Tag Archive | Needhi Kadhaigal

புதிய வாய்ப்புகளை எப்படி கண்டு பிடிப்பது – அருண்புரங்

நீதி: சாந்தம், உண்மை

உப நீதி: அமைதி  

எம். பி. ஏ படிப்பில் முதன்மை இடம் வகித்த ஒருவர், ஒருமுறை தனது அலுவலக வேலையில் மிகவும் சிரமப்பட்டார். அந்த வேலையை செய்வதற்கு அவர் பல புதிய யோசனைகளை கையாள வேண்டியிருந்தது. ஆனாலும், அவரால் ஒன்றும் முடியவில்லை. அவருக்குக் கீழ் பணிபுரிந்தவர்கள் அனைவரும் புதிய யோசனைகளைக் கண்டறிந்து தங்கள் வேலைகளில் வெற்றி பெற்றனர். அவர் தனது சக தொழிலாளர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்த போது கோபமடைந்தார். கலங்கிய மனதுடன் புதிய யோசனைகளை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது.

மிகவும் விரக்தியடைந்த அவர், ஒரு ஜென் குருவிடம் சென்று, “கடவுள் எனக்கு முற்றிலும் அநியாயம் செய்துவிட்டார். எனக்குக் கீழ் பணிபுரிபவர்கள் அனைவரும் சிறந்த யோசனைகளைப் பெற்று வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற அவர் எனக்கு எந்த யோசனையையும் கொடுக்கவில்லை” என்றார்.

துறவி அந்த மனிதரை அருகிலுள்ள கால்பந்து மைதானத்திற்கு அழைத்துச் சென்றார். பிறகு 5 டென்னிஸ் பந்துகளை மைதானத்தில் வீசினார்.  பின்னர் அவர், அனைத்தையும் சேகரிக்குமாறு அந்த மனிதரிடம் கூறினார்.  சில நிமிடங்களில் அந்த மனிதர் அனைத்து பந்துகளையும் சேகரித்து மகிழ்ச்சியுடன் திரும்பினார். அதற்குப் பிறகு, அவரை அடர்ந்த காட்டிற்கு அழைத்துச் சென்று, அவர் 5 பந்துகளையும் காட்டில் எறிந்து, அவைகளை சேகரிக்குமாறு அந்த மனிதரிடம் கூறினார். சில நொடிகளில் பந்துகள் காட்டில் தொலைந்து போனது. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அந்த மனிதர் துறவியிடம் வந்து அனைத்து பந்துகளையும் இழந்து விட்டதாகக் கூறினார்.

ஜென் மாஸ்டர் சிரித்துக் கொண்டே, “இந்த பந்துகள் வாய்ப்புகள் போலவும், நிலப்பரப்பு நம் மனதைப் போலவும் இருக்கிறது. நம் மனதில் வேண்டாத விஷயங்களை போட்டுக் கொள்ளும் போது, வாய்ப்புகளை இழக்கிறோம்.  கால்பந்து மைதானம் போல் நம் மனம் தெளிவாக இருக்கும் போது, எல்லா வாய்ப்புகளையும் தெளிவாகப் பார்க்கலாம். அனைவருக்கும் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. நீங்கள் அவைகளை அறிய விரும்பினால், உங்கள் மூளையில் இருக்கும் தகாத விஷயங்களை அகற்றவும்” என்று கூறினார்.  

நீதி:

வாய்ப்பு என்பது கிட்டத்தட்ட அனைவரின் வாழ்விலும் வரும் ஒரு சாதகமான நேரம் அல்லது சந்தர்ப்பம்; ஆனால் அதை அடையாளம் காணும் அளவுக்கு ஒருவர் அமைதியாக இருந்தால் மட்டுமே அது பயனுள்ளதாக இருக்கும். நாம் உட்கார்ந்து சிந்தித்தால், கடவுள் நம் வாழ்வில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஒரு வாய்ப்பைக் கொடுப்பதைக் காண்கிறோம்; இந்த வாய்ப்பைப் புரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நம் கையில் உள்ளது. சில வாய்ப்புகள் பார்ப்பதற்கு சிறியதாகத் தெரிகிறது; ஆனால் உண்மை என்னவென்றால், சிறிய வாய்ப்புகள் பெரும்பாலும் பெரிய சாதனைகளின் தொடக்கமாகும்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி வெங்கட்சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

நல்ல வாய்ப்புகளை இழக்காதே

நீதி: உண்மை

உப நீதி: தன்னம்பிக்கை, நன்னம்பிக்கை

இளைஞர்  எஃப். டபிள்யூ. வுல்வொர்த் தனது முதலாளியின் பேச்சைக் கேட்டு, அந்த வாய்ப்பை நழுவ விட்டிருந்தால், புகழ்பெற்ற வுல்வொர்த் அங்காடிச் சங்கிலி எங்கே இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

படியுங்கள்….

இளைஞர்  எஃப். டபிள்யூ. வுல்வொர்த் ஒரு கடையில் எழுத்தராக இருந்த போது, தன் முதலாளியிடம், சரக்குகளைக் குறைப்பதற்காக, “தள்ளுபடி விற்பனை”யை அறிமுகப் படுத்த முயன்றார். முதலாளி ஒப்புக் கொண்டார். யோசனை மகத்தான வெற்றியை பெற்றது.

இந்த வெற்றி, குறைந்த விலையில் பொருட்களை விற்கும் ஒரு கடையை சொந்தமாகத் திறக்க, வுல்வொர்த்தைத் தூண்டியது. அத்தகைய முயற்சிக்கு அவருக்கு மூலதனம் தேவைப்பட்டது, எனவே அவர் முதலாளியிடம் உதவி கேட்டார். அவரது முதலாளி அவரை நிராகரித்தார்.

முதலாளி “இந்த யோசனை மிகவும் ஆபத்தானது,” என்று வுல்வொர்த்திடம் கூறினார். மேலும், “குறைந்த விலையில் விற்க, போதுமான பொருட்கள் இல்லை” என்றும் கூறினார்.

வுல்வொர்த், தனது முதலாளியின் ஆதரவின்றி வியாபாரத்தை தொடங்கினார். மேலும், அவர் தனது முதல் கடையில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், நாடு முழுவதும் எஃப். டபிள்யூ. வுல்வொர்த் கடைகளின் சங்கிலிக்கே சொந்தக்காரர் ஆனார்.

பின்னர், அவரது முன்னாள் முதலாளி, “எனக்குத் தெரிந்தவரை, வுல்வொர்த்தின் மதிப்பை குறைக்க நான் பயன்படுத்திய ஒவ்வொரு வார்த்தைக்கும் எனக்கு ஒரு மில்லியன் டாலர்கள் செலவு ஆகிவிட்டது” என்று கூறினார்.

நீதி:

மன உறுதி மிகவும் முக்கியமானது, ஏனெனில், அது நம்மைக் கஷ்ட காலங்களில் நிலைத்திருக்க உதவுகிறது. நமது இலக்கை அடையும் வரை அச்சமின்றி நம்பிக்கையுடன் முன்னேற இது நம்மைத் தூண்டுகிறது. வாழ்க்கை எப்போதும் சீராக இருக்காது என்பதால், நம்மில் பலர் தடைகளை சந்திக்கும் போது பின்வாங்குகிறோம். ஆனால் உறுதியுடன் இருந்தால், எந்த வகையான தடைகளையும் நம்மால் சமாளிக்க முடியும்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி வெங்கட் சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

வாழ்க்கையின் அர்த்தம்

நீதி: உண்மை

உப நீதி: உள்நோக்கம், ஏற்புத் தன்மை  

ஒரு பெரும் பணக்கார இளைஞன் ஒருவன், தன் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனைக் கேட்பதற்காக ஒரு குருவைப் பார்க்கச் சென்றான்.

குரு அவனை ஜன்னலுக்கு அழைத்துச் சென்று, “கண்ணாடி வழியாக என்ன பார்க்க முடிகிறது?” என்று கேட்டார்.

அதற்கு அவன், “ஆண்கள் வந்து போவதையும், பார்வையற்ற ஒருவன் தெருவில் பிச்சை எடுப்பதையும் பார்க்கிறேன்” என்றான்.

அப்போது குரு, ஒரு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியைக் காட்டி அவனிடம், “இந்தக் கண்ணாடியைப் பார்த்து, உனக்கு என்ன தெரிகிறது என்று சொல்” என்றார்.

அதற்கு அவன், “என்னால் என்னைப் பார்க்க முடிகிறது” என்றான்.

குரு, “ஆம். ஆனால், மற்றவர்களைப் பார்க்க முடியாது. ஜன்னல் மற்றும் முகம் பார்க்கும் கண்ணாடி இரண்டும் ஒரே அடிப்படைப் பொருளான கண்ணாடியால் ஆனது என்பதைக் கவனி; ஆனால் முகம் பார்க்கும் கண்ணாடியில், கண்ணாடிக்குப் பின்னால் மெல்லிய வெள்ளி முலாம் பூசப்பட்டிருப்பதால், நீ பார்க்கக் கூடியது உன்னை மட்டுமே.

இந்த இரண்டு வகையான கண்ணாடிகளுடன் உன்னை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

ஏழை – நீ மற்றவர்களைப் பார்த்து அவர்கள் மீது இரக்கம் கொள்கிறாய்.

பணக்காரர் – வெள்ளி முலாம் பூசப்பட்ட நீ, உன்னை மட்டுமே பார்க்கிறாய்.

உன் கண்களை மூடும் வெள்ளித் திரையைக் கிழித்தெறியும் தைரியம் உனக்கு இருந்தால் தான், உன்னால் சக மனிதர்களை நேசிக்க முடியும். மேலும், நீயும் மதிக்கத் தக்கவனாவாய்” என்று கூறினார்.

நீதி:

நாம் ஒருபோதும் பிறரைப் பற்றித் தீர்ப்பளிக்கக் கூடாது, ஏனெனில், நாம் அவர்களைப் பற்றிய குறைந்தபட்ச புரிதலின் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கிறோம். இவ்வாறு அளிக்கப்படும் தீர்ப்புகள், வெளித்தோற்றத்திற்கு அப்பாற்பட்ட நல்லதைக் காண்பதையும் தடுக்கிறது. எனவே, மனிதர்களை அப்படியே ஏற்றுக் கொண்டு, அவர்களைப் பற்றித் தீர்மானிக்கும் முன், நம்மைப் பற்றிய ஒரு சுய ஆய்வு செய்ய வேண்டும். மாற்றம் உள்ளிருந்து தொடங்க வேண்டும்; பின்னர், நம் கண்ணோட்டமும் மாறும்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி வெங்கட் சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

சுய சீர்திருத்தம்

நீதி: அன்பு, பொறுமை

உப நீதி: நன்றியுணர்வு, சுய பரிசோதனை

“உலகைக் குணப்படுத்து. உனக்கும் எனக்கும் ஏற்ற ஓர் நல்ல இடமாக அதை மாற்று” என்று மைக்கேல் ஜாக்சன் பாடினார். மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த ஓர் உலகத்தில் வாழ வேண்டும் என்பதே நம் அனைவரின் கனவாக இருக்கும். நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை மாற்ற வேண்டும் என்று நாமும் மிக வீரமாக அடி எடுத்து வைப்போம்.  ஒரே எண்ணத்தில் நம்மை நிறுத்திக் கொண்டு, உண்மையை உணர மறுப்போம். நாம் உலகை மாற்றி ஒரு சாதனை செய்யப் போகிறோம் என்று நினைப்போம். ஆனால், இவ்வுலகம் மாற வேண்டும் என்று நினைப்பதை விட நம்முடைய எண்ணங்கள் மற்றும் நம் கண்ணோட்டத்தை மாற்றுவதே எளிது என்பதை விரைவில் புரிந்து கொள்வோம். ”உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக இருங்கள்” என்பது மகாத்மா  காந்தியின் பிரபலமான பொன்மொழி.

லியோ டால்ஸ்டாய் ,“எல்லோரும் உலகை மாற்ற நினைக்கிறார்கள், ஆனால் எவரும்  தன்னை மாற்றிக் கொள்ள நினைப்பதில்ல.”  என்று கூறுகிறார்.

முன்னொரு காலத்தில், வளமான நாட்டை ஆண்ட ஒரு அரசன் இருந்தான். ஒரு நாள், அவர் தனது நாட்டின் சில தொலைதூர பகுதிகளுக்கு சுற்றுலா சென்றான். அவன் தனது அரண்மனைக்குத் திரும்பியபோது, தனது கால்கள் மிகவும் வலிப்பதாகக் கூறினான், ஏனெனில் அரசன் இவ்வளவு நீண்ட பயணத்திற்குச் செல்வது இதுவே முதல் முறை. மேலும் அவன் சென்ற பாதை, மிகவும் கரடுமுரடானதாக இருந்தது. பின்னர் அவன், நாட்டின் அனைத்து சாலைகளையும் தோலால் மூடும்படி கட்டளையிட்டான்.

நிச்சயமாக, இதற்கு ஆயிரக்கணக்கான மாடுகளின் தோல் தேவைப்படும், மேலும் பெரும் தொகையும் செலவாகும்.

அப்போது அவனுடைய புத்திசாலித்தனமான வேலைக்காரன் ஒருவன் அரசனிடம், “அந்தத் தேவையில்லாத பணத்தை ஏன் செலவழிக்க வேண்டும்? உங்கள் கால்களை மறைக்க ஒரு சிறிய தோலை மட்டும் ஏன் வெட்டக் கூடாது?” என்று தைரியமாகச் சொன்னான்.

ராஜா ஆச்சரியமடைந்தார். பிறகு அவர் தனக்கென ஒரு “காலணி” செய்யும் ஆலோசனையை ஒப்புக் கொண்டார்.

இந்தக் கதையில்,  உண்மையில் வாழ்க்கையின் மதிப்புமிக்க பாடம் உள்ளது: இந்த உலகத்தை, மகிழ்ச்சியாக வாழும் இடமாக மாற்ற, நீங்கள் உங்களை மாற்றிக் கொள்வது நல்லது – அதாவது உங்கள் இதயத்தை; இந்த உலகை அல்ல.

நாம் சந்திக்கும் பிரச்சனைகள் வெளியிலிருந்து தோன்றுபவை அல்ல; மாறாக நமக்குள்ளேயேதான் இருக்கின்றன. வெளிப்புற யதார்த்தத்தை மாற்ற, நாம் சில உள் மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டும்.

“மனிதர்களாகிய நமது மகத்துவம், உலகத்தை சீர்திருத்துவதில் இல்லை – அது அணு யுகத்தின் கட்டுக்கதை – நம்மை நாமே சீர்திருத்திக் கொள்வதில்தான் உள்ளது” என்கிறார் மகாத்மா காந்தி.

நம்மையே மாற்றிக் கொள்வதா? பழைய படங்கள் மற்றும் பழைய பாடல்களை  மாற்றி அமைப்பதை   கேள்விப்பட்டிருக்கிறோம். காந்தி பேசும் மாற்றம் என்ன? மாற்றத்தை நோக்கிய நமது பாதையில் உள்ள முக்கியத் தடைகள், கவலை, கோபம், நன்றியின்மை, இரக்கமின்மை, நேர்மையின்மை போன்றவை. அவற்றைக் கடக்க முடிந்தால், நம்மை நாமே மாற்றிக் கொள்ளலாம்.

நீங்கள் ரெய்கியை கற்கச் சென்றால், முதலில் அவர்கள் பின்வரும் 5 கொள்கைகளைப் பின்பற்றச் சொல்கிறார்கள்:

இன்றைக்கு மட்டும், எனக்கு கிடைத்திருக்கிற பல நன்மைகளுக்கு நன்றி கூறுகிறேன்.

இன்றைக்கு மட்டும், நான் கவலைப்பட மாட்டேன்.

இன்றைக்கு மட்டும் நான் கோபப்பட மாட்டேன்.

இன்றைக்கு மட்டும், நான் என் வேலையை நேர்மையாக செய்வேன்.

இன்றைக்கு மட்டும், நான் எல்லா உயிர்களிடத்திலும் கருணை காட்டுவேன்.

வெளிப்படையாக, இவற்றைப் பின்பற்ற நீங்கள் ரெய்கி மாணவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. இவை அனைவருக்கும் பொருந்தும். இந்த எளிய உறுதிமொழிகளை நாம் ஒவ்வொரு நாளும் உண்மையாகப் பயிற்சி செய்தால், நாம் நம்முள் கடலளவு மாற்றத்தைக் காணலாம்.

வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (1100 A.D) ஆங்கிலிகன் பிஷப்பின் கல்லறையில் பின்வருமாறு பொறிக்கப்பட்டுள்ளது.

“நான் இளமையாகவும் சுதந்திரமாகவும் இருந்த போது, எனது கற்பனைக்கு எல்லையே இல்லை, நான் உலகத்தை மாற்ற வேண்டும் என்று கனவு கண்டேன்.  நான் புத்திசாலியாக  வளர்ந்த பின், உலகம் மாறாது என்பதைக் கண்டுபிடித்தேன், அதனால் என் பார்வையை ஓரளவு சுருக்கி, என் நாட்டை மட்டும் மாற்ற முடிவு செய்தேன்.

ஆனால் அதுவும் இயலாததாகத் தோன்றியது.

நான் வயோதிக காலத்தில், இறுதி முயற்சியாக, என் குடும்பத்தை, எனக்கு மிக நெருக்கமானவர்களை மட்டும் மாற்ற எண்ணினேன., ஆனால் அதுவும் இயலாமல் போனது.

இப்போது, நான் என் மரணப் படுக்கையில் படுத்திருக்கையில், நான் திடீரென்று உணர்கிறேன்: நான் முதலில் என்னை மாற்றியிருந்தால், ஒரு முன்னுதாரணமாக இருந்து, என் குடும்பத்தை மாற்றியிருப்பேன்.

அவர்களின் உத்வேகம் மற்றும் ஊக்கத்திலிருந்து, நான் என் நாட்டை மேம்படுத்த முடிந்திருக்கும், யாருக்குத் தெரியும், நான் உலகையே மாற்றியிருக்கலாம்.”

நீதி:

 நிலையான மாற்றம் உள்ளிருந்து வர வேண்டும். நாம் மாறும்போது, சுற்றுச்சூழலை முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்துடன் பார்க்கிறோம். நாம் ஒவ்வொருவரும் மாற்றத்தின் உதாரணமாகத் திகழ முடியும். மேலும், நாம் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒருவருக்காவது, ‘மாற்றம் உள்ளிருந்து தான் வரவேண்டும்என்ற எண்ணத்தை விதைப்போம். அதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வோம் என்று உறுதி பூணுவோம்.

“உலகைக் குணப்படுத்து. உனக்கும் எனக்கும் ஏற்ற ஓர் நல்ல இடமாக அதை மாற்று” – மைகேல் ஜாக்சன்

மொழி பெயர்ப்பு:

காயத்ரி வெங்கட்சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

குறைவான சுமையே அதிகமான ஆறுதல்

நீதி : உண்மை

உப நீதி: பற்றின்மை

யானைகள் தங்கள் கட்டுகளை உடைத்து விடுபட முடியாது என்ற நினைப்பில், தான் இருந்த இடத்திலேயே சிக்கிக் கொண்டதைப் பற்றிய கதையை நாம் படித்திருக்கிறோம்.

யானைகளைப் போலவே நம்மில் பெரும்பாலோர் நம் வாழ்க்கையில் முன்னோக்கி செல்ல முடியாமல் பின்னிய வலையிலேயே சிக்கிக் கொள்கிறோம். வெறுப்பு, கோபம், வலி, துன்பம், ஆசைகள் போன்ற உணர்ச்சிகள் நம் உடல் மற்றும் மனதை பலவீனபடுத்தும். இந்த சுமை மூட்டைகளை நாம் விடுவிக்காவிட்டால், அவை நம்மை மனரீதியாக தளர்வடையச் செய்யும். ஆன் லேண்டர்ஸ் “ஒருவர் மீது மனக்கசப்பை  வளர்த்துக் கொண்டால், நாம் வெறுக்கும் ஒருவரை நம் தலையில் வாடகையின்றி வாழ அனுமதிப்பதற்கு ஒப்பாகும்” என்கிறார். மன்னிப்பதும் விட்டுவிடுவதும் மனவலிமை கொண்டவர்களால் கடைப்பிடிக்கப்படும் ஒரு கலையாகும். காந்திஜியின் கூற்றுப்படி, “பலவீனமானவர்களால் பிறரை மன்னிக்க முடியாது. மன்னிப்பது வலிமையானவர்களின் பண்பாகும்.”

வாழ்க்கையில் மிக சிறந்த சந்தோஷத்தையும், உயர்ந்த ஆற்றலையும் நாம் அனுபவிக்க வேண்டும் என்றால், நாம் நமது உணர்ச்சி என்ற சுமையை விட்டுவிட வேண்டும். ஒரு பறவை வானத்தில் உயர பறக்க வேண்டும் என்றால், முதலில் தான் பாதுகாப்பாக இருக்கும் மரக்கிளையில் இருந்து, அது வெளிவர கற்றுக் கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையில் பறக்க வேண்டிய செயலுக்கு அச்சிறு பறவைக்கு எவ்வளவு தைரியம் தேவை என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

தற்போது, நம்மால் இந்த உணர்ச்சி சுமைகளை எவ்வாறு விட முடியும் என்ற கேள்வி வருகிறது. “http://zenhabits.net/zen-attachment/” என்ற இணையதளத்தில் கண்ட “விட்டுவிடுதல் – அ முதல் ஃ வரை” என்ற பகுதியை பகிர எண்ணுகிறேன். பற்றுதல்களை விட்டுவிடுதல் என்பதை பற்றி இந்த தளம் விவரிக்கிறது என்றாலும், உணர்ச்சிகள் என்பதும் ஒருவித “பற்று” என்பதால் நாம் கையிலெடுக்கும் அனைத்து சுமைகளுக்கும் இவை பொருந்தும். இடப்பற்றாக்குறை காரணமாக ஒரு சுருக்கமான பட்டியல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. இவை சுய விளக்கமுடையதாக இருப்பினும், மேலும் விரிவான புரிதலுக்கு அந்த இணையதளத்தை பார்க்கவும்.

· இந்த தருணத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

· இப்போது எது உள்ளதோ அது போதும் என்ற எண்ணம் வேண்டும்.

· நமது தவறுகளை நாமே சுட்டிகாட்டி கொள்ள வேண்டும்.

· நிரந்தர தன்மை இல்லாத குணநலன்கள் உடையவர்கள் நாம், என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

· இந்த நொடியை முழுமையாக மகிழ்ந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

· நமக்கு நாமே உற்ற நண்பன் என்று நம்மை நேசிக்க பழக வேண்டும்

· சில நேரங்களில் தனியாக போராட வேண்டியிருக்கும் என்பதை உணர வேண்டும்.

· குறைந்த பற்றுதல்களை கொள்ள வேண்டும்.

· பல விதமான மக்களுடன் பழக வேண்டும்.

· நம் செயல்களையோ அல்லது நமக்கு பிடித்தவர்களின் செயல்களையோ அடிக்கடி நியாயப்படுத்தக் கூடாது.

· கடந்த காலத்தை நம்மால் மாற்ற முடியாது என்பதை அறிந்து கொண்டு அதை அப்படியே ஏற்று கொள்ள வேண்டும்.

· பயத்திற்கு பதிலாக அன்பை பிறருக்கு அளிக்க வேண்டு

· எதிர்காலத்தை அல்லது கடந்த காலத்தை பற்றிய சிந்தனை இல்லாமல் நிகழ் காலத்தில் – இந்த நொடியில் வாழ எண்ண வேண்டும்.

· நிதானமாக எடுத்துரைக்க வேண்டும்.

· மனதை விசாலமாக்கிக் கொள்ளவும்.

· கசப்பான எண்ணங்கள் மனதில் நிலைக்காமல் இருக்க, வேறு ஆக்கபூர்வமான எண்ணங்களில் திசைமாற்ற பயிற்சி செய்ய வேண்டும்.

· உங்கள் “பற்றை” உணர்ந்து கேள்வி கேட்க வேண்டும்.

· தெரிந்து கொள்ள வேண்டிய தேவையை வெளியிட வேண்டும்.

· வாழ்க்கையின் குறிக்கோளை ஒவ்வொறு நொடியும் நிறைவேற்ற வேண்டும்.

· மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

· வருத்தங்களும் வலிகளும் அனைவரது வாழ்விலும் உண்டு என்பதும் அதை தவிர்க்க முடியாத ஒன்று என்பதையம் புரிந்து கொள்ள வேண்டும்.

· உணர்வுகளுக்கு குரல் கொடுக்க வேண்டும், குறைத்தபட்சம் எழுதி வைக்க வேண்டும்.

· வாழ்க்கையில் அனைத்து தருணங்களையும் ஒரு படிப்பினையாக, முழுமையான நன்றியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். பற்று இல்லாத அன்பான உணர்ச்சி – இந்த நிலை உன்னதமானது.

· அமைதியான நிலையில் இருப்பதற்கு ஈடுபாடு காட்ட வேண்டும்.

· இந்த நொடியில் நாம் தன்னிலையை உணர்ந்தால், வாழ்வில் மேலும் மற்றொரு அனுபவத்தை வரவேற்கவும், பாராட்டவும், மகிழவும், முன்னோக்கி செல்லவும் இயலும்.

வாழ்க்கையின் இன்பங்களை அனுபவிப்பதற்கான வழிமுறை இவை. அறியப்படாத மூலத்திலிருந்து அழகான மேற்கோள்களாக – அனைத்தையும் சுருக்கமாகக் பட்டியலிடுகிறது. நடந்து முடிந்த சம்பவங்களை விட்டுவிடாமல் பிடித்துக் கொண்டிருப்பது, நாம் பிரயாணிக்கும் வாகனத்தை பழுதடைந்த சக்கரத்துடன் ஓட்டுவதற்குச் சமமாகும். பழுதை சரி பார்க்க நிற்காமல், அது தன்னை தானே சரி செய்து கொள்ளும் என்ற நினைப்பில், உண்மை நிலை எதுவென தெரிந்தும், சவாரி சீராக செல்வது போல பாசாங்கு செய்து கொண்டு, ஒரு நாள் வண்டியை செலுத்த முடியாமல் மிகவும் மோசமான நிலை வரும் வரை, நாம் நிறுத்தி பார்க்க வேண்டிய கட்டாயம் வரும் வரை, உண்மையில் உதவி பெறாமல் நகர முடியாது என்ற நிலை ஏற்படும் வரை விட்டுவைத்தால் நமக்கு என்ன ஆபத்துகள் நேருமோ, அதே போன்று தான் வாழ்க்கையில் உள்ள பழுதுகளை உடனுக்கு உடன் சரி செய்யாமல் அப்படியே பிடித்து கொண்டிருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

வாழ்க்கை மிகவும் கருணை மற்றும் தயை நிறைந்தது. எனவே நாம் ஒரு குண்டும் குழியும் நிறைந்த பாதையில் சவாரி செய்வதை நிச்சயமாக விரும்பாது. உணர்ச்சிகள் என்ற சுமைகளை கட்டவிழ்த்து விடும் போது , “குறைவான சுமையே அதிக வசதி” என்பதை நாமும் உணர்வோம்.

நீதி:

கடந்தகால கசப்பான நினைவுகளை விட்டுவிடக் கற்றுக் கொள்வதும், நிகழ்காலத்தில் வாழ்வதும் வாழ்க்கையை எளிதாக்குகிற வழியாகும். அதிக விழிப்புணர்வுடன் இருக்க நம்மை பழக்கிக் கொள்வது பல வழிகளில் நமக்கு பயனளிக்கும். வாழ்க்கை என்பது ஒரு பயணம், நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் – தேவையற்ற விஷயங்களை ஏற்றுக் கொண்டால் பாரமாகும், பயணம் சுமையாகிவிடும். நாம் செய்த நல்ல காரியங்களின் தடயத்தை நம் வாழ்க்கைப் பயணத்தின் இறுதியில் நிலைநாட்டி விட்டுச் செல்வதே புத்திசாலித்தனம். எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நம் கடமையை செய்தால், எதிர்தரப்பினர் தகுந்த கைம்மாறு செய்யவில்லை என்றாலும் நாம் சோர்வடைய மாட்டோம். பற்றுதல் துன்பத்திற்கும், பற்றின்மை சுதந்திரத்திற்கும் வழி வகுக்கிறது.

ஒரு சூழ்நிலையில் இருக்க வேண்டிய நேரம் என்பதையும், அதிலிருந்து நகர்ந்து செல்ல வேண்டிய நேரம் எப்போது என்பதை அங்கீகரிப்பதும், பற்றின்மையின் ஒரு பெரிய பகுதியாகும். – டேரன் எல் ஜான்சன்

மொழி பெயர்ப்பு:

வள்ளிசரஸ்வதிரஞ்சனி

SOURCE: SSSIE

அற்புதமான சிறுமி

நீதி: அன்பு, மகிழ்ச்சி

உபநீதி: நம்பிக்கை

மருத்துவரின் கதவை எவரோ பதட்டத்துடன் தட்டினர். பொறுமையற்ற மருத்துவர், “உள்ளே வா, உள்ளே வா” என்று அழைத்தார்.

ஒன்பது வயது சிறுமி பயத்துடன், “உங்களைக் கெஞ்சி கேட்கிறேன். என்னுடன் வாருங்கள், என் அம்மா இறக்கக் கிடக்கிறாள்; மிகவும் நோய்வாய்பட்டு இருக்கிறாள்” என்று சொன்னாள்.

அதற்கு மருத்துவர், “உன் அம்மாவை இங்கே அழைத்து வா. நான் எவர் வீட்டுக்கும் அப்படி செல்வதில்லை” என்றார்.

அதற்கு சிறுமி, “நீங்கள் கட்டாயமாக வர வேண்டும். அம்மாவின் வியாதி மோசமாக இருக்கிறது. நீங்கள் வரவில்லை என்றால் இறந்து விடுவாளோ என்று பயமாக இருக்கிறது” என்றாள்.

குழந்தையின் வெறித்தனமான அன்பை பார்த்து மருத்துவர் வீட்டுக்கு போக சம்மதித்தார்.

வீட்டுக்கு சென்றவுடன் அம்மா படுத்த படுக்கையாக இருப்பதை மருத்துவர் கவனித்தார். அவளுக்கு அவசர உதவி தேவையாக இருந்தது. அன்றிரவு அவர் அங்கு செல்லவில்லை என்றால், அம்மாவை காப்பாற்றியிருக்க முடியாது. அந்தச் சிறுமியினால் மட்டுமே சூழ்நிலை மாறிற்று.

அவளின் ஜுரத்தை சற்று சரி படுத்தி, அவள் நன்றாக ஆகி விடுவாள் என்று மருத்துவர் கூறினார். மறுபடியும் அடுத்த நாள் இரண்டு மணிக்கு வருவதாக உறுதி அளித்தார். சொன்ன படியே அவர் வந்தார்.

மருத்துவரை அவள் பெருமையாக பேசினாள். அதற்கு அவர், “சிறுமி வந்து சொல்லாமல் இருந்திருந்தால் நீங்கள் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை” என்றார். மேலும், “இது போல ஒரு அற்புதமான சிறுமியின் தாயாக இருப்பதற்கு நீங்கள் மிகவும் பெருமைப் பட வேண்டும். அவள் கெஞ்சி அழைத்ததால் மட்டுமே நான் வீட்டுக்கு வந்தேன். மிக அருமையான குழந்தை” என்றார்.

அதற்கு அம்மா, “மூன்று  வருடங்களுக்கு முன்பே அவள் இறந்து விட்டாள். இந்த சுவரில் உள்ள சித்திரத்தை பாருங்கள். இப்படி தான் இருந்தாளா?” என்று கேட்டாள்

மருத்துவருக்கு வார்த்தைகளே இல்லை. இதே சிறுமி தான்.

மருத்துவருக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அதிர்ச்சியுற்றார். பிறகு புன்னகைத்து, நடந்ததையெல்லாம் நினைத்து பார்த்தார். அந்த அற்புதமான தேவதையின் முகத்தை நினைவு படுத்தி பார்த்தார்.  

நம்புவோர்களுக்கு கடவுள் அற்புதங்களை அளிக்கிறார்.

நம்பிக்கை உள்ளவர்களுக்கு கடவுள் தைரியத்தை அளிக்கிறார்.

நம்பிக்கையுடன் எதிர் பார்ப்பவர்களுக்கு உறுதி அளிக்கிறார்.

ஏற்புத் தன்மை உள்ளவர்களுக்கு கடவுள் அன்பை அளிக்கிறார்.

நீங்கள் மனதளவில் எதையாவது முழுமையாக நம்பினால், அந்த நிகழ்வு நடப்பதற்கான சூழ்நிலையை நீங்கள் ஏற்படுத்துகிறீர்கள்.

நீதி:

நீங்கள் கடவுள் மேல் நம்பிக்கை வைத்து, எதையாவது அவரிடம் கேட்டால், அதை கட்டாயமாக நடத்தி வைப்பார். இந்தக் கதையில் பார்த்தது போல, அற்புதமான வழிகளில் அவர் உதவி செய்வார். இது போன்ற ஆசீர்வாதங்களை பெறுவதற்கு, நாமும் தகுதி உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும். கடவுளின் மீது ஆழ்ந்த அன்பை மேம்படுத்திக் கொண்டு, கண்மூடித்தனமான நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். அப்போது நம் வாழ்க்கையில் பல அற்புதங்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

கடவுளின் படைப்பிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள்

நீதி: உண்மை, சகிப்புத் தன்மை

உப நீதி: ஏற்புத் தன்மை, ஒற்றுமை

பாடம் 1 ( முள்ளெலிகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம்)

மிகக் கடுமையான குளிர் காலம்; அதனால், பல மிருகங்கள் இந்த சீதோஷ்ணநிலை தாங்காமல் மாண்டன.

இந்த இக்கட்டான நிலையைப் புரிந்து கொண்டு, சில முள்ளெலிகள் ஒன்றாகக் கூடின;

ஒன்றுக்கு ஒன்று அருகில் இருந்து, வெப்ப நிலையைப் பராமரித்து, தங்களைச் சூடாக வைத்துக் கொண்டன; இவ்வகையில், குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடிந்தது. ஆனால், அதனுடைய முட்கள் குத்திக் கொண்டே இருந்ததால், சற்று பிரச்சனையாக இருந்தது.

சில நாட்களுக்குப் பிறகு, காயம் உண்டானதால், ஒன்றாக இருந்த முள்ளெலிகள் தனித் தனியாக பிரிந்தன. கடுங்குளிரால் தாக்கப்பட்ட முள்ளெலிகள் உறைந்து ஒவ்வொன்றாக உயிர் இழந்தன. அதனால், ஒரு தீவிரமான முடிவு எடுக்க வேண்டிய நிலை வந்தது; முட்கள் குத்தினாலும், ஒன்றாகச் சேர்ந்து தங்களைக் குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம், அல்லது தனியாக உறைந்து மாண்டு போகலாம் என்பது தான் அந்த தீர்வு.

விவேகமுள்ள முள்ளெலிகள் மறுபடியும் ஒன்றாகக் கூடின. அதன் முட்களால் உண்டான சிறு காயங்களைப் புறக்கணித்து, ஒன்றாக இருந்து கிடைத்த நற்பயன்களை எண்ணி நன்றியோடு வாழ்ந்தன. இவ்வகையில், குளிர்காலத்தை சமாளிக்க முடிந்தது.

 பாடம் 2 ( வாத்துகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம்)

குளிர் காலத்தில் வாத்துகள் இடம் விட்டு வேறு இடத்திற்கு செல்லும் போது, “வி” போன்ற

உருவமைப்பில் அவை பறந்து செல்கின்றன. இந்த செயலினால் அவை நமக்கு என்ன

பாடம் கற்றுக் கொடுக்கின்றன என்று நாம் புரிந்து கொள்வதில்லை.

  • தனியாக பறப்பதை விட்டு விட்டு, இந்த “வி உருவமைப்பில்” பறப்பதனால், பறவைகளால் 71 சதவீதம் அதிக தூரம் பறக்க முடிகிறது.

நாம் கற்றுக் கொள்ளும் பாடம்:

இலக்கை மனதில் வைத்துக் கொண்டு, ஒரே திசையில் ஒற்றுமையாக செயற்பட்டால், மற்றவர்களின் ஆதரவு இருப்பதால் நாம் விரைவாக இலக்கை சென்றடைய முடியும்.

  • ஒரு வாத்து அந்த “வி உருவமைப்பை” விட்டு வெளியே விலகிச் சென்றால், எதிர்ப்பு சக்தி குறைந்து, பறப்பதற்கு கடினமாகி விடுகிறது. அதனால் அது விரைவாக அந்த “வி உருவமைக்கு” வந்து விடுகிறது. அதற்கு முன்னே பறக்கும் பறவையிடமிருந்து தூக்கும் சக்தி அனுகூலத்தை பயன்படுத்திக் கொள்கிறது.  

நாம் கற்றுக் கொள்ளும் பாடம்:

நம்மை போல இலக்கை வைத்துக் கொண்டு எவர் செயற்படுகிறார்களோ,

அவர்களுடன் நாமும் இருக்க வேண்டும்.

  • தலைமை வாத்து சோர்ந்து போகும் போது, மற்றொரு வாத்து அந்த தலைமையை ஏற்றுக் கொண்டு உதவி செய்கிறது.

நாம் கற்றுக் கொள்ளும் பாடம்:

சரியாக செயற்பட முடியாமல் இருக்கும் தலைவராக இருப்பதற்கு பதிலாக, அவசியம் இருக்கும் போது, குழுவில் மற்றவர்களிடம் வேலையை ஒப்படைக்க வேண்டும்.

  • வேகத்தை கட்டுப்படுத்தி, முன்னே பறக்கும் வாத்துகளுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில், பின்புறம் பறக்கும் வாத்துகள் சத்தம் கொடுக்கின்றன.

நாம் கற்றுக் கொள்ளும் பாடம்:

நாம் மற்றவர்களுடன் வேலை செய்யும் போது, அவர்களின் தன்னம்பிக்கையை இழக்கச் செய்யாமல், அவர்களை உற்சாகப் படுத்துவோம்.

  • குழுவில் ஒரு வாத்துக்கு உடல் நிலை சரியில்லாமல்  இருந்து, “வி” உருவமைப்பிலிருந்து வெளியே சென்றால், மற்ற இரண்டு வாத்துக்கள் அதன் பின்னாலேயே தொடர்ந்து சென்று அதற்கு உதவி செய்து பாதுகாக்கின்றன. உடல் நிலை சரியாகும் வரையோ அல்லது அது இறக்கும் வரையோ அந்த வாத்துக்கள் அதனுடனேயே இருக்கும். அதற்கு பிறகு தான் அவை பறந்து செல்லும்; அல்லது மற்றொரு “வி உருவமைப்பை” தேடி செல்லும்.

நாம் கற்றுக் கொள்ளும் பாடம்:

பிரச்சனைகள் வரும் போது, நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய வேண்டும்.

நீதி:

ஒற்றுமையே பலம். நாம் எல்லோரும் சமூகத்தில் வாழ்கின்றோம்; ஒவ்வொருவரும் கடவுளின் தலைசிறந்த படைப்பு. அதனால், மனிதர்கள் எப்படி இருக்கிறார்களோ, அப்படியே அவர்களை ஏற்றுக் கொள்ள கற்றுக் கொள்வோம். சுற்றுப்புறச் சூழலில் இருக்கும் நிகழ்வுகளை சரியான கண்ணோட்டத்துடன் ஏற்றுக் கொண்டு, பொறுமை மற்றும் நன்றி உணர்வுடன் இருந்தால், நாம் சந்தோஷமாக இருக்கலாம். எங்கு ஒற்றுமை மற்றும் சந்தோஷம் இருக்கிறதோ, அங்கு உண்மையான மகிழ்ச்சி இருக்கும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

சொற்களால் ஒருவரை காயப்படுத்த முடியும் அல்லது குணப்படுத்த முடியும்

ஸத்ய ஸாயி பாபா, மை டியர் ஸ்டுடென்ட்ஸ், பகுதி 5, மார்ச் 9, 1993

நீதி: உண்மை, அமைதி, சரியான நடத்தை

உபநீதி: பணிவு, பொறுமை, ஞானம்

நீங்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பருக்கைகளை உணவாக உட்கொள்கிறீர்கள். நீங்கள் எத்தனை பருக்கைகளை உண்டீர்கள் என்பதை எப்போதாவது கணக்கிட்டுப் பார்த்திருக்கிறீர்களா? எனினும், ஒரு சிறு கல் நீங்கள் உண்ணும் உணவில் இருந்தால், நாள் முழுவதும் நீங்கள் வருத்தத்துடன் இருக்கிறீர்கள். நீங்கள் உண்ட உணவு முழுவதும் கற்களாக இருந்தன என குறை கூறுகிறீர்கள்.

அது போல உங்களுடைய வாழ்க்கையானது நான்கில் மூன்று பங்கு மகிழ்ச்சி நிறைந்ததாகவும் மீதி ஒரு பங்கு துயரம் நிறைந்ததாகவும் இருக்கிறது. ஆனால் நீங்கள் சோகத்திற்கு பலியாகி விடுகிறீர்கள். நீங்கள் மகிழ்ச்சியைக் காட்டிலும் துயரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதையே தேர்ந்தெடுக்கிறீர்கள். இது ஒரு விலங்கு குணம் ஆகும்.( மிருக லட்சணம்).

தவறான பாதையில் செல்வதன் மூலம் தன்னுடைய நற் பெயரை இழந்து விடக்கூடாது என்று நீங்கள் உங்களுடைய நாவிற்கு கற்றுக் கொடுக்க வேண்டும். உங்களுடைய நாவு உங்களை தெய்வீக நிலைக்கு உயர்த்த அல்லது விலங்கை போன்ற கீழான நிலைக்கு தள்ளும் திறன் கொண்டது ஆகும்.

ஒருவர் உங்களுக்கு ஒரு நன்மை செய்கிறார் என்றால் உங்களுடைய நாவு அவரை இறைவன் என்று புகழ்கிறது. ஒருவர் உங்களுக்கு ஒரு கெடுதல் செய்கிறார் என்றால் அவர்களை நாவு விலங்குக்கு சமமாக பேசுகிறது. எப்போதும் இறைவன் நாமத்தையே உச்சரிக்கும் படியும், எவரையும் விமர்சிக்காத படியும் இருக்க நீங்கள் உங்களுடைய நாவிற்கு கற்றுக் கொடுங்கள்.

பயங்கரவாதிகள் என்பவர்கள் துப்பாக்கிகள் மற்றும் கைத் துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் மட்டும் அல்லர். எவர் ஒருவர் தன்னுடைய எண்ணம், சொல், செயல் ஆகியவற்றினால் மற்றவர்களை காயப்படுத்துகிறார்களோ அவரே பயங்கரவாதி ஆவார்.

நீங்கள் முக்கியமாக எண்ணங்கள், சொற்கள் மற்றும் செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒரு எண்ணம் இருக்கும் போது, வார்த்தை தொடரும், பிறகு உடல் செயலில் ஈடுபடும். எண்ணங்கள் வரும் போது, ஒரு போதும் மற்றவர்களுக்கு தீங்கு எண்ணாதீர்கள்.

அடுத்ததாக சொல். ஒருபோதும் கடுமையான சொற்களை பயன் படுத்துதல் கூடாது. உங்களுடைய கடுமையான சொற்களினால் மற்றவர்களை அவமானப்படுத்தவோ அவர்களை ஏமாற்றவோ முயலக்கூடாது. ஒருவரை கத்தியினாலோ அல்லது கைத்துப்பாக்கியினாலோ கொல்லும் போது அவர்கள் உடனே இறந்து விடுகிறார்கள். ஆனால் நீங்கள் ஒருவரை உங்களுடைய சொற்களினால் காயப்படுத்தினால், அது அவனுக்கு அல்லது அவளுக்கு இறக்கும் வரையிலும் வலியைக் கொடுக்கும்.

எல்லா வெளிக் காயங்களுக்கும் மருந்து உண்டு. எனினும் சொற்களினால் விளைவிக்கப் பட்ட காயங்களை குணப்படுத்துவதற்கு மருந்தோ மருத்துவரோ இல்லை.

எனவே சொற்கள் ஏற்படுத்துகின்ற காயங்கள் மிகவும் பயங்கரமானதாக இருக்கும். அவை குணமாவதற்கு நீண்ட நாட்கள் ஆகும். எண்ணம் , சொல், செயல் இவற்றின் மூலம் ஏற்படுகின்ற தீங்குகளை ஆன்மீக வழிகளால் மட்டுமே மாற்ற முடியும்.

நீதி:

நாம் நம்முடைய எண்ணங்களின் மேல் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் எண்ணங்கள் மேலும் சொற்களாக மாறுகின்றன.நம்முடைய செயல்கள் நாம் பேசும் சொற்களை ஏற்றுக் கொள்கின்றன. நாம் நினைப்பதை விட நம் சொற்கள் ஒருவரின் உணர்வுகளை மிகவும் மோசமாக புண்படுத்தும் என்பதால் நாம் பேசுவதற்கு முன் எப்போதும் சிந்திக்க வேண்டும். எனவே நாம் நம்முடைய நாட்களை நேர்மறை எண்ணங்களினால் தொடங்குவோம். அதன் மூலம் நம்முடைய சொற்களையும் செயல்களையும் நேர்மறையாக மாற்றுவோம். இதனால், நம்மை சுற்றி அமைதி மற்றும் மகிழ்ச்சி உண்டாகும்.

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு

தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.

மொழி பெயர்ப்பு:

வெங்கட்ராம், சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

கடவுள் புகைப்படக்காரர்

நீதி: உண்மை, அன்பு

உபநீதி: நம்பிக்கை

ஒரு சிறுமி தினமும் பள்ளிக்கு நடந்து சென்று வந்தாள். அன்று காலை வானிலை கேள்விக்குறியாக இருந்த போதிலும், மேகமூட்டமாக இருந்த போதிலும், அவள் ஆரம்பப் பள்ளிக்கு செல்லத் தொடங்கினாள். மதிய வேளையில், இடி மின்னலுடன் காற்று வீசியது.

புயலால் தன் மகள் பயந்துவிடுவாளோ அல்லது காயமடைவாளோ என்று கவலைப்பட்ட குழந்தையின் தாய், தன் காரில் ஏறி, பள்ளிக்கு செல்லும் வழியில் சென்றார்.

அவள் அவ்வழியில் செல்லும் போது, அவளுடைய சிறிய மகள் மகிழ்ச்சியுடன் நடப்பதைக் கண்டாள்; ஆனால் ஒவ்வொரு மின்னலின் போதும் அந்த குழந்தை நின்று, நிமிர்ந்து பார்த்து, சிரித்தாள்.

காரை நிறுத்திய தாய், குழந்தையை தன்னுடன் ஏறுமாறு அழைத்தாள். அவர்கள் பள்ளியை நோக்கிச் செல்லும் போது, அந்த குழந்தை ஒவ்வொரு மின்னலையும் நோக்கி மறுபடியும் புன்னகைத்தாள்.

தாய் தன் குழந்தையை நோக்கி, “நீ என்ன செய்கிறாய்?” என்று கேட்டாள்.

அதற்கு குழந்தை, “கடவுள் என் புகைப்படத்தை எடுப்பதால், நான் புன்னகை புரிகிறேன்” என்றாள்.

நீதி:

நம் அன்றாட வாழ்வில் உள்ள சூழ்நிலைகளை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு ஏற்றுக் கொண்டால், வாழ்க்கை எளிதாகவும், மகிழ்ச்சியாகவும் மாறும். நம்பிக்கை என்பது இன்றைய சூழ்நிலை எப்படி மாறினாலும், நாளை எப்பொழுதும் வாய்ப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்து கொள்வதற்கான ஒரு வழிமுறையாகும். வாழ்க்கை எப்போதுமே நீங்கள் விரும்பும் விதத்தில் இருக்காது என்பதை ஏற்றுக் கொள்வதில் இது தொடங்குகிறது, எனவே நீங்கள் முரண்பாடுகளை உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு, முன்னேறிச் செல்ல வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

யுகஸ்ரீ, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

முயற்சி திருவினையாக்கும்

நீதி: உண்மை, நகைச்சுவை

உபநீதி: விடாமுயற்சி, வெற்றி

பல நேரங்களில், கணினி தொழில்நுட்பங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் ஸ்மார்ட் ஃபோன்கள் போன்றவற்றில் நாம் வலுவான கவனத்தை செலுத்துகிறோம், கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றின் மதிப்பை மறந்து விடுகிறோம். முடிவு?

வேலையில்லாத ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல ஐ.டி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் காவலாளி பதவிக்கு விண்ணப்பித்தார்.

அவர், மனித வளத் துறையால் நேர்காணல் செய்யப்பட்டார், மற்றும் தேவையான அனைத்து தேர்விலும் வெற்றி பெற்றார்.

பின்னர், வேலை வாய்ப்பு தொகுப்பை அனுப்புவதற்காக,  அவரிடம் ஒரு மின்னஞ்சல் முகவரி கேட்கப்பட்டது.

அந்த நபர் பீதியடைந்து, தன்னிடம் மின்னஞ்சல் முகவரி இல்லை என்று மனித வளத் துறையினரிடம் ஒப்புக் கொண்டார்.

மேலாளர் அவரிடம் மின்னஞ்சல் முகவரி இல்லையென்றால், அவரால் அந்த நிறுவனத்தில் வேலை செய்ய முடியாது என்று கூறினார்.

அந்த நபர் மனமுடைந்து, நேர்காணலை விட்டு வெளியேறினார்.

அவரிடம் இறுதியாக இருந்த சில காசுகளுடன் அவர் ஒரு பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து ஸ்ட்ராபெர்ரிகளை வாங்கினார்.

பின்னர் அவர் ஸ்ட்ராபெர்ரிகளை வீடு வீடாகச் சென்று விற்று, இரண்டு மணி நேரத்தில் தனது பணத்தை இரட்டிப்பாக்கினார்.

அவர் மீண்டும் முன்பை போலவே செய்தார். அவரது பாக்கெட்டில் சற்று அதிக காசுகளுடன் அந்த நாளை முடித்தார்.

அவரது சிறிய வெற்றியால் உற்சாகமடைந்த அவர், அடுத்த நாள் முன்னதாகவே எழுந்து ஸ்ட்ராபெர்ரிகளை வாங்கி விற்றார். ஒவ்வொரு நாளும் அதிக பணம் சம்பாதிக்க அவர் கடினமாக உழைத்தார்.

காலப்போக்கில், அவர் ஒரு சக்கர வண்டியில் முதலீடு செய்ய முடிந்தது, பின்னர் ஒரு டிரக் மற்றும் சிறிது நாட்களில் அவர் தயாரிப்புகளை விநியோகிக்கும் லாரிகளில் முதலீடு செய்ய முடிந்தது.

ஆண்டுகள் செல்லச் செல்ல, அவர் பல கடைகளின் உரிமையாளராக ஆனார். அத்தகைய தாழ்மையான தொடக்கத்தில் இருந்து ஒரு அற்புதமான வெற்றியை அவர்  கண்டார்.

அவர் தற்சமயம் மிகவும் செல்வந்தராக ஆனார்; தனது எதிர்காலத்தையும் குடும்பத்தையும் கருத்தில் கொண்டு சில ஆயுள் காப்பீட்டைப் பெறுவது குறித்து ஆராய்ந்தார். அவர் ஒரு முகவரைத் தொடர்பு கொண்டு, தனது தேவைகளைப் பூர்த்தி செய்யும் பாலிசியைத் தேர்ந்தெடுத்தார்.

உரையாடலின் முடிவில், ஏஜென்ட் அவரது மின்னஞ்சல் முகவரியைக் கேட்டார்; அதன் மூலம் அவர் பாலிசிக்கு தேவையானவற்றை அவருக்கு அனுப்புவதாக கூறினார்.

அந்த நபர், “ என்னிடம் மின்னஞ்சல் முகவரி இல்லை” என்று பதிலளித்தார்.

முகவர் ஆச்சரியப்பட்டு, “அற்புதம்!! உங்களிடம் மின்னஞ்சல் இல்லை, ஆனாலும் உங்களால் இந்தப் பேரரசை உருவாக்க முடிந்தது. உங்களிடம் மின்னஞ்சல் முகவரி இருந்தால் நீங்கள் எங்கே இருப்பீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்” என்று கூறினார்.

அந்த நபர் ஒரு கணம் யோசித்து விட்டு, “ஆம், நான் ஒரு பிரபலமான ஐ.டி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் கழிப்பறைகளை சுத்தம் செய்திருப்பேன்” என்று பதிலளித்தார்.

நீதி:

கடின உழைப்பு வெற்றிக்கு திறவுகோல். நமது முயற்சிகள் நிலையாக இருக்க வேண்டும், தொடர்ந்து கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். விடாமுயற்சி என்பது வெற்றியை அடைவதற்கும், நீங்கள் விரும்பிய இலக்குகளை நிறைவேற்றுவதற்கும் ஏற்ற திறன் ஆகும். நீங்கள் சந்திக்கும் அனைத்து தடைகளையும் தைரியாமாக எதிர்கொண்டு, தொடர்ந்து முயற்சி செய்து இலக்கை அடையவும்.

மொழி பெயர்ப்பு:

யுகஸ்ரீ, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE