Archives

புதிய வாய்ப்புகளை எப்படி கண்டு பிடிப்பது – அருண்புரங்

நீதி: சாந்தம், உண்மை

உப நீதி: அமைதி  

எம். பி. ஏ படிப்பில் முதன்மை இடம் வகித்த ஒருவர், ஒருமுறை தனது அலுவலக வேலையில் மிகவும் சிரமப்பட்டார். அந்த வேலையை செய்வதற்கு அவர் பல புதிய யோசனைகளை கையாள வேண்டியிருந்தது. ஆனாலும், அவரால் ஒன்றும் முடியவில்லை. அவருக்குக் கீழ் பணிபுரிந்தவர்கள் அனைவரும் புதிய யோசனைகளைக் கண்டறிந்து தங்கள் வேலைகளில் வெற்றி பெற்றனர். அவர் தனது சக தொழிலாளர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்த போது கோபமடைந்தார். கலங்கிய மனதுடன் புதிய யோசனைகளை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது.

மிகவும் விரக்தியடைந்த அவர், ஒரு ஜென் குருவிடம் சென்று, “கடவுள் எனக்கு முற்றிலும் அநியாயம் செய்துவிட்டார். எனக்குக் கீழ் பணிபுரிபவர்கள் அனைவரும் சிறந்த யோசனைகளைப் பெற்று வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற அவர் எனக்கு எந்த யோசனையையும் கொடுக்கவில்லை” என்றார்.

துறவி அந்த மனிதரை அருகிலுள்ள கால்பந்து மைதானத்திற்கு அழைத்துச் சென்றார். பிறகு 5 டென்னிஸ் பந்துகளை மைதானத்தில் வீசினார்.  பின்னர் அவர், அனைத்தையும் சேகரிக்குமாறு அந்த மனிதரிடம் கூறினார்.  சில நிமிடங்களில் அந்த மனிதர் அனைத்து பந்துகளையும் சேகரித்து மகிழ்ச்சியுடன் திரும்பினார். அதற்குப் பிறகு, அவரை அடர்ந்த காட்டிற்கு அழைத்துச் சென்று, அவர் 5 பந்துகளையும் காட்டில் எறிந்து, அவைகளை சேகரிக்குமாறு அந்த மனிதரிடம் கூறினார். சில நொடிகளில் பந்துகள் காட்டில் தொலைந்து போனது. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அந்த மனிதர் துறவியிடம் வந்து அனைத்து பந்துகளையும் இழந்து விட்டதாகக் கூறினார்.

ஜென் மாஸ்டர் சிரித்துக் கொண்டே, “இந்த பந்துகள் வாய்ப்புகள் போலவும், நிலப்பரப்பு நம் மனதைப் போலவும் இருக்கிறது. நம் மனதில் வேண்டாத விஷயங்களை போட்டுக் கொள்ளும் போது, வாய்ப்புகளை இழக்கிறோம்.  கால்பந்து மைதானம் போல் நம் மனம் தெளிவாக இருக்கும் போது, எல்லா வாய்ப்புகளையும் தெளிவாகப் பார்க்கலாம். அனைவருக்கும் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. நீங்கள் அவைகளை அறிய விரும்பினால், உங்கள் மூளையில் இருக்கும் தகாத விஷயங்களை அகற்றவும்” என்று கூறினார்.  

நீதி:

வாய்ப்பு என்பது கிட்டத்தட்ட அனைவரின் வாழ்விலும் வரும் ஒரு சாதகமான நேரம் அல்லது சந்தர்ப்பம்; ஆனால் அதை அடையாளம் காணும் அளவுக்கு ஒருவர் அமைதியாக இருந்தால் மட்டுமே அது பயனுள்ளதாக இருக்கும். நாம் உட்கார்ந்து சிந்தித்தால், கடவுள் நம் வாழ்வில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஒரு வாய்ப்பைக் கொடுப்பதைக் காண்கிறோம்; இந்த வாய்ப்பைப் புரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நம் கையில் உள்ளது. சில வாய்ப்புகள் பார்ப்பதற்கு சிறியதாகத் தெரிகிறது; ஆனால் உண்மை என்னவென்றால், சிறிய வாய்ப்புகள் பெரும்பாலும் பெரிய சாதனைகளின் தொடக்கமாகும்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி வெங்கட்சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

வாழ்க்கையின் அர்த்தம்

நீதி: உண்மை

உப நீதி: உள்நோக்கம், ஏற்புத் தன்மை  

ஒரு பெரும் பணக்கார இளைஞன் ஒருவன், தன் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனைக் கேட்பதற்காக ஒரு குருவைப் பார்க்கச் சென்றான்.

குரு அவனை ஜன்னலுக்கு அழைத்துச் சென்று, “கண்ணாடி வழியாக என்ன பார்க்க முடிகிறது?” என்று கேட்டார்.

அதற்கு அவன், “ஆண்கள் வந்து போவதையும், பார்வையற்ற ஒருவன் தெருவில் பிச்சை எடுப்பதையும் பார்க்கிறேன்” என்றான்.

அப்போது குரு, ஒரு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியைக் காட்டி அவனிடம், “இந்தக் கண்ணாடியைப் பார்த்து, உனக்கு என்ன தெரிகிறது என்று சொல்” என்றார்.

அதற்கு அவன், “என்னால் என்னைப் பார்க்க முடிகிறது” என்றான்.

குரு, “ஆம். ஆனால், மற்றவர்களைப் பார்க்க முடியாது. ஜன்னல் மற்றும் முகம் பார்க்கும் கண்ணாடி இரண்டும் ஒரே அடிப்படைப் பொருளான கண்ணாடியால் ஆனது என்பதைக் கவனி; ஆனால் முகம் பார்க்கும் கண்ணாடியில், கண்ணாடிக்குப் பின்னால் மெல்லிய வெள்ளி முலாம் பூசப்பட்டிருப்பதால், நீ பார்க்கக் கூடியது உன்னை மட்டுமே.

இந்த இரண்டு வகையான கண்ணாடிகளுடன் உன்னை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

ஏழை – நீ மற்றவர்களைப் பார்த்து அவர்கள் மீது இரக்கம் கொள்கிறாய்.

பணக்காரர் – வெள்ளி முலாம் பூசப்பட்ட நீ, உன்னை மட்டுமே பார்க்கிறாய்.

உன் கண்களை மூடும் வெள்ளித் திரையைக் கிழித்தெறியும் தைரியம் உனக்கு இருந்தால் தான், உன்னால் சக மனிதர்களை நேசிக்க முடியும். மேலும், நீயும் மதிக்கத் தக்கவனாவாய்” என்று கூறினார்.

நீதி:

நாம் ஒருபோதும் பிறரைப் பற்றித் தீர்ப்பளிக்கக் கூடாது, ஏனெனில், நாம் அவர்களைப் பற்றிய குறைந்தபட்ச புரிதலின் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கிறோம். இவ்வாறு அளிக்கப்படும் தீர்ப்புகள், வெளித்தோற்றத்திற்கு அப்பாற்பட்ட நல்லதைக் காண்பதையும் தடுக்கிறது. எனவே, மனிதர்களை அப்படியே ஏற்றுக் கொண்டு, அவர்களைப் பற்றித் தீர்மானிக்கும் முன், நம்மைப் பற்றிய ஒரு சுய ஆய்வு செய்ய வேண்டும். மாற்றம் உள்ளிருந்து தொடங்க வேண்டும்; பின்னர், நம் கண்ணோட்டமும் மாறும்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி வெங்கட் சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

பிரார்த்தனையின் மகிமை

நீதி: அன்பு, உண்மை

உப நீதி: திட நம்பிக்கை

சத்ய சாயி பாபாவின் தெய்வீக சொற்பொழிவுகள் – மே 16, 1964.

ஒரு மனிதனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். அவர் வேலை விஷயமாக மும்பை போக வேண்டியிருந்தது. அங்கிருந்து, நான்கு மனைவிகளுக்கும் என்ன  வேண்டுமோ கொண்டு வருவதாக கடிதம் எழுதியிருந்தார்.

முதல் மனைவி, உடல் ஆரோக்கியத்திற்காக மருந்துகளும், உடல் நலம் சரியில்லாத போது பயன்படுத்துவதற்காக விரிப்புகள் மற்றும் கம்பளி ஆடைகள் கேட்டிருந்தாள்.

இரண்டாவது மனைவி, சமீபத்தில் வெளிவந்த அழகான புடவைகள், நகைகள் மற்றும் பற்பல அலங்கார பொருட்கள் கேட்டிருந்தாள்.

மூன்றாவது மனைவி,  ஞானேஸ்வரி போன்ற தெய்வீக புத்தகங்கள், கவிதைகள் வடிவத்தில் அபங் பாடல்கள்  மற்றும் பண்டரிநாத், பவானி மற்றும் சாயி பாபா இவர்களின் படங்களைக் கேட்டிருந்தாள்.

நான்காவது மனைவி, “நீங்கள் ஜாக்கிரதையாக திரும்பி வந்தால், அதுவே எனக்கு போதுமானது” என்றாள்.

மற்றவர்கள் எல்லோருக்கும் பெரிய பெட்டிகள் நிறைய சாமான்கள் கிடைத்தன; ஆனால் நான்காவது மனைவிக்கு அன்பு கிடைத்தது.

கடவுள்,  நீங்கள் எதற்காக பிரார்த்தனை செய்கிறீர்களோ அதை அளிப்பார்; அதனால், எதைக் கேட்க வேண்டும் என்று நன்றாக யோசித்த பிறகு, கேளுங்கள்.

நீதி:

நம்மைச் சுற்றி பல அன்பானவர்கள் சூழ்ந்திருக்கும் போது, நமக்கு ஆறுதலாக இருக்கும். அன்பு இருந்தால், எதை செய்ய வேண்டுமானாலும் நன்றாக செய்யலாம். எந்த பிரச்சனை வந்தாலும் அதை எதிர்கொள்ளலாம். நிபந்தனையற்ற அன்பை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. அன்பு, வாழ்க்கையில் முன்னேற நம்பிக்கை தருகிறது.

ஆழ்ந்த அன்பை பெறும் போது, சக்தி கிடைக்கிறது; ஆழ்ந்த அன்பை அளிக்கும் போது, தைரியம் கிடைக்கிறது – லாவோ சு

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதிரஞ்சனி

SOURCE: SSSIE

மனித நேயம்

நீதி: அன்பு / உண்மை

உப நீதி: கருணை

ஒரு மனிதன், 200 மைல்களுக்கு அப்பாற்பட்டு வசித்து வந்த தன் தாய்க்கு, மலர்கள் அனுப்ப வேண்டும் என்று ஒரு பூக்கடைக்கு முன், தன் வாகனத்தை நிறுத்தினான்.

அவன் காரை விட்டு இறங்கியதும், நடை பாதை ஓரத்தில் ஒரு சிறுமி அழுது கொண்டிருப்பதைக் கண்டான்.

அவளிடம் சென்று என்ன பிரச்சனை என்று கேட்டான். அதற்கு அவள், “நான் என் தாய்க்கு ஒரு சிவப்பு ரோஜா வாங்க விரும்பினேன். என்னிடம் 75 காசுகள் தான் உள்ளன. ஆனால் ஒரு ரோஜாவின் விலையோ இரண்டு ரூபாய்” என்று கூறினாள்.

அந்த மனிதன் புன்முறுவலுடன், “நீ என்னுடன் உள்ளே வா! நான் உனக்கு ஒரு ரோஜா வாங்கி தருகிறேன்” என்றான்.

அந்த சிறுமி கேட்ட ரோஜாப் பூவை வாங்கி கொடுத்து விட்டு, தன் அன்னைக்கும் மலர்கள் அனுப்ப ஆணை  கொடுத்தான்.

அங்கிருந்து கிளம்பும் போது சிறுமியிடம், “நான் உன்னை உன் வீட்டில் இறக்கி விடவா?” என்று கேட்டான். அந்த சிறுமி, “சரி! தயவு செய்து என் அம்மாவிடம் கொண்டு விடுங்கள்” என்று கூறினாள்.

அந்தச் சிறுமி அவனுக்கு வழிகாட்டி கொண்டே சென்று, ஒரு  கல்லறையின் முன் நிறுத்தச் சொன்னாள். அங்கு புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு சமாதியில் அந்த ரோஜா மலரை வைத்தாள்.

உடனே அந்த மனிதன், தன் காரைத் திருப்பிக் கொண்டு அந்தப் பூக்கடைக்குச் சென்றான். தன் தாய்க்கு மலர் அனுப்பக் கொடுத்திருந்த ஆணையை ரத்து செய்து விட்டு, ஒரு மலர்க் கொத்து வாங்கிக் கொண்டு 200 மைல்கள் காரை ஓட்டிக் கொண்டு, நேராகத் தன் அன்னையின் வீட்டிற்கு சென்றான்.

அவன் அதற்கு மேல் ஒரு வினாடி கூட வீண் செய்ய விரும்பவில்லை.

நீதி:

நீங்கள் அன்பானவர்களை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்க, கிடைக்கும் ஒவ்வொரு தருணத்தையும் நழுவ விடாதீர்கள்.

உங்களுக்கு இன்னும் ஒரு நாள் கிடைக்குமா என்று கூற முடியாது. எந்த ஒரு விஷயமும் தாமதமாகிவிட்டது என்ற நிலைக்குச் செல்வதை தவிர்க்க, செயல்களின் முக்கியத்துவத்தை பொறுத்து வரிசைப்படுத்தி செயல்பட வேண்டும். உன் பெற்றோரை நேசி. நாம் வளர வளர, நம் பெற்றோரும் முதிர்வடைகின்றனர்.

மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியில் அடுத்த கட்டம், மனிதன் மனித நிலையில் இருந்து, அன்பு நிலைக்கு மாறுவது தான்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரிசரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

கெடுவான் கேடு நினைப்பான்

நீதி : உண்மை

உப நீதி : விழிப்புணர்வு, சுயபரிசோதனை

முன்பொரு காலத்தில் நேர்மையும், இரக்கமும் அற்ற ஒரு அரசர்  ஆட்சி செய்து வந்தார். அவருடைய குடிமக்கள் அவருடைய ஆட்சி பறிபோக வேண்டும் அல்லது மரணம் எய்த வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தனர்.

இருப்பினும், ஒரு நாள் அவர் தன்னை மாற்றிக் கொண்டு புதிதாக வாழ்க்கையை தொடங்கப் போவதாக அறிவித்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

அவர் “இனி கொடுமையோ அல்லது அநீதியோ எனது ஆட்சியில் இருக்காது” என்று உறுதியளித்தார், மேலும் அவர், தான் அளித்த வாக்கை நிறைவேற்றும் விதமாக நல்லவராக மாறினார். அவர் ‘பண்பான மன்னர்’ என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். அவர் மாற்றமடைந்த சில மாதங்களுக்குப் பிறகு, அவருடைய மந்திரிகளில் ஒருவர் போதுமான தைரியத்தை வரவழைத்து கொண்டு, அவரது மனமாற்றத்திற்கு என்ன காரணம் என்று அவரிடம் கேட்டார்.

அதற்கு அரசர், “ஒருநாள் நான் காட்டுக்குள் சென்று கொண்டிருந்த போது, ஒரு வேட்டைநாய் நரி ஒன்றை துரத்துவதைக் கண்டேன். எப்படியோ நரி தனது துளைக்குள் தப்பித்தாலும், வேட்டைநாய், அதன் காலைக் கடித்து, வாழ்நாள் முழுவதும் அந்த நரி நொண்டியாக திரியும்படி செய்தது.

பின்னர் நான் ஒரு கிராமத்திற்குள் சவாரி செய்தேன், அங்கே அதே வேட்டை நாயைப் பார்த்தேன். அது ஒரு மனிதனை நோக்கி குரைத்தது. நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அந்த மனிதன் ஒரு பெரிய கல்லை எடுத்து, வேட்டைநாயின் மீது எறிந்து, அதன் காலை உடைத்தான்.

அந்த மனிதன் வெகுதூரம் சென்றிருக்கவில்லை, திடீரென்று ஒரு குதிரை அவனை எட்டி உதைத்தது. அவனது முழங்கால் உடைந்து தரையில் விழுந்தான், வாழ்நாள் முழுவதும் ஊனமுற்றவனானான். குதிரையும் ஓடத் தொடங்கியது, ஆனால் அதன் கால் ஒரு  துளைக்குள் அகப்பட்டு உடைந்தது.

நடந்த அனைத்தையும் எண்ணிப் பார்த்தபோது: ‘தீமையால் தீமையே விளைகிறது. நான் என் தீய வழிகளை தொடர்ந்தால், கண்டிப்பாக என் தீவினையாலேயே அழிவேன் என்று நினைத்தேன். எனவே, நான் மாற முடிவு செய்தேன்” என்று பதில் அளித்தார்.

அரசரை வீழ்த்தி அரியணையைக் கைப்பற்றும் காலம் கனிந்து விட்டது என்ற நம்பிக்கையோடு அந்த அமைச்சர் விடைபெற்றார். சிந்தனையில் மூழ்கிய அமைச்சர், எதிரே இருந்த படிகளை பாராமல், கால் தடுக்கி விழுந்து, கழுத்தை உடைத்துக் கொண்டான்.

“வினை விதைத்தவன் வினை அறுப்பான் ” என்பது பழமொழி. கர்மா என்பது செயல்களின் சுழற்சி, எப்போதும் நாம் மற்றவர்களுக்கு கொடுப்பதே நமக்குத் திரும்பி வருகிறது. நாம் மற்றவர்களுக்கு நல்லது செய்தால் நமக்கும் நல்லது நடக்கும். மற்றவர்களுக்கு தீமை செய்தால் நம் முறையும் வரும்.

நீதி:

வாழ்க்கை ஒரு எதிரொலி; நாம் பிறருக்கு அளிப்பதே நமக்கு திரும்பும். வினை விதைப்பவன் வினை அறுப்பான்; மற்றவர்களிடம் நாம் எதை பார்க்கிறோமோ, அதுவே நமக்குள்ளும் இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை ஒரு எதிரொலி என்பதை மறக்கவேண்டாம்: நமது சொல்லும் செயலும் நம்மிடமே திரும்பி வரும். எனவே நன்மையை மட்டும் கொடுத்து பழகவேண்டும். எப்போதும் பிறரின் நிலையில் நம்மை எண்ணி பார்க்க வேண்டும். நம்மை காயப்படுத்தும் ஒரு விஷயம் பிறரையும் காயப்படுத்தும் என்பதை உணர்த்தும். எனவே நாம் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன், ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து, பச்சாதாபத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாளையும், நீங்கள் அறுவடை செய்யும் அறுவடையை வைத்து அல்ல; நீங்கள் விதைக்கும் விதைகளால் மதிப்பிடுங்கள். ஏனெனில் நமது எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்கள், இன்றோ நாளையோ வியக்க வைக்கும் துல்லியத்துடன் நம்மிடமே நிச்சயமாக திரும்பும்.

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அடிஉறைந் தற்று (அதிகாரம் 208)

பொருள்:

கேடு செய்தவரை, கெடுதல் நிழல் போல் விலகாமல் தொடரும்.

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

சுகமும் துக்கமும்

நீதி: மகிழ்ச்சி

உபநீதி: திட நம்பிக்கை

என் கையில் இரண்டு பெட்டிகள்,

கடவுள் என்னிடம் கொடுத்து விட்டு சொன்னார்,

“கருப்பில் உன் துக்கங்களை வைத்துக் கொள் ,

தங்கப் பெட்டியில் உன் மகிழ்ச்சிகளை வைத்துக் கொள்.”

நான் அவரிடம், “கடவுளே, இப்பெட்டிகளை ஏன் கொடுத்திருக்கிறீர்கள்,

தங்க நிறம் மற்றும் கருப்பு நிறப் பெட்டி துளையுடன்?”

“குழந்தாய், தங்க நிற பெட்டி உன் பாக்கியங்களை எண்ணி மகிழ,

கருப்பு நிற பெட்டி உன் கஷ்டங்களை விட்டு விட.”

அவர் கூறியதை ஒப்புக் கொண்டு, அப்பெட்டிகளில்,

என் மகிழ்ச்சிகள் மற்றும் கஷ்டங்களை வைத்துள்ளேன்,

தங்கப் பெட்டியின் எடை அதிகமாகியது,

கருப்பு பெட்டி முன் போலவே லேசாக இருந்தது.

ஆர்வத்துடன் நான் கருப்பு பெட்டியை திறந்தேன்,

ஏன் என்று பார்க்க,

பெட்டியின் அடித்தளத்தில்,

துளை வழியாக துன்பங்கள் சென்று விட்டன.

நாம் அத்துளையை கடவுளிடம் காண்பித்து கேட்டேன்,

“என் துன்பங்கள் எங்கு சென்று விட்டன?”

அவர் புன்சிரிப்புடன்,

“குழந்தாய், அவையெல்லாம் என்னிடம் இருக்கின்றன.”

நீதி:

“சுகமும் துக்கமும் இணைப்பிரியா பந்துக்கள், ஒன்றாக வந்தன; ஒன்று தலைமாட்டில் இருக்கும் போது, மற்றொன்று படுக்கையில் தூங்கிக் கொண்டிருக்கும்” – கலீல் கிப்ரான்.

கடவுளின் படைப்பிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள்

நீதி: உண்மை, சகிப்புத் தன்மை

உப நீதி: ஏற்புத் தன்மை, ஒற்றுமை

பாடம் 1 ( முள்ளெலிகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம்)

மிகக் கடுமையான குளிர் காலம்; அதனால், பல மிருகங்கள் இந்த சீதோஷ்ணநிலை தாங்காமல் மாண்டன.

இந்த இக்கட்டான நிலையைப் புரிந்து கொண்டு, சில முள்ளெலிகள் ஒன்றாகக் கூடின;

ஒன்றுக்கு ஒன்று அருகில் இருந்து, வெப்ப நிலையைப் பராமரித்து, தங்களைச் சூடாக வைத்துக் கொண்டன; இவ்வகையில், குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடிந்தது. ஆனால், அதனுடைய முட்கள் குத்திக் கொண்டே இருந்ததால், சற்று பிரச்சனையாக இருந்தது.

சில நாட்களுக்குப் பிறகு, காயம் உண்டானதால், ஒன்றாக இருந்த முள்ளெலிகள் தனித் தனியாக பிரிந்தன. கடுங்குளிரால் தாக்கப்பட்ட முள்ளெலிகள் உறைந்து ஒவ்வொன்றாக உயிர் இழந்தன. அதனால், ஒரு தீவிரமான முடிவு எடுக்க வேண்டிய நிலை வந்தது; முட்கள் குத்தினாலும், ஒன்றாகச் சேர்ந்து தங்களைக் குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம், அல்லது தனியாக உறைந்து மாண்டு போகலாம் என்பது தான் அந்த தீர்வு.

விவேகமுள்ள முள்ளெலிகள் மறுபடியும் ஒன்றாகக் கூடின. அதன் முட்களால் உண்டான சிறு காயங்களைப் புறக்கணித்து, ஒன்றாக இருந்து கிடைத்த நற்பயன்களை எண்ணி நன்றியோடு வாழ்ந்தன. இவ்வகையில், குளிர்காலத்தை சமாளிக்க முடிந்தது.

 பாடம் 2 ( வாத்துகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம்)

குளிர் காலத்தில் வாத்துகள் இடம் விட்டு வேறு இடத்திற்கு செல்லும் போது, “வி” போன்ற

உருவமைப்பில் அவை பறந்து செல்கின்றன. இந்த செயலினால் அவை நமக்கு என்ன

பாடம் கற்றுக் கொடுக்கின்றன என்று நாம் புரிந்து கொள்வதில்லை.

  • தனியாக பறப்பதை விட்டு விட்டு, இந்த “வி உருவமைப்பில்” பறப்பதனால், பறவைகளால் 71 சதவீதம் அதிக தூரம் பறக்க முடிகிறது.

நாம் கற்றுக் கொள்ளும் பாடம்:

இலக்கை மனதில் வைத்துக் கொண்டு, ஒரே திசையில் ஒற்றுமையாக செயற்பட்டால், மற்றவர்களின் ஆதரவு இருப்பதால் நாம் விரைவாக இலக்கை சென்றடைய முடியும்.

  • ஒரு வாத்து அந்த “வி உருவமைப்பை” விட்டு வெளியே விலகிச் சென்றால், எதிர்ப்பு சக்தி குறைந்து, பறப்பதற்கு கடினமாகி விடுகிறது. அதனால் அது விரைவாக அந்த “வி உருவமைக்கு” வந்து விடுகிறது. அதற்கு முன்னே பறக்கும் பறவையிடமிருந்து தூக்கும் சக்தி அனுகூலத்தை பயன்படுத்திக் கொள்கிறது.  

நாம் கற்றுக் கொள்ளும் பாடம்:

நம்மை போல இலக்கை வைத்துக் கொண்டு எவர் செயற்படுகிறார்களோ,

அவர்களுடன் நாமும் இருக்க வேண்டும்.

  • தலைமை வாத்து சோர்ந்து போகும் போது, மற்றொரு வாத்து அந்த தலைமையை ஏற்றுக் கொண்டு உதவி செய்கிறது.

நாம் கற்றுக் கொள்ளும் பாடம்:

சரியாக செயற்பட முடியாமல் இருக்கும் தலைவராக இருப்பதற்கு பதிலாக, அவசியம் இருக்கும் போது, குழுவில் மற்றவர்களிடம் வேலையை ஒப்படைக்க வேண்டும்.

  • வேகத்தை கட்டுப்படுத்தி, முன்னே பறக்கும் வாத்துகளுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில், பின்புறம் பறக்கும் வாத்துகள் சத்தம் கொடுக்கின்றன.

நாம் கற்றுக் கொள்ளும் பாடம்:

நாம் மற்றவர்களுடன் வேலை செய்யும் போது, அவர்களின் தன்னம்பிக்கையை இழக்கச் செய்யாமல், அவர்களை உற்சாகப் படுத்துவோம்.

  • குழுவில் ஒரு வாத்துக்கு உடல் நிலை சரியில்லாமல்  இருந்து, “வி” உருவமைப்பிலிருந்து வெளியே சென்றால், மற்ற இரண்டு வாத்துக்கள் அதன் பின்னாலேயே தொடர்ந்து சென்று அதற்கு உதவி செய்து பாதுகாக்கின்றன. உடல் நிலை சரியாகும் வரையோ அல்லது அது இறக்கும் வரையோ அந்த வாத்துக்கள் அதனுடனேயே இருக்கும். அதற்கு பிறகு தான் அவை பறந்து செல்லும்; அல்லது மற்றொரு “வி உருவமைப்பை” தேடி செல்லும்.

நாம் கற்றுக் கொள்ளும் பாடம்:

பிரச்சனைகள் வரும் போது, நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய வேண்டும்.

நீதி:

ஒற்றுமையே பலம். நாம் எல்லோரும் சமூகத்தில் வாழ்கின்றோம்; ஒவ்வொருவரும் கடவுளின் தலைசிறந்த படைப்பு. அதனால், மனிதர்கள் எப்படி இருக்கிறார்களோ, அப்படியே அவர்களை ஏற்றுக் கொள்ள கற்றுக் கொள்வோம். சுற்றுப்புறச் சூழலில் இருக்கும் நிகழ்வுகளை சரியான கண்ணோட்டத்துடன் ஏற்றுக் கொண்டு, பொறுமை மற்றும் நன்றி உணர்வுடன் இருந்தால், நாம் சந்தோஷமாக இருக்கலாம். எங்கு ஒற்றுமை மற்றும் சந்தோஷம் இருக்கிறதோ, அங்கு உண்மையான மகிழ்ச்சி இருக்கும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

விதை விதைத்தவன் வினை அறுப்பான்

நீதி: நன்னடத்தை, அன்பு

உபநீதி: அக்கறை, பச்சாதாபம்  

ஒரு இரவு பலத்த மழை,

நகரத்தில் ஒரு பேருந்து நிலையம்,

ஒரு சிறுமி அழுது கொண்டிருந்தாள்,

தன் பயணப் பொதியை கீழே இறக்கும் போது.

 

 டிக்கெட்டை தொலைத்து விட்டாள்,

இரவில் பேருந்தை மாற்ற வேண்டிய ஒரு கட்டாயம்,

அங்கே அவளை விட்டு விட வேண்டாம் என்று கெஞ்சினாள்,

ஆனால் எவருமே உதவிக்கு வரவில்லை.

 

ஓட்டுனர் கல் நெஞ்சக்காரனாக இருந்தான்,

அவன் இருதயமும் அப்படி தான் இருந்தது.

“டிக்கெட்டை தொலைப்பது பணத்தை தொலைப்பதற்கு சமம்” என்று கூறி,

மழையில் அவளை விட்டு விட்டான்.

 

ஒரு வயதானவர் நின்று கொண்டு,

ஓட்டுனரை வழி மறித்தான்,

அவனை அங்கிருந்து நகர விடவில்லை

ஓட்டுனரால் எதுவும் சொல்லவும் முடியவில்லை.

 

“நீ எப்படி அந்த சிறுமியை அப்படி விட்டு விட முடியும்?

கடவுள் பயமே உனக்கு இல்லையா?

அவளிடம் டிக்கெட் இருந்தது என உனக்குத் தெரியும்.

அப்படியே அவளை இங்கு விட்டு விட முடியாது.

அவளை இந்த புது நகரத்தில் விடக் கூடாது.

அவளுக்கு ஒரு தோழி கூட இல்லை

உனக்கு வேண்டியது போல கடமை முடியலாம்,

ஆனால் சிறுமிக்கு இது முடிவாக இருக்கும்.”

 

ஓட்டுனர் சட்டை செய்யவில்லை

அக்கறை காண்பிக்காமல், கேட்காத மாதிரி நின்றான்

சிறுமியின் பிரச்சனைக்கு ஈடு கொடுக்கவில்லை

அவள் எப்படி பயணம் செய்வாள் என்றும் நினைக்கவில்லை.

 

அதற்கு வயதானவர் ,

நான் அவள் கட்டணத்தை செலுத்துகிறேன்.

அவளுக்கு நான் சிறிது பணம் கொடுக்கிறேன்

உதவி செய்வதற்காக” என்றார்.

 

வயதானவர் டிக்கெட் வாங்கி,

அவளுக்கு உதவி செய்தார்

அவளின் பயணப் பொதியை

பேருந்தில் மேலே வைக்க உதவி செய்தார்.

 

“நான் என்ன கைமாறு செய்வேன்?” என்றாள்,

இந்த அன்பிற்கு ஈடாக நான் என்ன செய்வேன்?

நாம் அந்நியர்கள், மறுபடியும் பார்க்க மாட்டோம்,

நன்றி மட்டும் சொல்வது சரியாக படவில்லை.

 

அவர், “விதை விதைத்தவன் வினை அறுப்பான்.

நாளடைவில் இதை நான் கற்றுக் கொண்டேன்-

நீ என்ன கொடுக்கிறாயோ, கட்டாயமாக திரும்ப கிடைக்கும்;

நீ விதைத்த விதைக்கு, பல மடங்குகள் நன்மை கிட்டும்.

மற்றவர்களுக்கு எப்போதும் உதவி செய்யுங்கள்,

கொடுக்க இயன்றதை கொடுங்கள்;

அந்நியர்களிடம் ஆசையாக இருந்தால்,

நம் கண்களுக்கு தெரியாமலேயே எங்கேயோ நல்லது செய்கின்றோம்.

நீதி:

நாம் என்ன கொடுக்கிறோமோ, நமக்கு திரும்ப கிடைக்கும். உலகில் அன்பு, நம்பிக்கை மற்றும் நல்ல விஷயங்களை பரப்ப ஊக்கமளித்து, ஆயிரம் மடங்கு அதிக நன்மையை பெறுவோம். அதனால் பச்சாதாபம், அன்பு, அக்கறை மற்றும் பொறுமை போன்ற நற்குணங்களை விதைத்தால், உலகம் இருப்பதற்

நீதி நிறைந்த சிறு கதைகள்

உபயம்: http://TheInspirationalStories.com

சேவல் செய்த கடைசித் தவறு

ஓரிரவில் இரண்டு திருடர்கள் ஒரு பண்ணைக் கட்டிடத்தின் அருகில் திரிந்து கொண்டிருந்தனர். கட்டிடத்திற்குள் ஏதோ ஒன்று நகர்வது போல் அவர்களுக்குக் கேட்டது. மிக ஜாக்கிரதையாக அவர்கள் அது என்ன என்று பார்ப்பதற்காக மேலே ஏறினர். அது ஒரு சேவல். “ஆஹா! நாளை இரவு சாப்பாட்டிற்கு இது சரியாக இருக்கும்” என்று திருடர்கள் கத்தினர்.

அவர்கள் அதைப் பிடித்து இழுத்துக் கொல்ல முற்படும்போது அந்தச் சேவல் பயத்தில் அலறியது. அது  “தயவு செய்து என்னைக் கொல்லாதீர்கள். நான் உங்களுக்கு உபயோகமாக இருப்பேன். நான் தினமும் அதிகாலையில் உங்கள் வேலையைக் குறித்த நேரத்தில் தொடங்குவதற்காக எழுப்பி விடுவேன்”என்றது.

“அதை தான் நாங்கள் விருப்பப் படவில்லை” என்று அந்தத் திருடர்கள் கூச்சலிட்டனர். திருடர்கள் “நீ மக்களை எழுப்பி விட்டால், நாங்கள் அவர்கள் வீடுகளில் திருடும்போது எங்களைப் பிடித்து விடுவார்கள்” என்றனர்.

 அதுதான் அந்தச் சேவலின் இறுதி நாளாக இருந்தது.

 நீதி:

“எங்கே சிந்திக்கும் திறன் அற்றுப் போகிறதோ, அங்கே தற்பெருமையாக பேசுதல் ஆரம்பமாகிறது.” – ஜப்பானியப் பழமொழி

_____________________________________________________

பொறாமை பிடித்த ஆடு

ஒரு ஆடும் ஒரு கழுதையும் ஒரே பண்ணையில் வாழ்ந்து வந்தன. ஆடு தன் உணவைத் தானே தேடிக் கொள்ளும். ஆனால் கழுதையை மிகவும் கடினமாக வேலை வாங்குவதால், பண்ணையார் கழுதைக்குத் தானே உணவளித்தார் . கழுதையின் கடினமான உழைப்பை மறந்து, ஆடு அதன் மேல் பொறாமை அடைந்தது.

கழுதை வேலை செய்வதை நிறுத்தி விட்டால் தனக்கு உணவு கிடைக்கும் என்று அது நினைத்தது. அதனால் அது கழுதையை ஒரு பெரிய குழிக்குள் தள்ளிவிட்டது. கழுதை மிகவும் காயம் அடைந்தது.

பண்ணையார் விலங்கு மருத்துவரை அழைத்து கழுதையைப் பரிசோதிக்கச் செய்தார். கழுதையை உடனடியாக குணப்படுத்த வேண்டுமென்றால் அதற்கு ஆட்டு சூப் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர் கூறினார்.

கழுதையின் உணவைத் தான் அடைய வேண்டும் என்று எண்ணிய ஆடு, தானே அந்தக் கழுதைக்கு உணவானது.

நீதி: “பொறாமையே ஆத்மாவைப் பீடித்த புண்ணாகும்”  – சாக்ரடீஸ்

____________________________________________________

சாப்பிடுவதற்கு முன் கவனி

உங்களுக்கெல்லாம் தெரியும் நாய்கள் எப்படிப் பட்டவை என்று. நீங்கள் ஒரு துளி உணவை மேசையிலிருந்து கீழே போட்டால், அவை அது என்ன என்று தெரியும் முன்பே விழுங்கி விடும். ஆனால் சில சமயம் அப்படிச் செய்திருக்க வேண்டாமோ என்று நினைக்கும்.

ஃபானி என்ற பண்ணை நாயை, அதனுடைய எஜமானர் ஜோஷ் தன் குடும்பத்தினருடன் உணவருந்தும் போது வீட்டினுள் அனுமதிப்பதில்லை. ஒரு நாள் அது யாரும் பார்க்காத  போது, வீட்டினுள் நுழைந்து மேசையின் அடியில் ஒளிந்து கொண்டது.

திடீரென்று அதன் அருகில் ஒரு பெரிய உணவுத் துண்டு விழும்வரை அது மிகவும் அமைதியாக இருந்தது; யோசிக்காமலேயே அதை உடனே விழுங்கி விட்டது. பிறகு பெரிதாக ஊளையிட்டபடி, தன் வயிற்றை ஒரு பாதத்தினால் பிடித்துக் கொண்டே வெளியில் ஓடியது. அந்தக் குடும்பம் ஒரு மிகவும் சூடான கறியை இரவு உணவாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

நீதி: “ஆசை கண்மூடித்தனமானது; பேராசை மன நிறைவை உண்டாக்காது.” – ஒரு சீனப் பழமொழி

ஒரு நல்ல திருப்பம் இன்னொன்றுக்கு வழி வகுக்கும்.

ஃப்ரெட் என்ற விவசாயி ஒரு இளம் கழுகு, பொறியில் மாட்டியிருப்பதைப் பார்த்தார். அவ்வளவு அழகான பறவை, வலியில் துடிப்பதைப் பார்த்துத் தாங்க முடியாமல், அவர் அதை விடுவித்தார். சில நாட்கள் கழித்து அவர் ஒரு பழைய சுவரின் நிழலில், மதிய உணவாக ரொட்டியும், பாலாடைக் கட்டியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். திடீரென்று அந்தக் கழுகு, தன் இறக்கைகளை அடித்துக் கொண்டு, தாழப்  பறந்து வந்து அவரின் தலையிலிருந்த குல்லாவைத் திருடிச் சென்றது. தரையிலிருந்து சிறிது மேலே பறந்து செல்லும் போது, ஃப்ரெட் அதைத் துரத்திக் கத்திக் கூச்சலிட்டதும், அது குல்லாவைக் கீழே போட்டது.

ஃப்ரெட் மறுபடியும் அந்தக்குல்லாவைத் தலையில் அணிந்து, தன் மதிய உணவை முடிப்பதற்காக மிகுந்த சிரமத்துடன் திரும்பினார். ஆனால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர் எந்தப் பழைய சுவரின் நிழலில் அமர்ந்திருந்தாரோ, அந்தச் சுவர் இடிந்து விழுந்திருந்தது. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காப்பாற்றிக் கொண்டார்கள்.

நீதி: “ நீங்கள் நன்மை செய்தால், உங்களுக்கு நன்மை வந்து சேரும்,” – ஒரு டானிஷ் பழமொழி

மொழி பெயர்ப்பு

அன்னப்பூரணி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

உன்னதமான ஆசிரியர்

நீதி – உண்மை

உபநீதி – ஏற்புத் தன்மை

ஒரு சமயம், மகிழ்ச்சியற்ற இளைஞன் ஒருவன், ஒரு வயதான குருவிடம் சென்று, தன் வாழ்க்கை மிகவும் சோகமாக இருப்பதாகவும், அதற்கு ஒரு தீர்வு கூறும்படியும் கேட்டான்.

அந்த வயதான குரு, ஒரு கைப்பிடி உப்பை எடுத்து ஒரு கோப்பை  தண்ணீரில் கலந்து, இளைஞனை குடிக்கச் சொன்னார்.

குரு “அதன் சுவை எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.

இளைஞன் “பயங்கரமாக” என்று துப்பினான்.

குரு உள்ளூர சிரித்துக் கொண்டே அந்த இளைஞனிடம் இன்னொரு கைப்பிடி  உப்பை எடுத்து ஏரியில் போடச் சொன்னார். இருவரும் அமைதியாக அருகில் இருக்கும் ஏரிக்குச் சென்றவுடன், அந்த இளைஞன் உப்பை சுழற்றி ஏரியில் வீசினான்.

வயதான குரு, “இப்போது ஏரியிலிருந்து தண்ணீரைக் குடி” என்றார்.

இளைஞனின் முகவாயில் தண்ணீர் வழிந்த போது குரு, “சுவை எப்படி இருக்கிறது?” எனக் கேட்டார்.

இளைஞன் “நன்றாக இருக்கிறது” என்று சொன்னான்.                    

குரு “இப்போது உப்பின் சுவை தெரிந்ததா?” என வினவினார்.

இளைஞன் “இல்லை” என்றான்.

குழப்பமடைந்த அந்த இளைஞனின் அருகில் குரு அமர்ந்து, அவனது கைகளை பிடித்துக் கொண்டு, “வாழக்கையின் வலி உப்பைப் போலவே; அதிகமாகவும் இல்லை; குறைவாகவும் இல்லை. வாழ்க்கையில் வலியின் அளவு ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். ஆனால், நாம் வலியை அனுபவிப்பது நமது கண்ணோட்டத்தை சார்ந்துள்ளது. அதனால் பிரச்சனைகளை, ஏரியில் கலந்த உப்பைப் போலவே, பரந்த மனப்பான்மையுடன் எதிர்கொண்டால், வலியின் விளைவு குறைந்து விடும். நாம் குறுகிய கண்ணோட்டத்தை விட்டு விட்டு, பரந்த மனப்பான்மையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு உயர்ந்த ஆசிரியர்  நம் கைகளை பிடித்துக் கொண்டு, மனதளவில் விஷயங்களை புரிய வைத்து, மனம் நெகிழும்படி செய்கிறார்.

நீதி:

பிரச்சனை என்றாலே உங்களின் திறமையை சிறப்பாக பயன்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பு எனக் கூறலாம். பெரும்பாலான சமயங்களில், நாம் பிரச்சனையோடு நம்மை இணைத்துக் கொண்டு, அதனால் வரும் பிணைப்பினால் வலியை அனுபவிக்கிறோம். பிரச்சனைகளிலிருந்து நாம் ஓட வேண்டாம்; அப்படி செய்தால், பயம் ஏற்படுகின்றது. ஒவ்வொரு வலியை அனுபவிக்கும் போதும், பயத்தை எதிர்கொள்ளும் பாதையாக அதைப் பார்க்க வேண்டும். பயத்தை எதிர்கொள்வது வெற்றியின் முதல் படி; பயம், நம்முள் இருக்கும் திறனை வெளியே கொணர்ந்து, எந்த ஒரு சூழ்நிலையையும் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் எதிர்கொண்டு, சரியான மனப்பான்மை மற்றும் சாந்தமுடனும் சமாளிப்பதற்கு உதவுகின்றது.   

மொழி பெயர்ப்பு,

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE