நீதி: நன் நடத்தை / கருணை
உபநீதி: உதவும் மனப்பான்மை
ராஜா ரந்திதேவர் ஒரு சிறந்த விஷ்ணு பக்தராக இருந்ததோடு, அனைவரிலும் கடவுளைப் பார்த்தார். அவர் தம் நாட்டு மக்களை அன்புடன் பேணிக் காப்பதையும், அவர்களுக்கு உதவுவதையுமே பகவான் விஷ்ணுவிற்கு செய்யும் வழிபாடாகக் கருதினார்; ஏழை, பணக்காரர் என்ற ஏற்றத் தாழ்வின்றி அனைவருக்கும் எந்நேரமும் உதவிக் கரம் நீட்டத் தயாராக இருந்தார். அவருக்குப் பேராசையே இல்லாததால், தன் அளவு கடந்த செல்வத்தை ஏழை மக்களுக்கு அள்ளிக் கொடுத்தார். அதுவே, பகவான் விஷ்ணுவின் அருளைப் பரப்பும் வழி என நினைத்தார்.
அவருடைய ராஜ்ஜியத்தில், மக்கள் மிகவும் சந்தோஷமாகவும், செழிப்பாகவும் வாழ்ந்தனர். ஒரு முறை, எதிர் பாராமல் பலத்த மழை பெய்து பயிர்களுக்கும், உயிர்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. அதனால், நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படத் துவங்கியது. நாட்டு மக்கள், கருணை உள்ளம் கொண்ட இந்த அரசரிடம் உதவி கேட்டு ஓடி வந்தனர். அரசர், சிறிதும் தயங்காமல் தன் செல்வங்களை ஏழை மக்களுக்கு விநியோகம் செய்ய ஆரம்பித்தார். மக்களைக் காப்பாற்ற தனக்கு அதிக வலிமை அருளும்படி அவர் பகவான் விஷ்ணுவிடம் பிரார்த்தித்தார்.
எனினும், விளைச்சல் தொடர்ச்சியாக பாதிக்கப் பட்டதால், நிலைமை இன்னும் மோசமடைந்தது; உண்ண உணவு, பருக நீர், வசிக்க இருப்பிடம் கூட இல்லாமல் மக்கள் அவதியுற்றனர்.
ராஜாவின் குடும்பத்தில் சிறிதளவு உணவே இருந்தாலும், பசியோடு வந்த மக்களுக்கு அவர்கள் முதலில் உணவை அளித்தனர்.
நாளடைவில், வறட்சி கடுமையானது. வறுமையால் அவதிப்பட்ட மக்களுக்கு அரசரால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை. அதனால், அரசர் மிகவும் வேதனையுற்றார்; ஆனால், பகவான் விஷ்ணுவிடம் திட நம்பிக்கையுடனும், பக்தியுடனும் பிரார்த்தனை செய்து வந்தார். இருப்பினும் அந்நாட்டுக்கு நல்ல காலம் பிறக்கவில்லை. பஞ்சம் கடுமையானது.
பல நாட்கள் பசியால் அவதிப்பட்ட ரந்தி தேவர், எந்நேரமும் பகவான் விஷ்ணுவை தியானித்து வந்தார். உண்ண உணவின்றி மிகவும் தளர்வடைந்து, நடக்கக் கூட அரசரால் முடியவில்லை. இந்நிலையில், ஒரு நாள், எதிர்பாராத விதமாக, முன் பின் தெரியாத ஒருவர் அரசருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் உணவு அளித்தார். உணவு கிடைத்த அரசருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் மிகுந்த சந்தோஷம் ஏற்பட்டது. ஆனால், அவர்கள் உணவை சாப்பிடும் சமயத்தில், ஒரு ஏழை பிராமணர் உணவு கேட்டு அங்கு வந்தார். அரசர் அவரை மரியாதையுடன் வரவேற்று, தம் உணவிலிருந்து ஒரு பகுதியை எடுத்து அவருக்குக் கொடுத்தார். அந்தப் பிராமணரும் மகிழ்ச்சியுடன் உணவை உண்டு, அரசரின் பெருந்தன்மையைப் பாராட்டிச் சென்றார். அவர் கிளம்பியவுடன் இவர்கள் அந்த உணவை உண்ண முற்படும் போது, ஒரு பிச்சைக்காரர் பசியோடு வந்தார். அரசர் அவருக்கும் தம் உணவிலிருந்து ஒரு பகுதியை அளித்தார். பிச்சைக் காரரும் உண்டு மகிழ்ச்சியோடு சென்றார். உடனேயே மற்றொருவர் தம் நாய்களுடன் உணவு தேடி அங்கு வந்தார். மீதி இருந்த உணவை அவரும் அவருடைய நாய்களும் சாப்பிட்டனர். ரந்திதேவருக்குக் குடிக்கத் தண்ணீர் மட்டுமே மீதியிருந்தது.
அரசர் தன் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள, தண்ணீரைக் குடிக்க முற்பட்ட போது, ஒரு சண்டாளன் அங்கு விரைந்து வந்தான். அரசருக்குத் தொண்டை வறண்டு இருந்தாலும் கூட அவன் பருகத் தண்ணீர் கேட்டதும், சிறிதும் தயங்காமல் அந்த நீரைக் கொடுத்து விட்டார். செல்வம் மற்றும் பதவியைக் காட்டிலும், மற்றவர்களின் துயரத்தை உணரக் கூடிய வலிமையை தனக்கு அளிக்கும்படி, அவர் பகவானிடம் பிரார்த்தித்தார்.
அந்த நீரைக் குடித்தவுடன் அவன் கண்கள் மிளிர்ந்தன. அவன் மிகுந்த உற்சாகமடைந்தான். ஆஹா! அதோ! பகவான் விஷ்ணு தம் சேவகர்களுடன் அரசர் முன் தோன்றி, “அரசரே! உங்கள் பக்தியாலும், மக்களிடம் நீங்கள் காட்டும் அன்பாலும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வரப் போகிறது. தொடர்ந்து என்னை வணங்குங்கள். நீங்கள் இழந்த அனைத்து செல்வங்களையும் திரும்பப் பெறுவீர்!” என்றுரைத்தார். ஆனால், ரந்தி தேவரோ, “எனக்கு பொருள்சார்ந்த உலக ஆசைகள் எதுவும் இல்லை; நான் உங்களிடத்தில் முற்றிலும் அடைக்கலமாகி விட்டேன்” என்று கூறினார்.
பகவான் விஷ்ணு பக்தனுக்கு மோக்ஷமளித்து அருளினார். அரசர் சிறந்த யோகிகளில் ஒருவரானார்.
நீதி:
நம்பிக்கை, அன்பு, பக்தி இம்மூன்றும் இருந்தால் நாம் வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்குச் செல்லலாம்.
மக்கள் சேவையே மாதவன் சேவை. ஏழைகளுக்கு உதவுவதும், தேவை உள்ளவர்களுக்கு தர்மம் செய்வதும் இறைவனை மகிழ்விக்கும் செயல்களாகும். அனைவரிடமும் அன்பு காட்டவும். அனைவருக்கும் சேவை செய்யவும். அனைவரிலும் இறைவனைக் கண்டு, சேவை செய்யும் வாய்ப்பிற்கும் ஒருவர் பாக்கியம் செய்திருக்க வேண்டும். தன்னலமற்ற சேவை செய்பவர்கள் வாழ்க்கையில் அனைத்து நன்மைகளையும் பெறுவர்.
மொழி பெயர்ப்பு:
காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி