நீதி: நன் நடத்தை
உபநீதி: குருவிடம் மரியாதை / தன்னடக்கம்
ஒரு முறை, அறிவில் தெளிந்தவரான ராஜ ரிஷி ஜனகர், ஞானி அஷ்டவக்கிரரின் பாதங்களில் பணிந்து வணங்கினார். அரசர் அஷ்டவக்கிரரிடம், “எனது ராஜ்ஜியத்தையும், அரண்மனையையும் வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்? இவற்றால் இனி எனக்கு எந்தப் பயனும் இல்லை. நான் உங்கள் காலடிகளில் அமர விரும்புகிறேன். தயவு செய்து என்னை, காட்டில் உள்ள உங்கள் ஆசிரமத்தில் இருக்க அனுமதி கொடுங்கள்” என்று கூறினார்.
அதற்கு அஷ்டவக்கிரர், “நீ இப்போது உள்ள நிலையில், உன் விருப்பு, வெறுப்புகளைப் பொறுத்து உன் வாழ்க்கை இல்லை. உன் வாழ்வு உன் தேவைகளைப் பொறுத்து இல்லை; ஏனெனில் உனக்கு உண்மையாக எதுவுமே தேவையில்லை. அறிவில் தெளிந்த ஒருவன் அரசனாக இருக்கும் பாக்கியம், உனது மக்களுக்கு கிடைத்திருக்கிறது. நீ அவர்களுக்கு அரசனாக இருக்க வேண்டும்” என்று பதிலுரைத்தார்.
மனமின்றி, தயக்கத்துடன் ஜனகர் தன் அரண்மனையில் இருந்து, ராஜ்ஜியத்தை புத்திசாலித்தனத்துடன் ஆண்டு வந்தார். ஜனகர் அவரது நாட்டு மக்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம்; ஏனெனில், அவர் அறிவில் தெளிந்த குருவாக இருந்த போதிலும், ஒரு அரசராக பணி செய்து வந்தார். இந்திய தேசத்தில் பல முனிவர்களும், மஹான்களும் ஆரம்பத்தில் அரசர்களாகவும், பேரரசர்களாகவும் இருந்து, தன் விருப்பத்துடன் மனமார அதை துறந்துவிட்டு, மிகுந்த கண்ணியத்துடன் துறவிகளாக வாழ்ந்தவர்கள். உதாரணத்திற்கு, கௌதம புத்தர், மகா வீரர், பாஹுபலி போன்ற பலரை நாம் எடுத்துக் கொள்ளலாம்; ஆனால் அறிவில் தெளிந்த அரசராக இருப்பது மிக்க அரிது. ஜனகர் அரசராக இருந்த போதிலும், அரசப் பொறுப்புகளிலிருந்து சிறிது அவகாசம் கிடைத்த போதெல்லாம், ஞானி அஷ்டவக்கிரரின் ஆசிரமத்திற்கு சென்று வந்தார்.
ஆசிரமத்தில் சில துறவிகள் இருந்தனர். அவர்களுக்கு அஷ்டவக்கிரர் கற்பித்து வந்தார். ஜனகர் ஆசிரமத்திற்கு வந்த போதெல்லாம், அஷ்டவக்கிரர் அவருக்கு தனி மரியாதை செலுத்தி அவருடன் உரையாடினார். இதனால் துறவிகள் ஜனகர் மீது சீற்றம் கொண்டனர். அஷ்டவக்கிரர் அரசரைக் கண்டவுடன் இருவரின் முகங்களும் பிரகாசம் அடைந்தன. துறவிகளைக் காணும் போது, ஞானியின் முகத்தில் அதே பிரகாசம் இருந்ததில்லை.
துறவிகள் ஒருவருக்கொருவர் ரகசியமான குரலில், “நம் குரு இது போன்ற ஒரு மனிதனிடம் சிக்கிக் கொண்டு விட்டாரா என்ன? நம் குரு ஊழலுக்கு ஆட்பட்டதைப் போல் தெரிகிறது. இந்த மனிதன் ஒரு அரசன்; அரண்மனையில் வசிக்கிறான். இவனுக்கு பல மனைவிகளும், குழந்தைகளும் இருக்கின்றனர்; ஏராளமான செல்வமும் இருக்கிறது. நடக்கும் நடையைப் பாருங்கள்! ஒரு அரசனைப் போல் நடக்கிறான்; அணிந்திருக்கும் உடைகளையும், ஆபரணங்களையும் பாருங்கள். இவனிடம் எந்த அளவு ஆன்மிகம் உள்ளது என, நம் குரு அவனிடம் கவனம் செலுத்துகிறார்? நாம் எல்லோரும் குருவிடம் ஆன்மீக முன்னேற்றத்திற்காக பூர்ணமாக நம்மை அர்ப்பணித்துள்ளோம். இங்கு நாம் துறவிகளாக வந்துள்ளோம்; ஆனால், குரு நம்மை அலட்சியம் செய்கிறார்” என்று பேசிக் கொண்டனர்.
துறவிகளின் மனதில் இத்தகைய எண்ணங்கள் வளர்வதை அஷ்டவக்கிரர் புரிந்து கொண்டார். ஒரு நாள், அவர் முன்னறையில் துறவிகளுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அரசர் ஜனகரும் அங்கு இருந்தார்.
சொற்பொழிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, ஜனகரின் நாட்டிலிருந்து ஒரு படைவீரன் அங்கு வந்தான். அஷ்டவக்கிரரை வணங்காமல், அரசரை மட்டும் வணங்கி விட்டு அவன், “அரசே, அரண்மனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு எல்லாம் எரிந்து கொண்டு குளறுபடியாக இருக்கிறது” என்றான்.
ஜனகர் எழுந்து கொண்டு, படை வீரனிடம் கோபமடைந்து, “இங்கிருந்து சென்று விடு. சத்சங்கத்தில் ஏன் குழப்பம் ஏற்படுத்துகிறாய்? உனக்கு என்ன தைரியம்? என் குருவை வணங்காமல், என்னை மட்டும் நீ எவ்வாறு வணங்கலாம்? முதலில் இங்கிருந்து சென்று விடு” என்று கூறினார். படை வீரன் அந்த அறையை விட்டு உடனடியாக சென்று விட்டான். ஜனகர் அமர்ந்ததும், குரு தன் சொற்பொழிவைத் தொடர்ந்தார்.
சில நாட்களுக்குப் பிறகு, அஷ்டவக்கிரர் மற்றொரு நிகழ்வை ஏற்படுத்தினார். இந்த முறையும், அனைவரும் முன்னறையில் அமர்ந்து, குருவின் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தனர். இதன் இடையில், ஆசிரமத்த்தின் வேலையாள் ஒருவன் முன்னறைக்கு ஓடி வந்து, “குரங்குகள் அங்கு கொடியில் காயப் போட்டிருந்த உங்கள் ஆடைகளை எடுத்துச் சென்று விட்டன. அந்த ஆடைகளை அவை நாசப் படுத்திக் கொண்டிருக்கின்றன” என்று கூறினான்.
துறவிகள் அனைவரும் உடனே ஓடிச் சென்று, தன் ஆடைகளைக் காப்பாற்ற முனைந்தனர். குரங்குகள் தன் ஆடைகளை நாசப் படுத்துவதை அவர்கள் விரும்ப வில்லை. அங்கு சென்று அவர்கள் கண்டது யாதெனில், குரங்குகள் ஒன்றும் இல்லாமல், ஆடைகள் கொடியில் உலர்ந்து கொண்டிருந்தன. நடந்தவற்றை அவர்கள் புரிந்து கொண்டனர். அவமானத்தால் தலை குனிந்தவாறு, திரும்பி வந்து அமர்ந்தனர்.
சொற்பொழிவின் ஒரு பகுதியாக குரு அஷ்டவக்கிரர் இவ்வாறு கூறினார் – அங்கு பாருங்கள்! இந்த மனிதர் ஒரு அரசர். சில நாட்களுக்கு முன்பு அவரது மாளிகை எரிந்து போனது. அவரது ராஜ்ஜியமே குழப்பமடைந்திருந்தது. அவரது செல்வம் நாசமாகிப் போனது; ஆனால் அவரது கவலை எல்லாம், படை வீரன் சத்சங்கத்தில் தலையீடு செய்ததைப் பற்றி இருந்தது. நீங்களோ துறவிகள். உங்களிடம் இருப்பது நீங்கள் அணிந்திருக்கும் ஆடைகள் மட்டுமே. மாளிகையோ, மனைவியோ, குழந்தைகளோ எதுவும் உங்களுக்கு இல்லை. நான் சொல்வதில் கவனம் செலுத்தாமல், அந்த ஆடைகளுக்காக நீங்கள் ஓடினீர்கள். எங்கே உங்கள் துறவு? இந்த மனிதரே சரியான துறவி. அரசராக இருந்த போதிலும், அவர் ஒரு துறவி! நீங்கள் எல்லோரும் துறவிகளா? மற்றவர்கள் புறக்கணித்த பொருட்களை நீங்கள் பயன் படுத்துகிறீர்கள்; ஆனால் உங்களில் துறவறம் இல்லை. இதுவே நீங்கள் இருக்கும் நிலை. அதுவே அவர் இருக்கும் நிலை!
நீதி:
ஒருவரது உள்ளார்ந்த முன்னேற்றத்திற்கும், வெளி உலகில் அவர் செய்யும் பணிகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஒருவர் தங்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்காக என்ன செய்கிறார்களோ அதுவே முக்கியமானது. வெளி உலகில் நாம் சமூக நோகத்துடன் செயற்படுகிறோம்; நாம் இருக்கும் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு நாம் நடந்து கொள்கிறோம். இதற்கு சமுதாய சம்பந்தம் மட்டுமே உள்ளது; ஆன்மீக அல்லது புறநிலை கோட்பாடோடு சம்பந்தம் எதுவும் கிடையாது. நமக்குள் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பது மட்டுமே அத்தியாவசியமாகும்.
நாம் ஒவ்வொருவரும், சூழ்நிலைக்கு தகுந்தவாறு பல வேடங்களை அணிந்து கொள்கிறோம் – மேலோட்டமான ‘நான்’, தேவையான ‘நான்’, சமுதாய ‘நான்’ மற்றும் ஆன்மீக ‘நான்’. பெரும்பாலான சமயங்களில், உலகளாவிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டு, முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய உள்ளார்ந்த நோக்கத்தை விட்டு விடுகிறோம். ஆன்மீகப் பாதையில் செல்பவனுக்கு, உண்மையில் “நான் யார்” என்று புரிந்து கொள்தே நோக்கமாக இருக்க வேண்டும்.
அந்த புரிதலை அடைந்து விட்டால், உலகத்தில் எல்லோரையும் சமமாக பார்க்கும் தன்மை ஏற்படுவதால், வித்தியாசங்களும் இருக்காது; குழப்பங்களும் ஏற்படாது. உதாரணத்திற்கு, உடலில் கண்கள், செவிகள், மூக்கு, கைகள், கால்கள் போன்ற உறுப்புகள் வெவ்வேறு பணிகளை செய்தாலும், இவை இணைந்து ஒரு உடலையே குறிக்கின்றன; மனிதன் ஒருவனே.
இது மின்சாரத்தின் தன்மை, ஒரே உட்பொருள். அதை நாம் சக்தி என்று குறிப்பிடுகிறோம்; ஆனால், அதுவே குமிழ் விளக்குகளில், மின் விசிறிகளில், குளிர் சாதனப் பெட்டிகளில் வெவ்வேறு பொருட்களில் வெளிப்படுகிறது. அவற்றின் ஆதாரம் மின்சார சக்தியே. நம் அனைவரிலும் உள்ள ஆத்மா ஒன்று என்பதே உண்மை.
பார்ப்பதற்கு தோற்றத்திலும், வடிவமைப்பிலும் இரட்டைத்தனம் போல் தோன்றுகிறது. வாழ்க்கையில் இத்தகைய இரட்டைத்தனத்தைத் தவறாகப் புரிந்து கொண்டால், ஒருவர் மாயையில் கட்டாயமாக சிக்கிக் கொள்வார்; ஆனால் எல்லோரையும் ஒன்றாக நினைத்தால் விஷ்ணுத்துவத்தின் உண்மையை காண முடியும்.
எனவே, ஒருவன் அறிவாளியாக இருக்க வேண்டுமென்றால், சுய நினைவுடன், எல்லோரும் சமம் என்பதையும், எந்த சூழ்நிலையிலும் மனக்குழப்பம் அடையாமல் எதிர் கொள்வதை பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு சாதனையும், பயிற்சியும் அதிக அளவில் தேவைப்படும்.
மொழி பெயர்ப்பு:
சரஸ்வதி, ரஞ்சனி
Source: http://saibalsanskaar.wordpress.com