ஒருவருக்கு ஒருவர் உதவி புரிதல் 

மிகக் கடுமையான குளிர் காலம்; அதனால், பல மிருகங்கள் இந்த சீதோஷ்ணநிலை தாங்காமல் மாண்டன.

இந்த இக்கட்டான நிலையைப் புரிந்து கொண்டு, சில முள்ளெலிகள் ஒன்றாகக் கூடின; ஒன்றுக்கு ஒன்று அருகில் இருந்து, வெப்ப நிலையைப் பராமரித்து, தங்களைச் சூடாக வைத்துக் கொண்டன; இவ்வகையில், குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடிந்தது. ஆனால், அதனுடைய முட்கள் குத்திக் கொண்டே இருந்ததால், சற்று பிரச்சனையாக இருந்தது.

சில நாட்களுக்குப் பிறகு, காயம் உண்டானதால், ஒன்றாக இருந்த முள்ளெலிகள் தனித் தனியாக பிரிந்தன. கடுங்குளிரால் தாக்கப்பட்ட முள்ளெலிகள் உறைந்து ஒன்றொன்றாக உயிர் இழந்தன. அதனால், ஒரு தீவிரமான முடிவு எடுக்க வேண்டிய நிலை வந்தது; முட்கள் குத்தினாலும், ஒன்றாகச் சேர்ந்து தங்களைக் குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம் அல்லது தனியாக உறைந்து மாண்டு போகலாம் என்பது தான் அந்த தீர்வு.

விவேகமுள்ள முள்ளெலிகள் மறுபடியும் ஒன்றாகக் கூடின. அதன் முட்களால் உண்டான சிறு காயங்களைப் புறக்கணித்து, ஒன்றாக இருந்து கிடைத்த நற்பயன்களை எண்ணி நன்றியோடு வாழ்ந்தன. இவ்வகையில், குளிர்காலத்தை சமாளிக்க முடிந்தது.

நீதி:

வாழ்க்கையில், மற்றவர்களின் குறைபாடுகளைப் பொருட்படுத்தாமல், நிறைவுகளை மட்டும் பாராட்டி, சமூகத்தில் சுமுகமாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். அது தான் ஒரு சரியான மனப்பான்மை கொண்ட உறவுமுறை எனக் கூறலாம். சகிப்புத்தன்மை, பொறுமை மற்றும் மற்றவர்களை ஏற்றுக் கொண்டு வாழ்தல் போன்ற நற்குணங்களை மேம்படுத்திக் கொண்டால், உறவு முறைகளைச் சுமுகமாக பராமரித்து, வெற்றி பெறலாம்.

கூடி வாழ்ந்தால் கோடி இன்பம் 

மொழி பெயர்ப்பு:

சுப்ரியா, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

நாம ஸ்மரணத்தின் மகிமை

நீதி: அன்பு

உபநீதி: பிரார்த்தனையின் சக்தி, நம்பிக்கை

power of chanting the lords name picture 1

ஒரு முறை, நாரதர் மகாவிஷ்ணுவை தரிசனம் செய்ய வந்தார். அவர்களுக்கு இடையில் நடந்த உரையாடல்.

நாராயணர்: என்ன நாரதரே! நலமா?

நாரதர்: நலம் தான் பிரபு. வழக்கம் போல மூவுலகங்களையும் சுற்றி வருகிறேன்.

நாராயணர்: மனதில் என்ன எண்ணத்துடன் வலம் வருகிறாய்?

நாரதர்: பிரபு! உங்களைத் தவிர வேறென்ன? எப்பொழுதும் “நாராயணா நாராயணா” தான். ஆனால், ஒரு சந்தேகம். பிரபுவின் நாமத்தைச் சொல்வதனால் என்ன பலன் கிடைக்கும்?

power of chanting the lords name picture 2

நாராயணர்: நீ நாமஸ்மரணம் செய்கிறாய்; ஆனால், அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வில்லையே. பலன் என்னவென்று அங்கு உட்கார்ந்திருக்கும் காகத்திடம் கேள்.

உடனடியாக, நாரதர் காகத்திடம், “நாராயணா என்னும் நாமத்தை ஜபிப்பதனால் என்ன பலன்?” என்று கேட்க, நாராயணா என்ற வார்த்தையைக் கேட்டவுடனே, காகம் இறந்து விட்டது. நாரதர் அதிர்ந்து போய் நாராயணரிடம் ஓடிச் சென்று, “பிரபு என்ன இது? நான் அந்த காகத்திடம் கேட்டேன். அது உடனே கீழே விழுந்து இறந்தது. இது தான் பலனா?” என்றார்.

நாராயணர்: நாரதா, உண்மையை அறிய வேண்டுமென்றால் ஒழுங்கான முறையில் நேரத்தைச் செலவழிக்க வேண்டும். அங்கு ஒரு ஏழை அந்தணரின் வீடு உள்ளது;power of chanting the lords name picture 3 அங்கு கூண்டில், அழகான பச்சை நிறத்தில் சிவப்பு அலகுடன் ஒரு கிளி இருக்கும். அதனிடம் சென்று கேட்டுப் பார்.

உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் நாரதர் கிளியிடம், “நாராயணா என்னும் நாமத்தை ஜபிப்பதனால் என்ன பலன்?” என்று கேட்டார். உடனே கிளியும், கீழே விழுந்து உயிரை விட்டது. நாரதர், பதட்டத்தில் நாராயணரிடம் ஓடிச் சென்றார்.

நாரதர்: நான் அந்தக் கிளியிடம் கேட்டேன். அதுவும் கீழே விழுந்து இறந்தது. இது தான் கிடைக்கும் பலனா?

நாராயணர்: உண்மையை உணரும் வரை மன உறுதி வேண்டும். அதே அந்தணரின் வீட்டில் இப்பொழுதான் ஒரு பசுங்கன்று பிறந்துள்ளது. அதைப் போய் கேள்.

power of chanting the lords name picture 4

நாரதர் கன்றுக்குட்டியிடம் சென்று நாராயண மந்திரத்தின் மகிமையைக் கேட்டார். அவரை நிமிர்ந்து பார்த்த கன்றின் உயிர் உடனே பிரிந்தது. நாரதர் பதட்டத்துடன் நாராயணரிடம் ஓடி வந்தார்.

நாரதர்: உண்மை தெரியும் வரை நான் இந்த விஷயத்தை விடப் போவதில்லை. பிரபு! கன்றும் விழுந்து இறந்தது. இது தான் பலனா?

நாராயணர்: அவசரப்படாதே நாரதா. ”பதறிய காரியம் சிதறிப் போகும்”. அதுவே கவலைக்கு வழி வகுக்கும். அதனால் பொறுமையாக இரு. இந்த நாட்டை ஆளும் அரசனுக்கு நேற்று தான் ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அந்தக் குழந்தையிடம் சென்று கேட்டுப் பார்.

நாரதர் பயத்துடன், “குழந்தை இறந்தால், அரண்மனையில் இருக்கும் காவலர்கள் என்னைக் கைது செய்வார்கள். நான் இறந்து போவேன். இது தான் பலனா” என்றார்.

நாராயணர்: அவசரப்படாதே. அந்தக் குழந்தையிடம் சென்று கேட்டுப் பார்.

நாரதர் அரசனிடம் சென்று குழந்தையைக் காண வேண்டும் என்று கேட்டார். ஒரு தங்கத் தட்டில் குழந்தையை எடுத்து வந்தார்கள். “அரசரே! குழந்தையிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?” என நாரதர் கேட்டார். அரசரும் சம்மதித்தார்.

நாரதர்: நாராயணரின் நாமம் ஜபிப்பதனால் என்ன பலன்?

இதைக் கேட்டவுடன் குழந்தை (இளவரசன்) பேச ஆரம்பித்தான்.

power of chanting the lords name picture 5

இளவரசன்: “நாரத முனிவரே! இதுதான் நீங்கள் இதுவரை கற்றதா? நாள் முழுவதும் நாராயண மந்திரத்தை உச்சரித்தும் அதன் சுவை அறியாமல் இருக்கிறீர்கள். முதலில் நான் ஒரு காகமாக இருந்தேன். நீங்கள் என்னிடம் வந்து நாராயண மந்திரத்தின் பலன் பற்றிக் கேட்டீர்கள். உடனே நான் பிறவிப்பயனை முழுமையாக அடைந்து, அந்தப் பிறவியை முடித்துக் கொண்டேன். பிறகு கிளியாகப் பிறந்தேன். காக்கையின் இடம் எங்கே? கிளியின் இடம் எங்கே? கிளி கூண்டில் வைத்து கவனத்துடன் பராமரிக்கப்பட்டது. நீங்கள் மீண்டும் என்னிடம் வந்து அதே நாராயண நாமத்தைச் சொல்லி சந்தேகம் கேட்டீர்கள். உடனே நான் உயிர் துறந்து, கன்றுக் குட்டியாகப் பிறந்தேன். இது கிளியைவிட உயர்ந்த பிறப்பு. பரதகண்டத்தில் பசுவை தெய்வமாக வழிபடுகிறார்கள். மீண்டும் தங்கள் மூலம் நாராயணர் பெயரைக் கேட்டு, பிறவி முடிந்து, இப்பொழுது அரசகுமாரனாகப் பிறந்துள்ளேன். காகம், கிளி, கன்றுக்குட்டி எங்கே? அரசிளங்குமரன் எங்கே? கடவுள் நாமத்தைச் சொல்வதால் வாழ்வில் நம் நிலை மேலோங்கி இருக்கிறது. இப்பொழுது நான் அரசகுமாரன். இது என்னுடைய கொடுப்பினை. நாராயண நாமத்தின் பலன் இதுதான்” என்றான்.

நீதி:

நம்பிக்கை, அன்பு மற்றும் பக்தி இருந்தால், நாம் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம்.

இறைவனின் நாமத்தைக் கேட்ட காகம் கிளியானது. பிறகு கன்றானது. முடிவில் கன்று இளவரசனாக மாறியது. நாராயணரின் நாமத்தை கேட்பதனால், எவ்வளவு நற்பயன்கள் கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

இறைவனின் நாமத்தைக் கேட்டதற்கே இவ்வளவு சக்தி என்றால் அவருடைய நாமத்தை ஜபிப்பதின் மகிமையை நாம் புரிந்து கொள்ளலாம். அதனால் நாம ஸ்மரணத்தின் சக்தி அபாரமானது.

திருமங்கையாழ்வார் பாசுரம்:

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம்

நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும்

வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்

நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் அது நாராயணா என்னும் நாமம்.

பொருள்:

நாராயண நாமமானது, உயர் பிறப்பு, செல்வம் அளிக்கும். அடியவரின் துயர்களைத் தரை மட்டமாக்கிவிடும். அருள், சொர்க்க வாசலைக் காண சக்தி, எல்லா விதமான நலன்கள் மற்றும் பரமபதத்தை அளிக்கும். (இங்கு வலம் என்பது சக்தி என்று பொருள்படும்) நம் அன்னையைப் போல நமக்குப் பார்த்து, பார்த்து வேண்டிய அனைவற்றையும் செய்யும்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

வாழ்க்கையின் போராட்டங்கள்

நீதி – நன்னம்பிக்கை 

உபநீதி – சரியான மனப்பான்மை

struggles-of-our-life1ஒரு சமயம், மகள் தன் தந்தையிடம் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது, அவளுக்கு வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை சமாளிக்க வழி தெரியாமல் தவிப்பதாகக் கூறினாள். எதிர்த்துப் போராடியும், பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாமல் சோர்வு அடைந்துவிட்டதாகவும் அவள் வருத்தப் பட்டாள். ஒரு பிரச்சனையை சரி செய்த பின், தொடர்ந்து மற்றொன்று புதிதாக முளைத்து விடுகிறது என்று அவள் எண்ணினாள். அப்பெண்ணின் தந்தை சமையற்காரராகப் பணி புரிந்தார். அவர் தன் மகளைச் சமையலறைக்கு அழைத்துச் சென்றார்; பிறகு, மூன்று பானைகளில் தண்ணீர் நிரப்பி, அடுப்பில் வைத்து தீ மூட்டினார்
struggles-of-our-life2

நீர் கொதிக்கத் தொடங்கியதும், அவர் ஒரு பானையில் உருளைக்கிழங்கையும், இரண்டாவதில் முட்டைகள் மற்றும் மூன்றாவதில் காப்பிப் பொடியையும் போட்டு  மூடி வைத்தார். சிறிது நேரம், தனது மகளிடம் எதுவும் பேசாமல் பொறுமையுடன் அவை கொதிப்பதை அவர் பார்த்துக் கொண்டிருந்தார்.  தந்தை என்ன செய்கிறார் என்பதை அறியாமல், அந்தப் பெண் முனகிக் கொண்டு அமைதியின்றி காத்திருந்தாள். இருபது நிமிடங்களுக்குப் பிறகு தீயை அணைத்து பானையில் இருந்த உருளைக்கிழங்கு மற்றும் ஒரு முட்டையை தனித்தனிக் கிண்ணங்களில் அவர் வைத்தார்; பிறகு, மூன்றாவது பானையிலிருந்த காப்பியை ஒரு கோப்பையில் நிரப்பினார்.

மகள் பக்கம் திரும்பி, “உனக்கு என்ன தெரிகிறது?” என்று அவர் கேட்டார்.

struggles-of-our-life3“உருளைக்கிழங்கு, முட்டை மற்றும் காப்பி,” என்று அவள் அவசரமாய் பதிலளித்தாள்.

அவர் “இன்னொரு முறை கூர்ந்து பார்”, என்றார். மகளும் உற்று நோக்கி உருளைக்கிழங்கு வெந்து மிருதுவாக இருப்பதைக் கவனித்தாள். பின்னர், தந்தை அந்த முட்டையை எடுத்து அதை உடைக்கச் சொன்னார். முட்டையின் ஓடை உடைத்த பிறகு அதனுள் இருந்த திரவம் கெட்டியாக இருப்பதைப் பார்த்தாள். இறுதியாக, அவர் காப்பி நீரை பருகச் சொன்னார். அதை சுவைக்கும் போது அதிலிருந்து வந்த நறுமணம் அவள் முகத்தில் ஒரு புன்முறுவலை வரவழைத்தது.

“அப்பா, இதன் அர்த்தம் என்ன?” என்று அவள் கேட்டாள்.

struggles-of-our-life4a

அதற்கு அவளின் தந்தை, “உருளைக்கிழங்கு, முட்டை மற்றும் காப்பிப் பொடி  ஒரே மாதிரியான வெப்பநிலையில் கொதித்தன. எனினும், ஒவ்வொன்றும் வித்தியாசமாகச் செயற்பட்டது. கெட்டியாக இருந்த உருளைக்கிழங்கு, கொதிக்கும் நீரில் வெந்து மென்மையாக மாறிவிட்டது. அதே கொதிக்கும் நீர், மெல்லிய வெளிப்புற ஓடு கொண்ட முட்டையை கெட்டியாக்கியது; முட்டை மாற்ற முடியாத நிலையை அடைந்தது. ஆனால், காப்பிப் பொடி  கொதிக்கும் நீருடன் முழுமையாகக் கலந்து, நீரின் தோற்றத்தை மாற்றி, தன் தனித்தன்மையான நறுமணத்தையும் அந்த நீருக்கு அளித்தது.struggles-of-our-life4b

“இதில் எதுவாக இருக்க நீ விருப்பப் படுகிறாய்?” என்று அவர் தனது மகளைக் கேட்டார். பிறகு, “துன்பம் உன் கதவை தட்டும் போது, நீ எவ்வாறு பதில் அளிக்கப் போகிறாய்? உருளைக்கிழங்காகவா, முட்டையாகவா அல்லது காப்பிப் பொடியாகவா? என்ற கேள்வியை எழுப்பினார்.

நீதி:

வாழ்க்கையில், பல சம்பவங்கள் நடக்கின்றன; ஆனால் நாம் அவைகளை  எவ்வாறு தன்னம்பிக்கையுடன் சமாளிக்கின்றோம் என்பது தான் முக்கியம். பல விஷயங்களைக் கற்றுக் கொண்டு, கடினமான பிரச்சனைகள எப்படி சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்ப நல்ல விதமாக மாற்றலாம் என்று யோசிக்க வேண்டும். ஒருமுகச் சிந்தனையோடு கடினமாக உழைத்து, நம்பிக்கையுடன் செயற்பட்டால், வெற்றி நிச்சயம்.

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை.

ஒரு செயலை புரியும் போது துன்பம் அதிகமாக வந்தாலும், முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்ய வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

வள்ளி , சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com