நீதி: சரியான நடத்தை
உப நீதி: பணிவு / விழிப்புணர்வு
கடல் பயணம் மேற்கொள்ளும் பொழுது, ஒரு நீராவி கப்பலின் தலைவனுக்கு திடீரென எச்சரிக்கை ஒலி கேட்கிறது.
பயணிக்கும் போது, “கேப்டன், நீங்கள் தற்சமயம் பயணித்து கொண்டிருக்கும் கப்பலின் திசையை 10 டிகிரி சதவீதம் மாற்றாவிட்டால், கடுமையான மோதலில் கொண்டு விடும்” என்ற ஒரு எச்சரிக்கை ஒலி கேட்டது.
அதற்கு கப்பலின் கேப்டன், “தகர்க்கமுடியாத வலிமையுள்ள இந்த கப்பலின் கேப்டன் பேசுகிறேன்; நான் செல்லும் பாதை உனக்கு பிரச்சனையாக இருக்கும் என்று நினைத்தால், நீ உன் பாதையை திசை திருப்பிக் கொள்; என்னால் முடியாது” என்று பதிலுரைத்தான்.
மறுபடியும், “கேப்டன்! கேப்டன்! நான் சொல்வதைக் கேட்டு, கப்பலின் திசையை 20 டிகிரி சதவீதம் மாற்றாவிட்டால், கப்பல் மோதுகின்ற அபாயம் அதிகரிக்கும்” என்ற ஒலி கேட்டது.
அதற்கு கேப்டன், “ஒரு வலுவான கப்பலை நான் இயக்கிக் கொண்டிருக்கிறேன். தற்சமயம் நான் பயணித்துக் கொண்டிருக்கும் போது மாற்றுவது இயலாத விஷயம்” என்றான்.
அதற்கு ஒலி, “நீ ஒரு நீராவிக்கப்பலை இயக்கிக் கொண்டிருக்கலாம்; ஆனால் நான் கலங்கரை விளக்கம் என்பதை மறந்து விடாதே” என்றது.
அந்த கப்பலுக்கு என்ன ஆனது என்பது நமக்கு தெரியாது, ஆனால் இதிலிருந்து நாம் நிச்சயமாக ஒன்றை அறிந்து கொள்ள முடியும். இது கேப்டனின் அகங்காரம். இந்த அகங்காரம் அவன் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்திருக்கும். வேறு ஒரு கதையைப் பார்க்கலாம்.
இப்போது பஞ்சதந்திரத்தில் உள்ள ஒரு பிரபலமான கதையைப் பார்ப்போம்.
ஒரு முறை, இரண்டு வேடர்கள் சில ஆமைகளை பிடிப்பதற்கு திட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். இது, ஒரு வாயாடி ஆமையின் காதில் விழுந்து விட்டது. இந்த சதித் திட்டத்தை எப்படியாவது கலைப்பதற்காக, இந்த ஆமை இரண்டு கொக்குகளின் உதவியை நாடியது. அந்த இரண்டு கொக்குகளும், ஒரு நீளமான குச்சியின் இரண்டு ஓரங்களை தங்களின் அலகில் பிடித்துக் கொள்வது தான் இந்தத் திட்டம்.
கொக்குகள் பறக்கும் போது, இந்த ஆமை தன் வாயால் குச்சியை பிடித்துக் கொண்டு வெகுதூரம் சென்று விடலாம் என்று நினைத்தது.
இந்தத் திட்டத்திற்கு கொக்குகள் ஒப்புக் கொண்டு, ஆமையிடம் குச்சியை கெட்டியாக பிடிக்குமாறு கூறின. ஆமையும் அவ்வாறே செய்தது. பறந்து கொண்டிருக்கும் பறவைகளைக் கண்ட மனிதர்கள், இந்த விசித்திரமான காட்சியைப் பார்த்து வியப்படைந்தனர்.
அவர்கள், “எவ்வளவு சாமர்த்தியமான பறவைகள்! ஆமையை தூக்கிச் செல்ல என்ன ஒரு அற்புதமான யோசனை!” என்று வியப்படைந்தனர்.
தன்னைப் பற்றியே பெருமையாக நினைத்த ஆமை “இது என் திட்டம் தான்” என்று கூறும் போது, மேலிருந்து கீழே விழுந்தது.
ஆமையின் வீழ்ச்சிக்கு அதன் தற்பெருமையே காரணமாகும்.
இரண்டு கதைகளும் வீழ்ச்சியைப் பற்றி பேசுகின்றன. ஆனால் இரு கதாபாத்திரங்களின் மானப்பான்மையில் உள்ள நுட்பமான வேறுபாட்டை கவனித்தீர்களா?
கப்பல் தலைவனின் விஷயத்தில், அவனது கண்மூடித்தனமான அகந்தை வீழ்ச்சிக்கு வழி வகுத்தது. அதே சமயம், ஆமை தனது திட்டத்தைப் பற்றி உண்மையிலேயே பெருமிதம் கொண்டிருந்தது. மேலும் அதன் சாதனைகளை உலகம் அறிய வேண்டும் என்ற விருப்பம் அதற்கு இருந்தது. ஆனால் இங்கே அடிப்படையான மற்றும் முக்கியமான வேறுபாடு என்னவென்றால் ஆமைக்கு ஆணவம் இல்லை. ஆணவம் என்றால் எப்போதும் நாம் செய்வதுதான் சரி என்ற ஆவேசம் மற்றும் பெரும்பாலும் சுயநலம் நிறைந்ததாக இருக்கும். அதே நேரத்தில் பெருமை என்பது ஒரு நபரின் சாதனைகள் மற்றும் உண்மையான அனுபவத்தின் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டது. எனவே அதில் சுயநலம் குறைவு. சுருக்கமாக, ஆணவம் என்பது “தவறான-பெருமை”, இல்லாத சில பண்புகளை பற்றிப் பெருமைப்படுவது. கப்பலின் தலைவன் ஆணவத்தால் செயல்பட்டான், ஆமை தற்பெருமையுடன் செயல்பட்டது. எவ்வாறேனும் இறுதியில் இருவருமே ஒரு பெரிய வீழ்ச்சியை சந்திக்க வேண்டியிருந்தது.
சரியான அர்த்தத்தில் செயற்பட்டால், பெருமை என்பது நேர்மறையான மற்றும் ஆரோக்கியமான உணர்வாகும். ஒருவர் தனது நாடு, தேசம், பெற்றோர், சந்ததியினர் மற்றும் குடும்பத்தை குறித்து பெருமைப்படலாம் ………… இந்த சந்தர்ப்பங்களில் அவர் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார் என்று பொருள்; ஆனால் இந்த உணர்வுகள் தீவிரமாக மாறும் போது, அதாவது மற்றவை அனைத்தும் இவற்றிற்கு முன்னால் ஒன்றுமில்லை என்று நினைக்கும் போது, ஆணவம் ஊடுருவுகிறது. இந்த உணர்வுகளின் வீரியமே இரண்டையும் பிரிக்கும் மெல்லிய சுவர். ஒன்று ஆணவத்திற்கு உணவளித்து அதை மேலும் வளர்க்கிறது. ஆணவம் எளிதில் உடையக் கூடியது, எனவே மிக வேகமாக காயமடைகிறது. ஆனால் பெருமை மிகவும் உறுதியானது.
இரண்டிற்குமே மாற்று மருந்து தேவை என்பதும், அந்த மருந்தானது ‘அடக்கம்’ என்பதும் தெளிவாகிறது. ஆணவமும் பெருமையும் கைவிடப்பட்டு, அடக்கம் என்னும் மனோபாவத்தை தழுவும் போது, ஒரு புதிய பார்வை நம் புரிதலில் ஏற்படுகிறது. இந்த புதிய கண்ணோட்டத்தில் உண்மை புலப்படுகிறது. அடக்கம் நம்பிக்கையுடனும் சுய மரியாதையுடனும் வாழ்வில் முன்னேற வழி வகுக்கிறது.
வாழ்க்கையை அமைதியான, மகிழ்ச்சியான முறையில், வெற்றிகரமாகக் கொண்டு செல்வதற்கு, நாம் ஆணவத்தையும் பெருமையையும் நம்மைக் கட்டுப்படுத்த அனுமதிக்கக் கூடாது; ஒரு கணம் நிதானித்து, அடக்கத்துடன் ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்கும்படி வாழ்க்கை நமக்கு கற்றுக் கொடுக்கிறது.
“ஆணவம் தன்னை எப்போதும் சரி என்று நிரூபிக்க அதிக நேரம் செலவிடுகிறது. நீங்கள் பொதுவாக உடன்படாத ஒரு கருத்தை யாராவது கூறினால், அவர்களை தவறு என்று நிரூபிப்பதை தவிர்த்து, “நீங்கள் சொல்வது சரி” என்று சொல்ல முயற்சியுங்கள். ஆணவம் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கும். அதே வேளையில், இந்த அணுகுமுறை உங்களுக்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் தரும். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை விட சரியாக இருப்பதற்கு விரும்புவீர்களா?” என்கிறார் டாக்டர் வெய்ன் டயர்.
டாக்டர் வெய்ன் டயர் ஒரு சிந்தனையை தூண்டும் கேள்வியை முன்வைத்துள்ளார். “மகிழ்ச்சியாக இருப்பதா அல்லது சரியாக இருப்பதா – எதை நீங்கள் விரும்புவீர்கள்?” ………… நாமே தீர்மானிப்போம்.
நீதி:
நமது அகம்பாவத்தையும் ஆணவத்தையும் கட்டுப்படுத்த நாம் விழிப்புணர்வுடன் ஒரு முயற்சியை மேற்கொள்ள வேண்டும். தொடர்ச்சியான ஒருங்கிணைந்த விழிப்புணர்வுடன், இந்த குணங்களிலிருந்து நாம் விடுபடலாம். பின்னர் பணிவு என்ற மனப்பான்மை நல்லொழுக்கமாக மலர்கிறது; இது நமக்கு மட்டுமல்ல, நாம் வாழும் உலகிற்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் தருகிறது.
மொழி பெயர்ப்பு,
வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி
SOURCE: SSSIE