வலிமை நீதி – அன்பு
உபநீதி – கருணை, குரு பக்தி
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, சீக்கியர்களின் 10வது குருவாகக் கருதப்படுகிற குரு கோபிந்த் சிங், எல்லோராலும் போற்றப்பட்ட தலைவராகத் திகழ்ந்தார். அவர் இளமையாகவும், வலிமை வாய்ந்தவராகவும் இருந்தார்; பல சமயங்களில், உரத்த குரலில் சிரிப்பார். கடவுளின் மேல் அவர் வைத்திருந்த ஆழ்ந்த அன்பும், பக்தியும் நிரந்தரமாக இருந்தது. அவர் அருகில் இருந்தவர்கள் அந்த பேரின்பத்தை அனுபவித்தனர். கேளிக்கை, சவால்கள் மற்றும் பக்தி வாய்ந்த உலகம் எனக் கூறலாம்! சீக்கியர்கள் அனைவரும், அடுத்ததாக என்ன பாடம் குரு கற்பிக்கப் போகிறார் என்ற ஆர்வத்துடன் காணப் பட்டனர்!
ஒரு முறை குரு கோபிந்த் சிங், அவர் கொள்கைகளைப் பின்பற்றும் மக்களிடம், “ஒவ்வொரு வீட்டிலும் லங்கர் சாப்பாடு அளிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என்றார். சீக்கியர்களே, உங்கள் வீட்டிற்குப் பயணிகள் மற்றும் விருந்தாளிகள் வரும் பொழுது, அது உணவை இலவசமாகப் பரிமாறும் விடுதியாக இருக்க வேண்டும். வேண்டியவர்களுக்கு எல்லாச் சமயங்களிலும் உணவை அளிக்கவும். வீட்டிற்கு வருபவர்களை உணவு உண்ணாமல் அனுப்பக் கூடாது!” என்று அறிவித்தார்.
எல்லோரும் குரு சொன்னதைக் கேட்டனர். சீக்கியர்களின் சேவை மனப்பான்மையை மக்கள் பாராட்டினர். ஆனால், எல்லாச் சமயங்களிலும் சேவை செய்யத் தயாராக இருக்கிறார்களா என்று பரிசோதனை செய்ய குரு விரும்பினார்.
ஒரு நாள், அதிகாலையில் வேடிக்கையான சம்பவம் நிகழ்ந்தது. அது, எல்லாம் அறிந்த குருவின் தெய்வீகக் குறும்பு எனக் கூறலாம். அவர் சாதாரண பயணியைப் போல மாறுவேடத்தில் வந்தார்!
வழக்கமாக குரு தூய்மையான, குறைபாடற்ற, சுருக்கங்கள் இல்லாத உடைகளை அணிவது பழக்கம். ஆனால், அன்று காலை ஒருவரும் அடையாளம் கண்டறியாத விதத்தில் அழுக்கான உடைகளை அணிந்திருந்தார்.
ஒவ்வொரு பக்தனின் வீட்டிற்கும் செல்லத் திட்டமிட்டார்; “லங்கர் சாப்பாடு” பரிமாறப் படுகின்றதா என்று பார்க்க, மிகவும் சிரமமாக இருக்கும் நேரங்களில், அவர்கள் வீட்டிற்குச் சென்றார். அதிகாலையில் சென்ற பொழுது, அவர்கள் அச்சமயம் வெளியே செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்; அல்லது தினசரி பிரார்த்தனையைத் துவங்க இருந்தார்கள். குரு கதவைத் தட்டி, “தொந்தரவிற்கு மன்னிக்கவும்; நான் ஒரு சாதாரணப் பயணி. உங்களிடம் சாப்பிடுவதற்கு ரொட்டி இருக்குமா?” எனக் கேட்பார்.
“அப்படியா, மிகவும் சீக்கிரமாக வந்திருக்கிறீர்களே! மன்னிக்கவும், தற்போது உணவில்லை. சற்று நேரத்திற்குப் பிறகு வந்தால், தயார் செய்ய முடியும்” என்று பதிலளித்தனர்.
குரு பக்தர்களைப் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். ஒரு எளிமையான விஷயத்தை, மறக்க முடியாத விதத்தில் பக்தர்களுக்குப் பாடம் கற்பிக்க முயற்சித்தார். தன்னலமற்ற மனப்பான்மையுடன் இல்லாமல், சற்று சுயநலவாதிகளாக மக்கள் இருந்தார்கள். ஒவ்வொரு நிமிடமும் மற்றவர்களுக்காக என்றில்லாமல், அவர்களுக்கெனவே சிந்தித்தார்கள்.
அதனால் குரு வீடு வீடாகச் சென்று, “இந்தச் சமயத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு மன்னியுங்கள். நான் ஒரு சாதாரணப் பயணி. உங்களிடம் சாப்பிடுவதற்கு சிறிதளவு பருப்பு இருக்குமா?” என்று கேட்பார். ஒரு மனிதன், “பருப்பா? இவ்வளவு விரைவில் வந்திருக்கிறீர்களே. இது சிற்றுண்டி நேரம் இல்லை. உங்களுக்கு உணவளிக்க சந்தோஷம்; ஆனால் சற்று நேரத்திற்குப் பிறகு வரவும்” எனக் கூறி விடுவான்.
குரு ஒவ்வொரு வீடாகப் போகும் போது, கண்கள் பிரகாசத்துடன், புன்சிரிப்புடன் காணப்பட்டார். ஆனால், ஒரு சீக்கியர் கூட சேவை செய்ய தயாராக இல்லை.
கடைசியாக குரு, நந்தலால் என்ற ஒரு மனிதரின் வீட்டிற்கு வந்தார். நந்தலால் ஒரு விவேகமுள்ள கவிஞராகத் திகழ்ந்தார். குருவை விட 23 வருடங்கள் வயதில் பெரியவராக இருந்தாலும், குரு பக்தி மற்றும் அளவுகடந்த அன்பின் காரணத்தால், எச்சமயமும் குருவின் காலடியில் இருக்க வேண்டும் என்று விருப்பப் பட்டார்.
நந்தலால் பயணியை அன்புடன் வரவேற்றார். மாறுவேடத்தில் இருந்த குரு, “ஒரு நிமிடம்” என்றவுடன் நந்தலால், “வாருங்கள்! தயவு செய்து உட்காருங்கள். சற்று ஓய்வெடுங்கள்” என்றார். உடனே குரு, “நான் ஒரு சாதாரணப் பயணி. ஏதாவது உணவு இருக்குமா?” எனக் கேட்டதற்கு, “கட்டாயமாக!! உடனே உணவு பரிமாறப் படும்” என்ற பதில் வந்தது.
இந்த சேவையை செய்ய சந்தர்ப்பம் கிடைத்ததற்கு மகிழ்ச்சியுற்று, இருக்கும் உணவை நந்தலால் எடுத்து வந்தார். சமைக்கப்படாத மாவு, சரியாக வேகாத பருப்பு, பச்சைக் காய்கறிகள், சற்று வெண்ணை எல்லாம் எடுத்து வந்தார். ஒழுங்காக சமைக்காத உணவை பயணியின் முன் கருணையுடனும், மரியாதையுடனும் அளித்தார்.
நந்தலால் பெருந்தன்மையுடன், “இங்கு என்ன இருக்கிறதோ, உங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளவும். நீங்கள் அனுமதித்தால், நான் மாவைத் தயார் செய்து ரொட்டி செய்கிறேன்; பருப்பு மற்றும் காய்கறிகளை நன்றாக வேக வைத்து, ருசியாக சமைத்துக் கொடுப்பேன். உங்களுக்கு சேவை செய்ய நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும். தயவு செய்து ஓய்வெடுத்துக் கொண்டு இன்பமாக இருக்கவும்” என்றார்.
நந்தலால் சேவை செய்து, குருவை மகிழச் செய்தார். உணவு ருசியாகவும், அளவுகடந்த அன்புடன் சமைத்த உணர்வுடனும் இருந்தது. “எந்த சமயத்தில் யார் வந்தாலும், உணவளிக்க வேண்டும்” என்ற குருவின் வார்த்தைகளை மனதில் ஏற்று, அவ்வாறே செயற்பட்டார். யார் வந்தாலும் உணவளிக்கும் மனப்பான்மை இருந்ததனால், கடவுள் நந்தலால் வீட்டில் பரிபூர்ணமாக இருப்பது குருவிற்குத் தெரிந்தது.
அடுத்த நாள் காலை குரு, “இந்த நகரத்தில் ஒருவர் தான் மனதளவில் சேவை செய்ய விருப்பப் படுகிறார். அவர் பெயர் நந்தலால். அவருக்கு அன்பு மற்றும் பக்தி என்ற மொழி தான் தெரியும். சேவைக்கு அவரின் அர்ப்பணிப்பு விலைமதிப்பற்றது. அவரின் அன்பு எல்லோரையும் ஈர்க்கின்றது. அவர் நடத்தும் இலவச உணவளிப்பு தான் மிகவும் சிறந்தது” என்றார்.
புன்சிரிப்புடன் சீக்கியர்கள் அனைவரும் குருவின் பரிசோதனையைப் புரிந்து கொண்டார்கள். அவர்கள் நற்பண்புகளுடன் திகழ்ந்தாலும், எச்சமயமும் சேவை செய்யத் தயாராக இருந்த நந்தலாலின் மனப்பான்மையை அறிந்தனர். விளக்கம் ஒன்றும் கொடுக்காமல், நந்தலால் உணவை அளித்தார். தன்னலமற்ற மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால், காரணங்கள் ஒன்றுமே இல்லாமல், எச்சமயமும் இன்பமாக இருக்கலாம். நந்தலால், வருவோரை எப்படி கவனிக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணாமாக இருந்தார்.
நந்தலால், “மகான்களுக்குத் தண்ணீர் கொடுப்பது, பேரரசனாக இருப்பதற்குச் சமம். அவர்களுக்கு உணவளிப்பது எல்லாப் பொன்னுலகமும் சேர்ந்திருப்பதற்கு சமம். குருவிற்கு “லங்கர் சாப்பாடு” அளிப்பது அனைத்து வல்லரசு மற்றும் செல்வங்களுக்கும் சமம். புனிதமானவர்கள் ஏழை மனிதர்களைப் பார்த்துக் கொள்கிறார்கள்; அவர்கள் மத்தியில் இருப்பதே மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது. குருவின் புனிதமான வார்த்தைகளுக்குள் எல்லாமே அடங்கியுள்ளது” என்றார்.
நீதி
நாம் எல்லோரும் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டு, எல்லாச் சமயங்களிலும் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அன்பு மற்றும் சேவை செய்வதற்கு அளவே இல்லை என்று நாம் வழிபடும் குருக்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். நம் வீட்டிற்கு யார் வந்தாலும், மரியாதையுடன் சேவை செய்ய வேண்டும். எல்லோரிலும் கடவுள் இருக்கிறார் என்று உணர்ந்து செயற்பட வேண்டும்.
மொழி பெயர்ப்பு:
சரஸ்வதி, ரஞ்சனி