நீதி: பக்தி
உபநீதி: நம்பிக்கை / நிபந்தனையற்ற அன்பு
ஶ்ரீ ஸத்ய ஸாயி பாபா, ‘என் அருமை மாணவர்களே’ பாகம் 2, அத்தியாயம் 3
பகவான் கிருஷ்ணரின் நண்பன் உத்தவர், ஞானத்தின் பாதையில் நிபுணராகத் திகழ்ந்தார். மாடு மேய்ப்பவர்களுக்கு அதைக் கற்றுக் கொடுப்பதற்காக, அவர் கிருஷ்ணரை அணுகினார்.
கிருஷ்ணர் புன்சிரிப்புடன், “பக்தியும், தூய்மையும் கோபிகைகளிடம் அடிப்படையாகவே அமைந்திருக்கின்றன – அவர்கள் என்னுள்ளே இருக்கிறார்கள், நான் எப்போதும் அவர்களின் இதயங்களில் கோவில் கொண்டுள்ளேன், இதை உன்னால் புரிந்து கொள்ள முடியாது” என்று கூறினார்.
உத்தவர் சமாதானம் அடையவில்லை, அதனால் பகவான் கிருஷ்ணர் அவரை கோகுலத்திற்கு அனுப்பினார். உத்தவர் அவர்களிடம், “இறைவனை அறிவதற்கான ஞானத்தின் பாதையை நான் உங்களுக்குக் கற்பிக்கிறேன்” என்று கூறினார்.
கோபிகைகள் உத்தவரிடம், “யோகங்களிலும், வேதங்களிலும் எங்கள் நேரத்தை செலவிட விரும்பவில்லை. கிருஷ்ணர் தான் எங்களுக்கு எல்லாமே, அவரை அடைவதற்கு ஒரு எளிமையான வழியைக் கூறவும்” என்று அறிவுறுத்தினார்கள்.
குழப்பமடைந்த உத்தவர் கோபிகைகளிடம், “நீங்கள் எப்படி கிருஷ்ணருடன் ஒன்றாவீர்கள்?” என்று கேட்டார்.
அப்பாவிகளான கோபிகைகள், “கிருஷ்ணர் ஒரு மலராக இருந்தால், நாங்கள் அவரைச் சுற்றி வரும் தேனீயாக இருப்போம். கிருஷ்ணர் ஒரு மலையாக இருந்தால், நாங்கள் நதியாக மாறி விடுவோம். அவர் ஒரு ஆழமானக் கடலானால், நாங்கள் அவருடன் சேரும் ஒரு ஓடையாக மாறிவிடுவோம்” என்று கூறினர்.
அந்த கோபிகைகள் எங்கேயும், எப்போதும் கடவுளை வணங்குவதற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று உத்தவருக்குப் புரிந்தது.
இந்த பிரபஞ்சத்தைக் கடவுளின் உருவகமாகக் கருதுவதும், அதை அப்படியே அனுபவிப்பதும் தான் உண்மையான பக்தி – பாபா
நீதி:
எதிர்பார்ப்பு இல்லாமல் எல்லா சமயங்களிலும் கடவுளின் மேல் அன்பை செலுத்துவது மட்டுமே பக்தியாகும். இது, வானொலி அலைகளைப் போல எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறது; நம் பக்தியை ஆத்மார்த்தமாக, ஒருமுகச் சிந்தனையோடு கடவுளிடம் செலுத்தும் போது, நிரந்தரமான உறவாக மாறுகிறது. இந்த உறவு, நேர்மறை மற்றும் எதிர்மறையான வாய்ப்புகளை அழகாக மாற்றி அமைக்கிறது.
மொழி பெயர்ப்பு,
அன்னப்பூரணி, சரஸ்வதி, ரஞ்சனி
SOURCE: SSSIE