நீதி – அன்பு, பாசம்
உபநீதி – நம்பிக்கை, விசுவாசம்
ஒரு குருபோதகர் வெகு நேரமாக விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். முதல் எச்சரிக்கையாக, விமானத்தில் சிறிய விளக்குகள் மின்ன ஆரம்பித்து, “இருக்கைப் பட்டைகளை” அணிந்து கொள்ளுமாறு அறிவிப்பு கேட்டது. சற்று நேரத்திற்குப் பிறகு, ஒரு மென்மையான குரலில், “பலத்த காற்றினால் கொந்தளிப்பு இருப்பதால், விமானத்தில் பானங்கள் எதுவும் கொடுக்க இயலாது; இருக்கைப் பட்டைகளை அணிந்து கொண்டு அமரவும்” என்ற மற்றொரு அறிவிப்பு கேட்டது.
அவர் விமானத்தில் இருக்கும் பயணிகளைப் பார்க்கும் பொழுது, அவர்களின் முகங்களில் ஒரு விதமான குழப்பம் தெரிந்தது. பெரும்பாலான பிரயாணிகள் அச்சம் அடைந்து குழம்பியிருந்தனர். பிறகு அறிவிப்பாளர், “கொந்தளிப்பு தொடர்வதால், தற்போது சாப்பாடு எதுவும் தர இயலாது” என அறிவித்தார்.
அதற்குப் பிறகு, பலத்த இடி, மின்னலின் சத்தம், என்ஜின்களின் சத்தத்தை மீறிக் கேட்க ஆரம்பித்தன. இருண்ட வானத்தில் மின்னல் பளிச்சென்று தென்பட்டது; பிரகாசமான வெளிச்சத்தினால் தேவலோகம் போல ஒரு காட்சி; கீழே சமுத்திரம், மேலே காற்றின் வேகத்தினால், விமானத்தில் கொந்தளிப்பை உணர முடிந்தது. ஒரு நிமிடம், விமானம் உயரத்தில் பறந்தது; மறு நிமிடம், கீழே விழுந்து நொறுங்கி விடுவதைப் போல ஒரு உணர்வு.
குருபோதகர், தானும் பயப்படுவதை ஒப்புக் கொண்டார். சுற்றி இருந்த மற்ற பயணிகளும் வேதனையில் தவித்தனர். எதிர் காலம் கேள்விக்குறியாக இருந்தது. சில பயணிகள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள முடியுமா என்று பலர் பயந்தனர்.
இவ்வளவு குழப்பத்திற்கு மத்தியில், ஒரு சிறுமி மட்டும் எதுவும் நடக்காதது போல, அமைதியாக அமர்ந்திருந்தாள். தன் கால்களை இருக்கையின் மீது மடித்து வைத்துக் கொண்டு ஏதோ புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். அச்சிறுமியின் உலகத்தில் எல்லாமே ஒழுங்காகவும் அமைதியாகவும் இருப்பது போல தெரிந்தது. சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தாள்; பிறகு மீண்டும் படிக்க ஆரம்பித்தாள்.
கவலையோ, பயமோ எதுவும் அவள் முகத்தில் தென்படவில்லை. விமானம் நிலையற்ற ஒரு சூழ்நிலையில் சென்று கொண்டிருந்தது. இந்த பயங்கரமான வேளையில், மற்ற பயணிகள் பயந்தது போல அச்சிறுமி சிறிதும் கலங்கவில்லை.
எல்லோரும் வியப்புடன் அக்குழந்தையை பார்த்தனர். விமானம் இலக்கை அடைந்ததும், எல்லோரும் கீழே இறங்க அவசரப் பட்டனர். சிறுமி அமைதியாக அமர்ந்திருந்தாள். ஒரு பயணி அவளிடம் சென்று, பயம் ஏற்படவில்லையா எனக் கேட்டதும், அந்தச் சிறுமி சொன்ன பதில் – ஐயா, இவ்விமானத்தின் ஓட்டுனர் (பைலட்)என் தந்தை; அவர் என்னை சௌகரியமாக வீடு கொண்டு சேர்ப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது!
நீதி:
நமக்கு தன்னம்பிக்கை இருந்தால் எதற்கும் நாம் கலங்க மாட்டோம். நம்பிக்கை நம்மை வழி நடத்திச் செல்லும். இக்கதையின் சிறுமிக்கு, தன் தந்தை தன்னைக் காப்பாற்றுவார் என்ற பூர்ண நம்பிக்கை இருந்தது. அது போல நமது தந்தையும் குருவுமானக் கடவுள் நம்மை மிகவும் நேசிக்கிறார். அவர் மேல் நம்பிக்கை வைத்தால், அவர் நமக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுத்து, வாழ்க்கைப் பயணத்தை இனிதாக அமைப்பார்.