நீதி: சாந்தம், உண்மை
உப நீதி: அமைதி
எம். பி. ஏ படிப்பில் முதன்மை இடம் வகித்த ஒருவர், ஒருமுறை தனது அலுவலக வேலையில் மிகவும் சிரமப்பட்டார். அந்த வேலையை செய்வதற்கு அவர் பல புதிய யோசனைகளை கையாள வேண்டியிருந்தது. ஆனாலும், அவரால் ஒன்றும் முடியவில்லை. அவருக்குக் கீழ் பணிபுரிந்தவர்கள் அனைவரும் புதிய யோசனைகளைக் கண்டறிந்து தங்கள் வேலைகளில் வெற்றி பெற்றனர். அவர் தனது சக தொழிலாளர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்த போது கோபமடைந்தார். கலங்கிய மனதுடன் புதிய யோசனைகளை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது.
மிகவும் விரக்தியடைந்த அவர், ஒரு ஜென் குருவிடம் சென்று, “கடவுள் எனக்கு முற்றிலும் அநியாயம் செய்துவிட்டார். எனக்குக் கீழ் பணிபுரிபவர்கள் அனைவரும் சிறந்த யோசனைகளைப் பெற்று வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற அவர் எனக்கு எந்த யோசனையையும் கொடுக்கவில்லை” என்றார்.
துறவி அந்த மனிதரை அருகிலுள்ள கால்பந்து மைதானத்திற்கு அழைத்துச் சென்றார். பிறகு 5 டென்னிஸ் பந்துகளை மைதானத்தில் வீசினார். பின்னர் அவர், அனைத்தையும் சேகரிக்குமாறு அந்த மனிதரிடம் கூறினார். சில நிமிடங்களில் அந்த மனிதர் அனைத்து பந்துகளையும் சேகரித்து மகிழ்ச்சியுடன் திரும்பினார். அதற்குப் பிறகு, அவரை அடர்ந்த காட்டிற்கு அழைத்துச் சென்று, அவர் 5 பந்துகளையும் காட்டில் எறிந்து, அவைகளை சேகரிக்குமாறு அந்த மனிதரிடம் கூறினார். சில நொடிகளில் பந்துகள் காட்டில் தொலைந்து போனது. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அந்த மனிதர் துறவியிடம் வந்து அனைத்து பந்துகளையும் இழந்து விட்டதாகக் கூறினார்.
ஜென் மாஸ்டர் சிரித்துக் கொண்டே, “இந்த பந்துகள் வாய்ப்புகள் போலவும், நிலப்பரப்பு நம் மனதைப் போலவும் இருக்கிறது. நம் மனதில் வேண்டாத விஷயங்களை போட்டுக் கொள்ளும் போது, வாய்ப்புகளை இழக்கிறோம். கால்பந்து மைதானம் போல் நம் மனம் தெளிவாக இருக்கும் போது, எல்லா வாய்ப்புகளையும் தெளிவாகப் பார்க்கலாம். அனைவருக்கும் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. நீங்கள் அவைகளை அறிய விரும்பினால், உங்கள் மூளையில் இருக்கும் தகாத விஷயங்களை அகற்றவும்” என்று கூறினார்.
நீதி:
வாய்ப்பு என்பது கிட்டத்தட்ட அனைவரின் வாழ்விலும் வரும் ஒரு சாதகமான நேரம் அல்லது சந்தர்ப்பம்; ஆனால் அதை அடையாளம் காணும் அளவுக்கு ஒருவர் அமைதியாக இருந்தால் மட்டுமே அது பயனுள்ளதாக இருக்கும். நாம் உட்கார்ந்து சிந்தித்தால், கடவுள் நம் வாழ்வில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஒரு வாய்ப்பைக் கொடுப்பதைக் காண்கிறோம்; இந்த வாய்ப்பைப் புரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நம் கையில் உள்ளது. சில வாய்ப்புகள் பார்ப்பதற்கு சிறியதாகத் தெரிகிறது; ஆனால் உண்மை என்னவென்றால், சிறிய வாய்ப்புகள் பெரும்பாலும் பெரிய சாதனைகளின் தொடக்கமாகும்.
மொழி பெயர்ப்பு:
காயத்ரி வெங்கட், சரஸ்வதி, ரஞ்சனி
SOURCE: SSSIE