Archive | January 2023

கடவுள் தன் வழியில் முடிவு செய்கிறார்

மூன்று மரங்கள்

நீதி: உண்மை

உப நீதி: பொறுமை, நன்னம்பிக்கை, விசுவாசம்

ஒரு காட்டில் இருந்த குன்றின் மேல் மூன்று மரங்கள் இருந்தன. அவை தங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தன. முதல் மரம், “ஒரு நாள் நான் ஒரு புதையல் பெட்டி ஆவேன். தங்கம், வெள்ளி மற்றும் விலை மதிப்பற்ற ரத்தினங்களால் நிரப்பப் படுவேன். நுணுக்கமான வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப் படுவேன். அனைவரும் அந்த அழகைக் காண்பார்கள்” என்று கூறியது.

பிறகு இரண்டாவது மரம், “ஒரு நாள் நான் வலிமைமிக்க கப்பலாவேன். ராஜாக்களையும், ராணிக்களையும் ஏற்றிக் கொண்டு, கடலைக் கடந்து உலகின் எல்லா மூலைகளுக்கும் செல்வேன். என்னுடைய வலிமையான கட்டமைப்பின் காரணமாக அனைவரும் என்னுடன் பாதுகாப்பாக இருப்பதை உணர்வார்கள்” என்று கூறியது.

இறுதியாக மூன்றாவது மரம், “நான் காட்டிலேயே உயரமான மற்றும் நேரான மரமாக வளர விரும்புகிறேன். மக்கள் குன்றின் உச்சியில் என்னையும், என் கிளைகளையும்  கண்டு, நான் சொர்க்கத்துக்கும், கடவுளுக்கும் அருகாமையில் இருக்கிறேன் என்று நினைப்பார்கள். எல்லாக் காலத்திலும் நான்தான் மிகப் பெரிய மரமாக இருப்பேன்; மேலும் மக்கள் என்னை எப்போதும் நினைவில் கொள்வார்கள்” என்று கூறியது.

தங்கள் கனவு நனவாகுவதற்கு, சில வருட பிரார்த்தனைகளுக்குப் பிறகு ஒரு நாள் மரம் வெட்டுபவர்கள் அவ்விடம் வந்தார்கள்.

ஒருவன் முதல் மரத்தினிடம் வந்து, “இது வலிமையான மரமாகத் தெரிகிறது. நான் இதை ஒரு தச்சரிடம் விற்க முடியுமென்று தோன்றுகிறது” என்று சொல்லியவாறே அதை வெட்டத் துவங்கினான். மரம் மகிழ்ச்சி அடைந்தது; தச்சர் அதை ஒரு புதையல் பெட்டியாகச் செய்து விடுவார் என்பதால் அம்மரம் சந்தோஷமாக இருந்தது.

இரண்டாம் மரத்தினிடம் வந்த மரம் வெட்டுபவர், “இந்த மரம் வலிமையாகத் தெரிகிறது. என்னால் இதை ஒரு கப்பல் கட்டும் தளத்தில் விற்க முடியும்” என்றார். தான் ஒரு வலிமையான கப்பலாக மாறப் போவதை நினைத்து அம்மரம் மகிழ்ச்சியாக இருந்தது.

மரம் வெட்டுபவர்கள் மூன்றாவது மரத்திடம் வந்த போது, தன்னை அவர்கள் வெட்டிவிட்டால் தன் கனவு நிறைவேறாது என்று தெரிந்து அந்த மரம் மிகவும் பயந்து போனது. மரம் வெட்டுபவரில் ஒருவன், “எனக்கு இந்த மரத்திடமிருந்து விசேஷமாக எதுவும் வேண்டாம். அதனால் நான் இதை எடுத்துக் கொள்கிறேன்” என்று கூறி அதை வெட்டினான்.

முதல் மரம் தச்சர்களிடம் சென்ற போது அது விலங்குகளுக்கான ஒரு தீவனப் பெட்டியாகச் செய்யப் பட்டது. பின்னர் அது வைக்கோலால் நிரப்பப்பட்டு ஒரு கொட்டகையில் வைக்கப் பட்டது. இது கண்டிப்பாக அந்த மரம் வேண்டிக் கொண்டது இல்லை.

இரண்டாவது மரம் வெட்டப் பட்டு சிறிய மீன்பிடிக்கும் படகாக ஆக்கப்பட்டது. வலிமையான கப்பலாகி ராஜாக்களை சுமந்து செல்லக்கூடிய அதன் கனவு ஒரு முடிவுக்கு வந்தது.

மூன்றாவது மரம் பெரிய துண்டுகளாக வெட்டப்பட்டு ஒரு இருண்ட இடத்தில் தனித்து வைக்கப் பட்டது. வருடங்கள் செல்லச் செல்ல அந்த மரங்கள் தங்கள் கனவுகளை மறந்தன.

பின்னர் ஒரு நாள் ஒரு ஆணும், பெண்ணும் அந்தக் கொட்டகைக்கு வந்தனர். அவள் ஒரு குழந்தையைப் பெற்று, அதை முதல் மரத்திலிருந்து செய்யப்பட்ட தீவனப் பெட்டியிலிருக்கும் வைக்கோலில் வைத்தாள். அந்த மனிதன், குழந்தைக்கு ஒரு தொட்டில் செய்திருக்கலாம் என்று விரும்பினாலும், அந்தத் தீவனப்பெட்டியே அதைச் செய்து விட்டது என்று எண்ணினான். அந்த மரம் இந்தச் சம்பவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, எக்காலத்திலும் உள்ள மிகப் பெரிய பொக்கிஷத்தைத் தான் சுமந்து கொண்டிருப்பதை அது தெரிந்து கொண்டது

சில வருடங்கள் கழித்துக் கூட்டமாகச் சில ஆண்கள் அந்த இரண்டாம் மரத்தால் செய்யப்பட்ட மீன்பிடிக்கும் படகில் ஏறினர். அவர்களில் ஒருவன் மிகக் களைப்பாக இருந்ததால் தூங்கி விட்டான். அவர்கள் நீரின் நடுவில் இருந்தபோது ஒரு பெரிய புயல் எழுந்தது. அந்த மனிதர்களைக் காப்பாற்றும் அளவுக்குத் தனக்கு வலிமை இருக்கும்  என்று அந்த மரம் நினைக்கவில்லை. தூங்கிக் கொண்டிருந்தவனைப் பிற மனிதர்கள் எழுப்பியவுடன் அவன் “அமைதி” என்று சொன்னான். உடனே புயல் நின்றது. அச்சமயத்தில் மரம், தான் அரசர்களுக்கெல்லாம் அரசரைச் சுமந்திருப்பதை உணர்ந்தது. இறுதியாக ஒருவன் வந்து அந்த மூன்றாம் மரத்தை எடுத்துச் சென்றான். அவன் அதை தெருக்களில் சுமந்து செல்லும் போது மக்கள் அவனைப் பார்த்துக் கேலி செய்தனர். இறுதியில் அவனை அந்த மரத்தில் ஆணியால் அறைந்து அந்த மரத்தை அவன் இறப்பதற்காகக் குன்றின் உச்சியில் வைத்தனர். ஞாயிற்றுக்கிழமை வந்ததும் அந்த மரம், தான் குன்றின் உச்சியில் நிற்கும் அளவிற்கு வலிமை உடையதாகவும், கடவுளுக்கு எவ்வளவு அருகில் இருக்க முடியுமோ அவ்வளவு அருகில் இருப்பதாகவும் உணர்ந்தது. ஏனென்றால் ஏசுநாதர் அதன் மீது சிலுவையில் அறையப் பட்டிருந்தார்.

தாங்கள் நினைத்தபடி இல்லாவிட்டாலும், ஒவ்வொரு மரமும் தாங்கள் விரும்பியதை அடைந்தன.

நீதி:

நம் ஒவ்வொருவருக்கும் நமக்கேயான கனவுகளும், ஆசைகளும் இருக்கும். எதிர்காலத்தைப் பற்றி கனவு காண்பது நல்லது தான் என்றாலும், அதன் முடிவு எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளப் பொறுமை வேண்டும். ஒரு மனிதன் வளர்த்துக் கொள்ளும் பொறுமை மற்றும் ஏற்றுக் கொள்ளும் தன்மை, விளைவுகள் எதுவாக இருந்தாலும், அவனை வாழ்வில் முன்னேறிச் செல்ல உதவும். அது அவன் வாழ்வில் ஏற்படும் சூழ்நிலைகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவும். நீங்கள் எதிர்பார்த்தபடி சம்பவங்கள் நடக்கவில்லையெனில், கடவுள் உங்களுக்காக வேறொரு திட்டம் வைத்திருக்கிறார் என்று தெரிந்து கொள்ளவும். நீங்கள் அவர்மேல் நம்பிக்கை வைத்தால், அவர் உங்களுக்கு பெரிய பரிசுகள் தருவார்.

மொழி பெயர்ப்பு,

அன்னப்பூரணி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

அறிவாற்றலை அறிந்து கொள்ளுதல்

நீதி: உண்மை

உப நீதி: ஞானம், சுய பரிசோதனை

ஒரு விவசாயி தனது வயலில் நீர் பாய்ச்சுவதற்கு, கிணறு வெட்டத் தொடங்கினான். அவன், நீர் குறி சொல்பவர்கள் சொன்ன இடத்தில் தோண்டத் தொடங்கினான். சிறிது நேரத்திற்குப் பிறகு நீர் வரவில்லை என்று அவன் எரிச்சலுற்றான். 15 அடி ஆழம் மட்டுமே அப்போது தோண்டி இருந்தான்.

அப்போது அங்கே வந்த மற்றொருவன் அவனைப் பார்த்து கேலியாகச் சிரித்து விட்டு, வேறு ஒரு இடத்தைக் காட்டி அங்கே தோண்டச் சொன்னான். அந்த விவசாயியும் அந்த இடத்திற்குச் சென்று தோண்டத் தொடங்கி, இருபது அடி ஆழம் வரை தோண்டினான். அங்கேயும் நீர் வரவில்லை. களைப்படைந்த அவன் தனது வீட்டின் அருகில் இருந்த ஒரு வயதானவரின் அறிவுறுத்தலின்படி, வேறு ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கேயும் தோண்டத் தொடங்கினான்.

அங்கும் நீர் கிடைக்காமல் போனவுடன் அதையும் விட்டு விட்டான். அப்போது அங்கே வந்த அவன் மனைவி, “உங்களுக்கு மூளை இருக்கிறதா? இப்படி யாராவது கிணறு தோண்டுவார்களா? ஒரே இடத்தில் நிலைத்து நின்று ஆழமாகத் தோண்டுங்கள்” என்று கூறினாள். ஓய்வெடுத்துக் கொண்டு, அடுத்த நாள் அந்த விவசாயி, நாள் முழுவதும் ஒரே இடத்தில் நின்று ஆழமாகத் தோண்ட தோண்ட நிறைய நீர் கிடைத்தது.

வாழ்க்கையும் அப்படித்தான். நாம் ஆழமாகச் சிந்தித்து, நம் அறிவாற்றலை அறிந்து கொள்ள வேண்டும்.

நீதி:

மனிதன் தன் ஆழ் மனதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். வெளி உலகத்தின் பேச்சைக் கேட்பதை விட, தன் மனசாட்சியின் குரலைக் கேட்க வேண்டும்; ஆனால் அவன் இந்த உலகப் பொருட்களின் மீது பற்று கொண்டு உண்மைக்கும் பொய்க்கும் வேறுபாடு உணராமல் இருக்கிறான். ஆதலால் நாம் ஒவ்வொருவரும் தனிமையில் அமர்ந்து நம் ஆழ் மனதில் நிறைந்திருக்கும் அந்த உண்மையான ஆனந்தத்தை உணர வேண்டும். இது நம் ஆத்ம பலத்தை அதிகரித்து, நாம் அமைதியாக வாழ வழி வகுக்கும். காலம், பொறுமை மற்றும் விடாமுயற்சி எல்லாவற்றையும் நமக்குப் பெற்றுத் தரும். நாம் நமது மனதை நம்பாமல் அறிவாற்றலை நம்ப வேண்டும்.

மனது நமது அறிவாற்றலுக்கு கட்டளை இடக்கூடாது; ஏனெனில் மனது விரைவில் சோர்வடைந்து விடும் — பால் கோயல்லோ.

மொழி பெயர்ப்பு,

காயத்ரி கணேஷ், சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

சுய நம்பிக்கை கொள்ளுங்கள்

நீதி: உண்மை

உப நீதி: நம்பிக்கை, சுய பரிசோதனை

ஒரு மனிதன் தன் கனவை நனவாக்க முடிவு செய்தான்; ஆனால் அதை செய்வதற்கு அவனிடம் போதுமான வலிமை இல்லை.

அதனால் அவன் தன் தாயிடம் தனக்கு உதவி செய்யுமாறு கேட்டான்.

அதற்கு தாய், “கண்ணே! உனக்கு மகிழ்ச்சியுடன் உதவி செய்வேன்; ஆனால் என்னிடம் ஒன்றுமில்லை. என்னிடம் இருந்த அனைத்தையும் உன்னிடம் முன்பே கொடுத்து விட்டேன்” என்றார்.

அவன் ஒரு அறிவாளியிடம் சென்று, “ஆசிரியரே! சொல்லுங்கள்! வலிமையை நான் எங்கிருந்து பெற முடியும்?” என்று கேட்டான்.

அவர் “அது எவரெஸ்ட்டில் இருப்பதாகச் சொல்லப் படுகிறது; ஆனால் பனிக் காற்றைத் தவிர வேறு ஒன்றையும் என்னால் அங்கு காண முடியவில்லை. நான் திரும்பி வரும் போது என் நேரத்தை மீட்டெடுக்க முடியாத அளவுக்கு வீணாகி விட்டது” என்று கூறினார்.

அவன் ஒரு முனிவரிடம் சென்று,  “என் கனவை நனவாக்குவதற்கான வலிமையை நான் எங்கே பெற முடியும்?” என்று கேட்டான்.

அதற்கு அவர், “உன்னுடைய பிரார்த்தனையில் மகனே. உன் கனவு போலியாக இருந்தால், நீ அதை புரிந்து கொண்டு உன் பிரார்த்தனையில் அமைதி காண்பாய்” என்று கூறினார்.

அவன் மேலும் பலரைக் கேட்ட போது, வந்த பதில்கள் அவனை மிகவும் குழப்பம் அடையச் செய்தன.

அவன் குழம்பியிருப்பதை பார்த்து வழியில் சென்ற ஒரு முதியவர் “நீ ஏன் மிகுந்த குழப்பம் அடைந்திருக்கிறாய்?”  என்று கேட்டார்.

அவன் “ஆம் பெரியவரே! எனக்கு ஒரு கனவு இருக்கிறது. அதை நனவாக்குவதற்கான வலிமையை எங்கே காண்பதென்று எனக்குத் தெரியவில்லை. எவரெஸ்ட்டிலிருந்து நரகம் வரை எல்லோரையும் கேட்டு விட்டேன்; ஆனால் எனக்கு உதவக் கூடியவர் எவருமில்லை” என்றான்.

அந்த முதியவரின் கண்களில் ஒளி தெரிந்தது. அவர் “நீ அனைவரையும் கேட்கவில்லை” உன்னையே நீ கேட்டாயா?” என்று கூறி, “நீ உன் கனவை நம்புகிறாயா? அதை நீ நம்புவது என்பது 100% உன் மீது நம்பிக்கை வைப்பதாகும். பிறர் என்ன சொல்வாரோ, என்ன நினைப்பாரோ என்று சந்தேகப்படக் கூடாது. உன்னைப் பற்றிய இரணடாம் கணிப்பு இருக்கக் கூடாது. உன்னால் செய்ய முடியும் என்று நீ நினைப்பதைவிட, அதிகமாக உன்னால் செய்ய முடியும். உன்னையே நீ முழுவதும் நம்பாவிட்டால் வேறு எவர் நம்புவார்” என்று அறிவுரை கூறினார்.

நீதி:

ஒவ்வொருவரும் தங்களின் மேல் நம்பிக்கை வைப்பது என்பது வாழ்க்கையில் இருக்கக் கூடிய முக்கியமான விஷயங்களில் ஒன்று. அது உங்கள் நம்பிக்கையை அதிகரித்து, பிறர் உங்களை அதிகம் நம்புவதற்கு வழி செய்து, உங்களின் முடிவு எடுக்கும் திறமையை மிக எளிதாக்கும். உங்களை நம்புவதற்கு உங்களுக்குத் தேவை சிறிது முயற்சியும், சுயபற்றை உண்டாக்கி உள்முகமாகப் பார்க்கும் திறமையைக் கண்டறிவதும் ஆகும். சுய பரிசோதனை, சுயபற்று மற்றும் நம்பிக்கை மட்டுமே அறியாமையிலிருந்து வெளியே வருவதற்கான வழியாகும். உங்கள் மீது நம்பிக்கை ஏற்படுத்திக் கொள்ளுதல், உங்களின் முடிவு எடுக்கும் திறமையையும், தன்னம்பிக்கையையும் அதிகமாக்க உதவும்.

துன்பங்கள்தான் விவேகம் அடைவதற்கான வாய்ப்புகளை அளிக்கும்”. – டாக்டர் அப்துல் கலாம்.

மரத்தில் அமர்ந்திருக்கும் பறவை கிளை முறிந்துவிடுமோ என்று எப்போதும் பயந்ததில்லை. ஏனென்றால் அதன் நம்பிக்கை கிளையின் மீது இல்லை; மாறாக அதன் இறக்கைகளின் மீது உள்ளது.

எப்போதும் உங்களை நம்புங்கள்.

மொழி பெயர்ப்பு,

அன்னப்பூரணி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

நீங்கள் கடவுளா

நீதி: உண்மை

உப நீதி: ஏற்றுக் கொள்ளுதல், விழிப்புணர்வு        

புத்தர் முதன் முதலில் அறிவொளி அடைந்த போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி “நீங்கள் கடவுளா?”

அதற்கு அவர் “இல்லை” என்று பதிலளித்தார்.

பிறகு வந்த கேள்வி “நீங்கள் முனிவரா?”

அவர் “இல்லை” என்றார்.

“பிறகு நீங்கள் என்ன?” என்ற கேள்விக்கு,

அவர் “நான் விழித்துக் கொண்டிருக்கிறேன்” என்று பதில் கூறினார்.

புத்தர் “நீங்கள் கடவுளா?” என்ற கேள்விக்கு உறுதியாக பதில் அளிக்காத காரணம்,  கேள்வி கேட்டவருக்கு கடவுள் என்ற வார்த்தைக்குப் பொருளும், கடவுளைப் பற்றிய ஒரு கருத்தும் இருந்தது; அப்படியென்றால் அது கடவுளாக இருக்க முடியாது.

கடவுளைப் பற்றி அவன் உணர்ந்து கொள்வதற்காக, புத்தர் அவனுக்கு ஒரு குறிப்பு கொடுத்தார்.

நீதி:

ஒவ்வொரு நிமிடமும் விழிப்புணர்வுடன் இருப்பதில் நாம் கவனம் கொள்ள வேண்டும். நம்மால், ஒருவரை நம்மிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியும் போது, வேற்றுமை உருவாகிறது.

அறிவார்ந்த புத்தர், கடவுள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறார் என்றும், விழிப்புணர்வு என்பது மாயைக்கு அப்பாற்பட்டு கடவுளை அறிவது என்றும் மிக அழகாக விவரிக்கிறார். அறிவொளி என்பது “அறியாமை என்ற உறக்கத்திலிருந்து விழிப்பதாகும்”.

மொழி பெயர்ப்பு,

அன்னப்பூரணி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE